புதன், 26 செப்டம்பர், 2012

"நானே உதவவில்லை என்றால்...'

சொல்கிறார்கள்

 "நானே உதவவில்லை என்றால்...'
மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, சேவை செய்யும் மாற்றுத் திறனாளிப் பெண் கலையரசி: ஏழாவது குழந்தையாக பிறந்த எனக்கு, பிறக்கும் போதே உயரக் குறைபாடு இருந்தது. மூன்று வயதில், போலியோ தாக்குதல் வேறு. பிறவியிலிருந்தே இருந்த கால்சியம் சத்து குறைபாடு காரணமாக, எலும்புகள் அடிக்கடி உடைந்து போகும்.லால்குடி தாலுகாவில் குமுளூர், ரெட்டி மாங்குடி கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள, குவளக்கடி கிராமம் தான், என் சொந்த ஊர். அப்பா பெரியசாமி தந்த அரை ஏக்கர், அண்ணன் தாமோதரன் அளித்த இரண்டு ஏக்கர் என, இரண்டரை ஏக்கர் நிலத்தின் சிறு பகுதியில், மாற்றுத் திறனாளிகளுக்காக, தங்குமிடம், உணவு வசதி உட்பட, இலவசமாக அளித்து வரும், "பூர்ணோதயா தொண்டு நிறுவனம்' என்ற தொழிற்பயிற்சி மையம் நடத்தி வருகிறேன்.இங்கு, கணினி பயிற்சி, தையல், சானிட்டரி நாப்கின் தயாரிப்பு, பினாயில், கம்ப்யூட்டர் சாம்பிராணி மற்றும் செயற்கை ஆபரணத் தயாரிப்பு என, பல தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.காது கேளாத எமல்டா, செய்கை ஆபரணத் தயாரிப்பு மற்றும் தையல் பயிற்சி பெற்று வருகிறார். ஆசையழகன் என்பவர் பார்வையிழந்தவர்; காது கேளாதவர்; காலும் ஊனம். ஆனால், தையல் வேலையில் திறமையானவர். அவர் தான், இங்கு தையல் ஆசிரியர்.என் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, நானே உதவவில்லை என்றால், வேறு யார் உதவுவர்?கடைக்குட்டி என்பதால், வீட்டில் நான் தான் செல்லம். என் குறைகளைப் பெரிதாகக் காட்டாமல், என் குடும்பத்தினர் என்னை அரவணைத்து வளர்த்தனர். பள்ளிப் படிப்பின் போது, கேம்ஸ் பீரியடுகளில் என்னை ஓரமாக உட்கார வைத்து விடுவர். அதுவே எனக்கு பெரும் பாரமாகப் போனது.படிப்பு முடித்து வெளியே வந்த போது தான், என் போன்ற மாற்றுத் திறனாளிகளின் துயரங்கள் தெரிய வந்தன. தையல் ஆசிரியர் பயிற்சி பெற்று, திருச்சியில் இருக்கும் கிறிஸ்துவ மிஷனரி நடத்தும் பள்ளியில், ஆசிரியர் ஆனேன். அங்கு சேவை புரியும் சிஸ்டர்களின் உதவியோடு, அவர்களின் பக்குவத்தையும், சமூகத்தில் அவர்கள் களமிறங்கிச் செயல்படும் விதத்தையும் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, எனக்குள் உருவானது தான், பூர்ணோதயா தொண்டு நிறுவனத் திட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக