சனி, 8 ஜூன், 2019

செம்மொழி என்னும் போதினிலே …! – முனைவர் ஒளவை நடராசன்



(சூன் 6 –  தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட  நாள்)
“ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும். இந்தியா பெருமை மிக்க நாடு, இந்து சமயம் உலகச் சமயங்களில் சிறந்த ஒன்று என்று புதிதாக வாதாடுவதைப் போலத்தான் தமிழ் செம்மொழிதான் என்று உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையை நிலை நிறுத்துவதாகும்.”
இவ்வாறு அறிஞர் சியார்சு ஆர்ட்டு (George Hurt)எழுதியது வரலாற்றில் நிற்கும் வைரச் சொற்களாகும்.
தொன்மைச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் வகையில் 1500 முதல் 2000 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமிதம் கொண்டதாகவும், காலப்பழமையும், இலக்கண முழுமையும், இலக்கியச் செழுமையும் ஒரு மொழி கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்திய அரசு வரையறுத்துச் செம்மொழி தகுதியை வழங்கியது. அந்த வகையில் இன்றைய நிலையில் தமிழ், சமக்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா முதலிய ஆறு மொழிகளையும் செம்மொழிகளாக உலகிலேயே இந்திய நாடுதான் அறிவித்துள்ளது.
2004-ஆம் ஆண்டு அட்டோபர் மாதம் 12-ஆம் நாள் தமிழுக்குச் செம்மொழி தகைமை வழங்கும் ஆணையை மத்திய அரசு வழங்கியது. இன்றைய நன்னாளில்தான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 6-6-2004 அன்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர் முனைவர் ஏ.பி.செ.அப்துல்கலாம், “தமிழ் செம்மொழியாக இனிப் பொன்னொளியோடு மின்னி மிளிரும்” என்று அறிவித்தார். இந்த புகழ் மொழி தமிழறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களையும், தமிழக அரசு தொடங்கி, தமிழர் வாழும் அரசுகளையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக மைசூரில் செயற்பட்ட செம்மொழி தமிழாய்வுப் பிரிவு, தமிழ்நாட்டில் சென்னை மாநகரிலேயே அமைந்தது.
இந்திய மொழிகள் நடுவண் நிறுவனம் என்பது இந்திய நாட்டின் இரண்டொரு மாநிலங்களில் தலைநகரங்களில் தலைமை நிலையத்தைக் கொண்டிருந்தது. தென்னக மொழிகளை ஆய்வு செய்யும் மொழிகள் நிறுவனமாக மைசூர் நடுவண் நிறுவனம் அமைந்து இருந்தது.
மொழியியல் சார்ந்த தலைப்புகளில் அறிஞர்களைக் கொண்டு ஆய்வுப்பணிகளை ஆற்றியது. தமிழார்வம், தமிழ் இலக்கியச் செறிவு முதலியன இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசோ, செம்மொழி என்ற முழக்கத்தின் அடிப்படையே விளங்காமல் கண் தெரியாதவனுக்குத் துதிக்கை உலக்கையாக தெரிந்தது போல மைசூர் நிறுவனத்தில் தமிழ் மொழிப்பிரிவில் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். மைசூர் நிறுவனத்தின் கிளைக்குச் செம்மொழிக்கென வழங்கப்பட்ட தொகை திகைப்பைத் தந்தது. இது முதற்கோணலாயிற்று.
நான்கு கூட்டங்கள் போலத், தமிழகச் செம்மொழி நிறுவனத்தின் சார்பில் மைசூரிலேயே நடந்தன. தமிழகத்தின் தலைநகரில் அல்லவா இந்த நிறுவனம் அமைய வேண்டும் என்று அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்தியதால், மைசூரில் இருந்த ஒரு பிரிவைச் சென்னைக்கு அனுப்பி நிறுவனத்தைத் தொடங்கச் சொன்னார்கள்.
இந்தக் கோட்பாட்டுப்  பின்னணியில் ஏற்பட்ட குழப்பத்தால் செம்மொழி நடுவண் நிறுவனத்தில் மொழியியலாளர்களே இடம் பெற்று ஆராய்ச்சிகளைச் சென்னையிலும் தொடங்கினார்கள். தமிழக அரசு இந்த நோக்கையும், போக்கையும் மாற்ற முனைந்தது. தமிழக அரசுக்கே முழுப்பொறுப்பையும் வழங்குவதற்கு மத்திய அரசு தடையாக நின்றது.
செம்மொழி பெருமிதத்துக்காகவே 500 கோடி உரூபாய் செலவில் ஐந்து நாள் மாநாடு கோவையில் உலகத்தமிழ் மாநாடு ஒத்தநிலையில் மாபெரும் மாநாடாக நடந்தது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி தாமே தம் கடின உழைப்பையும், உறுதியையும், கரைகாணாத் தமிழ்க்காதலையும் காட்டிய மாநாடாகத் திகழ்ந்தது. இந்தியக் குடியரசுத் தலைவரே நேரில் வந்து நெஞ்சுருகப் பாராட்டி வாழ்த்தினார். கருணாநிதி தாம் பெற்ற தமிழ் வெற்றியாக தன் செலவில் ஒரு கோடி உரூபாய் தமிழறிஞர் விருதளிப்புக்கென வழங்கியதையும் நினைவு கூரலாம். அந்தக் கோப்பு தில்லிக்கும், சென்னைக்குமாக மிதிபட்டுத் தேக்கமுற்றது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ் மக்கள் எதிர்பார்த்து ஏங்கிப்பெற்ற ஆய்வு நிறுவனமாகும். அறிஞர்கள் கண்ட கனவுகள் பல. ஆய்வுக்களங்களோ எண்ணற்றவை. அந்த நாளிலேயே வாழிய செந்தமிழ் என்று பாரதியார் தம் மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும், இனப்பற்றையும் ஒன்றாக இணைத்துச் செம்மொழி நிறுவனத்துக்கு அடிகோலினார். நாளும் முயன்ற நல்லறிஞர்களையும், அரசையும் கட்சிக் கண்ணோட்டத்திலேயே காணும் போக்கும் படர்ந்தது.
தாயில்லாத சவலைப் பிள்ளையாக நாளும் ஒரு கவலையும், பொழுதும் ஓர் அவலமும் கொண்டு அழும் குரல் எல்லை தாண்டித் தில்லியின் காதில் எட்டுவதில்லை. மாநிலத் தலைநகரில் உள்ள வேறு எந்த நடுவண் நிறுவனமும் இத்தகைய புறக்கணிப்பால் தவிக்கவில்லை.
ஒரு பல்கலைக்கழகத்தை கட்டிக்காத்த துணைவேந்தரும், புகழ் வாய்ந்த கல்லூரியின் முதல்வரும், நல்லறிஞரும் துணைத்தலைவராக இருந்தும் தினையளவும் சிக்கல் தீரவில்லை. துணைத்தலைவருக்கு அடையாறு இ.தொ.நி.(ஐ.ஐ.டி.) தலைவரைப் போன்ற அதிகாரங்களை வழங்கியிருக்க வேண்டாவா? நாடாளும் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியாக இன்று பதவியேற்று இருக்கும் இரமேசு பொக்ரியால் நாடு புகழும் கவியரசராவார். உத்தரகாண்டு மாநிலம் ஆண்ட முதல்- அமைச்சருமாக இருந்தவர். கவியரசர்களுக்குத்தான் மொழியின் அருமையும், பெருமையும் நன்றாக தெரியும் என்று நம்புகிறார்கள். அந்த வாய்ப்பை வலியுறுத்தும் கடமை தமிழக அரசையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சாரும்.
செம்மொழி நிறுவனம் செழித்தோங்கும் நிறுவனமாக மலர வேண்டும். நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் போல உருப்பெறுவதற்கு இடமும் வழங்கப்பட்டு வளமனைகள் வளர்ந்து வருகின்றன. செம்மொழி நிறுவனத்திற்காகத், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக சென்னை, பெரும்பாக்கத்தில் 17 காணி நிலம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. “செம்மொழி என்னும் போதினிலே சிந்தும் அழுகுரல் விழுகுது காதினிலே” என்று சொல்லும் நிலைமை துடைக்கப்பட வேண்டும். பொங்கும் மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடும் நன்னாளாக செம்மொழி நாள் அமைய வேண்டும்.
– முனைவர் ஒளவை நடராசன்,
முன்னாள் துணைவேந்தர்தமிழ்ப்பல்கலைக்கழகம்தஞ்சாவூர்.
தினத்தந்தி 06.06.2019

வெள்ளி, 7 ஜூன், 2019

குறுந்தொகை: தொடர் சொற்பொழிவு தொடக்க விழா

அகரமுதல


ஆனி 01, 2050 ஞாயிறு 16.06.2019 மாலை 4.00
வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம்
தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகம்

குறுந்தொகைத்

தொடர் சொற்பொழிவு தொடக்க விழா

தலைமை: வள்ளல் கு.வெள்ளைச்சாமி
தொடக்கி வைப்பவர்: முனவர் ஆறு.அழகப்பன்
தொடர் சொற்பொழிவாளர்:

முனைவர் முகிலை இராசபாண்டியன்

இலக்கிய அமுதம் – பெரியசாமி தூரனின் எழுத்துகள்


வைகாசி 26, 2050 ஞாயிறு 09.06.2019 மாலை 5.30

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

 இலக்கிய அமுதம்

 பெரியசாமி தூரனின் எழுத்துகள்

சிறப்புரை : ச.கண்ணன்

தலைமை : சு.சுந்தரராசன்

அன்புடன் எதிர்நோக்கும் அ.இராமச்சந்திரன்
தொடர்பிற்கு : 9442525191 ;  9791069435

வியாழன், 6 ஜூன், 2019

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன்

அகரமுதல

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை 


“தமிழ் படித்தால் இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக் கிடைக்குமா?” என்பது குறித்து தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தமிழ்ப்புலத் தலைவர், புதுதில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, உறுப்பினர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை உறுப்பினர், கல்வியாளர், எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலில் மாணவர்களுக்கான பல புதிய தகவல்கள். 


  • தற்போதைய சூழலில் உயர்கல்விக்கான வாய்ப்பு – வசதிகள் எப்படி உள்ளன?

உலக அரங்கில் இந்தியா “உயர்கல்விக்கான மையமாகத்” திகழ்கிறது. 903 பல்கலைக்கழகங்கள், 30,050 கல்லூரிகள், இது தவிர 1,0011 தனிப் பாடக் கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என விரிந்து பரந்துள்ளது.


  • தற்போது எந்த மாதிரியான படிப்புகளுக்கு மாணவர்களிடம் ஆர்வம் உள்ளது? எந்தெந்தப் படிப்புகளில் விரும்பிச் சேருகின்றனர்?

இந்திய அளவில் சென்ற 2017 – 2018 கல்வியாண்டில் மட்டும் 36.4% கலைப்படிப்புகளிலும் (Arts Subjects), 17.1% அறிவியல் படிப்புகளிலும் (Science Subject), 14.1% வணிகவில் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர். இப்படிப் பார்க்கின்றபோது 53.5% மாணவர்கள் கலை-அறிவியல் படிப்புகளிலே அதிகம் தேர்வு செய்துள்ளனர். இப்படிப்புகளில் தான் தற்போது ஆர்வமாகச் சேருகின்றனர்.

  • தற்போது தமிழ் பட்டப் படிப்பில் சேர்ந்து படிப்பவர்கள் குறைந்து வருகின்றனரே?
இதற்கு அறியாமைதான் காரணம்! இந்தியாவில் தற்போது மொழிப்பாடங்களுக்காக மட்டும் 20 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் ஒன்று! இது மட்டுமல்ல. உலகம் முழுவதுவும் உள்ள 50க்கும் மேற்பட்ட, உலகத் தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்ற பல பல்கலைக்கழகங்கள் தமிழ்பட்டப் படிப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை வழங்குகின்றன. இதில் கேம்பிரிட்சு பல்கலைக்கழகம், தொறன்டோ பல்கலைக்கழகம், ஆர்டுவர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா, கொலம்பியா, ஏல், தெக்சாசு போன்ற பல்கலைக்கழங்களும் அடங்கும்!
  • தமிழ் படித்தால் தற்போது வேலை வாய்ப்புக் கிடைக்குமா?

தமிழ்நாட்டைப் பொருத்த வரை 13,576 பள்ளிகள், 2,470 கல்லூரிகள் உள்ளன. இங்குத் தமிழ் கட்டாயம் ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இ.ஆ.ப., இ.கா.ப., போன்ற குடிமைப் பணித் தேர்வுகளில் இந்தியா முழுவதுவும் ஆண்டு தோறும் ஏறத்தாழ 1000 முதல் 1200 பேர் வரை தேர்வாகிறார்கள் இவர்களில் ஏறத்தாழ 10% தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள். அப்படித் தேர்வாகிறவர்களில் 10% தமிழினை ஒரு பாடமாகத் தேர்வு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது! இதே போல் த.நா.ப.தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் தமிழ் படித்தவர்கள் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

  • தமிழ்நாட்டினைத் தாண்டி தமிழ்படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது எப்படி உள்ளது?
இன்று உலகம் முழுவதுவும் தமிழ் மொழியைத் தாய் மொழியாக 6 கோடியே 80 இலட்சம் பேர்களும், இரண்டாவது மொழியாக 90 இலட்சம் பேர்களும் பேசுகின்றனர். தமிழ்மொழியினை 7 கோடியே 70 இலட்சம் பேர் பேசுகின்றனர் என Ethnologius Report – 2017 கூறுகிறது. எனவே தமிழ் மொழியை முறையாகக் கற்பிக்க வெளிநாடுகளில் ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் பணி வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தமிழ், அரசின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும் தற்போது உள்ளது. இங்கு பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், தனியார் மொழிப்பயிற்சி மையங்களிலும் தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் இருந்தே இணைய வழியாகக் கற்பிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
  • ஆசிரியப் பணி அல்லாமல் வேறு என்னமாதிரியான பணி வாய்ப்புகள் உள்ளன?

உலகம் முழுவதுவும் 80-க்கும் மேற்பட்ட பண்பலை வானொலி நிலையங்களும், இணைய வானொலியும் தமிழ் ஒலிபரப்பு செய்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி காட்சி ஊடகங்கள் (T.V) அதிகரித்து வருகின்றன. அவற்றில் திரையில் தோன்றுவது மட்டுமல்லாது திரைக்குப் பின்னால், செய்தி எழுதுதல், செப்பனிடுதல், வடிவமைத்தல், வாசித்து வழங்குதல், திருத்தல், தொகுத்து அளித்தல், ஒருங்கிணைத்தல் என்று அதிக வாய்ப்புகள் உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் ஊடகத்துறையில் அதிக முதலீடுகளைச் செய்கின்றன. புறப்பணி முறையிலும்(outsourcing) முறையிலும் ஆட்களைத் தேர்வு செய்கின்றனர்.


இதுமட்டும் அல்லாமல் பதிப்புத் துறைகளிலும் விளம்பரத் துறைகளிலும் வாய்ப்புகள் அதிகம், சிறப்பான விளம்பர வாசகங்கள் எழுதுவதற்கும் மெய்ப்புத் திருத்துவதற்கும் தமிழ்நாட்டில் ஆள் கிடைப்பதில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனும் தொழில் நுட்பமும் பெற்றிருந்தால் போதும்.
  • தகவல் தொழில் நுட்பத் துறையில் (I.T.) வேலை வாய்ப்பு குறைந்ததனால். இதுபோன்ற கலைப்பாடங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உருவாகிறதா?

இல்லை. தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் ((I.T.) “தமிழ் இலக்கணம்” படித்தவர்களுக்கும், “மொழியியல் படித்தவர்களுக்கும் இப்போது அதிகமான வாய்ப்புகள் உள்ளன. “கூகுள் நிறுவனமும் கி.பீ.மா.கோ.((KPMG) -உம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்திய மொழிகளிலே இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழிதான் முதலிடத்தில் உள்ளது. புதிய புதிய தமிழ் கணியன்களை(மென்பொருள்களை), கணிணியிலும் சரி, அலைபேசியிலும் அதிக அளவில் பயின்படுத்தி வருகின்றனர். “ஆப்பிள்” நிறுவனம் கூடத் தமிழ்க் கணியன்(மென் பொருள்) இல்லாமல் எந்தக் கருவியையும் தற்போது உருவாக்குவதில்லை. எனவே தமிழ் படித்தவர்களின் தேவை தற்போது தொழில் நுட்பத் துறைக்கும் தேவையாக இருக்கிறது தகவல் தொழில் நுட்பத் துறையில் “தமிழ்ச் செயலிகள்” (APPS) உருவாக்கத்திற்குத் தமிழ் மொழி கற்றவர்கள் தான் தேவை. 


  • இவ்வளவு இருந்தும் தமிழ்ப்படிப்பில் மாணவர்கள் சேரத் தயங்குவது ஏன்?

போதிய விழிப்புணர்வு இல்லை! என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகியுள்ளன. அதற்கு என்ன மாதிரியான தனிப் பயிற்சிகள் பெற வேண்டும், திறன் வேண்டும், என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். திரு.முத்துநெடுமாறன், பேராசிரியர், தெய்வசுந்தரம், கல்யாணசுந்தரம், திரு.இளங்கோவன், போன்றவர்களின் தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகளை அறிந்தாலே இந்த துறையில் மாணவர்களுக்கு  ஆர்வம் அதிகரிக்கும்.
பாரதிபாலனிடம் செவ்வி கண்டவர், சுந்தரபுத்தன்
புதிய தலைமுறை – கல்வி
சுந்தரபுத்தன்

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்

அகரமுதல


புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும்

இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.
 ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.
 இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவின் கல்விக்கொள்கையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களைக் கண்டறிந்து ஒரு புதிய கல்விக்கொள்கையை வகுத்து முன்மொழிந்துள்ளது.
 இந்தப் புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழித் திட்டம் கட்டாயமாக்கப் பட்டதும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்பட்டதும் உணர்வுக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பன்முகப்பாங்கான இந்திய நாட்டின் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளை மனதில் கொள்ளாது ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை வலிந்து திணிக்கும் முயற்சி மாநிலங்களுக்கு உள்ள உரிமையில் வரம்பு மீறித் தலையிடுவதாக உள்ளது.
 கல்வி, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான ஒருங்கிணைந்த பட்டியலில் விளங்கி வருவதனை மெல்ல மெல்ல நீக்கிவிடும் முயற்சியில் மோடி அரசு செய்துவருகிறது என்னும் வருத்தம் மூத்த கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வுமுறை கட்டாயமாக்கப்பட்ட போதே கல்வி, மாநிலங்களின் பட்டியலில்இருந்து அறிவிப்புச் செய்யாமல் அகற்றப்பட்டுவிட்டதே என்னும் கொந்தளிப்பும், மாநில உரிமைகள் பறிபோகின்றனவே என்னும் ஏமாற்றமும் ஏற்பட்டன அல்லவா?
 இந்தப் புதிய கல்விக்கொள்கை, இந்தியைக் கட்டாயமாக்குவதுடன், மாநில உரிமைகளிலும் தலையிடுவதாக உள்ளது. விரிவான அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்குக் குழிபறிப்பதாக இந்தக் கொள்கை திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது.
 கல்வியில் தாய்மொழியின் முதன்மையையும், தேவையையும் சில பகுதிகளில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆங்கில அறிவு அறிவியல் வளர்ச்சிக்குத் தேவை எனவும் இந்த அறிக்கையிலே வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழைக் குறிப்பிடும்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாலி, பெருசியன் என்னும் பட்டியலை விரிக்கும் இந்த அறிக்கையாளர்கள் சமசுகிருதத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் விரிவாக அதன் பெருமைகளை விளக்கிச் செல்கிறார்கள். காளிதாசன், பாசன் என்றெல்லாம் சமசுகிருதப் புலவர்களின் பெயர் சொல்லிப் பாராட்டும் அறிக்கையாளர்களுக்கு ஓரிடத்திலாவது தொல்காப்பியர், திருவள்ளுவர் என்று கூற வேண்டுமெனத் தோன்றவில்லையே? இடமில்லையா? மனமில்லையா?
விண்வெளியியல் ஆய்வாளரைக் கொண்டு கல்வித்திட்டம் வகுப்பதே பொருத்தமானதாகத் தெரியவில்லையே? இவ்வளவு பெரிய நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா? அறிக்கை உருவாக்கியவர்கள் பட்டியலைக் கவனித்தால் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெறவில்லை என்னும் குறை உறுத்துகிறதே? கல்வியின் தாயகம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் ஒருவரையாவது குழுவில் இணைத்திருக்கலாமே?
கல்வித்துறையில் 217 பேரைச் சீர்சால் பெருந்தகைகள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். இப்பட்டியலிலும் இரண்டே பேர் தான் தமிழ்நாடு.
மொத்தத்தில் பாரபட்சம் மிக்க இந்தக் கல்வி கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். அந்தந்த மாநிலங்களுக்குரிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநிலச் சூழல்களுக்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் கடமையுணர்வு மிக்க கல்வியாளர்களை ஒருங்கிணைத்துக் கல்விக் கொள்கை வகுத்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் சார்பாளர்கள் கொண்ட குழுவை அமைத்துப் பொதுவான சில திட்டங்களை உருவாக்கி மாநில அரசுகளின் இசைவோடு அந்தந்த மாநிலக் கல்வித் திட்டங்களில் இணைத்துக் கொள்ளவேண்டும். அணுவளவும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.
தாய் மொழியின் முதன்மையுணர்ந்து தாய்மொழி வழிக் கொள்கை உருவாக்கினால் நாடு முன்னேறும். காந்தி, தாகூர் போன்ற சான்றோர்கள் கண்ட கனவாகிய ‘தாய்மொழிவழிக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிய சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் பெருகும். இந்தியா வல்லரசாக உலகில் உயர்ந்தோங்கும்.
முனைவர் மறைமலை இலக்குவனார்
(சிறப்புவருகைப் பேராசிரியர்கலிபோர்னியா பல்கலைக்கழகம்அமெரிக்கா)
– தினத்தந்தி 05.06.2019