ஞாயிறு, 7 ஜூலை, 2013

யானைகளை அதன் போக்கில் வாழவிடுங்கள் ... - சந்திரகுமார்

யானைகளை அதன் போக்கில் வாழவிடுங்கள் ... - சந்திரகுமார்

சுமார் 12 வருடங்களாக மலையாள மாத்ருபூமியின் புகைப்படக்கலைஞராக இருந்துவிட்டு தற்போது திருவனந்தபுரத்தில் புகைப்பட பயிற்சி பள்ளி வைத்து நடத்துகிறார்.
பத்திரிகை புகைப்படக்காரராக இவர் பணியாற்றிய காலத்தில் இவர் அதிகம் ரசித்து படமெடுத்தது யானைகளை மட்டுமே, இதற்காக ரொம்பவே அலைந்து படங்களை பதிவு செய்துள்ளார். இதனால் இவருக்கு "யானை' சந்திரகுமார் என்றும் பட்டப்பெயரும் உண்டு.
நான் பார்த்தவரையில், பழகிய வரையில் யானைகள் சாதுவானவைதான். அவைகளை பழக்குகிறோம் என்ற பெயரில் மனிதர்கள் செய்யும் கொடுமைகளால்தான் அவைகளுக்கு மதம் பிடிப்பதும் மனிதர்களை தாக்குவதும் நடக்கிறது என்றவர் மேலும் கூறிய சுவராசியமான தகவல்களாவது:
யானைகள் ஒரு இடத்தில் நிரந்தரமாக நிற்காது. தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பவும், உணவு தண்ணீர் தேவைகளுக்காகவும் எங்கிருந்தாவது எங்கேயாவது நடமாடிக் கொண்டு இருக்கும்.
யானைகளுக்கு இடையே ஒழுங்கு உண்டு. தெளிவான தகவல் பரிமாற்றங்கள் உண்டு. அதிகமான பாசம் உண்டு, மனிதர்களை அவர்களிடம் இருந்து வரும் வாசனையை வைத்து அடையாளம் கண்டு கொள்ளும், எவ்வளவு ஆண்டுகள் பிரிந்துவிட்டு வந்தாலும் பாகன்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மிக பாசமாக இருக்க காரணம் பழகிய அவர்களின் வாசனை தான்.
காட்டுப் பகுதிக்குள் சுதந்திரமாக திரிந்த யானைகள், தங்கள் மீது அலங்காரம் என்ற பெயரில் ஜரிகை சார்ந்த துணிகளை போர்த்துவதையும், கூட்டத்தில் நெருக்கியடித்து நிற்க வைப்பதையும், பட்டாசு வெடிச்சத்தத்தையும் சுத்தமாக வெறுக்கின்றன, கடும் எரிச்சல் அடைகின்றன, இவ்வளவு பெரிய உருவத்தை லாரியில் ஏற்றிச் செல்வது இன்னும் கொடுமையான விஷயம். இதனால்தான் கோபம் கொண்டு மனிதர்களை தாக்குகின்றன.
மேலும் இதன் பாதப்பகுதிகள் காட்டுக்குள் நடப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது, காட்டுப்பகுதியில் எவ்வளவு தூரம் நடந்தாலும் எதுவும் ஆகாது. ஆனால் மாறாக நகர்பகுதியில் கொதிக்கும் தார்ரோட்டில், அது வெளிப்படுத்தும் சூட்டில் நடக்கும் போது அதன் பாதங்கள் தாங்குவது இல்லை. இது எத்தனை பேருக்கு புரிகிறது.
உண்மையில் யானைகள் இருப்பது வன உயிர்ச்சுழல் பாதுகாப்புக்கு முக்கியமான விஷயம், எவ்வளவு தூரம் யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் காட்டில் இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாடு நன்றாக இருக்கும். ஆகவே யானைகளை அதன் காட்டுப்பகுதியில் அதன் போக்கில் வாழவிடுங்கள், இதைவிட நல்ல காரியம் எதுவும் நீங்கள் யானைகளுக்கு செய்துவிட முடியாது என்று சொல்லி முடித்தார்.
குறிப்பு: யானை சந்திரகுமார் எடுத்த யானை பற்றிய சில படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கலாம்.
- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக