வியாழன், 5 நவம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 156:
புலிகள் வசம் யாழ்ப்பாணம்!



போருக்கு இடையிலும், போராளிக் குழுக்களின் போட்டிகளுக்கிடையிலும் வாழப் பழக்கப்பட்ட மக்களாக பாலஸ்தீனியரையும், ஆப்கானிஸ்தானியரையும் குறிப்பிடுவதைப்போன்றே யாழ்ப்பாண மக்களையும் குறிப்பிடலாம். அவர்களுக்குத் தற்போது அமைந்துள்ள சூழல் இயல்பான ஒன்றாக இருந்ததற்குக் காரணமே, யாழ்ப்பாண நிர்வாகத்தை புலிகள் மேற்கொண்டிருந்ததுதான். சிங்கள ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவிலிருந்து வெளியேறி, தமிழீழத்தில் நுழைந்ததற்கு அறிகுறியாக, தமிழீழ எல்லைக் காவல்படை, தமிழீழ ராணுவம், தமிழீழ உள்வரவு-வெளியேற்றப் பணியகம் முதலியவற்றால், வழங்கப்படும் அனுமதி அட்டை, தமிழீழம் என்ற புதிய நாட்டிற்குள் நுழைந்துவிட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தின. தமிழீழத்துக்கான தேசியக் கொடியாக 27-11-1990 மாவீரர் நாளில் ஏற்றப்பட்ட, புலிகளின் கொடியில் உள்ள எழுத்துகள் நீக்கப்பட்ட கொடியே தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது. இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு வண்ணங்கள் இருந்தன. மஞ்சள் நிறம் தனித்த தேசிய இனம் என்றும், தாயகம் தழைத்து உள்ளது என்றும், மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறுகிறது. சிவப்பு நிறம் வர்க்கம்-சாதி-பெண்ணடிமை நீங்கவும், சமத்துவ சமுதாயம் நிலவுவதையும் கொள்கையாகக் குறிக்கிறது. கறுப்பு நிறம் - விடுதலைப் பாதை கரடுமுரடானது; இழப்புகளும் துன்பங்களும் நிறைந்தது. இதனைத் தாங்க இரும்பு இதயம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது என்றும் கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் காவல்துறையைத் தவிர்த்துசில நிர்வாகக் கட்டமைப்புகளை சட்டம் ஒழுங்கு சார்ந்தும், சிவில் நிர்வாகம் சார்ந்தும் ஏற்படுத்தவேண்டிய அவசரத்தில் புலிகள் இருந்தனர். நிதி நிர்வாகம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் போன்றவை ஸ்ரீலங்கா அரசின் நிதியாதாரங்களைக் கொண்டே இயங்கி வந்தன. அவற்றை அதன்போக்கிலே விட்டு, மேற்பார்வை செய்யும் விதமான மாற்றங்களே தற்போது மேற்கொள்ளப்பட்டன. இவ்வகை மாற்றங்களில் அரசுப் பணிகளில் அனுபவம் பெற்று ஓய்வு பெற்றவர்களையும், சமூக ஆர்வலர்களையும் ஆலோசனை வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பணிப்பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. நிதி நிர்வாகம், புலிகளின் நிதியாதாரங்களைக் கவனித்து வந்த தமிழேந்தியின் பொறுப்பில் விடப்பட்டது. நிதியாதாரங்களுக்கு வரி வசூலிப்பது என்பது பெரும் வர்த்தகங்கள், நடுத்தர வியாபாரிகளிடம் மட்டுமே நடைபெற்றது. இதுகாறும் அல்லலுற்ற பொதுமக்களிடம் வரி வசூல் செய்வதைத் தவிர்த்தனர். சட்டம், ஒழுங்கு பராமரிப்புக்கு, புலிகள் அமைப்பிலிருந்தே போராளிகளைத் தேர்ந்தெடுத்து காவல்படை அமைக்கப்பட்டது. இந்தக் காவல்துறை அமைப்பை வே.பிரபாகரன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாத்தையா, தமிழ்ச்செல்வன், இளங்குமரன், யோகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காவலர்களுக்கான சீருடை, நீலநிறத்தில் கட்டம்போட்ட மேற்சட்டையும், நீலநிற கால்சட்டையும் பிரபாகரனால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. காவலர்கள் அணியும் தொப்பி - தமிழீழத்தின் தேசிய மரமான பனைமரத்தின் ஓலைகளால் ஆன தொப்பியில், நீல நிறத்துணி உறையிடப்பட்டிருந்தது. ஒரே சமயத்தில் யாழ்பகுதியில் யாழ்ப்பாண நகரம், கோப்பாய், சுன்னாகம், சங்கானை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, பளை ஆகிய இடங்களில் காவல்நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் தலைமையகம் யாழ்ப்பாணத்திலும், கிளைகள், புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் நிறுவப்பட்டன. காவல்துறையைத் தொடர்ந்து நீதித் துறையிலும் மறுகட்டுமானம் செய்யவும், வடமாநிலத்தில் கூடுமானவரை நிர்வாகத்தைச் செம்மையாக்கும் முயற்சியிலும் பிரபாகரன் இறங்கினார். இதுகுறித்து, தமிழீழப் பகுதிக்குச் சென்று வந்த பத்திரிகையாளர் கே.பி.சுனில், "பிசினஸ் அண்ட் பொலிடிகல் அப்சர்வர்' இதழில் (1992 மார்ச்) எழுதிய கட்டுரையில் யாழ் காவல்துறையின் பொறுப்பிலிருந்த நடேசன் பேட்டி அளித்திருந்தார். அவர் கமிஷனர் "ரேங்கிங்' பணியிலிருந்தார். அந்தப் பேட்டி வருமாறு: ""நாங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, சட்டப்பிரிவை உருவாக்கி இருக்கிறோம். இதில் முன்னாள் நீதிபதிகள் தங்கள் ஆலேசனைகளை வழங்குகின்றனர். சட்ட விதிகளை தமிழ்ச் சூழலுக்கேற்ப உருவாக்க இருக்கிறோம். மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் அவ்வகையில் உருவாகும். இது நகரம் மற்றும் கிராமங்களில் செயல்படும். இதற்கானப் பணியில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை பணியில் அமர்த்தியுள்ளோம். சட்ட மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஸ்ரீலங்காவில் இருப்பது போலல்லாமல், தேசவழமைச்சட்டம், குற்றவியல் சட்டம் முதலியவற்றில் சூழலுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சட்டக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்து, தேர்வு பெற்றால் அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். சட்டத்தின் முன் மாவீரர்களின் அளப்பரிய தியாகத்துக்கு மதிப்பளித்து போற்றுகிறோம். அவர்களது குடும்பங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் போன்ற சலுகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் மீது புகார் வந்தால் முறைப்படி விசாரிக்கப்படும். அதேபோன்றுதான் போராளிகள் நிலையும். காவல்துறையில் பணியாளர்களுக்கு ரூ.1500 மாத ஊதியம் நிர்ணயித்துள்ளோம். மற்றும் சீருடை, மருத்துவ வசதி, தங்கும் வசதி ஆகியவையும் வழங்கப்படுகின்றன. செஞ்சோலை என்பது காப்பகம். அநாதையாக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் தங்குமிடமாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காப்பகத்தில் தற்போது (1991-இல்) 70 பேர் உள்ளனர். இவர்களுக்குப் படிப்பு, தோட்டவேலை முதலியவை சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. போரினால் ஏற்பட்ட அவலங்களில் இந்த அநாதையாக்கப்பட்ட விஷயமும் ஒன்றாகும். வடக்கு-கிழக்குப் பகுதிகளில் உள்ள புலிகளின் நிர்வாகிகள் மூலம் இந்தவகைப் பிரிவினர் இங்கு கொண்டுவரப்படுகிறார்கள். இவர்களுக்குப் பிரபாகரனே தாயும் தந்தையுமாக உள்ளார். அவரின் சிறப்புக் கவனிப்பில் இந்தக் காப்பகம் செயல்படுகிறது. "ரூட்' என்கிற (Research Organisation of Tamil Eelam) சமூகசேவை நிறுவனம், புலிகளால் 1990-லிருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிகளை மேற்கொள்வது இதன் முக்கியப் பணி. விவசாயம், கால்நடை விஞ்ஞானம், மீன்வளம், குடிசைத்தொழில், பெருந்தொழில், உணவு பதனிடுதல், கட்டுமானத்தொழில், எரிசக்தி, கிராமநலன், வர்த்தகம், தகவல் தொடர்புத்துறை, பனைத்தொழில் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதன் தலைவராக ரவி இருக்கிறார். இந்த அமைப்பு மூலம் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளது. இந்த ஆராய்ச்சியகத்துக்கென்று 650 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, 295 திட்டங்களில் ஆய்வுப்பணிகள் நடைபெறுகின்றன. இவர்களுக்கு வழிகாட்டிகளாக, ஒவ்வொரு துறையிலும் ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு நிதியாதாரமாக பிரபாகரன் 10 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில் 6 கோடி) ஒதுக்கியுள்ளார். ரூட் அமைப்பின் கீழ் "தேசநிர்மாணிகள்' என்ற பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடுவதிலும், அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்ரீலங்கா அரசு எந்த நேரமும் மின்சாரத்தையும், எரிபொருளையும் பெட்ரோலியப் பொருள்களையும் முடக்கி, தடை போடுவதால் மாற்று எரிபொருள் ஆய்வும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரியான கருத்தில், நாடகம் உருவாக்கப்பட்டு கிராமங்கள்தோறும் குழுக்கள் சென்று, நாடகம் போடுவதுடன், புலிகள் நடத்தும் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் 4 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. போரில் சினிமா தியேட்டர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதால், தொலைக்காட்சி ஒளிபரப்பு விரிவுபடுத்தப்பட்டது'' என்றார். பெண்கள் பிரிவுக்குத் தலைவராக இருந்த ஜெயா கூறுகையில், "ஆண்களுக்கு நிகராக தோளோடு தோள் நின்று போர் புரிவதைப் பெருமையாகவே கருதுகிறோம். ஆனையிறவுப் போரில் எங்கள் பிரிவினரும் கலந்துகொண்டனர்' என்றார்.புலிகளின் அரசியல் இயக்கமான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி அலுவலகம் கொண்டாவில் பகுதியில் திறக்கப்பட்டது. அதன் கிளைகள் வடக்குப் பகுதியின் ஒவ்வொரு ஊரிலும், வட்டத்திலும் அமைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கு மற்றும் நிதிப் பொறுப்பு தவிர்த்து இதர நிர்வாகங்கள் மக்கள் முன்னணியின் பொறுப்பில் இருந்ததால், இதன் கிளைகளில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், அரசு முன்னாள் ஊழியர்கள், பெண்கள் எனப் பலரும் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொண்டனர்.மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கைக் கட்டுப்படுத்த, விடுதலைப் புலிகள் சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இதற்கென "பாஸ்' முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புலிகளுக்கும், பெற்றோர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. வெளிநாட்டில் தங்களது பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து, வளம் சேர்ப்பதைப் "பாஸ்' முறை தடுக்கிறது என்றும் கருத்து தெரிவித்தார்கள். அதேபோன்று விமர்சனத்துக்கு ஆளான இன்னொரு பிரச்னை தமிழ் சினிமா ஆகும். தமிழ் சினிமா மக்களின் வாழ்வைச் சிதைப்பது மட்டுமன்றி, மக்களின் வாழ்வை அடையாளப்படுத்துவதாகவும் இல்லை என்று புலிகள் படங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இந்தக் கட்டுப்பாட்டில் மக்களின் கருத்துக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடு தலைதூக்கிற்று. எந்தப் படத்தையும் பார்ப்பதில் தங்களுக்குள்ளேயே சில மனக்கட்டுப்பாடு இருப்பதால் தடை தேவையில்லை என்பது மக்களின் வாதமாக இருந்தது. அடுத்து, யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்ட முணுமுணுப்பு புலிகள் இயக்கத்தில் பெண்கள் சம்பந்தப்பட்டதாகும். ஆரம்பத்தில், பெண்களைச் சேர்த்தபோது கண்டுகொள்ளாத யாழ்ப்பாண சமூகம், தற்போது பெண்புலிகள் சீருடை அணிந்து வீதியில் நடக்கவும், தமிழீழக் காவல்படைக்கு மாற்றப்பட்ட பெண் புலிகள், போலீஸ் உடை அணிந்து செல்வதும், நீண்ட கூந்தலைக் குறைத்துக் கொள்வதும் விமர்சனத்துக்குள்ளானது. யாழ்ப்பாணத்தில் தாய்வழிச் சமூக நிலைப்பாடுதான் என்றபோதிலும், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழிவழிவந்த மரபு முறையே போற்றப்பட்டதால், பெண் புலிகள் தோற்றம்-பதவிப் பொறுப்பு-அன்றாட வாழ்க்கை போன்றவை கேள்விக்கும் விமர்சனத்துக்கும் உட்படுத்தப்பட்டது. தேசிய இனப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்ற உந்துதலில் பெண்களும் போரில் குதிக்கிறார்கள். அவர்கள் பணியின் நிமித்தம் சீருடை அணிவதோ, பயிற்சியின் நிமித்தம் ஆயுதம் தூக்குவதோ, நீள்முடியைக் கத்தரிப்பதோ ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல என்ற எதிர்வாதங்களும் எழுந்து பெண்கள் சார்ந்த முரண்பாட்டை சமன் செய்தன. அதுவரை இருந்து வந்த அரசுரீதியான கல்வி முறையில் தலையிடாமல், இளங்குமரன் (பேபி சுப்ரமணியம்) தலைமையில் தமிழீழக் கல்விக் கழகம் அமைக்கப்பட்டு, தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு முதலியவற்றில் புதிய நூல்கள் படைக்கப்பட்டு, அறிமுகம் ஆயின. இதன்மூலம் அரசின் வரலாறுகளில் திரிக்கப்பட்டிருந்த தமிழர் வரலாறு சரிசெய்யப்பட்டது. யாழ்ப்பாண நிர்வாகத்தைப் புலிகள் எடுத்துக்கொண்டதும், கோபம் கொண்ட பிரேமதாசா கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், ராணுவத்தைக் குவித்தார். கடற்கரையோரமிருந்த நகரங்களில் கடும் மோதல் எழுந்த சூழ்நிலையில், புலிகள் நகரங்களில் இருந்து விலகி, காட்டுப் பகுதிகளில் நிலைகொண்டதுடன். அவ்வப்போது தாக்குதலையும் தொடுத்தனர்.நாளை: யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக