திங்கள், 18 ஜூலை, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழகச் சட்டப்பேரவைத் தீர்மானத்திற்குச் சுவாமி அக்னிவேசு ஆதரவு

பாராட்டுகள். ஆனால்,அவர் குறிப்பிட்ட நிலைஎல்லாம்  தாண்டி எவ்வளவோ காலம் ஆயிற்று. காந்தியவழியில் உண்ணா நோன்பு இருந்த திலீபன் உயிர் பறிக்கப்பட்டதே  தவிர காப்பாற்றப்படவில்லையே! எனவே,  தமிழீழம் அமைக்க இப்பொழுதே குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவின் பிற பகுதிகளிலும் உலக நாடுகளிலும் இது போல் கூட்டங்கள் நடத்தி விரைவில் தமிழீழம் மலர வகை செய்ய வேண்டும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 
இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு சுவாமி அக்னிவேஷ் ஆதரவு

First Published : 18 Jul 2011 01:39:05 AM IST


பெங்களூர், ஜூலை 17: இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக சுவாமி அக்னிவேஷ் தெரிவித்தார்.கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் மாநாட்டில் பங்கேற்கும் முன்னதாக, செய்தியாளர்களிடம் சுவாமி அக்னிவேஷ் கூறியது: இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 40 ஆயிரம் அப்பாவி மக்கள் இறந்துள்ளதாக ஐ.நா.சபையின் முதல் கட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கை போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.சபை முழுமையாக விசாரிக்க வேண்டும். போரில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. கொடூரமான முறையில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்த இந்திய சமூகம் ஒன்றிணைய வேண்டும். இலங்கையில் போர்க்குற்றம் நடந்திருப்பதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இலங்கை விவகாரத்தில் இனியும் இந்தியா அமைதி காக்கக்கூடாது. மனித உரிமை ஆர்வலர்கள், இந்திய ஊடகங்கள் அமைதியை கலைத்து, மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். தமிழர்களின் போராட்டத்தில் நாங்கள் உறுதுணையாக இருப்போம். இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக புதுதில்லியில் விரைவில் பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்படும்.ஜெயலலிதாவுக்கு பாராட்டு: இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தைரியத்தை மனதார பாராட்டுகிறேன். அவரது துணிச்சலான தீர்மானத்தை ஆதரிக்கிறேன். இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்ற கருணாநிதி அல்லது திமுக செய்ய துணியாதது துரதிருஷ்டவசமானது. தமிழர்கள் போராட வேண்டும்: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களை போன்றே சம உரிமை, சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தமிழர்களின் மொழி, கலாசாரம், நிலம் ஆகியவற்றை மதிக்க வேண்டும். இதற்காக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தீவிரமாக போராட வேண்டும். அந்த போராட்டம் காந்தியமுறையில் நடத்தப்பட வேண்டும். போர் குற்றங்கள் குறித்து ஐ.நா.சபை முழுமையாக விசாரித்து இறுதி அறிக்கை வெளியிட்டு, அதனடிப்படையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டும்.இது கிடைக்காதபட்சத்தில், பன்னாட்டு சமூகம் மற்றும் ஐ.நா.சபை ஒன்றுகூடி தமிழீழத்தை அமைக்க முன்வர வேண்டும். அதுவரை தமிழீழம் பற்றி பேசுவது சரியல்ல என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக