செவ்வாய், 5 அக்டோபர், 2010

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 20 % ஒதுக்கீடு எப்படி?



சென்னை, அக். 4: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலையில் 20 சதவீதம் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்கிற தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  அரசு வேலைவாய்ப்பில் நேரடி நியமனங்களில் 20 சதவீதம், தமிழ் வழியில் படித்தோருக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்தச் சட்டத்தை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கடந்த மாதம் 7-ம் தேதி பிறப்பித்தார்.  ஒதுக்கீடு எப்படி? தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்வது அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஒதுக்கீட்டு முறை எவ்வாறு என்பது குறித்து தமிழக அரசின் அரசிதழில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் கே.என்.வெங்கடரமணன் வெளியிட்டுள்ள உத்தரவு:  நேரடி நியமனம் வழியிலான வேலைவாய்ப்புகள் அனைத்திலும் 20 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்படும். பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என வகுப்பு வாரியாக இந்த ஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்படும்.  200 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டால் அதில், 40 இடங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். இதில், பொதுப்பிரிவில் 19, 31, 48, 65, 81, 100, 115, 131, 148, 165, 181, 200 ஆகிய சுழற்சி எண்களில் 12 பேர் நியமிக்கப்படுவர்.  இதேபோன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வர்களில் 18, 38, 58, 74,114,134, 149, 170, 190, 199 ஆகிய சுழற்சி எண்களில் 11 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.  மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபுப் பிரிவைச் சேர்ந்தவர்களில் 23, 46, 73, 96, 123, 146, 173, 196 ஆகிய சுழற்சி எண்களில் 8 பேருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 26, 62, 92, 126, 162, 192 ஆகிய எண்களில் 6 பேர்களுக்கும் பணி வாய்ப்பு அளிக்கப்படும்.  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் பிரிவினர், அருந்ததியர் சமுதாயத்தினர், பழங்குடியினர் ஆகியோருக்கு தலா ஒவ்வொரு இடத்திலும் சுழற்சி எண் முறையில் வேலை வாய்ப்பு தரப்படும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

வரவேற்கப்பட வேண்டிய ஆணை. ஆனால் திருத்தம் தேவையான ஆணை. இச்சட்டத்தின்படித் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடையாது. 2.)பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பை அடிப்படையாகக் கொண்ட பதவிகளில் அத்தகைய பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பு தமிழில் இல்லாவிடினும் + 2 வரை தமிழில் படித்தவர்கள் முன்னுரிமை கோர இயலாது. எனவே, மேனிலைப்பள்ளிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட எழுத்தர் நிலைப் பணிகளுக்கு உள்ள பணி முன்னுரிமை வாய்ப்பு அதிகாரிப்பணியிடங்களுக்குக் கிடையாது. உரிய திருத்தங்களைச் சட்டமாக்கும் பொழுது அரசு கொணர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2010 5:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


ஒத்த உணர்வாளர்களுக்கு ஒத்த கருத்துகள் பிடிக்கும். தமிழ் ஆர்வலர்களுக்கும் மனித நேயர்களுக்கும் நடுநிலை உணர்வாளர்களுக்கும் என் கருத்துகள் பிடிக்கும். தமிழ்ப் பகைவர்களுக்கும் கட்சிக் கொத்தடிமைகளுக்கும் என் கருத்து வேம்பாய் இருக்கும். நேற்றுக்கூட (செருமனியில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற, ) ஈரோட்டலிருந்து திரு சீனிவாசன் என்பவர் தொலைபேசி வழியாகப் பேசினார்;கருத்துகளுக்குப் பதிவுகளுக்குப் பன் முறை பாராட்ட எண்ணியதாகவும் தொலைபேசி எண்ணை அறிந்து பேசுவதாகவும் குறிப்பிட்டார். எனவே பாராட்டு வரும் பொழுது நம்மைப்போன்ற தமிழ் உணர்வாளர்கள் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பாமரராய் விலங்குகளாய் உள்ள தமிழ்ப் பகைவர்கள் இன்னும் உள்ளனரே என எதிர்ப்புக் கருத்துகள் வரும் பொழுது எண்ண வேண்டியுள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் சங்கப்பலகையில் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தினமணியில் கட்டுரை எழுத வேண்டும் எனப் பலர் தெரிவித்தாற்போன்று திரு ஞானசுந்தரமும் தெரிவித்துள்ளார். 
அவ்வளவுதான். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2010 5:08:00 AM
முதலில் 'ழ' எனற சிறப்பு ழகரத்தை சரியாக உச்சரிக்கத் தெரிந்தாலே அரசு பதவி எனக் கொண்டுவரவேண்டும்! தமிழ் என்ற தாய் மொழியின் பெயரையே சரியாகச் சொல்லத்தெரியாதபோது,சிறப்பு ஒதுக்கீடு எதற்கு? அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் 99% விழுக்காட்டினருக்கு, தாய் மொழியின் பெயரையே சரியாகச் சொல்லத்தெரியாதபோது சிறப்பு ஒதுக்கீடு எதற்கு? தவறான சொல்லாடல்(உச்சரிப்பு) தமிழை அசிங்கப்படுத்துவதுபோல்தானே?(மலையாளிகளில் 99% பேரிடம் நல்ல 'ழ'கர உச்சரிப்பைக் காணலாம்!அவர்களே மேல்!)
By MANI
10/5/2010 4:24:00 PM
ஐயா ஞானசுந்தரம் இப்படி எல்லாம் இலக்குவனார் உங்களிடம் எழுதச் சொன்னாரா? அல்லது ஞானசுந்தரம் என்ற பெயரில் அவரே கருத்து பதிந்து கொண்டாரா? அவர் கருத்து பதிவதிலேயே ஒரு தெளிவு இருக்காது. இதில் கட்டுரை வேறு தினமணி வாங்கி வெளியிட்டால் நாங்கள் எல்லாம் சிண்டைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான்!
By பாமரன்
10/5/2010 12:49:00 PM
திரு இலக்குவனார் திருவள்ளுவன் நடுநிலையுடன் எழுதுவதுடன் புதிய தகவல்களையும் தருபவர். அவசரச்சட்டம் குறித்துச் சரியாகப் புரியாமல் உள்ளது. அவர் புதிய செய்திகளைத் தெரிவிக்கிறார். அவரிடம் கட்டுரையே கேட்டு வெளியிடுவது தினமணியின் தமிழ்த்தொண்டில் அடங்கும். அவரசரச் சட்டம் குறித்த ஒரு கட்டுரையை அவரிடம் கேட்டு வெளியிடவும்.
By A.Gnanasundaram
10/5/2010 9:15:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக