சனி, 4 ஆகஸ்ட், 2012

நறுமணத்தை நுகர முடிகிறதா?



சொல்கிறார்கள்

"வாசனை உணர முடிகிறதா?'

தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் ரவி ராமலிங்கம்: நம் மூக்கிலிருந்து மூளைக்கு, ஒரு மெல்லிய நரம்பு போகும். அந்த நரம்பைச் சுற்றி பாதுகாப்பிற்காக, எலும்பாலான ஒரு, "லேயர்' இருக்கும். காது மடல்களில் உள்ள குறுத்தெலும்பு போன்று, இந்த எலும்பும் உறுதியற்றதாகத் தான் இருக்கும். தவறி விழுந்தாலோ, விபத்தினாலோ இந்த எலும்பு பாதிக்கப்பட்டிருந்தால், நரம்பு நசுங்கும் பாதிப்பைப் பொறுத்து, வாசனைகளை உணர்வது குறையும் அல்லது உணர முடியாமலேயே கூட போகும். இந்த பாதிப்பிற்கு, "ஹைபோஸ்மியா' என்று பெயர். சிறிய விபத்துகள், மூளைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது தவிர, சரியாக சிகிச்சை எடுக்காத, "சைனஸ்' பிரச்னை, மாசு அலர்ஜியால் மூக்கின் உள்பகுதியில் ஏற்படும், "பங்கஸ்' பாதிப்பு, இதனால் ஏற்படும் சதை வளர்ச்சி, மூக்கின் எலும்பு வளைந்திருப்பது, இவற்றாலும் வாசனை நுகர்வதில் குறைபாடு ஏற்படும். வாசனை தான் பசியைத் தூண்டும். எனவே, இந்த குறைபாட்டால், சாப்பாடு மீது விருப்பம் குறைந்து விடும்; சரியாகச் சாப்பிட முடியாது. உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டு, பல பிரச்னைகள் உருவாகும். "சைனஸ்' பாதிப்பால், வாசனை உணர்வதில் குறைபாடு ஏற்பட்டிருந்தால், மருந்து, மாத்திரை மூலம் குணப்படுத்த வாய்ப்புண்டு. "சைனஸ்' பாதிப்பு முற்றிவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். மற்றபடி, வாசனை உணரும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை அல்லது, "பங்கஸ்' சதை வளர்ச்சி என்றால், அறுவை சிகிச்சை மூலம் தான், தீர்வு காண முடியும். சளி பிடித்திருந்தால், அப்போது, வாசனை உணர முடியாமல் இருக்கும்; இது சகஜம். ஆனால், விபத்திற்குப் பிறகோ அல்லது சாதாரணமாகவோ வாசனை உணர்வதில் குறைபாடு இருப்பதாகத் தெரிந்தால், உடனே, காது, மூக்கு, தொண்டை மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்; இந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக