சனி, 13 ஜூலை, 2013

பசுமைப் பள்ளி : கைகோர்க்கும் மாணவர்கள் : கை கொடுக்கும் ஆசிரியர்கள்

பசுமைப் பள்ளி : கைகோக்கும் மாணவர்கள் : கை கொடுக்கும் ஆசிரியர்கள்
கோவை : "வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என்பதை, கோவை மாநகராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கி வரும் நிலையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சொந்த பொறுப்பில் மரம் வளர்க்க துவங்கியுள்ளனர். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, சமூகத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

கோவையில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ காலத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும். நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்லும், கோவையிலுள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும். இந்த காட்சிகளை கண் குளிர கண்டு, பல ஆண்டுகளாகி விட்டன.கோவை மாநகரில் ரோடு விரிவாக்கப்பணி, மாநகராட்சி திட்டப்பணிகளுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதே, மழைப்பொழிவு குறைந்து போனதற்கு காரணம் என, இயற்கை ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.மரங்களை வளர்த்தால் மட்டுமே மழை வளத்தை பெற முடியும் என்பதை உணர்ந்த மாநகராட்சி நிர்வாகமும் மரம் வளர்ப்பதை கட்டாயமாக்கி வருகிறது. கோவையிலுள்ள 65 பூங்காக்களை மேம்படுத்தி மரங்கள் வளர்க்கவும், ரோட்டோரங்களில் 9,400 மரங்கள் வளர்க்கவும், திட்டமிட்டு தன்னார்வ அமைப்புகள் உதவியை நாடியுள்ளது.

கோவை மாநகராட்சியிலுள்ள 83 பள்ளிகளில், இடவசதியுள்ள 63 பள்ளி வளாகங்களில் முதல் கட்டமாக 3,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர், கமிஷனர் ஆகியோர் 32 மரங்களை நட்டனர். பள்ளியில் போதுமான தண்ணீர் வசதியில்லாததால், மேல்நிலைத்தொட்டியில் இருந்து, மரக்கன்றுகளுக்கு, தனியாக பைப் லைன் அமைத்து சொட்டுநீர் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது."பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மரக்கன்றுகளை பராமரித்து வளர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என, மேயர் வேண்டுகோள் விடுத்தார்.அதேபோன்று, மரம் வளர்க்கும் பொறுப்பை பள்ளி மாணவர்கள் ஏற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன் தலைமையில், என்.சி.சி., ஆசிரியரும், "பசுமைப் படை' ஒருங்கிணைப்பாளருமான இருதயராஜ், தமிழ் ஆசிரியர் சுரேஷ்குமார், உடல்கல்வி ஆசிரியர் சுந்தர்ராஜன் ஆகியோர், மாணவர்கள் மரம் வளர்ப்பதை கண்காணிக்கின்றனர்.

பள்ளியிலுள்ள ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு மரங்களை ஒதுக்கியுள்ளனர். பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், ரோட்டோரத்தில் இருக்கும் குழாயில் மாணவர்கள் தண்ணீர் பிடித்து மரக்கன்றுக்கு ஊற்றுகின்றனர். ஒருசில மாணவர்கள், வீட்டில் இருந்து கேன்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுகின்றனர். மரத்தை சுற்றிலும் பாத்தி அமைத்து, மரம் வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் மாணவர்கள்.மரம் வளர்த்தால் மழை கிடைக்கும்; காற்றிலுள்ள கார்பன்-டை- ஆக்சைடு அளவை குறைக்க முடியும், இயற்கையை பாதுகாக்க முடியும்' என, மாணவர்கள் ஒருசேர கூறியது பலமாக எதிரொலித்துது. மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் பசுமை செழிக்கும் என்பது உறுதி.
"தினம் ஒரு குவளை  தண்ணீர்':


தலைமை ஆசிரியர் லோகநாதன் கூறுகையில், ""4.5 ஏக்கர் பள்ளியில் 3.5 ஏக்கர் காலி இடமுள்ளது. விளையாட்டு மைதானம் போக, காலி இடத்தில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஏற்கனவே 80 மரங்கள் உள்ளன. தற்போது புங்கன், பூவரசு, வேம்பு, அரச மரம், ஆலமரம், நாவல், வாகை உள்ளிட்ட 32 மரக்கன்று நடப்பட்டுள்ளது. ஒரு வகுப்புக்கு இரண்டு மரக்கன்று ஒதுக்கப்பட்டுள்ளது. வகுப்பிலுள்ள 40 மாணவர்களும் தினமும் ஒரு டம்ளர் தண்ணீராவது, மரத்துக்கு ஊற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளோம். வகுப்பு நடக்காத நேரத்தில், மாணவர்கள் மரம் வளர்க்கின்றனர். மரத்தின் பயன்பாடுகள், ஒளிச்சேர்க்கை, மரங்களின் சுவாசத்தால் கிடைக்கும் பலன்களை மாணவர்களுக்கு எடுத்து சொல்லியுள்ளதால், ஆர்வத்துடன் மரம் வளர்க்கின்றனர். மூன்று ஆண்டுகள் மரத்தை வளர்த்து விட்டால், அதன்பின் இயற்கையாக வளர்ந்து விடும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக