வியாழன், 27 செப்டம்பர், 2012

திருமண வரவேற்பு விழாவில் புதுமை: சேவைப் பணிக்கு மொய் ப் பணம் வழங்கல் marriage presentation money for social service

திருமண வரவேற்பு விழாவில் புதுமை: சேவைப் பணிக்கு மொய் ப் பணம் வழங்கல்

தினமலர் : தருமபுரி : தருமபுரியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மொய் பணத்தை, ஆதரவற்ற இல்லங்களுக்கு பகிர்ந்து வழங்க, மணமகனின் தந்தை முடிவு செய்து, 32 ஆயிரம் ரூபாய் திரட்டியுள்ளார்.

தர்மபுரி, அப்பாவு நகரை சேர்ந்தவர் நாகராஜன், 66. இவர், தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், மாவட்ட கண் தான மைய துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் வருவாயில், மாதம் தோறும் ஒரு பகுதியை, ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து உதவி வருகிறார்.இவரது இல்லத்தில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, அன்பளிப்பு மற்றும் செய்முறைகளை விரும்பாத இவர், அழைப்பிதழ்களில் "அன்பளிப்பை தவிர்க்கவும்' என்ற வேண்டுகோளை தவறாது அச்சிட்டு வந்தார்.கடந்த, 2002 ஜனவரி, 27ம் தேதி, இவரது இளைய மகள் ஸ்ரீவித்யா- டாக்டர்.விக்ரம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, அன்பளிப்பை தவிர்க்க கூறியும், உறவினர்கள் பலர், மொய் கவர் கொடுத்து சென்றனர்.

இந்நிலையில், நாகராஜனின் மகன் ஜெகந்நாதன், மஞ்சுபிரியா திருமணம், கடந்த, 12ம் தேதி கோவையில் நடந்தது. திருமண வரவேற்பு தர்மபுரியில், நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக <உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.அழைப்பிதழில், "அன்பளிப்பை தவிர்க்கவும், உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும்; அன்பளிப்பை தவிர்க்க முடியாதவர்கள், சேவை பணிக்கு வழங்கலாம்' இதற்காக மண்டபத்தில், தனி "பாக்ஸ்' அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் மாலை, தர்மபுரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆதரவற்றோர் சேவை பணிக்காக இரண்டு பெரிய "பாக்ஸ்' மணமேடை மேல் வைக்கப்பட்டிருந்தன. வரவேற்பில் கலந்து கொண்ட பலர், இந்த "பாக்ஸி'ல், தங்கள் மொய் கவரை போட்டனர். இதில், 32 ஆயிரத்து 360 ரூபாய் சேர்ந்தது.""இந்த தொகை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லகளுக்குப் பிரித்து வழங்கப்படும். மணமக்களுக்கு வந்த அன்பளிப்பு பொருட்களையும் அதனுடன் சேர்த்து வழங்கப்படும்,'' என, மணமகனின் தந்தை நாகராஜன் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக