செவ்வாய், 11 ஜூன், 2013

ஆகாயத்தாமரையில் காகிதங்கள்

ஆகாயத்தாமரையில் காகிதங்கள்

வெயில் காலத்தில் ஆறுகள் வறண்டு, கழிவுநீர் குட்டைகளாக மாறுகின்றன. இந்த கழிவு நீரில் விரைந்து பரவுபவை ஆகாயத் தாமரைகள். நீர்நிலைகளின் மாசுபாட்டை உணர்த்தும் அளவுகோல்களாக ஆகாயத் தாமரைகள் உள்ளன. இந்த ஆகாயத் தாமரையைப் பயன்படுத்தி "எர்த் கிராப்ட்' என்னும் அமைப்பினர் காகிதம் செய்கின்றனர். மேற்குவங்கத்தின் வடக்கு பர்கானா மாவட்டத்தில் உள்ள கொல்சூர் கிராமத்தில், ஆகாயத்தாமரை காகிதம் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. ஆகாயத் தாமரையில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்தைக் கொண்டு காகிதக் கோப்புகள், எழுது தாள்கள், அட்டைகள், போட்டோ பிரேம்கள், நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கலாம். நம்மூரிலும் ஆகாயத்தாமரையில் இருந்து, காகிதம் தயாரிக்க பயிற்சி பெறவும், தரவும் விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் earth_craft2001@ yagoo.com என்னும் இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கோபால் நாயக்கர் மணிமண்டபம்
பழநி பாதயாத்திரை செல்பவர்களுக்கு, விருப்பாச்சி மேடு என்பது நன்கு தெரியும். விருப்பாச்சி, மலைப்பழத்திற்கு பிரபலமானது. தற்போது தமிழக அரசு, விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு, விருப்பாச்சியில் மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளது. ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர்.
இவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு படைபல உதவி செய்தவர். ஆங்கிலேயருக்கு எதிரான போரில் மைசூரு மன்னர் திப்புசுல்தானுக்கு உதவி செய்தவர். பெரிய மருது, சின்ன மருது, கேரள வர்மா, கன்னடத் தளபதி தூண்டாஜிவாக், கோவை ஷாஜிகான் ஆகியோரை இணைத்து, தென் மாநில விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார். இறுதியில் ஆங்கிலேயர்களால் கோபால் நாயக்கரும், அவரது மகன் முத்து வெள்ளையப்ப நாயக்கரும் தூக்கிலிடப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக