செவ்வாய், 29 மே, 2012

என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்!


"என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்!':


அன்று குழந்தைத் தொழிலாளியாக இருந்து, இன்று கல்லூரி மாணவராக உள்ள செந்தில்: சொந்த ஊர், திருச்சியிலுள்ள பெரம்பலூர். பெற்றோர், விவசாயக் கூலிகள். வீட்டில் யாருக்குமே, எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், எனக்கு படிக்க வேண்டும் என்று, ஆசை அல்ல; வெறியே இருந்தது. அதற்கு முயற்சி எடுக்க வேண்டிய என் பெற்றோர், என்னை வேலைக்கு அனுப்பினர். என் 13 வயதில், யாரிடமும் சொல்லாமல், வீட்டை விட்டு பெங்களூருக்கு ஓடிப் போனேன்.
அங்கு ஒரு ஓட்டலில், வேலைக்குச் சேர்ந்தேன். தட்டு கழுவும் வேலை; அழுகையா வரும். அதன் பின், சென்னைக்கு வந்து விட்டேன். இங்கும் அதே வேலை தான். "கருணாலயா' என்ற தொண்டு நிறுவனம், என்னைக் கண்டு
பிடித்து, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்தது. என் வாழ்க்கையில், மிகவும் சந்தோஷமான நாள் அது. 13 வயதில், முதன் முதலாக பள்ளியில் கால் வைத்தேன். அடிப்படைக் கல்வி கற்காமலேயே, நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினேன்; தோல்வியடைந்தேன். அனைவரும் கேலி செய்தனர்.
என்னுடன், விடுதியில் தங்கியிருந்த சக்திவேல் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் தான், எனக்கு பாடம் சொல்லித் தருவான். படித்ததை, எழுதி எழுதிப் பார்ப்பேன். எப்படியோ கஷ்டப்பட்டு படித்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தேர்ச்சி பெற்று விட்டேன். பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., பொருளியல் படிக்கிறேன். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில், மாதம், 500 ரூபாய் உதவித் தொகை கிடைக்கிறது.
என் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பகுதி நேரமாக வேலை செய்கிறேன். ஐ.பி.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்பது தான் என் குறிக்கோள்; அதற்காக கடினமாக உழைப்பேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக