திங்கள், 24 டிசம்பர், 2012

எம்(ஞ்)சிஆர். நினைவு நாள் - MGR memorial day

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: இன்று எம்(ஞ்)சிஆர். நினைவு நாள்

மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.

பெற்றோர், மருதூர் கோபால மேனன் - சத்தியபாமா. வேலை நிமித்தமாக இலங்கை கண்டியில் வசித்தனர். தந்தை மறைவிற்கு பின், தாய் மற்றும் சகோதரருடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து, நாடகங்களில் நடித்தார். அரிதாரக் கலையின் அரிச்சுவடியை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அந்த அனுபவத்தின் அடிப்படையில் திரைத்துறையில் கால்பதித்தார். அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல பரிணாமங்களில் ஜொலித்தார். "பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர்., சினிமாவில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் கொள்கையாக கொண்டிருந்தார்.
தேசிய விருது :


எம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் "சதிலீலாவதி', 1936ல் வெளி வந்தது. இருப்பினும் 1947ல் வெளிவந்த "ராஜகுமாரி' தான், எம்.ஜி.ஆருக்கு புகழை ஈட்டித் தந்தது. 1971ல் வெளியான "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது' பெற்றார். நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்த எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை அவரே இயக்கி நடித்தார். தி.மு.க., உறுப்பினராகவும், பொருளாளராகவும் நீண்டகாலம் பணியாற்றினார். "என் இதயக்கனி' என, அண்ணாதுரையால் உச்சிமோந்து போற்றப்பட்டார். 1967ல் முதல்முறையாக எம்.எல்.ஏ., ஆனார். அண்ணாதுரை மறைவிற்கு பின், முதல்வரான கருணாநிதியுடன் ஏற்பட்ட "கருத்து வேறுபாடு' காரணமாக, தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்,

தமிழக முதல்வர் :


1972ல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க., ) தொடங்கினார். 1977 சட்டசபை தேர்தலில், இவரது கட்சி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980 ல், 2 வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில், நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்து கொண்டே, ஆண்டிபட்டி தொகுதியில் வென்றார்; முதல்வர் பதவியையும் தக்க வைத்தார். "படுத்துக் கொண்டே ஜெயித்தவர்' என, மக்கள் புகழாரம் சூட்டினர். பதவியில் இருந்த போதே, உடல்நலக்குறைவால், 1987 டிச., 24 ல் மறைந்தார்.
பாரத ரத்னா:


முதல்வராக இருந்த போது, பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உள்ளிட்ட நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988 ல், உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக