வியாழன், 25 அக்டோபர், 2012

மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க வழிமுறைகள் : ways to escape from rain season diseases

மழைக்காலம் ஆரம்பம்: நோய்களில் இருந்து தப்பிக்க வழிமுறைகள்

மழைக் காலத்தில், வைரஸ், பாக்டீரியாக்களின் தாக்குதலால், காய்ச்சல், காலரா, மஞ்சள் காமாலை போன்றவற்றுடன், கண்மற்றும் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.இவற்றில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ள, சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை கவனமாக கடைபிடிக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மழைக்காலம் என்றால், குழந்தைகள், இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால், இக்காலத்தில் வரும், வைரஸ், பாக்டீரியா நோய்கள், நம் குதூகலத்தை குறைத்து விடுவது தான் சோகம்.வடகிழக்கு பருவமழை காரணமாக, தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், மழைக்கால நோய்கள் குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது.மழைகால நோய்களில் இருந்து காத்துக் கொள்வது குறித்து, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆர்.எம்.ஓ., ஆனந்த பிரதாப் வழங்கும் ஆலோŒனைகள்:
புளூ காய்ச்சல்:

மழைகாலத்தில், வயது வித்தியாசம் இன்றி, அனைவருக்கும் வருவது புளூ காய்ச்சல். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், மழையில் நனைவதால், இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர் சளி, இருமல், இதன் அறிகுறி.தும்மலின் மூலம் எளிதில் பரவும் என்பதால், புளூ காய்ச்சல் வந்தவர்கள், பஸ், ரயில் நிலையங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஓரிரு நாட்கள் ஓய்வில் இருந்தால் போதும்; காய்ச்சல் குணமாகி விடும்.
சிக்-குன் குனியா:


சிக்-குன் குனியா வைரசால், கொசுக்கள் மூலம் பரவும், இந்நோய் வந்தவர்களுக்கு, காய்ச்சலுடன், முழங்கால் மூட்டு வீங்கி இருக்கும். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும், இந்நோயில் இருந்து விடுபட, கொசு கடியில் இருந்து, தற்காத்து கொள்வதுதான் ஒரே வழி.

மலேரியா:

கொசுவால் பரவும் இக்காய்ச்சலுக்கு ஆளோவோருக்கு, தலைவலியுடன் கூடிய குளிர் காய்ச்சல், விட்டு விட்டு வரும். பூங்காக்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது, கொசுக் கடியில் இருந்து விடுபட, முழுக்கை சட்டை அணிவது நல்லது. வீட்டு மொட்டை மாடியை சுத்தமாக வைத்துக் கொள்வது, தூங்கும் போது, கொசு வலையை பயன்படுத்துவது போன்றவை, மலேரியாவில் இருந்து விடுபட சிறந்த வழி.

எலி காய்ச்சல்:
எலிகளின் எச்சம் பட்ட திண்பண்டங்களை உண்பது மற்றும் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்துவதால், இக்காய்ச்சல் உண்டாகிறது.பொது இடங்களில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தவிர்ப்பது, பாத்திரங்களை சுத்தமான நீரில் கழுவிய பின் பயன்படுத்துவதன் மூலம், இதை தவிர்க்கலாம்.




காலரா:

ஈக்கள் மூலம் பரவும், கொடிய பாக்டீரியா நோய் காலரா. வயிற்று வலி, வாந்தி, பேதி இதன் அறிகுறிகள். ஆரம்ப நிலையில் தடுக்க தவறினால், சிறுநீரகம் பாதிக்கும் அளவிற்கு, அபாயம் உண்டு.கழிவுநீர் கலந்த தண்ணீர் பருகுவது, திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்கள், உணவு வகைகளை உண்பது ஆகியவை தான், காலராவிற்கு மூலகாரணம். நன்கு காய்ச்சிய நீரை குடிப்பது, சுகாதார முறையில் தயாரான உணவுகளை உண்பதன் மூலம், காலரா அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள் காமாலை:
சுகாதாரமற்ற குடிநீரால் உண்டாகும் வைரஸ் நோய். கண்கள் மஞ்சளாக மாறுவதுடன், சிறுநீரும் மஞ்சளாக வெளியேறும். பசி இருக் காது; இதற்கு ஆளாகாமல் இருக்க, நன்கு கொதிக்க வைத்த நீரை பருவது தான், சிறந்த, எளிய வழி.




"மெட்ராஸ் ஐ'

:முதலில், "இன்புளூயன்சா வைரஸ்' தாக்குதலால் வரும் இந்நோயால், கண்களில் கடும் வலியுடன், தொடர்ந்து நாட்கணக்கில் நீர் வழியும். பின், பாக்டீரியா தாக்குதலுக்கு கண்கள் உட்படும் போது, கண்கள் சிவந்து வீங்கும்.கண் மருத்துவரின் ஆலோசனைப்படி, சிகிச்சை எடுத்துக் கொள்வதுடன், "மெட்ராஸ் ஐ' உள்ளவர்கள், வெளி இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவசியம் வெளியில் செல்ல நேர்ந்தால், கண்ணாடியை கட்டாயம் அணிய வேண்டும்.
தோல் நோய்கள்:


மழைகாலத்தில், சேற்று புண், சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் வராமல் இருக்க, வெளியில் செல்லும் போது, காலணிகள் அணிவது அவசியம்.ஈரமான துணிகள், உள்ளாடைகளை அணிவதை தவிர்ப்பதால், அக்குள், முதுகு, தொடை இடுக்கு போன்ற இடங்களில் தொற்று வராமல் தடுக்கலாம்.

- தினமலர் செய்தியாளர்  -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக