வெள்ளி, 12 மார்ச், 2010

வேலியைத் தாண்டும் போலிகள்



போலிச் சாமியார்கள் பற்றிய செய்திகள் இல்லாத நாள்களே இல்லை என்று கூறலாம். இந்தச் செய்திகள் சமுதாயச் சீர்கேடுகளைப் பறைசாற்றுகின்றன. தீமைகள் பெருகுவது நன்மைக்கான சோதனை என்றே சொல்லலாம். அந்தச் சோதனையே நாட்டுக்கு வேதனையாகிறது.புத்த, சமண, சைவ, வைணவ சமயங்கள் எல்லாம் ஆன்மிக நோக்கத்துடன் அவதரித்தவை; தமிழ்நாட்டின் சித்தர்கள் எல்லாம் ஆன்மிகவாதிகளே! எனினும் அவர்கள் மக்கள் நலனையே கருதியவர்கள்; இராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார் போன்றவர்களையும் இவர்களுடன் சேர்க்கலாம்.""உலகமே எனது நாடு; பிறருக்குச் சேவை செய்வதே என் மதம்; மனித வர்க்கமே என் உடன்பிறப்பு'' என்பது விவேகானந்தரின் வார்த்தைகள்.இதையே காந்தியடிகளும் கூறுகிறார்: ""மனித வர்க்கத்துக்குச் செய்யும் சேவையின் மூலம் கடவுளைக் காண நான் முயன்று வருகிறேன். ஏனெனில், கடவுள் சுவர்க்கத்திலோ, கீழேயோ இல்லை; ஒவ்வொருவருக்குள்ளும் அவர் இருக்கிறார் என்பதை நான் அறிவேன்...''இப்படிப்பட்ட ஆன்மிகவாதிகளால் மனித சமுதாயம் நம்பிக்கை பெறுகிறது; ஆறுதல் பெறுகிறது; முயற்சி செய்து முன்னேறுகிறது; "நல்லவர்களால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது' என்று மக்கள் நினைக்கிறார்கள்.போலிச் சாமியார்களைப்போல போலி இன்ஸ்பெக்டர்கள், போலி டாக்டர்கள், போலி வழக்கறிஞர்கள், போலி ஆசிரியர்கள் என இவர்கள் மிகச்சிலராக இருக்கலாம்; ஆனால் இவர்களால் ஏற்படும் தீமைகள் சமுதாயத்தைப் பின்னோக்கி நகர்த்திவிடும்; இது தடுக்கப்பட வேண்டும்.இந்த நிலை கல்வித்துறையிலும் தொடர்கிறது. போலி பல்கலைக்கழகங்கள், போலி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், போலி ஆசிரியர்கள், போலி மாணவர்கள் எனவும் காணப்பட்டுள்ளனர்; கல்வித் துறைகளில் போலிகள் பெருகுவது நாட்டுக்கே நல்லதல்ல. இந்த நிலை தொடர்வதற்கு யார் காரணம்?அரசாங்கம் அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அறிவிப்பு மட்டுமே செய்கிறது. "இந்தக் கல்விக்கூடங்கள் அரசு அங்கீகாரம் பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்' என வேண்டுகோள் விடப்படுகிறது. தங்கள் குடிமக்கள்மேல் அரசுக்கு அவ்வளவு அக்கறையாம்.இப்போது மத்திய அரசு நியமித்த பி.என். தாண்டன் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, 13 மாநிலங்களிலுள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; தமிழ்நாட்டில் மட்டும் 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து ஆனது; இதனால் 2 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பல இடங்களில் மாணவர்களின் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.இதனால் இந்தக் கல்வி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்துக்கே போய் தடையாணை பெற்றுள்ளன. இருப்பினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்க பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புக்கொண்டது, ஏன்? இப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?நாடு முழுவதுமுள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்த குழு, 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதாகவும், பெரும்பாலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்வாகிகளின் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறி, இவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.உணவுப் பொருள் வழங்குதுறையிலும் இதே நிலைதான். தமிழகத்தில் மொத்தம் 1.86 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. இவற்றில் போலிகள் ஏராளமாக இருப்பதால் அவற்றைக் களையும் பணி நடைபெற்றது; இப்போது இந்தப் பணி நான்கு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.13 மாவட்டங்களில் 7.66 லட்சம் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் 20 மாவட்டங்களில் 16.28 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு பொருள்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவர்களது மேல்முறையீட்டுக்குப் பின் அவற்றில் எத்தனை ரேஷன் அட்டைகள் போலியானவை என்பது தெரியவரும். அதன் பிறகே நீக்கப்படும் அட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர ரேஷன் அரிசி கடத்தல் என்பது ஒரு தொடர்கதையாகிவிட்டது. லாரிகளில் கடத்துவது மாறி, ரயில்வே வேகன்களில் கடத்தப்பட்டன; இப்போது அதுவும் மாறி கப்பலில் கடத்தப்படுகின்றன.அண்மையில் தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்குக் கப்பல் மூலம் கடத்த முயன்ற ரூ. 4 கோடி மதிப்புள்ள 44 ஆயிரம் மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மாலத்தீவுக்கு ஐ.ஆர். 64 ரக அரிசி ஆந்திர மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்றும், மாலத்தீவு மாநில வாணிபக் கழகத்துக்கு ஏற்றுமதியாகிறது என்றும் கூறி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; கண்டுபிடிக்கப்படாதது இன்னும் எவ்வளவோ?மக்களின் பொது விநியோகத் திட்டத்திலேயே இவ்வளவு மோசடிகள் நடமாடுகின்றன. இதன் பரிணாம வளர்ச்சிதான் போலி ரேஷன் அட்டைகள். இது எடுக்க எடுக்கக் குறையாதவை; எண்ண எண்ண மாளாதவை; இந்த அசுர வளர்ச்சிக்கு அடிப்படையே அரசியல்தான்; யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலையில் மாற்றமில்லை.உயிர்வாழ உதவும் உணவைத் தொடர்ந்து, மக்கள் உயிர் காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் போலிமருந்து நிறுவனங்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டு மக்களின் உடலோடும், உயிரோடும் விளையாடுகிற கூட்டம் பல்கிப் பெருகியுள்ளது; ஏழை மக்களின் உறுப்புகளைத் திருடும் மருத்துவர்கள் இருக்கும்போது எதுதான் நடக்காது?போலி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் பற்றித் தகவல் தருபவர்களுக்கு ரூ. 25 லட்சம் வரை பரிசளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் இதுவரை 14 போலி மருத்துவ நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.இந்த 14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தி, அவை தயாரித்த போலி மருந்துகளைப் பறிமுதல் செய்யவும், அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.இங்கு சட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் குறைவில்லை. ஆனால், "இந்த வழக்குகளின் முடிவு என்ன ஆனது?' என்பது பற்றி யாருக்கும் தெரியாது. ஜாதி, சமயம், கட்சி, பணம் இவையெல்லாம் அவர்களைத் தண்டனையிலிருந்து தப்புவித்துவிடும். 2001-ம் ஆண்டு பரபரப்போடு பேசப்பட்ட போலி முத்திரைத்தாள் மோசடி இப்போது யாருக்காவது நினைவிருக்கிறதா? இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்ட அப்துல் கரீம் தெலகி உள்பட 33 பேரைக் கைது செய்து பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர பாட்டீல் கடந்த 2010 பிப்ரவரி 10 அன்று தீர்ப்பு கூறினார். இதில் தெலகி உள்பட 22 பேர் குற்றவாளிகள் என்றும், மற்ற 11 பேர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.இவ்வாறு எல்லா நிலைகளிலும் போலிகள் பெருகுவதற்குக் காரணம் என்ன? அரசின் மெத்தனப் போக்கு என்று கூறுவதா? "உலகமயம்' என்ற பெயரால் பன்னாட்டு நெருக்குதலுக்குப் பணிந்து போகிறதா?÷பன்னாட்டுக் குளிர்பானங்களான கோககோலா, பெப்சி தயாரிக்கும் நிறுவனங்களின் 12 வகையான பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவு கலக்கப்படுவதாக "அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்' கண்டறிந்து அறிவித்தபோது நாடே அதிர்ச்சியடைந்தது; ஆங்காங்கு கிளர்ச்சிகளும் வெடித்தன.இதனால் இதுபற்றிய உண்மையைக் கண்டறிய சரத் பவார் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அது விசாரணை நடத்தி, "உண்மையானதே' என்று அறிவித்தது. இந்த அறிக்கை 2004 பிப்ரவரி 4 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்போது எல்லாம் மறந்துவிட்டது. பழையபடியே எங்கும் நுரை கக்கும் இந்தக் குளிர்பான விளம்பரங்கள்! பழைய நடிகர்-நடிகைகளுக்குப் பதிலாக புதிய நடிகர், நடிகைகள்! படித்தவர்களும், மேல்குடி மக்களும் இவை தங்கள் உயிரைக் குடிப்பதை அறியாமல் பெருமையோடு குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.குடியைக் கெடுக்கும் குடியையே அனுமதித்துக் கொண்டிருக்கும் இந்த அரசுகள் இதைப் பற்றியா கவலைப்படப் போகின்றன? ஆண்டுக்காண்டு அதன் விற்பனை சாதனை அளவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2008-09-ம் ஆண்டு ரூ. 10,601 கோடி மது வருமானம் என்பதைத் தமிழக அரசு பெருமையோடு அறிவித்திருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 1,780 கோடி அதிகமாம். இதிலும் போலி மது விற்பனை உண்டு.வேலியைத் தாண்டும் வெள்ளாடுகளை அனுமதித்தால் விவசாயம் பாழாகும். இயற்கை நீதி மற்றும் சட்ட, ஒழுங்கு வேலிகளைத் தாண்டும் இந்தப் போலிகளை அனுமதித்தால் தேசமே சீரழியும். தேசப்பற்று என்பது எல்லைகளைக் காப்பது மட்டுமல்ல, எல்லாவற்றையும் மீறும் போலிகளிடமிருந்து மக்களைக் காப்பதுமாகும்.

கருத்துகள்
போலிகளைக் கண்டு மயங்கும் மக்கள உள்ள வரையும் மக்களுக்கு உண்மையான பகுத்தறிவுக் கல்வி வழங்கப்டும் வரையிலும் அரசியல்வதிகளே தஞ்சம் என மக்கள் செல்லும் நிலை மாறும் வரையிலும் வேலிகளை உருவாக்கும் போலிகளே ஆட்சி செய்வர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 2:59:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக