செவ்வாய், 15 ஜனவரி, 2013

பார்வையில்லாமல் தமிழாசிரியர் பாடம் கற்பிப்பு

பார்வையில்லாமல் அருஞ்செயல் புரியும் தமிழாசிரியர் : + 2 மாணவர்களுக்கு ப் பாடம் கற்பிப்பு
 
அருப்புக்கோட்டை : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த, முதுகலை ஆசிரியர் பணி தேர்வில் சாதித்த, பார்வையற்ற தமிழாசிரியர், விருதுநகர் பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடம் கற்பித்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர், பால கணேசன், 26. பிறவிலே பார்வையில்லாத இவர், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சிவகங்கை அரசு பார்வையற்றோர் பள்ளியிலும்; ஆறு முதல், பிளஸ் 2 வரை, மதுரை இந்திய பார்வையற்றோர் சங்கம் மேல்நிலை பள்ளியிலும் படித்து, தேர்ச்சி பெற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில், பி.ஏ., (தமிழ்)படிப்பையும், மதுரை காமராஜ் பல்கலையில், எம்.ஏ., படிப்பையும் முடித்தார். பின், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில், பி.எட்., முடித்த பாலகணேசன் , மதுரை இந்திய பார்வையற்றோர் சங்கம் நடத்தும், "விழிச்சவால் பிரைய்ல்' மாத இதழில், பகுதிநேர இணை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.பார்வையில்லாத போதிலும் மனம் தளராத இவர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். ஜன., 2 முதல்,விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலை பள்ளியின், முதுகலை தமிழாசிரியரான இவர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.

பாலகணேசன் கூறுகையில், ""சக ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். எனக்கு பார்வையில்லை என்ற வருத்தமே இல்லை. பாடங்களை, "பிரெய்லி' முறையில் கற்று, சொல்லி தருகிறேன். மாணவர்கள் தங்கள் நோட்டில் எழுதும் பாடங்களை, துணைக்கு ஒருத்தரை வைத்து படிக்கச் சொல்லி, தவறுகளை திருத்துகிறேன்,'' என்றார்.
 

1 கருத்து: