வியாழன், 31 மார்ச், 2011

Rules of E.C. should be amended - Prof.K.Anbazhagan: தேர்தல் ஆணைய விதிகளைத் திருத்த வேண்டும்: க. அன்பழகன்

பேராசிரியரின் கருத்து சரிதான். எனினும் இனப்படுகொலைக்கட்சியான காங.உடன் சேர்ந்திருப்பததுதானே  சிக்கல். மேலும். அனைவருக்கும் அனைத்து நிலையிலும் கட்டணமற்ற கல்வியைக் கொண்டுவர முயல வேண்டும். அத்ற்கான அறிவிப்பைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! 
/ எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

தேர்தல் ஆணைய விதிகளைத் திருத்த வேண்டும்: க. அன்பழகன்

புதுக்கோட்டை, மார்ச் 30: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடற்ற போக்கைத் தடுத்து நிறுத்தும் வகையில், அதன் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றார் மாநில நிதியமைச்சர் க. அன்பழகன்.புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பெரியண்ணன்அரசை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை இரவு சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:வேறு பணிகளில் வேகம் காட்டும் தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணிக்கை நடத்துவதில் மட்டும் தாமதம் செய்கிறது. சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்துகிறார்கள். அதுகுறித்துக் கேட்டால், தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு உரிமையையும், அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் கொடுத்ததே நாம்தான்.தேர்தல் நடத்துகிறவர்களை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் தேர்தல் விதிமுறைகள். ஆனால், தற்போது நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது, தேர்தல் ஆணைய விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது.ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் 10 சதம் பேர் மட்டுமே தங்களுக்கு சில உரிமைகள் கிடைக்கவில்லை என்று கூறி, ஆட்சி மாற்றம் வேண்டும் என்று பேசலாம். ஆனால், தற்போதைய ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.இலவசங்கள் இன்று அவசியமாகிவிட்டன. இலவசங்கள் என்பது கேடல்ல. பெற முடியாதவர்களுக்கு அதைக் கிடைக்கச் செய்கிறோம். பெற்றுக் கொள்ள உரிமையுள்ளவர்களுக்கு வழங்கப்படுவதுதான் இலவசம்.இலவச அரிசி வழங்குவதால் செலவாகும் கோடிக்கணக்கான ரூபாயை இழப்பாகக் கருதவில்லை. சமுதாயத்துக்கு செய்யும் செலவாகவே கருதுகிறோம். அதனால்தான் பட்டினிச் சாவு, ராப்பிச்சை என்ற வார்த்தைகள் ஒழிந்துபோயின. மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதுடன், அவர்களது பிரச்னைகளையும், துயரத்தையும் தீர்ப்பது திமுக அரசுதான்.இந்தியாவிலேயே குழந்தைகள் நல்ல கல்வி அறிவு பெற்றிருப்பதும், ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதும், அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவதும், ஆண்- பெண் விகிதாசாரத்தில் பெண்கள் அதிகம் படித்திருப்பதும், உயர்தரமான சிகிச்சைகள் கொடுப்பதும், மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகள் இருப்பதும், குறிப்பாக, புத்திசாலிகள் அதிகமாக இருப்பதும் தமிழகத்தில்தான். தமிழக நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளைப் போல, மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று ஜெயலலிதாவும், விஜயகாந்தும் மட்டுமே கூறி வருகின்றனர். அவர்களின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது என்றார் அன்பழகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக