திங்கள், 17 செப்டம்பர், 2012

உ.வே.சா., வீட்டை க் காப்பாற்ற முடியாத அவலம் U.Ve.Saa. House damage



தமிழை க்காத்தளித்த "தமிழ்த்தாத்தா' உ.வே.சா., 
வீட்டை க் காப்பாற்ற முடியாத அவலம்
சென்னை:மறைந்து கொண்டிருந்த தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடித் தேடிக் கண்டுபிடித்து காப்பாற்றிய, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் வீட்டைக் கூட, காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

"தமிழ்த் தாத்தா' என, போற்றப்படுபவர் உ.வே.சாமிநாத அய்யர். தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்து, செல் அரித்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த காலத்தில், அலைந்து திரிந்து, கடின உழைப்பால் தேடி எடுத்து, சுவடிகளில் இருந்ததை, தாள்களில் அச்சாக்கி, நூல்களாக பதிப்பித்த பெருமைக்குரியவர்.

சிலப்பதிகாரத்தை முதன் முதலில் உரையுடன் பதிப்பித்தார். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும்.

"தியாகராச விலாசம்': சென்னை திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரன்பேட்டையில், அவர் வாழ்ந்த, "தியாகராச விலாசம்' இல்லம் உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில், 1903ம் ஆண்டில், தமிழாசிரியர் பணி கிடைத்ததையடுத்து, 1904ல், இந்த வீட்டில், 20 ரூபாய் வாடகைக்கு குடியேறினார். வீட்டு உரிமையாளர், வீட்டை இவரிடமே விற்க விருப்பம் தெரிவித்ததால், வீட்டை அவர் வாங்கினார்.

அந்த இல்லத்துக்கு, கும்பகோணம் கலைக் கல்லூரி ஆசிரியராக இருந்த, அவரது குரு தியாகராச செட்டியாரின் பெயரைச் சூட்டினார். 1942ல், இரண்டாவது உலகப் போரின் போது, சென்னை மக்களோடு, அவரும் இடம்பெயர்ந்தார்.அதன்பின், திருக்கழுக்குன்றத்தில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான வீட்டில், நிரந்தரமாகத் தங்கினார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். அவரது திருவல்லிக்கேணி வீடு, உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.

வீட்டைப் பராமரித்தோர், விற்பனை செய்து விட்டதால், அதை இடித்து, புதிதாக கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக, வீட்டை இடிக்கும் பணி துவங்கி, தகவல் வெளிவந்ததால், இடிப்பு பணி நேற்று நிறுத்தப்பட்டது.உ.வே.சா., வாழ்ந்த இல்லத்தை, தமிழக அரசு மீட்டு, நினைவகமாக மாற்ற வேண்டும் என்பதே, தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.

தாகூர் வந்த இல்லம் அவ்வை நடராஜன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: கும்பகோணத்திற்கு அருகே உள்ள உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு நினைவு இல்லம் இருந்தாலும், நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்த் தொண்டு ஆற்றிய காலத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரன்பேட்டையில், 20 ரூபாய் வாடகையில், குடும்பத்தோடு வசித்தார் என, பதிவுகள் கூறுகின்றன. அந்த இல்லத்திற்கு மகா கவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். மகா கவி பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் நினைவு இல்லம் இருந்தாலும், தலைநகர் சென்னையில், அவர் மூச்சுக்காற்று உலவிய இல்லத்தை நினைவு இல்லமாக பேணிக் காத்து வருகிறோம். அதுபோல், உ.வே.சா., கால்தடம் பதித்த திருவல்லிக்கேணி இல்லத்தை நினைவு இல்லமாக்கி, அங்கொரு அரங்கம் அமைத்து, தமிழ் ஆய்வு அரங்கங்கள் நடக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: தமிழாய்ந்த தலைமகன் வாழ்ந்த அந்த இடத்தை, அரசு முதலிலேயே கண்டுபிடித்து, மக்கள் உணரும்படி செய்திருக்க வேண்டும். இப்போது பாதி இடிந்த நிலையிலுமாவது, அந்த இல்லத்தை அரசு உடனடியாக வாங்க வேண்டும்.தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லத்தை வெளிநாட்டவரும் பார்வையிட, தலை நகரில் நினைவு இல்லம் இருக்க வேண்டியது அவசியம்.

ம.ராசேந்திரன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: இன்றைய முதல்வர் தான், கும்பகோணம் அருகில் இருக்கிற உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வுக்கு நினைவு இல்லம் எழுப்ப, அரசாணை வெளியிட்டார். உ.வே.சா., தனது இளமைக் காலத்தை உத்தமதானபுரத்தில் அதிகம் செலவிட்டு இருந்தாலும், அவர் நந்தனம் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், திருவல்லிக்கேணி வீட்டில் தான், அதிகம் தமிழ் வளர்க்க அருந்தொண்டு ஆற்றினார். தமிழ்த் தாத்தா வாழ்ந்த தமிழ்க் கோவிலை வாங்கி, தலைநகரில் நினைவு இல்லம் அமைத்திட வேண்டும்.

பத்மாவதி விவேகானந்தன் - ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்: இந்தியர்களுக்கு வரலாற்றைப் பாதுகாக்கும் உணர்வு குறைந்து போயிற்று என்ற குற்றச்சாட்டு, நம் மீது வைக்கப்படுவதுண்டு. அதனால் தான், திருவள்ளுவர் எங்கு பிறந்தார் எனக் கேட்டால், மயிலாப்பூர், மதுரை, நாகர்கோவில் என்கிறோம். ஷேக்ஸ்பியர் எழுதிய எழுதுகோல், அவர் நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மகாகவி வாழ்ந்த குயில் தோப்பை பறிகொடுத்து விட்டோம். அதுபோல், காடு, மேடுகளெல்லாம் அலைந்து திரிந்து, கறையான்களின் காதுகளுக்கு தகவல் சென்றுவிட்ட போதிலும், ஓலைச்சுவடிகளை எடுத்து வந்து, இலக்கண அறிவு கொண்டு, தமிழ்த் தாத்தா தொகுத்து தந்து விட்டுப் போனதால் தான், இன்றைக்கு தமிழ் மொழியை செம்மொழி என்கிறோம். தமிழ் வளர்த்த கோவிலை இடித்து விடாதீர்கள். அரசு முனைப்பு கொண்டு, அந்த இடத்தை வாங்கி, நினைவு இல்லமாக்க வேண்டும். இவ்வாறு தமிழறிஞர்கள் தெரிவித்தனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக