வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

கைத் தொழில் கற்கலாம்!

கைத் தொழில் கற்கலாம்!


மாணவியர், கல்லூரியில் படிக்கும் போதே, தொழில் துவங்க ஊக்குவிக்கும், கல்லூரி முதல்வர், டாக்டர் நிர்மலா பிரசாத்: நான், சென்னையிலுள்ள, எம்.ஓ.பி., வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன், என்னிடம் படித்த மாணவியர் பலர், கலைத் திறனோடு சுட்டியாக இருந்தாலும், திருமணத்திற்கு பின், திறமைகளை ஒடுக்கி, குழந்தை, குடும்பம் என, இருந்தனர். படித்த பெண்கள் திருமணம் செய்தாலும், திறமைகளை தொடர, கல்லூரியிலேயே, ஒரு தொழிலை கற்றுக் கொடுத்தால், பிரச்னை தீரும் என்ற எண்ணத்தில், சுயவேலை வாய்ப்பு திட்டத்தை துவக்கினேன். கல்லூரி மாணவியர் என்றால், படிப்பும், வண்ணத்துப் பூச்சி போல், வண்ண உடையோடு ஜாலியாக ரீங்காரமிடுவர் என, எண்ணத் தோன்றும். ஆனால், எங்கள் கல்லூரி மாணவியர், தங்களின் ஓய்வு நேரங்களில், சில குழுக்களாக பிரிந்து, தொழிலை திட்டமிட்டு கற்று, கல்லூரியிலேயே தொழில் துவங்குகின்றனர். அதற்கு நாங்கள் உதவியும், ஊக்கமும் அளிக்கிறோம். மொத்த ஸ்டேஷனரி விற்பனையகத்தில், கல்லூரிக்குத் தேவையான ஏ4 பேப்பர், சாக்பீஸ், டஸ்டர், சார்ட்,பேனா என, ஆறு மாணவியர் கொண்ட குழு, வாங்கி வந்து விற்பனை செய்கிறது. 14 மாணவியர் ஒன்று சேர்ந்து, பூச்செண்டு, பூ அலங்காரம் தயாரிக்க, பயிற்சி வகுப்புகள் சென்று, கற்றனர். கல்லூரியின் அனைத்து விழாவிற்கும், பூச்செண்டு, பூ அலங்காரம் மற்றும் வெளியிலிருந்து வரும், "ஆர்டர்'களையும் செய்கின்றனர். ஒரு குழு டீ, காபி, வடாபாவ், பப்ஸ், முட்டை சேர்க்காத கேக் என, ஸ்நாக்ஸ் விற்பனையகமும் வைத்துள்ளது. இன்றைக்கு, பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அனைத்தையும் தொழில் களங்களாக மாற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக