ஞாயிறு, 28 ஜூலை, 2013

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரை வேதனை

இளம் அறிவியலாளர்களுக்கு த் தன்னுரிமை  இல்லை:  மின்னஞ்சலை க்  கண்டுபிடித்தவர் வேதனை

வெம்பக்கோட்டை: ""இந்தியாவில், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப் படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை,'' என, "இ -மெயிலை' கண்டுபிடித்த, விருதுநகர், முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார்.

சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில், உலக அளவில் 1.8 பில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் உள்ள தற்போதைய பாடத்திட்டம், மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்குமே தவிர, வேலை கொடுப்பவர்களாக உருவாக்காது. அமெரிக்க மாணவர்கள், பெரிய கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும், தங்களது முன்மாதிரியாக வைத்துள்ளனர். ஆனால் இந்திய மாணவர்கள், சினிமா நடிகர்களைத்தான், தங்களுடைய முன்மாதிரியாக வைத்துள்ளனர். அமெரிக்காவில் நான், 1978ல், "இ -மெயிலை' கண்டுபிடித்து போது, எனக்கு வயது 14 . அப்போது எனது ஆசிரியர்களும், விஞ்ஞானிகளும் எனது வயதை பார்க்கவில்லை. கண்டுபிடிப்பை பார்த்து ஊக்கப்படுத்தினர். பின், 1981 ல், "இ- மெயில்' காப்புரிமை (பேடன்ட்) பெற்றேன். டில்லியில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.,ல், பல கோடி ரூபாய் புழங்குகிறது. ஆனால், அங்குள்ள தலைமை விஞ்ஞானிகள், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியாவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள், நோபல் பரிசு பெற்றனர். சுதந்திரத்திற்கு பின், இந்தியாவில் ஆராய்ச்சி செய்த எந்த விஞ்ஞானியும், நோபல் பரிசு பெறவில்லை. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், சித்த மருத்துவம், கட்டுமரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர். தற்போது, வெளிநாட்டு கண்டுபிடிப்புகளை, உபயோகப்படுத்துபவர்களாக உள்ளனர், என்றார். தாளாளர் சோலைசாமி, இயக்குனர் சுந்தர், முதல்வர்கள் விஸ்வநாதன், ராமசாமி, ஜெயபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

திருவில்லிபுத்தூர்:

கலசலிங்கம் பல்கலையில்,"தொழில் நுட்பத்தில் தேவை புதுமை' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சிவா அய்யாதுரை பேசியதாவது: நான், எனது குடும்பத்தாருடன், ஏழு வயதில் அமெரிக்கா சென்று, ஏழைகள் வாழும் பகுதியில் தங்கிப் படித்தேன். டெலிகிராம், போன் மட்டுமே இருந்த காலத்தில், "இ-மெயிலை' கண்டுபிடித்தேன். நான் இந்தியன் என்பதால், அதை அமெரிக்கர்கள் நம்பவில்லை. மேலும், "எக்கோ மெயில்', "ஈ மெடிக்ஸ்' போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளேன். "இந்தியாவில் ஊழல் பெருத்து விட்டது' போன்ற குறைகளை' கூற வேண்டாம். இந்தியாவில் எல்லா வளமும் உள்ளது. இந்தியாவிலிருந்து, சித்தா, யோகாவை வெளிநாட்டினர் கற்று, பயன்படுத்துகின்றனர், என்றார். வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் சரவண சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக