புதன், 4 செப்டம்பர், 2013

கோவையில் உடலுறுப்புத்தானம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_795511.jpg


கோவையில் ஒரு நாள்: பா.ச., பிரமுகரின் உடல் உறுப்பு இசுலாமிய பெண்ணுக்கு த் தானம்

கோவையில், வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதய வால்வுகள், விழிகள், சிறுநீரகங்கள் ஐந்து பேருக்கு தானம் செய்யப்பட்டன. பா.ஜ., கட்சியின் நிர்வாகியான இவரது சிறுநீரகங்களில் ஒன்று, இஸ்லாமிய பெண்ணுக்கு வழங்கப்பட்டது; மவுனமான ஓர் உயிரின் மூலமாக, மத நல்லிணக்கம் இங்கே துளிர்விட்டிருக்கிறது.

கோவை, சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் மருதாசலம்; பெயின்டர். இவரது மனைவி கலா, மகன் இராசகோபால், 25. பி.சி.ஏ., பட்டதாரி. சரவணம்பட்டியிலுள்ள சாப்ட்வேர் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, குனியமுத்தூரிலுள்ள கல்லூரி நண்பர் மனோஜை அழைத்துக்கொண்டு, பைக்கில் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்றார். குறுக்கு பாதையில் செல்லும்போது, ரோட்டில் நின்றிருந்த அருள்டேவிட்ராஜ் என்பவரது பைக் மீது மோதினார். இதில், மூவரும் காயமடைந்தனர். ராஜகோபால், மனோஜ் ஆகியோரை அருகிலிருந்த மக்கள் மீட்டு, சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் சேர்த்தனர். அருள் டேவிட் ராஜ், போத்தனூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.படுகாயமடைந்த ராஜகோபால், மனோஜ் இருவருக்கும், டாக்டர் பாலமுருகன் தீவிர சிகிச்சையளித்தார். இருப்பினும் நேற்று காலை, ராஜகோபாலுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து, அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அபிராமி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பெரியசாமி தெரிவித்தார். அப்போது, ராஜகோபாலின் தந்தை மருதாசலத்திடம், அவரது நண்பர்கள், " ராஜகோபால், தான் இறந்தால், உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பியதாக,' கூறினர். இதையடுத்து, தனது மகனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, டாக்டரிடம் தெரிவித்தனர். அவர்களை பாராட்டிய டாக்டர் பெரியசாமி, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.மூளைச்சாவு அடைந்த ராஜகோபாலின் கல்லீரல், இதய வால்வுகள் -4, சென்னை, குளோபல் மருத்துவமனைக்கும்; கண்கள் கோவை, சங்கரா கண் மருத்துவமனைக்கும்; ஒரு சிறுநீரகம், அபிராமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா என்பவருக்கும், மற்றொன்று, ராம் நகரிலுள்ள எஸ்.பி.டி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நூர்ஜஹான் என்பவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் துவங்கின. உடல் உறுப்புகளை அகற்றி, பத்திரமாக இரண்டரை மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லீரலை பெற்றுச் செல்ல, தனி விமானம் மூலம் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் கோவை வந்தனர்.

ஆபரேஷன் "பயணம்':

ஆபரேஷன் நடத்தப்படும் அபிராமி மருத்துவமனையில் இருந்து, உறுப்பு தானம் பெறும் நோயாளிகள் சிகிச்சை பெறும் ராம்நகர் எஸ்.பி.டி., மருத்துவமனை, சங்கரா மருத்துவமனைக்கு, உறுப்புகளை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வது என்றும், சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனைக்கு கல்லீரல் மற்றும் இதய வால்வுகளை, இங்கிருந்து பீளமேடு விமான நிலையம் வரை ஆம்புலன்சில் எடுத்துச் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்வது என்றும் தீர்மானித்தனர். இதற்கான பயணத் தொலைவு, அதற்கு ஆகும் நேரம் முன்கூட்டியே கணிக்கப்பட்டது. சாலைவழி பயணத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, மாநகர போலீசாரின் உதவியை டாக்டர்கள் நாடினர்.கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முழு ஒத்துழைப்பு அளிக்க, போலீசாருக்கு உத்தரவிட்டதும், பாதுகாப்பு போலீஸ் வாகனங்கள், மருத்துவமனைக்கு விரைந்தன. மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்பின், சரியாக நேற்றிரவு 7.30 மணிக்கு, அபிராமி மருத்துவமனை இயக்குனர் பெரியசாமி தலைமையிலான டாக்டர் குழுவினர் ஆபரேஷனை துவக்கினர். முதலில், கல்லீரல் மற்றும் இதயத்தின் நான்கு வால்வுகள் பத்திரமாக எடுக்கப்பட்டு, ஆம்புலன்சில் கோவை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்ததாக, ஒரு மணி நேர ஆபரேஷனுக்குப்பின் இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டன; அதில் ஒன்று, ராம்நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, இரு விழிகள் அகற்றப்பட்டு, சரவணம்பட்டி சங்கரா கண் மருத்துவமனைக்கு பயணமானது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய இதற்கான ஆபரேஷன்கள், நள்ளிரவு வரை தொடர்ந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக