புதன், 4 நவம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 155:
சிங்கள ராணுவ முகாம்கள் அழிப்பு!



ஆனையிறவுப் போரில் 123 பெண்புலிகள் உள்பட 573 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இப்போரின்போது யாழ் மக்கள் காட்டிய ஆர்வமும் உதவியும் கணக்கில் அடங்கா. உணவுப் பொருள்கள் வாகன உதவிகள் என தாராளமாக வழங்கினர். யாழ்குடாவிலிருந்து வன்னிப் பகுதிக்குச் சுலபமாகச் செல்ல ஆனையிறவு முகாம் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் விரும்பியதே மேற்கண்ட உதவிகளுக்குக் காரணமாகும். காயமடைந்தவர்களுக்கு என சுண்டிக்குளத்தில் தற்காலிக மருத்துவ நிலையம் திறக்கப்பட்டது. இதில் அடேல் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் தாதிப்பெண் பயிற்சி பெற்றவர்களும், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் சிகிச்சை மேற்கொண்டனர். ஆண்-பெண் போராளிகள் பல்வேறு வகையான காயங்களுடன் இங்கு கொண்டுவந்து போடப்பட்ட நிலையில், முகம் சுளிக்காது தாதிப் பெண்கள் சிகிச்சையளித்தனர். இவ்வகையான மருத்துவ நிலையம் திறக்கப்பட்டிருக்கிற செய்தி யாழ்ப்பாணம் முழுவதும் அறிந்த செய்தியாயிற்று. யாழ் மக்கள் இந்த மருத்துவ நிலையத்துக்கு முதலுதவி மருந்துகள், படுக்கைகள், விரிப்புகள் மற்றும் உணவுப் பொருள்கள் அனுப்பி வைத்தனர். இந்தச் செய்தி அறிந்த சிங்களப் படையினரின் குண்டுவீசும் விமானம் தாழப்பறந்து இரு குண்டுகளை வீசிவிட்டுப்போனது. மருத்துவ சிகிச்சை செய்துவிட்டு அப்போதுதான் தனது இருக்கைக்குத் திரும்பிய அடேல் பாலசிங்கம், குண்டுச் சிதைவின் அதிர்வில் தூக்கி வீசப்பட்டார். அடேலின் பாதுகாவலர்கள் அங்கே ஓடிவந்து குண்டுவீச்சு விமானம் போய்விட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவ நிலையம் இருந்த இடத்துக்குச் சென்று இவர்கள் பார்த்தபோது, நல்லவேளையாக அங்கே எந்த பாதிப்பும் இல்லை. விமானத்தின் ஓசை கேட்டதுமே நிலையத்தில் இருந்த காயம்பட்டவர்களும், தாதியர்களும் பதுங்குகுழிக்குள் ஓடி ஒளிந்து கொண்டதால் தப்பித்தனர்.மணலாற்றுப் பகுதி, இலங்கையின் வடக்கு - கிழக்கு இரண்டையும் இணைக்கும் பகுதியாகும். இந்தப் பகுதியை ஆக்கிரமித்து அதனைத் துண்டிக்க வேண்டும் என்பது சிங்களவரின் திட்டமாகும். இங்கு சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு, ராணுவ முகாம்கள் அமைத்து, வடக்கு-கிழக்கைத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்தால் தமிழீழக் கனவைத் தகர்த்துவிடலாம் என்ற சிங்களவரின் திட்டத்தை, புலிகள் அவ்வப்போது முறியடிப்பது வழக்கமாயிற்று. இதையும் மீறி, திருகோணமலையிலும் மணலாற்றுப் பகுதியிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களை சிங்களப் படை நிறுவியது. 30 ஆயிரம் வீரர்கள் இங்கு குவிக்கப்பட்டனர். புலிகளும் இதே பகுதியில் பல முகாம்களை அமைத்து சிங்களப் படைகளை நகரவிடாமல் தடுத்தனர். இந் நிலையில், 1991 அக்டோபர் 29-ஆம் தேதி மணலாற்றுக் காட்டுப்பகுதியில் சிங்களப்படை தாக்குதலை ஆரம்பித்தது. இத் தாக்குதலுக்கு "மின்னல்' என்றும் பெயரிட்டது. பெயருக்கு ஏற்ப வானிலிருந்து குண்டுமழை பொழியப்பட்டது. இருந்தபோதிலும் புலிகள், தங்களுக்கே உரிய வகையில் எதிர்த்தாக்குதலை நடத்தி, சிங்களத் தாக்குதலை முறியடித்தனர். 200 பேருக்கும் மேலான வீரர்களைப் பலிகொடுத்த சிங்களப்படை ஓடி ஒளிந்தது. இதன் பின்னர் மேலும் 1992 மார்ச் மற்றும் மே மாதங்களில் சிங்களப்படை இரு முயற்சிகளை மேற்கொண்டது. அவ்விரு முயற்சிகளையும் புலிகள் வெற்றிகரமாக முறியடித்த நிலையிலும் ஏராளமான போராளிகளை இழந்தது. 275 பேர்வரை உயிர் துறந்தனர். சிங்களப் படையினரோ 400 பேருக்குமேல் உயிர் துறந்தும், 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மணலாற்றைக் கையகப்படுத்த சிங்களப்படை இரு ஆண்டுகளில் மூன்றுமுறை முயன்றும், அது கைகூடாமல் போனதற்கு, போராளிகளின் வீராவேசத் தாக்குதலே காரணம் ஆகும்.தமிழீழத்தின் எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிங்கள முகாம்களைத் தகர்ப்பது அங்கு வாழும் தமிழருக்கு நிம்மதியைத் தரும் என்ற அடிப்படையில் தாக்குதல் திட்டம் தயாரானது. 1992-ஆம் ஆண்டில் சிங்களப் படையினரின் முகாம்களில் தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தும், அழிக்க முடியாதவற்றை முகாமை விட்டு வெளியேற முடியாதவாறு செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் நடந்த போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.சீனன்குடாவில் சிங்களப் படையின் பிரமாண்டமான விமானதளம் இருந்தது. இந்த விமானதளத்தின் மீது புலிகள் 1992 ஜனவரியில் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த 6 பாசறைகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி 4 பயிற்சி விமானங்களும், ஹெலிகாப்டர்களும்கூட தாக்குதலுக்கு ஆளாயின. இதில் விமானிகள், சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்ட 150 பேர் சிங்களத் தரப்பில் இறந்தனர். ஆயுதக் கிடங்கு வெடி வைத்து தகர்க்கப்பட்டதால், பல கோடி ரூபாய் பெறுமான ஆயுதங்கள் எரிந்து நாசமாயிற்று.ஏப்ரலில், மணலாறு-கொக்குத்தொடுவாய் முகாமிலிருந்து கிளம்பிய சிங்களப்படை வீரர்களை, மறித்து நடத்திய தாக்குதல் 3 மணி நேரமே நீடித்தது. இத் தாக்குதலில் 26 ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில், அதிநவீனமான பின்னுதைப்பற்ற பீரங்கி ஒன்றைப் புலிகள் கைப்பற்றினர். இந்த பீரங்கி அமெரிக்கத் தயாரிப்பாகும். ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் வருகின்ற டாங்கிகளை இந்த பீரங்கியால் குறிவைத்துத் தகர்க்க முடியும். இந்த பீரங்கி 34 மீட்டர் நீளம் கொண்டதாகும்.தமிழீழப் பகுதி எல்லைப் பகுதியில் "காட்டுபொத்த' என்ற பெயரில் சிங்கள முகாம் ஒன்று இருந்தது. இம் முகாமையும் புலிகள் தாக்கி அழித்ததில் 55 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.இன்னொரு எல்லைக் கிராமம் அனுராதபுரத்தையொட்டியுள்ள காட்டுப் பகுதியில் உள்ளது. அதன் பெயர் "வண்ணான்குளம்' ஆகும். இந்தப் பகுதியில் உள்ள தமிழ் கிராமங்களில் உள்ள தமிழர்களை விரட்டிவிட்டு, அங்கு சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துவதற்கு வசதியாக வண்ணான்குளம் சிங்கள முகாம் உதவி செய்தது. எனவே, இந்த முகாமை அழிப்பது என்பது புலிகளுக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. 11-7-1992 அன்று இம் முகாம் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி, அழித்தனர். இந்தப் போர் அதிகாலை தொடங்கி, 30 நிமிடங்களில் முடிந்ததாகும். இந்த முகாமில் இருந்த கவச வாகனங்களும் புல்டோசர்களும் முற்றாக அழிக்கப்பட்டன. இந்த முகாமைக் காப்பாற்ற அருகிலிருந்த தந்திரிமலை முகாமிலிருந்து வெளியே வந்த சிங்கள வீரர்களை மறைந்திருந்து வரும் வழியிலேயே தாக்கி அழித்தனர்.அக்டோபர் 2-ஆம் நாள் கட்டைக்காடு முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கட்டைக்காடு முகாமானது ஆனையிறவுப் போரில், சிங்களப் படையினரை விமானம் மூலம் தரையிறக்கிய இடமாகும். தரையிறங்கிய வீரர்கள் அங்கேயே குடிகொண்டு, முகாம் ஒன்றை அமைத்தனர். எனவே இந்த முகாமையும் அழிப்பது என்ற முடிவில் ஆனையிறவுப் போர் நடந்த 15 மாதங்கள் கழித்து, திடீர்த் தாக்குதல் நடத்தப்பட்டது. 56 மணி நேரம் நடந்த இந்தப் போரில் ராணுவத்தினர் அழிக்கப்பட்ட நிலையில், 50 விமான எதிர்ப்பு பீரங்கிகள், 28 ராக்கெட்டுகள், 180 பெல்ஜியத் துப்பாக்கிகள், 2 இலகுரகத் துப்பாக்கிகள், 3 லட்சம் துப்பாக்கி ரவைகள், குண்டுவீசும் சாதனங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றாக சிங்கள ராணுவத்தின் முகாம்களை அழிப்பதில் விடுதலைப் புலிகள் முனைப்புடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக