வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கதிரொளி மின்னாற்றல் திட்டத்திற்குத் தமிழக அரசின் விலை ஈடுகள்?

தினமலர் பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2012,23:29 IST
சென்னை: கடுமையாக மின்வெட்டு நிலவும் தமிழகத்தில், அதன் கடுமையைப் போக்கும் வகையில், ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் மின்சார உற்பத் தியை மேற்கொள்ள புது திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சூரியசக்தி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சட்டசபையில் எரிசக்தித் துறைக்கான மானியத்தின் மீது, நேற்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

வீடுகளில்...: சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அரசின் ஆய்வில் உள்ளது. விரைவில், தமிழக அரசின் சூரியசக்தி கொள்கையை முதல்வர் வெளியிடுவார். மேலும், அரசு துறைகளை இதற்கு எந்தளவு பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான அறிக்கையையும் முதல்வர் விரைவில் வெளியிடுவார். 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம், தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகக் கட்டடத்தில் அமைக்கப்படும். வீட்டு உபயோக, மேற்கூரை சூரியசக்திக்கு, 2012-13ம் ஆண்டில், அதிகபட்சமாக மொத்தம் 50 மெகாவாட் மின் உற்பத்திக்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆண்டின் மொத்த மின் பயனீட்டுச் சதவீதப்படி, மேற்கூரை மூலம் அதிக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் பல்வகை மின் பயனீட்டாளர்களுக்கு சூரிய மேற்கூரை மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் விருது வழங்கப்படும்.
விவசாயம்: விவசாய மின் இணைப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, மானியத்துடன் கூடிய சூரிய ஒளி பம்புகள் வழங்கப்படும். இதன்படி. விவசாய அமைச்சகத்திடம் இருந்து 56 சதவீதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் இருந்து 30 சதவீதம் என 86 சதவீத மானியம் வழங்கப்படும். மீதம் 14 சதவீத விலையை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் பட்டியலிடப்பட்ட தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்களிடம் செலுத்தி, சூரிய ஒளி பம்புகளை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொன்றும் 5.25 லட்சம் செலவில், பத்து கிலோவாட் திறன் உள்ள எட்டு காற்று சூரிய கலப்பின அமைப்புகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் மற்றும் தகுந்த இடங்களில், தெரு விளக்குகள் அமைக்கும் வகையில் 42 லட்சம் ரூபாய் செலவில், எரிசக்தி மேம்பாட்டு முகமையால் நிறுவப்படும்.

காற்றாலை: காற்றாலை மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக்கொண்டு வர, தப்பக்குண்டு, ஆனைக்கடவு, ராசிபாளையம் ஆகிய இடங்களில் 400 கிலோ வோல்ட் புதிய துணை மின் நிலையங்களும், அதோடு சேர்ந்த 336 மின் சுற்று கிலோ மீட்டர் நீளத்துக்கு 400 கிலோ வோல்ட் உயர் மின்னழுத்தப் பாதையும் அமைக்கப்படும். இந்தத் துணை மின் நிலையங்கள், சேலத்தில் இந்திய மின் தொடரமைப்புக் கழகம் மூலம் அமைக்கப்படவுள்ள, 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும். செயல்விளக்க காற்றாலைப் பண்ணைகளை மீண்டும் திறன் உயர்த்தி, 160 மெகாவாட் மின்சாரம்
(காற்று சக்தி 80 மெகாவாட் மற்றும் சூரியசக்தி 80 மெகாவாட்) உற்பத்தி செய்ய, எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் மின்சார வாரியத்துக்கும் இடையே, தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா என்ற பெயரில் ஏற்படுத்தப்படும். நேப்பியர் கம்பு கலப்பினப்புல் மற்றும் பீமா மூங்கில் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிவகைகள் பரிசீலிக்கப்பட்டு, 10 மெகாவாட் திறன் கொண்ட தாவரப் பொருட்கள் மூலம் மின் உற்பத்தி மின் நிலையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
அதிக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் பல் வகை மின் பயனீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் விருது வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக