செவ்வாய், 18 செப்டம்பர், 2012

"வாழ வழிகாட்டும் பள்ளி!'

சொல்கிறார்கள்

"வாழ வழிகாட்டும் பள்ளி!' 


மாற்றுத் திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு, "கிளார்க்' என்ற பள்ளி மூலம் வாழ்வளிக்கும் லீலாவதி பாட்ரிக்: நான் எத்திராஜ் கல்லூரியில் படித்தேன். லிட்டில் பிளவர் கான்வென்டில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அமெரிக்காவிலுள்ள ஸ்மித் கல்லூரியில், படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததுடன், நார்த் ஹாம்டனில் உள்ள, "கிளார்க்' பள்ளி யில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு, ஹெலன் கெல்லர் வாழ்ந்த இடத்தைப் பார்க்க நேர்ந்தது. கிளார்க் பள்ளியை அவர்கள் நடத்தும் விதமும், கற்றுக் கொடுக்கும் முறையும் கண்டு வியந்தேன். நம் நாட்டிலும் இது போன்றதொரு பள்ளி அமைய வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. என் அம்மா, சகோதரர் மற்றும் மருத்துவர் நடராஜன் உதவியுடன், அமெரிக்கப் பள்ளியின் பெயரை பயன்படுத்த அனுமதி பெற்று, அதே பெயரிலேயே, ஆரம்பித்த பள்ளிதான் இது. இன்று ஆலமரமாய் பல குழந்தைகளுக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது. இலங்கை, நேபாளம், சிங்கப்பூர் என, வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து படிக்கின்றனர். உடலியக்கக் குறைபாடுடைய மாணவர்களுக்கு, உடலுக்குத் தேவையான பயிற்சிகளை மருத்துவர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் செய்ய வைத்து, உடலளவில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறோம். அவர்களுக்கென்று தனியாக உடற்பயிற்சிக் கூடம் உள்ளது. குறைபாடுடைய குழந்தைகளுக்கு, தரமான பயிற்சியைத் தர இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். எங்கள் பள்ளியைச் சேர்ந்த செவித்திறன் பாதிப்படைந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, "சாதனா ட்ரூப்' என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறோம். மெல்பர்னில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது, துவக்க விழாவில் எங்கள் மாணவர்கள் நடனமாடியது மறக்க முடியாத அனுபவம். இங்கு கல்வி பயின்ற பல மாணவர்கள், ஐ.டி., துறைகளிலும், வங்கிகளிலும் பணியற்றுகின்றனர். இன்னும் சில மாணவர்கள் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் படிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக