சனி, 14 ஜூலை, 2012

பனை ஓலை தான் முதலீடு!



சொல்கிறார்கள்

பனை ஓலை மூலம், கைவினைப் பொருட்கள் செய்து வரும் சித்ரா:நான் பிறந்து, வளர்ந்தது நாகப்பட்டினம். 10ம் வகுப்பு வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லை. அதனால், ஏதாவது வேலை செய்து, குடும்பத்திற்கு உதவியாக இருக்கலாம் என நினைத்தேன். மகளிர் சுய உதவிக் குழு ஒன்றில் சேர்ந்தேன். பல தொழில் பயிற்சிகளைக் கொடுத்தனர்.ஆர்வத்தை விட, மாதம், 750 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும் என்பதால், பனை ஓலைத் தொழில் பயிற்சிக்குச் சென்றேன். அங்கு சேர்ந்த பின், வெறும் ஓலையை இப்படியெல்லாம் மாற்ற முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. ஆறு மாத முடிவில் அவர்கள் கற்றுக் கொடுத்ததை விட, என் கற்பனைத் திறனைக் கொண்டு, நானே பல பொருட்களை செய்ய ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், என் கை வண்ணத்தில் உருவான பொருட்களின் மதிப்பு, எனக்கு தெரியவில்லை. காரைக்காலில் நடந்த, அரசுக் கண்காட்சியில், என் பொருட்களை வைத்து, முதல் முறையாக, "ஸ்டால்' போட்டேன். அங்கு எனக்கு கிடைத்த வரவேற்பும், விற்பனையும் தான், என் தொழில் மீது, எனக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தன. தொடர்ந்து, புதுச்சேரி, நாகப்பட்டினம் என, கண்காட்சிகளுக்கு சென்றேன்.அதுவரை வறுமையுடன் போராடிய என் குடும்பம், மெல்ல அதிலிருந்து எழுந்தது.இந்த தொழில் துவங்குவதற்கு, பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. பனை ஓலையைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. மரம் ஏறும் ஆளுக்கு கூலி கொடுத்தால், கிராமங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் பனை ஓலை கிடைக்கும்.அதை, "கட்டிங் மிஷினில்' தேவையான அளவிற்கு, அழகாக நறுக்க வேண்டும். பின், வெந்நீரில் சாயத்தை ஊற்றி, ஓலைகளை அமுக்கி வைத்திருந்தால், சாயம் ஏறிவிடும்.நமக்கு என்ன பொருள் தேவையோ, அதை ஓலையைக் கொண்டு செய்ய வேண்டியது தான். எப்படிப் பின்ன வேண்டும் என்பதற்குத் தான், பயிற்சி வேண்டும். அது தெரிந்து விட்டால், அழகழகான கலைப் பொருட்களை செய்து கொண்டே போகலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக