தலைப்பு-தமிழீழத்திற்குக் கனடாஎதிர்க்கட்சி அங்கீகாரம் :thamizheezham_canada_opplparty_reconnise

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி  ஏற்றது.

  ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக  உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு:
 சித்திரை 01, 2047 / 4.14.2016 அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ)  கனடாவில் தமிழர்பகுதிகளைச் சார்புபடுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராமிடன், ஆட்டாவாவைச் சேர்ந்த அமைப்புகளும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவி (உ)ரோணா அம்புரூசு அம்மையார் அவர்கள் உடனான உயர் மட்டச் சந்திப்பை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் தமிழர் தரப்பில் சில முதன்மைச் சார்பாளர்களும் கலந்துகொண்டனர்.
  இச்சந்திப்பில் ஈழத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவும், தமிழர்களுக்கு காலம் காலமாக இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட அநீதிகளும் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கப்பட்டன. ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும் அவர்களுக்கு உரித்தான  தன்னாட்சி உரிமையையும்  ஏற்கக் கோரி ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் தற்போதுள்ள புதிய இலங்கை அரசு கண்துடைப்பிற்காகச் சில முன்னேற்றத்தைக் காட்ட முயல்கின்றனர் என்றும், தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை மறைமுகமாகத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர் என்றும் ஆதாரத்துடன் எடுத்துக் கூறினர். கனடியத் தமிழர் தேசியஅவையினால் (சூஊஊகூ) பங்குனி 31, 2047 /  ஏப்பிரல் 13, 2014இல் ஒருங்கமைக்கப்பட்ட 80அமைப்புக்கள் ஒன்று கூடி எற்படுத்திய தமிழர் சமூகப் பொதுஆயத்தினால் உருவாக்கப்பட்ட ஆவணமும் இச்சந்திப்பில் அவர்களிடம்கையளிக்கப்பட்டது.
  இச் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவி தமிழர்கள்தரப்பின் ஆதாரபூர்வமான தரவுகளை முற்று முழுதாக உள் வாங்கித், தமது கட்சி தமிழர்களின் தேவைகளை முன்னின்று அனைத்துஉதவிகளையும் செய்யும் என உறுதி வழங்கினார். தமது கட்சிஆட்சியிலிருக்கும் போது பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தை இலங்கையில் வைத்த காரணத்தால் முற்று முழுதாக  புறக்கணித்ததுமட்டுமல்லாது போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம், இன அழிப்புக்கெதிராகத் தொடர்ச்சியாக உலக அரங்கில் உரத்துக் குரல்கொடுத்து வருவதையும் நினைவூட்டினார்.
 இச் சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிச் தலைவி இன்று விடுத்த அலுவல்முறை அறிக்கையில் ஈழத் தமிழ்த் தேசிய இனத்திற்கெதிரான போர்க் குற்றம் மற்றும் இன அழிப்பை அனைத்துலக  உசாரணைக்கு(விசாரணைக்கு) உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன், இதனைத் தற்போதுள்ள அரசாங்கத்திடமும் வேண்டுகோளாக முன் வைத்தார்.
  ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதற்கான  ஏற்பு(அங்கீகாரம்)என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு  முதன்மைத தொலைவுக்கல்லாகப் பார்க்கப்படுகின்றது. கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ)மற்றைய அமைப்புகளும் வரும் நாள்களில் மற்றைய  முதன்மைக்கட்சிகளான தாராண்மை(liberal) மற்றும் புதிய குடியாட்சிக் கட்சி(N.D.P.)களுடன் இப்படியான சந்திப்புக்களை மேற்கொண்டு ஈழத்தமிழர் ஒரு தேசியஇனமென்பதையும், இனவழிப்பிற்கான  பன்னாட்டு உசாரணையையும்வலியுறுத்துவார்கள் எனத் தெரிவித்தனர்.
அவ்வறிக்கை இங்கு இணைகப்பட்டுள்ளது:
தரவு: மோகன்இராமகிருட்டிணன், கனடா
(படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.)