திங்கள், 8 ஜூலை, 2013

ஒயிலாக நிற்பது நல்லதல்ல!

ஒயிலாக நிற்பது நல்லதல்ல!

முதுகு, முட்டி, தோள், மணிக்கட்டு, கணுக்கால், கழுத்து என, எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்குக் காரணம், உங்கள் இடுப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றம் தான். அதைச் சரி செய்தால் மட்டுமே தீர்வு காண முடியும்

முட்டி வலி, கழுத்து வலிக்கு தைலம்; முதுகு வலி, தலை வலிக்கு மாத்திரை என, நாமாகவே ஒரு ஊகத்தில் வாழ்க்கையை நடத்துகிறோம். ஆனால், வலிக்கான காரணம் குறித்து, என்றுமே சிந்தித்ததில்லை. "வலி என்பது, உடலில் ஏதோ ஒரு இடத்தில் உள்ள கோளாறைக் குறிக்கும் அறிகுறி தான். உடலின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொண்டால், தோள், முழங்கை, மணிக்கட்டு, முட்டி, இடுப்பு, கணுக்கால், பாதம், தலை, முதுகு ஆகியவற்றில் ஏற்படும் வலிகளுக்கு, தீர்வு காணலாம்' என்கிறார், உடல் ஒருங்கிணைப்பு நிபுணரான, டாக்டர் ப்ரீத்தி பரத்.

இயங்கா நிலையில் வாழ்வது முழுமையான வாழ்க்கையல்ல!
"வலியை உணராமல் இருக்க மட்டும் தீர்வு காணும் நாம், நம் உடல் கட்டமைப்பில், மாற்றம் ஏற்பட்டால், அதைக் கண்டு கொள்வதில்லை. அதை சரி செய்தால் மட்டுமே, வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்' என்றும் சொல்கிறார். அவர் சொல்வதைக் கேளுங்கள்:உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் வலியால், தேவைக்கு ஏற்ப இயங்க முடியாமல், கட்டுப்பாடுகளுடன், தடைகளுடன் வாழ வேண்டி உள்ளது. இது, முழுமையான வாழ்க்கை அல்ல. உடலின் ஒரு பகுதியில், வலி ஏற்பட்டால், அதோடு இயைந்து எப்படி வாழ்வது என்று சொல்லித் தருவதும், வீரியம் உள்ள மருந்துகளை சாப்பிடச் சொல்வதும், "உடற்பயிற்சி செய்தால் குணமாகாது; அறுவை சிகிச்சை செய்யலாம்' என்று வலியுறுத்துவதும், தற்போதைய நடைமுறையாகி விட்டது.உதாரணமாக, முதுகு வலி ஏற்பட்டால், மாத்திரை சாப்பிடுவது, இடுப்புப் பட்டை போட்டுக் கொள்வது, பாதிப்படைந்த முதுகுக்கு ஏற்ப, மெத்தை அமைத்துக் கொள்வது, முதுகை சாய்க்க, நாற்காலியை பிரத்தியேகமாக வடிவமைப்பது என, எல்லாவற்றையும் செய்து கொள்கிறோம். ஆனால், இவை எதுவும் தீர்வாக அமையாது. முழு ஈடுபாட்டுடன், முயற்சி செய்து மீள்வது ஒன்றே தீர்வு.வலி ஏற்பட்டால், உடல் பலம் குறைந்து விட்டதென்றோ, வாழ்வதற்குத் தேவையான திறனை இழந்து விட்டதாகவோ கருத முடியாது. உடல் அசைவு இல்லாததால் ஏற்படும் கோளாறுக்கான அறிகுறி தான், வலி என்பதை உணர வேண்டும். ஓடி, ஆடி வேலை செய்த காலம், மலையேறி விட்டது; இப்போது, நடப்பதற்குக் கூட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறோம். இயங்கா தன்மை கொண்டிருக்கிறோம்.இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்...நம் கழுத்தின் திறன்களுள் ஒன்று, வலப் பக்கமும், இடப் பக்கமுமாக, 180 டிகிரிக்குத் தலையைத் திருப்ப வைக்க வேண்டும். இது முடியாமல் போனால், கழுத்தின் திறன்களில் ஒன்று, "அவுட்' என்று பொருள்.

தசை - எலும்பு இயங்கா தன்மைக்குக் காரணம்: கண்ணாடியில் உங்கள் உருவத்தை, முழுமையாகப் பாருங்கள். கால்கள் இரண்டும், நேராக இருக்கும் வகையில் நிற்கிறீர்கள். ஒரு கால் மட்டும், கோணலாக திரும்பிக் கொள்கிறதா? இடுப்பின் ஒரு புறம், மற்றொரு புறத்தை விட, தூக்கலாக உள்ளதா? தோள் பட்டைகளுள் ஒன்று, தூக்கியபடி உள்ளதா? ஒரு கை, முன்னோக்கி இருக்கிறதா? ஒரு காலை விட, மற்றொரு கால் உதவியுடன், நல்ல நிலையில் நிற்க முடிகிறது எனத் தோன்றுகிறதா? இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு, நீங்கள் ஆம் என்ற பதிலைச் சொன்னால், உங்கள் உடல் மூட்டு இணைப்புகளில் பிரச்னை உள்ளது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.ஒரு பகுதியில் வலி ஏற்பட்டால், அந்த பகுதியில் தான் பிரச்னை என்று கருதக் கூடாது. உதாரணமாக, உங்கள் கழுத்திலோ, முட்டியிலோ வலி இருந்தால், குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கருதுவது தவறு. இடுப்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்; எனவே, இடுப்புப் பகுதியில் உள்ள பாதிப்பை சரி செய்தால், கழுத்திலோ, முட்டியிலோ ஏற்பட்டுள்ள, வலியை சரி செய்யலாம்.மேலும், வலி ஏற்படுவது, கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தானே தவிர, தற்போதைய உடல் நிலையால் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.முதுகு, முட்டி, தோள், மணிக்கட்டு, கணுக்கால், கழுத்து என, எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்குக் காரணம், உங்கள் இடுப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றம் தான். அதைச் சரி செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்குமே தவிர, வேறு எந்த மாத்திரை உட்கொண்டாலும், தீர்வு காண முடியாது.தோளுக்கும், கால் முட்டிக்கும் இடைப் பட்ட பகுதியில் உள்ள, உங்கள் இடுப்பு, அதன் நிலையிலிருந்து முன்னோக்கியோ, பின்னோக்கியோ வளைந்து விட்டால், இடுப்புக்கு மேல் உள்ள பகுதியோ, அதன் கீழுள்ள பகுதியோ, தன் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும். இடுப்பைச் சுற்றியுள்ள முக்கிய நரம்புகள், இடுப்பின் தன்மைக்கேற்றவாறு, இழுத்துக் கொள்வதால் இந்த நிலை ஏற்படுகிறது. இடுப்பைச் சரி செய்யாமல், தோள்பட்டையை வலிமைப்படுத்தும் பயிற்சி மேற்கொள்வது, மிகவும் ஆபத்தானது; தோள்பட்டை முன்பக்கமாகச் சரியும் நிலையும் ஏற்பட்டு விடும்.

உண்மையான கட்டமைப்பை மீட்டெடுங்கள்: உடலின் இடது புறமும், வலது புறமும்; மேலும், கீழும்; முன்னும், பின்னும் முறையான நிலையில் இருக்கும் வகையில், நம் உடல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வலது பக்கத்தில் உள்ள தசைகளைப் போலவே, இடது பக்க தசைகளும் அமையப் பெற்றிருக்கும். இரு பக்கமும் சீரான நிலையில் இயங்கும் தசைகள் தான், நாம் ஓடுவதற்கும், குதிப்பதற்கும், படியேறுவதற்கும், இறங்குவதற்கும், உடலை முறுக்குவதற்கும், பொருட்களைத் தூக்குவதற்கும், நிற்பதற்கும், நடப்பதற்கும் உதவுகின்றன. தசைகளின் கட்டளைப்படி தான், எலும்புகள் செயல்படுகின்றன. தசைகளின் செயல்பாடு சீராக இல்லையெனில், எலும்புகள் தன் இருப்பிடத்தை விட்டு மாறி விடுகின்றன. இதனால், வலி உருவாகிறது. தசைகளை உறுதியாக்கி, அவற்றின் இயல்பான நெகிழ்வுத் தன்மையையும் மீட்டு விட்டால், எலும்புகள், தானாகவே, தங்கள் இடத்திற்குச் சென்று விடும். சரியான பயிற்சி முறையைக் கண்டறிந்து, தசைகள் சீராகும் வரை, அதை மேற்கொண்டால், உடலின் உண்மையான கட்டமைப்பை மீட்டெடுப்பீர்கள்; உங்கள் வலியிலிருந்தும் முழுமையாக மீண்டு விடுவீர்கள்.அனைத்து வகையான செயல்களையும், சிரமமின்றி, வலியின்றி செய்ய முடிபவர்கள், நல்ல கட்டமைப்புடன் உள்ளனர் என்று கூறலாம். எனவே, வலிக்கான உண்மையான காரணத்தை அறியாமல் இருப்பவர்கள், வலியிலிருந்து மீள முடியாது; காரணம் தெரிந்தாலும், அதற்கு முறையாக பயிற்சி எடுக்காமல் இருந்தாலும், வலி நிவாரணம் கிடைக்காது. எனவே, உடல் கட்டமைப்புச் சீரமைத்தல் சிகிச்சை குறித்து, அனைவரும் உணர வேண்டியது, தற்போதைய அவசியமாகிறது.

உடல் கட்டமைப்பு சீரமைத்தல் சிகிச்சை என்றால் என்ன?
இச்சிகிச்சைக்கு மருந்தோ, அறுவை சிகிச்சையோ, மற்ற உடலியல் சிகிச்சைகளோ தேவை இல்லை. ஒருவரின் தோரணைக்கு ஏற்ப, வலியின் தன்மைக்கு ஏற்ப, சில வகை அசைவுகள், உறுப்புகளை இழுத்துச் சுருக்குதல் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்வது தான், இந்த சிகிச்சை முறை. 300 வகையான அசைவுப் பயிற்சிகள் இதில் உள்ளன. உபாதைக்கு ஏற்ப சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.மனிதனின் அடிப்படை உடல் கட்டமைப் பிலிருந்து, உபாதைக்கு உள்ளானவரின் கட்டமைப்பு எவ்விதத்தில் மாறுபாடு அடைந்துள்ளது என்பதை உற்று நோக்கி, அந்த மாறுபாடு சரி செய்யப்படுகிறது. உபாதையிலிருந்து நீங்கிய பின், மீண்டும் உபாதை ஏற்படாமல் இருக்க, தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளும் தரப்படும். எனவே, கட்டமைப்பு சீரமைத்தல் சிகிச்சை மேற்கொண்டு, உங்கள் உடல் உபாதையில்இருந்து, நிரந்தரமாக மீளுங்கள்!

பரத் சங்கர், ப்ரீத்தி பரத், உடல் ஒருங்கிணைப்பு நிபுணர்கள் அசோக் நகர், சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக