திங்கள், 22 ஏப்ரல், 2013

துபையில் இலங்கை மக்கள் : வைகோவுக்குத் தலைமையர் மடல்

துபையில் இலங்கை மக்கள் : வைகோவுக்குத் தலைமையர் மடல்

By dn, சென்னை

துபையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து வைகோ எழுதிய கடிதத்துக்கு பிரதமர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபை அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்;  எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, வைகோ அவர்கள் ஏப்ரல் 02 ஆம் தேதி கடிதம் எழுதினார்.
இது தொடர்பாக, ஏப்ரல் 06 ஆம் தேதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் அப்போது வைகோவிடம் உறுதி அளித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங், வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,“ஐ.நா. மனித உரிமை கமிஷன் மூலம், 19 ஈழத் தமிழர்களை துபையில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல, இந்திய முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசுக்கும், வெளிவிவகாரத் துறைக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் எழுதி உள்ளேன்” என்று தெரிவித்து உள்ளார்.
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துபாயில் உள்ள ஈழத் தமிழர்கள், குறிப்பாக அரிணி, 15-ந்தேதி வைகோவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்:“அண்ணா, எங்களை இலங்கைக்கு அனுப்பாமல் காப்பாற்றிய தங்களுக்கு, நாங்கள் காலம் எல்லாம் நன்றிக்கடன்பட்டு உள்ளோம்” என்று கூறினார்.மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக