சனி, 27 அக்டோபர், 2012

அரசு ப் பள்ளிகளில் ஆய்வு - தமிழில் தடுமாறும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்

அரசு ப் பள்ளிகளில் ஆய்வு - தமிழில் தடுமாறும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள்


ஒன்பதாம் வகுப்பில், முழுமையாக தமிழ் வாசிக்க, எழுத தெரியாத மாணவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககம், தமிழகத்தில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புக்கான கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், 9ம் வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிக அளவில் இருப்பதால், அதில் இருக்கும் சிக்கல்களை களைய, "அச்சீவ்மென்ட் டெஸ்ட்' என்ற சாதனை கண்டறியும் சோதனை, அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் தாய்மொழியான தமிழை முழுமையாக வாசிப்பதிலும், எழுதுவதிலும், திறன் இருப்பது கண்டறியப்பட்டது. எந்த அளவுக்கு மாணவர்களின் கற்றல் பயன் அவர்களிடம் சேர்ந்து, அதனால் திறன் பெற்றிருக்கின்றனர் என்பதை கண்டறியும் வகையிலும் வினாத்தாள் அமைக்கப்பட்டது. இதைக் "கற்றல் அடைவு தேர்வு' என, அழைக்கின்றனர்.இச் சோதனைகளில், 20 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழை முழுமையாக வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த, "கற்றல் அடைவு தேர்வு'களை நடத்தி, தமிழை முழுமையாக எழுதவும், படிக்கவும் முடியாத மாணவர்களை கண்டறியும் பணி, முழு வீச்சாக நடந்து வருகிறது.
தமிழ் மொழி முழுமையாக தெரிந்தால் மட்டுமே, தமிழ்வழி கல்வியில் படிக்கும் மற்ற பாடங்களையும், பிழையின்றி படிக்க முடியும் என்பதால், தமிழ் மொழியை முழுமையாக கற்றுத்தர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் கண்டறியப்படும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம், பள்ளி நேரம் முடிந்த பின்பும், சனிக்கிழமை களிலும், நவீன முறைகளில் தமிழ் மொழி எழுத்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

-தினமலர் செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக