திங்கள், 15 ஏப்ரல், 2013

முதியோருக்கு முன்னெச்சரிக்கை தேவை!

முதியோருக்கு முன்னெச்சரிக்கை தேவை!

முதியோருக்கான, மருத்துவ முன்னெச்சரிக்கை பற்றி கூறும், மருத்துவர் பத்மஸ்ரீ வி.எஸ்.நடராஜன்:தனியாக இருக்கும் முதியோர், "புல் பாடி செக்கப்' எனும் முழு உடல் பரிசோதனையை, ஒரு முறையாவது கட்டாயம் செய்ய வேண்டும். 60 முதல், 70 வயதிற்குள் உள்ள முதியவர்கள், ஆண்டிற்கு ஒரு முறை; 70 வயதை தாண்டிய முதியவர்கள், ஆறு மாதத்திற்கு ஒருமுறை என, சிறு சிறு பரிசோதனைகள் செய்வதால், திடீரென ஏற்படும் உடல் கோளாறிலிருந்து தப்பிக்கலாம்.சர்க்கரை வியாதியின் அளவு குறைதல், "இன்சுலின்' கூடுதல் போன்ற சமயத்தில், மயக்கம் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். உடனே சாக்லெட், சர்க்கரை, கூல் டிரிங்ஸ் போன்றவை, உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதை, வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது வேலைக்காரர்களிடமோ, முன்கூட்டியே சொல்லி வைப்பது நல்லது.திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டால், "அய்சார்டில்' 5 எம்.ஜி., மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்துக் கொண் டால், உடனே வலி குறைந்து விடும். இது, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை, உதவியாக இருக்கும். புளூ காய்ச்சலுக்கான முதியோர்களின் வேக்சினேஷன் மருந்தை, ஆண்டிற்கு ஒரு முறை போடலாம்.

குளிர் காலத்தில் வரும் சளி, காய்ச்சல் வராது. நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டால், 15 ஆண்டிற்கு வராமல் தடுக்கலாம்.அவசர நேரத்தில் உதவும், பக்கத்து வீட்டார், வேலைக்காரர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரிடம், தங்கள் குடும்ப மருத்துவரின் மொபைல் எண்ணை கொடுத்து வைப்பது நல்லது. வீட்டிலேயே, அவசர தொலைபேசி அழைப்புக்கான எண்கள் மற்றும் முதியோர்களுக்கான, "ஹெல்ப் லைன்' எண்ணான, "1253' போன்றவற்றை, ஒரு போர்டில் எழுதி வைப்பது நல்லது.தொடர்ந்து பரிசோதிக்கும் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அவசர காலத்தில் தேவைப்படும் மருந்து, மாத்திரைகளை வாங்கி வைத்து, அந்த மருந்து எந்த நோய்க்கு பயன்படும் என, தெளிவாக எழுதி வைத்தால், அவசர காலத்தில் உதவ முன்வருபவர்களுக்கு, உதவியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக