சனி, 4 ஆகஸ்ட், 2012

அருகமை பள்ளி நடைமுறை





வளர்ந்த நாடுகளில் உள்ளதைப்போல், அருகில் உள்ள பள்ளி முறையை தமிழக அரசு அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அளவில் கல்வித்தரம் உயர்வதுடன், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதால் ஏற்படும் உயிரிழப்பும் தடுக்கப்படும் என, கல்வியாளர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் கருத்து தெரிவிக்கின்றனர். முந்தைய தி.மு.க., ஆட்சியில், நான்கு வகையான கல்வித் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை, தற்போதைய அரசு வலுப்படுத்தி, அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தி உள்ளது. வெறும் பாடத் திட்டங்களை மட்டும் பொதுவானதாக உள்ளடக்கிய இந்தத் திட்டம், சமநிலையான கல்வித்தரத்தை ஏற்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித்தரம் உயரவும் வழி வகுக்குமா என்பது கேள்விக்குறி.
மரத்தடி வகுப்பு: ஏனெனில், இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்த, முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் மற்றும் வசந்திதேவி உள்ளிட்ட கல்வியாளர்கள், "பாடத் திட்டம் மட்டுமல்லாமல், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகள், தரமான ஆசிரியர், சுகாதார வசதிகள் என, அனைத்தும் ஒரே சீராக இருக்க வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட நிதி மூலம், அரசுப் பள்ளிகளில், தற்போது பெருமளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், அரசுப் பள்ளிகளில், மரத்தடியில் வகுப்புகள் நடக்கக் கூடிய காட்சி, இப்போதும் மறைந்துவிடவில்லை.
அருகமை பள்ளி: அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உள்ளதைப்போல், "அருகமைப்பள்ளி' என அழைக்கப்படும், அருகில் பள்ளி முறையை அமல்படுத்தினால், கல்வித்தரத்தை உயர்த்துவதுடன், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்
செல்வது தடுக்கப்படும். மேலும், மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், நேர விரையம் ஆகியவற்றை தடுப்பதுடன், போக்குவரத்தின்போது ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்க முடியும் என்பது, கல்வியாளர்கள் கருத்தாக உள்ளது. இதை, கல்வித்துறை அதிகாரிகளும் ஆமோதிக்கின்றனர்.
பலன் என்ன? இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் பெரும்பாலான பள்ளிகள், குறிப்பாக தனியார் பள்ளிகள், அருகருகே, ஒரே பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இது, தேவையற்ற போட்டியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இதே பகுதிகளில், புதிய பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த முறையை மாற்றி, பள்ளிகள் அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டும், புதிய பள்ளிகள் துவங்க, அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்த முடிவை அரசு எடுத்தால், அனைத்துப் பகுதிகளிலும் பள்ளிகள் இருக்கும் நிலையை ஏற்படுத்தலாம். இதன்பின், அருகில் உள்ள பள்ளி முறை திட்டத்தை அமல்படுத்தி, பெற்றோர், தங்களது குழந்தைகளை, அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கும் கட்டாய முறையை உருவாக்க வேண்டும்.
உயிரிழப்பை தடுக்கலாம்: ஐரோப்பிய நாடுகளில், 20 கி.மீ., - 30 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிகளில், சேர்க்கை மறுக்கப்படுகிறது. இதனால், அருகில் உள்ள பள்ளிகளிலேயே சேர்ப்பர். இதன்மூலம், பள்ளிகளின் மீதும், அதன் வளர்ச்சியின் மீதும் பெற்றோருக்கு அக்கறை ஏற்படும். இது, கல்வித்தரத்தை உயர்த்த வழிவகை செய்யும். சென்னை போன்ற நகரங்களில், பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, மாணவர் படிக்கின்றனர். இதனால், விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். அருகில் உள்ள முறை திட்டம் வந்தால், மாணவர் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார். சிறிய நாடுகளில்...: கல்வியாளர் பிரின்ஸ்
கஜேந்திரபாபு கூறுகையில், ""அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அருகில் உள்ள பள்ளி முறை மற்றும் பொதுப்பள்ளி திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. மிகச்சிறிய நாடான வெனிசுலாவில் கூட, சமீபத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. கோத்தாரி கமிஷன் அறிக்கையிலும், இந்தத் திட்டங்களை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, விரிவாக விளக்கப் பட்டு உள்ளது,'' என்றார்.
முதல்வர் பரிசீலிப்பாரா? சமச்சீர் கல்வி திட்டத்தை மெருகேற்றிய முதல்வர், அருகமைப்பள்ளி முறை திட்டத்தை கொண்டு வந்து, புதிய பள்ளிகள் துவங்குவதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பள்ளிகள் தரம் உயர்வு தேவை: சமச்சீர் கல்வி

முறை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும் போதே, மாநகரங்கள், நகராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு தர நிர்ணயம் செய்ய வேண்டிய காலமும் வந்திருக்கிறது. பள்ளிகளில் உள்ள வசதி, கற்பிக்கும் திறன், அப்பகுதி வாழ் பெரும்பான்மை மக்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப கல்விக் கட்டணம் அங்கு இருக்கிறதா? படிக்கும் மாணவ, மாணவியர் எத்தனை பேர், இடைநிற்றல் இன்றி, மேனிலைக் கல்வி மற்றும் உயர் கல்வி பெறுகின்றனர் என்பதற்கான ஆவணங்களைத் திரட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தர நிர்ணயம் செய்தால், பெற்றோர் அந்தப் பள்ளியில் தங்கள் வசதிக்கேற்ப இடம் தேடுவர். மேலும், எல்லா பள்ளிகளும், ஓரளவு தரமான கல்வி கற்பிக்க முன்வரும். அருகில் உள்ள கல்வி நிலையத்திற்கு, மாணவ, மாணவியர் அதிகமாகச் செல்லும் பட்சத்தில், அரசு பேருந்துகளில் தரப்படும் இலவச பாஸ் மற்றும் அரசு கல்விக்காக ஏற்கும் இதர செலவினங்கள் குறையும். அத்தொகையை, வளர்ச்சி தேவைப்படும் பள்ளிகளுக்கு நிதி உதவி செய்து, கல்வியை மேம்படுத்தலாம்.
- தினமலர் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக