வெள்ளி, 29 மார்ச், 2013

திமுக விலகியதால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டதா?: கருணாநிதி ஆதங்கம்



பாவம்! நெருப்பாற்றில் நீந்தி வந்தவர் இன்று  பதவிகளை இழந்த வெறுப்பிலும் வேதனையிலும் குமுறுகிறார். அவருக்கே தெரியும் என்பதால் விரிவாக எழுத வேண்டியதில்லை. எனினும் ஒரு கேள்வி. அப்புறம் எதற்கு அப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம்! இப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம்! என்றெல்லாம் வெற்று மிரட்டல்கள் அவ்வப்பொழுது?  பழைய கலைஞராக இருந்திருந்தால் இதனால் என்ன நன்மை விளைந்தது என்று முதன்மையில்லை. தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் முடிந்ததைச் செய்தோம் என்ற மன அமைதி எங்களுக்கு என்றுதானே கூறியிருப்பார்.  அடிக்கடித் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் மூலம் அப்பொழுதும் ஒன்றும் நடந்திருக்காது எனப் பிதற்ற வைத்தவர் இப்பொழுது தானே ... எடுத்திருக்கிறார். கலைஞரே! உங்களை இன்னும் பல்லாயிரவர் நம்புவதால் இனியேனும் மாறக்கூடாதா? தமிழர் வரலாற்றில்  மாற்றம் ஏற்படுத்தக்கூடாதா? தமிழ் ஈழத்திற்கு உதவக்கூடாதா? உங்களுக்கு ஏற்பட்ட பழியைத் துடைக்கக்கூடாதா?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



கூட்டணியிலிருந்து திமுக விலகியதால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டதா?: கருணாநிதி ஆதங்கம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகியதால் ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா என்று திமுக தலைவர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைப் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2009-ம் ஆண்டே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும் என்று ஜெயலலிதா கூறினாராம்.
ஆனால் நான் (கருணாநிதி) அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வர் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றினேன் என்று அவர் கூறியுள்ளார்.
பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, என்னைச் சந்தித்த பிறகு, மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று கூறி ராஜிநாமா நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதில் எதை ஜெயலலிதா நாடகம் என்கிறார்?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக அப்போது ஜெயலலிதா, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்குப் புரியவில்லை என்று கூறினார்.
இப்படித் தான் கூறியதையே வசதியாக மறந்துவிட்டு பேசுவதற்குப் பெயர்தான் இரட்டை வேடம்.
இலங்கைப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா, சட்டப்பேரவையில் தீர்மானம் என திமுக ஆட்சியில் கண்துடைப்பு நாடகங்கள்தான் நடந்தன என்று ஜெயலலிதா கூறுகிறார்.
அப்படியென்றால் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை  ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா?
ஜெயலலிதா போன்ற சிலரின் அபிலாஷையின் காரணமாக மத்திய அரசில் இருந்து திமுக இப்போது வெளியேறிவிட்டது.
இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டதா? நாடாளுமன்றத்தில் தீர்மானத்தைத் திருத்தங்களோடு நிறைவேற்றிவிட்டதா? மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது மட்டும்தான் நடந்தது. ஆனால் அதற்காக திமுக சிறிதும் கவலைப்படவில்லை.
2009-ம் ஆண்டும் மத்திய அரசிலிருந்து திமுக விலகியிருந்தால் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி

சென்னை: இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்துள்ளதால், இலங்கை தமிழர்களின் நிலையில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்ததற்காக கட்சியினர் கவலைப்படவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இந்தியா திருத்தம் கொண்டு வந்து விட்டதா? அல்லது பார்லிமென்ட்டில் தான் தீர்மானம் எதுவும் கொண்டு வந்து விட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்து விட்டது. இது ஒன்று தான் நடந்துள்ளது. ஆனால் இதற்காக கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, தி.மு.க., ஏன் வெளியே வரவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர், இவையெல்லாம் தி.மு.க., மீது பழி போட நடக்கும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளார். வரலாறு தெரிந்தவர்கள் இது போன்ற யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தான் இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளதற்கு பதிலளித்துள்ள அவர், கடந்த 1956 ம் ஆண்டு முதல் தமிழக மக்கள் தனது நடவடிக்கைகளை அறிவார்கள் என்றும், அதே வேளையில், கடந்த 2002ம் ஆண்டு பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும் என ஜெ., தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை மக்கள் மறந்து விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் உறவுகளை முறித்துக்கொள்ள தி.மு.க., தயங்குகிறது என்ற முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அவர், இதன் மூலமாக மத்திய அரசு கவிழ்ந்து தான் பிரதமராக வரலாம் என்ற எண்ணத்தில் முதல்வர் இவ்வாறாக கூறிவருவதாக கருணாநிதி பதிலளித்துள்ளார். சேது சமுத்திர திட்டம், காவிரி நதிநீர் ஆணையம் ஆகியவற்றில் முதல்வர் ஜெயலலிதா தான் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக