புதன், 26 ஜனவரி, 2011

Century celebrations of national anthem: தேசிய கீதத்தின் நூற்றாண்டில் வெண்மை பாரதம்

தாகூர் போற்றுதலுக்கு உரியவர்தான். ஆனால், இந்தப்பாடல் ஆங்கிலேய அரசரை வாழ்த்திப் பாடுமாறு கேட்டதற்கு இணங்க எழுதப்பட்டது. இந்தியா ஒட்டு மொத்தமாக ஆங்கிலேய அரசரைப் போற்றுவதாகத்தான் பாடல் அமைந்துள்ளது. இந்தியாவை வாழ்த்தி அல்ல. விடுதலை நாட்டில்  இன்னும் அடிமையாக நம்மை ஆக்கும் இந்தப்பாடலை நாட்டுப்பாடலாக - தேசிய கீதமாக- வைத்திருப்பதே இழுக்கு. இதில் வேறு நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் என்பது பெரும் அவமானச் செயல்.  செம்மறியாடுகள் போல் மக்கள் நடந்து கொள்கிறார்கள் என்பது இப்பாடலைப் போற்றுவதில் இருந்தே தெரிகிறது. ஓர் அடிமை இந்தியத்தாயே தன் ஆட்சியாளனனைப் போற்றுவதாக எழுதிய பாடலை  நாட்டை வாழ்த்துவதாகக் கருதும் அறியாமைக்கு முடிவு எப்பொழுது பிறக்கும்? தேசிய  இனங்களின் கூட்டரசாக நம்நாடு அமையும் பொழுது பிறக்குமோ? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தேசிய கீதத்தின் நூற்றாண்டில் வெண்மை பாரதம் பிரசார திட்டம்

First Published : 26 Jan 2011 06:25:17 AM IST


சென்னை, ஜன. 25: தேசிய கீதமான ஜன கண மன பாடல் பாடப்பட்டதன் நூற்றாண்டை முன்னிட்டு வெண்மை பாரதம் என்ற பிரசார இயக்கத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தொடங்கியுள்ளது என அந்த நிறுவனத்தின் நிறுவனர், நிர்வாக இயக்குநர் கே.ஆர். நாகராஜன் தெரிவித்தார்.இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:இன்றைய நவீன சமுதாயத்தில், நமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் முழுமையானவர்களாக உருவெடுப்பதுடன், அடுத்த தலைமுறையின் முன்னேற்ற பாதைக்கு வழிகாட்ட முடியும்.இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நாளைய தலைமுறையை வெண்மையாக மாற்றுவதும் மட்டுமே 2011-ம் ஆண்டின் குறிக்கோள். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன பாடல் 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் முதன் முதலில் பாடப்பட்டது.இந்த பாடல் 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த தேசியகீதம் முதன் முதலில் பாடப்பட்டதன் நூறாவது ஆண்டு 2011-ம் ஆண்டாகும். இதனை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் வெண்மை பாரதம் என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பிரசார நிகழ்ச்சிகளை நடத்த ராம்ராஜ் காட்டன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் பிரசார நிகழ்ச்சிகள் நடத்த பள்ளிகள், கல்லூரிகள் முன்வந்தன. இருப்பினும், சுதந்திரம் மற்றும் எதிர்காலத்தைப்பற்றிய ஒரு காட்சியை உருவாக்கி இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய பிரமுகர்கள் மூலம் பிரசாரம் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதே சமயத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரத்தூதராக நடிகர் அர்ஜுன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றார் நாகராஜன்.இது குறித்து நடிகர் அர்ஜுன் கூறியது: நாட்டுபற்றை உணர்த்தும் வகையில் செயல்பட்டு வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்படுவது பெருமை அளிப்பதாக உள்ளது. தேசிய கீதம் பாடப்பட்டதன் நூற்றாண்டு விழாவை நாட்டிற்கு உணர்த்தும் வகையில் இந்த நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள வெண்மை பாரதம் திட்டம் அனைவரின் பாராட்டுக்குரியது என்றார் அர்ஜுன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக