தலைப்பு-விகிதமுறை : rationalchoice
விகித அடிப்படையிலான சார்பாளர் முறை (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை) என்றால் என்ன?
  தேர்தலில் வேட்பாளர் செலவுத் தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு இட்டுள்ளது. அதைத் தாண்டி, கணக்கில் காட்டாமல் கோடிக் கோடியாக அள்ளி வீசப்படுகிறது.
  இதைக் கட்டுப்படுத்தத் தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை எனப் பல்வேறு கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
  இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்கிற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, விகித அடிப்படையிலான சார்பாளர் முறை’ (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை) கொண்டு வரக் கருதிப் பார்க்கலாம் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் இலிங்டோ முதலான ஆய்வாளர்கள் கருத்து அளித்துள்ளனர். இந்நிலையில்தான் அந்தக் கேள்வி எழுகிறது. அது என்ன விகித அடிப்படையிலான சார்பாளர் முறை (விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை)? இதன் சிறப்புகள் என்ன?
  1. விகித அடிப்படையிலான சார்பாளர் முறையில் வேட்பாளர்கள் இருக்க மாட்டார்கள். மாறாக, அரசியல் கட்சிகள்தாம் போட்டியிடும். கட்சிகளின் சார்பாளர்கள்(பிரதிநிதிகள்) பட்டியலை முறைப்படுத்தி முன்கூட்டியே கையளிக்க வேண்டும். வாக்குப் பதிவுப் பொறியில் கட்சிச் சின்னம் மட்டுமே இருக்கும். கட்சிக்குக் கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கேற்ப நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே கட்சி அளித்துள்ள பெயர்ப் பட்டியலை வரிசைப்படுத்தி அறிவிக்கப்படுவார்கள். ஏனென்றால், கட்சிகள்தாம் ஆட்சி அமைக்கின்றன. தனித்து ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டால் ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணியாக ஆட்சி அமைக்கலாம். குதிரை பேரம் இருக்காது!
  2. இப்போது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பதால் வேறு கட்சியினரோ, அவரை ஆதரிக்காதவர்களோ அணுக முடியாத நிலை உள்ளது. விகித அடிப்படையிலான முறையில் எந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரையும் அணுகித் தங்கள் தொகுதிக்குத் தீர்வு பெற முடியும்.
  3. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அறிவிக்க விரும்பும் பதிலாளிகள் (பிரதிநிதிகள்) பட்டியலைக் கட்சிகள் முன்கூட்டியே கையளித்து விடுவதால், அவர்களின் தகுதியையும் மக்கள் எடை போட்டுப் பார்த்துக் கொள்வார்கள்.
  4. வேட்பாளரின் பண வலிமை, குண்டர் படை, சாதி – சமயவெறி குறைய வாய்ப்பு ஏற்படும்.
  5. இப்போதைய முறையில் அரசுக்குத் தேர்தல் செலவு நிறைய ஏற்படுகிறது. வேட்பாளர்கள் பலர் சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ தேர்தலில் செலவிடுகிறார்கள். எனவே, தேர்தலுக்குப் பிறகு இழந்ததை மீட்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள். விகித அடிப்படையிலான முறையில் தேர்தல் செலவு குறையும். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் நேர்மைக்கு வாய்ப்பு கூடுதலாக உண்டு.
இந்த எடுத்துக்காட்டு தெளிவாக விளங்கும்.
2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பா.ச.க. பெற்ற வாக்குகள் 17 கோடியே, 16 நூறாயிரத்து (இலட்சத்து), 37 ஆயிரத்து, 684. இது, மொத்த வாக்குகளில் 31 விழுக்காடு. ஆனால், அக்கட்சிக்கு 282 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 51.9 விழுக்காடு.
  அதே போல் பேராயக் (காங்கிரசு) கட்சிக்குப் 10 கோடியே 69 நூறாயிரத்து (இலட்சத்து), 35 ஆயிரத்து, 311 வாக்குகள் கிடைத்தன. இது 19.3 விழுக்காடு. ஆனால், பேராயக் (காங்கிரசு) கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 44 மட்டுமே. இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 8.1 விழுக்காடுதான்.
 இந்த விகித அடிப்படையிலான முறைத் தேர்தல் ஆசுத்திரியா, செருமனி, பெல்ச்சியம், தென்மார்க்கு, நார்வே, இசுபெயின், சுவீடன், சுவிசு முதலான பல நாடுகளில் உள்ளன.
  இந்தியாவில் உடனடியாக இப்போதுள்ள தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு இல்லை எனினும், எதிர்காலங்களில் கொண்டு வருவது நல்லது என்னும் கருத்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
விடுதலை இராசேந்திரன் - viduthalairasenthiran
நாள்: பங்குனி 2047 – 08 ஏப்ரல் 2016.
muthirai_periyamuzhakkam_logo
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar