செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உயர்கல்விச் சீரழிவுக்கு நீதிமன்றமும் காரணம்: நீதிபதி சந்துரு

உயர்கல்வி ச் சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வருத்தம்
திருச்சி: ""கல்வியில் மாற்றம் கொண்டு வர, நீதிமன்றம் தான் காரணம் என்றாலும், உயர்கல்வி தரமற்று இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம் என்பது வருத்தமளிக்கிறது,'' என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறினார்.

திருச்சி தேசிய கல்லூரியின், 94வது ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் வரவேற்றார். சென்னை உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:இந்திய அரசியல் சாசனத்தில் தொழில், வியாபாரம் போன்றவை ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால், கல்வி அடிப்படை உரிமை சட்டமாக ஆக்கப்படவில்லை. 1991ம் ஆண்டில் ஒரு வழக்கின் தீர்ப்பில், "கல்வி தனி மனித உரிமை' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் மீது நடந்த விவாதங்களை தொடர்ந்து தான், ஆறு வயது முதல், 14 வயது வரை, கல்வி அடிப்படை உரிமையானது.

"பள்ளி கல்விக்கு மட்டுமே அரசு பொறுப்பு, உயர்கல்வியை பெறுவது தனிப்பட்ட மனிதனின் உரிமை இல்லை' என, நீதிமன்றம் கூறியது. "உயர்கல்வி நிறுவனங்களை தனியார் துவங்கி, அதற்கு அரசு ஆதரவும், அங்கிகாரமும் வழங்கலாம்' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.இதன் விளைவாக தான், தற்போது வீதிக்கு வீதி, தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழிற் கல்வி கூடங்கள் முளைத்து தரமற்ற கல்வியை அளிக்கும் சூழல் உள்ளது. அரசும் கைகழுவி விட்டதால், உயர்கல்வியை பணம் கொடுத்து தான் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில், 44 ஆண்டுக்கு பிறகு, "கல்வி உரிமை' சட்டமும், 50 ஆண்டு கழித்து, "கட்டாய இலவச கல்வி' சட்டமும், வர நீதிமன்றம் தான் காரணமாக இருந்தது. ஆனால், உயர்கல்வி தற்போது தரமற்ற நிலையில் இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு பொறுப்பு என்பது வருத்தமாக உள்ளது.இந்தியாவில் கல்வியில் உள்ள ஏழை, பணக்காரர் என்ற தடுப்பு சுவர் உடைக்க நீதிமன்றம் எடுத்த முயற்சியால் தான், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கல்வியில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், மத்திய அரசு அதன் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. குழந்தை தொழிலாளர் முறை இன்னமும் நீடிப்பதற்கு, எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் இப்பிரச்னையை எழுப்பாதது தான் காரணம்.படிக்காத ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தியிருப்பது போல், படித்தவர்களுக்கு வேலை வழங்குவதும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.இவ்வாறு சந்துரு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக