சனி, 14 ஜூலை, 2012

புலி போல் பாயாமல் சுண்டெலி போல் பணிவதா? முதல்வர் பாய்ச்சல்



தினமலர்



சென்னை:"இலங்கை அரசிடம், புலி போல் பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல் பணிந்து செல்வது வருந்தத் தக்கது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பு; எனது கடும் கண்டனம் காரணமாக, இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சியை, சென்னை தாம்பரம் விமானப் படை நிலையத்திலிருந்து, பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகவல் கிடைத்தவுடன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது; அவர்களை, உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று, நான் மத்திய அரசை வலியுறுத்தினேன்.

மீண்டும் நிரூபணம்:ஆனால், "தமிழினத் தலைவர்' என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தமிழினத்தை, இலங்கை அரசு அழிக்க காரணமாக இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில்,"2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், "இலங்கை ராணுவத்திற்கு, தமிழகத்திலேயே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலத்தில் பயிற்சி அளித்தால்...' என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு,"அப்படி பயிற்சி அளிக்க முன் வந்தால், அப்போது பார்ப்போம்' என்று நழுவலாகவும் பேசியிருக்கிறார்.

இதை நினைக்கும் போது, முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து, மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கும் என அறிவித்து, அதை கேரள அரசுக்கு எதிரான, போராட்டமாக மாற்றி, கடைசியில், அதையும் கைவிட்ட நிகழ்ச்சி தான் நினைவுக்கு வருகிறது. தன் நடவடிக்கைகள் அனைத்தும், கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி.

வியப்பை ஏற்படுத்தாது:இவரின் இந்த நடவடிக்கைகள், "உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகின்றன. தமிழ் இனத்தின் மீது, கருணாநிதிக்கு, உண்மையிலேயே அக்கறை இருந்தால், தான் தாங்கிப் பிடித்திருக்கும், மத்திய அரசை, வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும், இலங்கை விமானப் படை வீரர்களை, உடனே திருப்பி அனுப்ப வலியுறுத்தி இருக்க வேண்டும்.ஆனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும், பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், மத்திய அரசை மிரட்டி, சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கை தமிழர் நலனுக்காக, அவ்வாறு செயல்படாதது, அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது."புலி போல் பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது, வருந்தத் தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை விமானப்படை வீரர்களை, உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக