சனி, 29 செப்டம்பர், 2012

பேரவைத்தலைவர் செயக்குமார் பதவி விலகல் - T.N.Speaker Jayakumar Resigned

29 Sep 2012 01:10:44 PM IST




தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா 

சென்னை, செப்., 29 : தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்த டி. ஜெயக்குமார் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இனி, அவரது பணிகளை துணை சபாநயாகராக உள்ள பி. தனபால் கவனிப்பார் என்றும், தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சராக இருந்த டி. ஜெயக்குமார், சபாநாயகர் பதவியில் இருந்து விலகியிருப்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
++++++++++ 


சபாநாயகர் பதவியில் இருந்து ஜெயக்குமாரின் விலகலுக்கு காரணம்?

First Published : 29 Sep 2012 04:23:18 PM IST


சென்னை, செப்., 29 : அதிமுகவில் அமைச்சர்கள் மாற்றம் என்பது சர்வ சாதாரணம். தற்போது சபாநயாகருக்கும் அதே நிலை என்பதுபோல, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி. ஜெயக்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ராஜினாமா கடிதம் பெறப்பட்டதும், உடனடியாக அரசு கெசட்டிலும் வெளியாகி, செயலாளர் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பும் அனுப்பியுள்ளார்.இந்த திடீர் ராஜினாமாவுக்குக் காரணம் என்ன என்று தமிழக மக்கள் குழம்பியுள்ளனர்.கடந்த 18ம் தேதி டி. ஜெயக்குமாரின் பிறந்த நாள், சென்னையில் மிக மிக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் அதிக தடபுடல் காட்டியுள்ளனர். மேலும், ஜெயக்குமாரின் ஜாதகத்தில், முதல்வராகும் யோகம் இருப்பதாக வந்த தகவலால், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடுத்த சி.எம். நான்தான் என்ற அளவிற்கு அதிகாரத் தோரணை காட்டி வந்துள்ளனர். இது மட்டும் அல்லாமல், பிறந்த நாள் அன்று வாழ்த்துச் சொல்ல வந்த மேயரையும், அமைச்சர் பன்னீர்செல்வத்தையும் வெகு நேரம் காக்க வைத்து பார்க்காமலேயே திருப்பி அனுப்பியுள்ளார் ஜெயக்குமார். இவை போதாதா... இது பற்றி எல்லாம் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட, உடனடியாக பதவி விலகல் நடந்துள்ளது என்று ஒரு தரப்பு கூறுகிறது. இது ஒருபுறமிருக்க, ஜெயக்குமாரின் ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து விலக்கியதால் பதவி விலகியதாக ஜெயக்குமார் தரப்பு செய்தியை பரப்பி வருவது மறுபக்கம்.
++++++++++++++++++++++++++++
 
மாலை மலர்
 
சென்னை, செப். 29-

சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் டி.ஜெயக்குமார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது சட்ட சபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் ராஜினாமா தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக