ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும்: வைகோ

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும்: வைகோ

கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல மாதங்களாக வீரியத்தோடு போராடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கூடங்குளம் அணு உலைக்கான பொருட்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்க கூடும் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கூடங்குளம் அணு உலைக்காக பொருட்கள் வாங்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜியோ-போல்டோஸ்க் என்கிற நிறுவனத்தின் அதிகாரி செர்ஜி ஷுடோவ் பல நாடுகளிலுள்ள அணு உலைகளுக்கு தரக்குறைவான பொருட்களை வழங்கியதில் ஊழல் என்கிற குற்றசாட்டுகளின் அடிப்படையில் பிப்ரவரி  2012ல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியா,பல்கேரியா,ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ரஷ்யா அமைத்து வரும் அணு உலைகளுக்கு பொருட்கள் வழங்கி வரும் இந்நிறுவனம் இப்போது பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. தங்களுடைய நாட்டில் அமைந்துள்ள அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்கள் மட்டுமல்லாமல் தரச்சான்றிதழையும் கோரியுள்ளது பல்கேரியா. இந்நிறுவனம் வழங்கும் தரக்குறைவான பொருட்களைப் பற்றி சீனாவும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.கோபாலகிருஷ்ணன் ஒரு ஆங்கில நாளிதழில் சமீபத்தில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் கூடங்குளம் அணு உலைகளை திறப்பதில் ஏற்படும் தாமதங்களுக்குக் காரணம் தரக்குறைவான பொருட்களாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். தரக்குறைவான பொருட்களை பயன்படுத்துவது அணு உலை விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால் ஜியோ-போல்டோஸ்க் நிறுவனத்தின் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ள எல்லா அணு உலைகளிலும் செயல்பாட்டை நிறுத்தி முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் ரஷ்ய சுற்றுசூழல் களப்பணியாளர் ஒருவரை மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன். தவிர, அணு உலைகளின் திறன் குறித்து கூடங்குளம் பகுதி மக்களின் பயம் நியாயமான ஒன்று என்றும் அவர் கருதுகிறார்.
கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு அன்னிய நிதி, போராட்டத்தின் பின்னணியில் மதவாத சக்திகள் இயங்குகின்றன என்று தொடர்ந்து அவதூறுகளை மட்டுமே வீசி வந்த இந்திய அணு நிறுவனத்திலிருந்து உண்மையின் குரலாக, நியாயத்தின் குரலாக ஒலித்திருக்கிறது கோபாலகிருஷ்ணன் குரல்.
இது போக, போராட்டத்தை முன்னெடுத்து வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தகவலறியும் உரிமையின் கீழ் கோரிப் பெற்றிருக்கும் தகவலின் படி, கூடங்குளம் அணு உலைகளின் அழுத்தக் கலனில் மையப்பகுதியில் இரண்டு இடங்களில் இணைப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அணு உலைகளின் அழுத்தக்கலனில் இணைப்புகள் அமைப்பது அதன்  முதிர்வுக் காலத்தை வேகப்படுத்தும் என்றும் அதனால் உலகெங்கும் அணு உலைகள் இப்படிப்பட்ட இணைப்புகளை பொதுவாக அமைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணு உலையில் இதனால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்திருந்தும் இணைப்புகளை அமைப்பது, அம்மக்களின் நியாயமான அச்சங்களை உதாசீனப்படுத்தும் செயலாகவே இருக்கிறது. தவிர, அணு உலையில் வால்வுகள் சரியில்லை என்பதையும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தரம் குறைந்த பொருட்கள் கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தும் அச்சத்தோடு போராடி வரும் மக்களின் நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுடன் அல்லாமல் அணு உலைகளை அம்மக்கள் மீது மத்திய அரசு திணிக்க எத்தனிப்பதை ம.தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது.
தரக்குறைவான பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்தோடு அல்லாமல், மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணு உலைகளை உடனடியாக மூட முன் வர வேண்டும் என்றும் ம.தி.மு.க மத்திய அரசை கோருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக