திங்கள், 17 ஆகஸ்ட், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 78:
பிரபாகரனின் பட்டினிப் போர்!



உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பிரபாகரனுடன் கி.வீரமணி
சார்க் மாநாட்டின்போது விடுதலைப் புலிகளையும் கலந்தாலோசிக்க வைத்த எம்.ஜி.ஆரின் சமயோஜிதம், போராளிகள் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் ஆர்வம் காட்டுபவர்களின் பாராட்டைப் பெற்றது என்றாலும், ஒரு சிலரால் கடுமையாக விமர்சிக்கவும் செய்யப்பட்டது. 18.11.1986 அன்று சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வருக்காக, அன்றைய உணவு அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இதுகுறித்து விளக்குகிறார்."இந்தியப் பிரதமர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரதமருக்குத் தேவையான, அவர் விரும்புகிற காரியங்களில் கலந்து கொள்வதற்குத்தான் நேற்றும் அதன் முன்தினமும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார்கள். பிரதமரை இரண்டு முறை முதலமைச்சர் சந்தித்தார்கள். அப்போது போராடுகிற இலங்கைத் தமிழர்களுடைய உணர்வுகளையும், இங்கே உள்ள தமிழ் மக்களுடைய உணர்வுகளையும் எடுத்துச் சொல்கிற அளவுக்கு, அந்தத் தீர்வுக்கு பிரதமருக்கு உறுதுணையாக இருந்தார்கள். இந்தியப் பிரதமரோடு நாம் பேசும்போது, நமக்குத் துணையாக போராளிகள் இருந்தார்கள். நாங்கள் ஸ்ரீலங்கா அரசைச் சந்தித்ததாகவோ மற்றும் போராளிகள் ஸ்ரீலங்கா அரசைச் சந்தித்ததாகவோ வந்த செய்திகள் சரியானது அல்ல' என்றார்.இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோதனைகள் சூழ்ந்த நேரத்திலும் சவால்களை எதிர்கொண்டபோதும் எம்.ஜி.ஆர். தனது கொள்கையை விட்டுக்கொடுத்து யாருக்கும் அடிபணிந்ததில்லை.அதே நேரத்தில், "விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை வீட்டுக் காவலில் வைக்கவும், ஆயுதப் பறிப்புக்கும் மத்திய அரசு உத்தரவிடவில்லை' என்று அப்போதைய பாதுகாப்பு இணையமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்படியானால் அந்த உத்தரவு யாரால் பிறப்பிக்கப்பட்டது என்று பத்திரிகைகளில் கேள்வி எழுப்பப்பட்டது.எம்.ஜி.ஆர். - பிரபாகரன் இடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு முயற்சியை டிஜிபி மோகன்தாஸ் மேற்கொண்டதால் ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு யார் மீதும் பழிபோடாமல் எவ்வளவோ சிக்கல்களுக்கும் மத்தியில் ஆயுதப் பறிப்புக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார் முதல்வர் எம்.ஜி.ஆர்.பிரபாகரன், இதற்கிடையில் தன்னிடம் பறித்த ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்புக் கருவிகளைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி 22.11.1986 அன்று சாகும்வரை தண்ணீர் கூட அருந்தாத உண்ணாவிரதம் மேற்கொண்டார்.இதன் காரணமாகத் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கூறியதாக வானொலி, தொலைக்காட்சிகளில், "விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்கள் - தகவல் தொடர்புக் கருவிகள் பறிக்கப்பட்டது இந்திய அரசின் உள்துறைக்குத் தெரியாது. இது அதிர்ச்சியாக உள்ளது' என்று செய்தி வெளியானது. இதுவும் மறைமுகமாக எம்.ஜி.ஆர். மீது பழிசுமத்துவதாக ஆயிற்று.பிரபாகரனின் பட்டினிப் போர் இரண்டாவது நாளாக தொடர, எம்.ஜி.ஆர். தனது அதிரடி நடவடிக்கையாக, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனிடம் பறிக்கப்பட்ட ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், தனக்குத் துரோகம் இழைத்த டிஜிபி மோகன்தாசை, காவல் துறை தலைமை இயக்குநர் பதவியிலிருந்து நீக்கி, காவலர் வீட்டு வசதி வாரியத்திற்கு அவரைப் பணி மாற்றம் செய்து உத்தரவிட்டார். (ஆதாரம்: எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே. தங்கநேயன்).இதே சம்பவத்தை பழ.நெடுமாறன் தனது "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் (1988)' என்கிற நூலில் எழுதும்போது வேறொரு தகவலைத் தருகிறார். அது வருமாறு: ""பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டார். வடக்கு மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு சிங்கள அரசுடன் ஒரு உடன்பாட்டிற்குப் பிரபாகரன் ஒப்புக்கொண்டால் பின்னர் அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக இந்திய அரசின் சார்பில் ஆசை வார்த்தை காட்டப்பட்டது. இதில் எப்படியும் பிரபாகரனை ஒப்புக்கொள்ள வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்திய அரசு செயல்பட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.""தெற்காசிய மாநாடு முடிந்து தனது நாட்டிற்குப் புறப்படவிருந்த ஜெயவர்த்தனாவை 3 மணி நேரம் தாமதிக்கும்படி பிரதமர் ராஜீவ் காந்தி வேண்டிக் கொண்டார். அவரும் தனது பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு அங்கு தங்கினார். இந்த 3 மணி நேரமும் பிரபாகரனுக்குக் கடும் சோதனையாக இருந்தது. தனது லட்சியத்தை எள்ளளவும் விட்டுக் கொடுக்க பிரபாகரன் தயாராக இல்லை. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வற்புறுத்தியும் அவர் இணங்கவில்லை'' என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பழ.நெடுமாறன்.பெங்களூர் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அரசு கொடுத்த திட்டத்தையொட்டி தமிழர் விடுதலைக் கூட்டணியால் அளிக்கப்பட்டிருந்த பதில்களும் பரிசீலிக்கப்பட்டன. எல்லாம் முடிந்த நிலையில் இலங்கை அரசு, வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கோரிக்கையைக் கிடப்பில் போட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மத்தியில் திருகோணமலையை சிங்களர் மாவட்டமாக்கும் திட்டமொன்றை முன் வைத்தது. இத்திட்டத்தைத் தமிழர்கள் முற்றாக நிராகரித்தார்கள்.இரு இந்திய அமைச்சர்கள் குழுவினரின் முன் இலங்கை அரசால் (19-12-1986) வைக்கப்பட்ட தீர்வில் (அ) அம்பாறையைத் தவிர்த்து கிழக்கு மாகாணம் அமைத்தல் (ஆ) கிழக்கு மாகாணத்துக்கு மாகாணசபை நிறுவுதல் (இ) வடக்கு மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் நிறுவனரீதியாலான இணைப்பு (ஈ) வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பூர்வீகமாக வாழ்கின்ற மக்களின் கருத்து அறிதல் (உ) ஜனாதிபதியால் நியமிக்கப்படும் துணை ஜனாதிபதி பதவியை உருவாக்கி, அதில் சிறுபான்மையினரை அமர்த்துதல் (ஊ) கிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து முஸ்லிம் எம்.பி.க்கள், இந்தியா வந்து, இந்தியப் பிரதிநிதியின் முன்னிலையில் தமிழ்த் தலைவர்களுடன் தொடர்புள்ள விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் -ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.இந்த "ஊ' பகுதி அம்சம் குறித்து, இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாகவே தங்களின் நிராகரிப்பை, கிழக்குப் பகுதி முஸ்லிம்கள் தெரிவித்தனர். இலங்கையும் இத் தீர்வில் இருந்து உடனடியாகப் பின்வாங்கியது. தமிழர் அமைப்புகளுக்கு இத் தீர்வு பற்றிய தகவல் எதுவும் இந்திய-இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்படவே இல்லை. (ஆதாரம்: ஐசஈஐஅ’ந நதஐகஅசஓஅ ஊஐஅநஇஞ க்ஷஹ் தஹத்ங்ள்ட் ஓட்ஹக்ண்ஹழ்-டஹஞ்ங் 160-163).பேச்சு வார்த்தைகளால் இனி பயனிருக்காது என்பது போராளிக் குழுக்களுக்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசுக்கும் தெளிவாகவே தெரிந்து விட்டது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக