திங்கள், 3 மே, 2010

டலூரில் தமிழுக்கு இந்த நிலையா?



புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கடலூர் நகருக்குள் நுழையும் இடத்தில், சுற்றுலாத் தலங்கள் என்பதற்குப் பதில் "சுற்றுலாத் தளங்கள்' என்று
கடலூர், மே 2: சமயக் குறவர்கள் நால்வரில் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில், திருமாணிக்குழு வாமனபுரீஸ்வரர் கோயில், எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் கடலுர் மாவட்டத்தில் சமயக் குறவர்களால் பாடல் பெற்றத் தலங்களாக உள்ளன.தமிழகத்தில் கோயில்கள் சமயத்தை மட்டும் அல்ல தமிழையும் சேர்த்து வளர்த்தன. தமிழாய் விளங்கிய கோயில்களையும், தமிழ்க்கடல் ஞானியார் அடிகளாரும், வடலூர் ராமலிங்க அடிகளார், தமிழறிஞர்கள் சுந்தரசண்முகனார், நடேச முதலியார், சிவலிங்கனார் உள்ளிட்டோரும் தோன்றிய கடலூரில், சில நேரங்களில் தமிழ் தடுமாறத் தொடங்கி விடுகிறது.புதுவையில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகக் கடலூர் நகருக்குள் நுழையும் இடமான பெண்ணை ஆற்றின் கரையில், தமிழக அரசின் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த அறிவிப்புப் பலகையில், கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களைக் காணவாரீர் என்று இருப்பதற்குப் பதில், கடலூர் மாவட்ட சுற்றுலாத் தளங்களைக் காணவாரீர் என்று, தலத்துக்கும் தளத்துக்கும் வேறுபாடு தெரியாமல் பிழையாக எழுதப்பட்டு உள்ளது. அதேபோல் பாடலீஸ்வரர்கோயில் என்பதற்குப் பதில் பாடலிஸ்வரர் கோயில் என்றும் பிழையாக எழுதப்பட்டு உள்ளது. அரசு சார்பில் வைக்கப்பட்டு இருக்கும் அறிவிப்புப் பலகையே இப்படி என்றால், தனியார் வைக்கும் அறிவிப்புப் பலகை பற்றி பேசவே வேண்டாம்.சோழர் காலத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள், நடுநாடு என்று அழைக்கப்பட்டது. அதற்கு முன் இப்பகுதி பல காலம் பல்லவர்கள் ஆட்சிக்கு உள்பட்டு இருந்துள்ளது. எனவே இப்பகுதியில் வடமொழி மற்றும் பாலி, பிராகிருதமொழிகளின் ஆதிக்கம் பல காலம் இருந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் தமிழ் மொழியில் சில நேரங்களில் தடுமாற்றம் காணப்படுவது உண்டு. எண்பது (80) என்பதை எண்பழது என்றும், மூங்கிலை முழுங்கில் என்றும் கற்றிந்தவர்கள்கூட உச்சரிப்பார்கள். அந்த வரிசையில் சுற்றுலாத் தலத்தை சுற்றுலாத் தளம் என்று பிழையாக எழுதிவிட்டார்களோ என்னவோ அறிவிப்புப் பலகையில் உள்ள பிழையைத் திருத்துமா அரசு?
கருத்துக்கள்

இத்தகைய செய்திகளை வெளியிட்டுத் தமிழ்த்தொண்டாற்றும் தினமணிக்குப் பாராட்டுகள். அதே நேரம் தினமணியிலும் ஆங்காங்கே பிழைகள் காணப்படுகின்றன. நம் நாட்டவர்கள் இவை குறித்துக் கவலைப்படுகின்றார்களோ இல்லையோ அயல்வாழ் தமிழர்கள் மிகவும் வருந்துகிறார்கள். நேற்றுக்கூட ஆசுதிரேலியாவில் வாழும் மருத்துவர் ஔவை ந.கண்ணன் வெளிநாட்டவர் விரும்பி மிகுதியாகப் படிக்கும் இணைய இதழாகத் தினமணி உள்ளதென்றும் ஆனால் அதில் வரும் எழுத்துப் பிழைகள் தங்களுக்குக் கவலை தருகின்றது என்றும் நல்ல தமிழை அறிய விரும்பும் தங்களுக்குத் தினமணிதானே நல்ல தமிழைத் தருவதில் உறுதுணையாக இருக்க முடியும் என்றும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அறிஞர் ஆற்றிய அருந்தமிழ்ப்பணியைக் குறிப்பிடலாமே என்றும் உள்ளம் நைந்து கூறினார். எனவே, தினமணி பிழைகளற்ற, இச்செய்தியில் உள்ளவாறு கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து இனிய எளிய நல்ல தமிழில் வெளிவர ஆவன செய்ய வேண்டும் என்றும் அன்புடன் வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 4:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக