சனி, 29 டிசம்பர், 2012

ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது: தமிழறிஞர் சிவப்பிள்ளை

ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது: தமிழறிஞர் இங்கிலாந்து சிவப்பிள்ளை பேச்சு

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய 11வது உலக தமிழ் இணைய மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழின் பயன்பாடுகள், உலகில் தமிழும், தொழில் நுட்பமும் பல நாடுகளில் செய்துவரும் ஆராய்ச்சிகள் பயன்முறைகள் பலவற்றை உலக தமிழறிஞர்கள் கலந்தாய்வு செய்யவும், தமிழர்களிடையே பரப்பவும் 11வது உலக தமிழ் இணைய மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக குமாராஜா முத்தையா அரங்கில் நேற்று துவங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.

மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மொழியியல் உயராய்வு மைய புல முதல்வர் கணேசன் வரவேற்றார். உத்தமம் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் தலைமை உரையாற்றினார்.இங்கிலாந்து சிவப்பிள்ளை, சிங்கப்பூர் மணியம், மலேஷியா இளந்தமிழ், இலங்கை சிவ அனுராஜ், ஆஸ்திரேலியா முகுந்த் ராமமூர்த்தி, இந்தியா ராமமூர்த்தி வாழ்த்திப் பேசினர்.

உலக நாடுகளில் இருந்த 100க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்துள்ளனர். கருத்தரங்கம், கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று முனைகளில் மாநாடு நடக்கிறது. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.மாநாடு ஏற்பாடுகளை உத்தமம் அமைப்பின் தலைவர் மணிவண்ணன், கணித்தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன் செய்துள்ளனர்.

தமிழறிஞர் இங்கிலாந்து சிவப்பிள்ளை பேச்சு: ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது'' என இங்கிலாந்து சிவபிள்ளை பேசினார். சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் நேற்று துவங்கிய உலகத்தமிழ் இணைய மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் கருத்துரை வழங்கினர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிவப்பிள்ளை பேசுகையில்,"ஐரோப்பா இருக்கும் வரை தமிழ் சாகாது. இணையதளத்தில் ஐரோப்பியா, அமெரிக்கா நாடுகளில் தமிழ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 326 மொழி பேசப்படுகிறது. அவற்றில் தமிழ்மொழியும் ஒன்று. அதே போன்று பயிற்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக உள்ளது' என்றார்.

மலேசியாவைச் சேர்ந்த இளந்தமிழ் பேசுகையில்," மலேசியாவில் 523 தமிழ் பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு சார்பில் நிதி உதவி அளிக்கும் 60 தமிழ் பள்ளிகளில் 20 ஆயிரம் பேர் தமிழ் தொழில்நுட்பம் படிக்கின்றனர். மலேசியாவில் மலையா, சீனம் பேசுகிறவர்கள் யாரும் அந்த மொழி சோறு போடுமா என கேட்பது இல்லை. ஆனால் அடிப்படையில் தமிழ் உணர்வு இல்லாதவர்கள், "தமிழ்' சோறு போடுமா என கேட்கின்றனர். பேசுவதற்கும், கருத்துரை நடத்துவதற்கும் தமிழ் தொழில் நுட்பம் தேவைப்படுகிறது' என்றார்.

இலங்கை சிவ அனுராஜ் பேசுகையில்,"உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி தமிழ்நாட்டிற்கு அடுத்தது இலங்கை தான். உலகத்தமிழ் இணைய மாநாடு இன்னும் இலங்கையில் நடத்தப்படவில்லை. 2004, 2005ம் ஆண்டு உலக தமிழ் இணைய மாநாடு நடத்த முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் இறந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தமிழிலே தொழில்நுட்பம் பெற வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் ஆர்வமாக உள்ளனர்' என்றார்.

இந்தியாவைச் சேர்ந்த ராமமூர்த்தி பேசுகையில்,"பத்து நாடுகளில் உலகத்தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஏழு மாநாடு வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டில் மூன்று மாநாடுகள் அரசு உதவியுடன் நடந்துள்ளது. அரசிற்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உதவியுடன் இன்று சிதம்பரத்தில் உலகத்தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுவது பெருமையாக உள்ளது. மொழியியல் கணினி என்பது ஊடகம். அதை உள்ளடக்கமாக பார்க்கலாம். கணினி வழியாக தமிழ் தொழில்நுட்பம் உள்ளடக்கம் வளர்ந்தால் தமிழ் வளரும்' என்றார்.

உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 142 கட்டுரைகள் சமர்ப்பிப்பு: மாநாட்டில், வெளிநாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கணினித்தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கருத்துரை வழங்கினர்.பிற்பகல் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் 142 கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் தொழில்நுட்பம் தொடர்பாக 48 கட்டுரைகளும், கல்வி தொடர்பாக 24 கட்டுரைகளும், பொதுவான தமிழ் கணினி சார்ந்த கட்டுரைகள் 70ம் அடங்கும்.
இன்று நிறைவு விழா:


உலகத் தமிழ் மாநாட்டின் 2ம் நாளான இன்று காலை தமிழ் ஆய்வாளர்கள் பேசுகின்றனர். பிற்பகல் நிறைவு விழா நடக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையுரையாற்றுகிறார். மொழியில் உயராய்வு மைய புல முதல்வர் கணேசன் முன்னிலை வகிக்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல்துறை பேராசிரிய
ர் அரங்க.பாரி வரவேற்கிறார்.சென்னை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் சேகர், உலகத் தமிழ் சங்க தனி அலுவலர் பசும்பொன், கணித்தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி நடராஜ பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ நிறைவுரையாற்றுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக