சனி, 22 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 1 தொடர்ச்சி)

காந்தியாரின் இந்தி பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2

தமிழ்ப் பிரசார சபாவுக்கு இந்திய அரசு ஒதுக்கும் சொற்ப நிதியும் தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் இந்துத்துவப் பரப்புரைக்குத்தான் பயன்படுத்திக் கொள்ளப்படும்தமிழறிஞர்கள் என்ற போர்வையில் ஆர்எசுஎசு ஆட்கள்தாம் இந்த சபாக்களை மேலாண்மை செய்வார்கள். உண்மையிலேயே தமிழ் வளர்ச்சிதான் நோக்கம் என்றால் பிரசார சபா என்ற இந்திப் பெயர் எதற்கு?

இந்தியைப் பரப்ப காந்தியார் நிறுவிய அமைப்புக்கு இந்திப் பிரசார சபா என்று இந்தியில் பெயரிட்டார். தமிழ் வளர்ச்சிக்கான அமைப்புக்கு ஏன் இந்தியில் பெயரிட வேண்டும்? தமிழ்ப் பரப்புரை மன்றம் என்றோ தமிழ் வளர்ச்சிக் கழகம் என்றோ பெயரிடக் கூடாதா? மாஃபா பண்டியராசனைக் கேட்டிருக்கலாமே? காந்தியார் தாம் தொடங்கிய அமைப்புக்கு இந்தி புரொப்பகேசன் சொசைட்டி என்றா பெயர் வைத்தார்?

தமிழ்ப் பிராசார சபா என்ற பெயரே மோதியின் உள்நோக்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக உள்ளது. 2022 நவம்பர் 19ஆம் நாள் மோதி தொடங்கி வைத்த ஒரு மாதக் கால காசி தமிழ்ச் சங்கமத்தில் நடந்தது என்ன? தமிழ் எதனோடு சங்கமித்தது? ஏக் பாரத் சிரேசுட்ட பாரத்(து) (ஒரே பாரதம் உன்னத பாரதம்)! இதுதான் தமிழ்ச் சங்கமத்தின் மந்திர முழக்கம்! தமிழ்ப் பிரசார சபாவும் இப்படித்தான் இந்துத்துவப் பிரசார சபாவாக மாற்றப்படும். திருவள்ளுவருக்குக் காவி உடுத்தியவர்கள் தமிழன்னைக்கும் காவி உடுத்தி விடுவார்கள்.

காந்தி நிறுவிய இந்திப் பிரசார சபாவையும் மோதி நிறுவப் போவதாகச் சொல்லும் தமிழ்ப் பிரசார சபாவையும் எதிர்நிறுத்தி ஒப்புநோக்கினால் சில உண்மைகள் புலப்படும். 1918ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கிலம் எல்லா வகையிலும் கோலோச்சிய போது இந்தியத் தேசிய இயக்கத்தின் உறுப்பாக இந்தி் பிரசார சபாவை காந்தியார் நிறுவினார். இந்தியை இந்திய நாட்டின் பொதுமொழியாக வளர்த்தெடுத்து இந்தியத் தேசிய இயக்கத்தின் அடையாளமாக முன்னிறுத்த வேண்டும் என்பது காந்தியாரின் வேணவா.

அன்று இந்தி ஆட்சிமொழி இல்லை. இன்று அரசமைப்புச் சட்டத்தின் படி அதுதான் முதன்மை ஆட்சிமொழி. இந்திய அரசமைப்பில் தமிழ் ஆட்சிமொழியில்லை, நீதிமொழியில்லை. நடைமுறையில் அது கல்விமொழியும் இல்லை. தமிழ்நாட்டளவில் கூட அது அரைகுறை ஆட்சிமொழி மட்டுமே. தமிழ்நாட்டை விலக்கிப் பேசுவோம். மோதி இந்திய நாடெங்கும் தமிழ் பிரசார சபா தொடங்குவதால் தமிழ் ஆட்சிமொழியாகுமா? நீதிமொழியாகுமா? கல்விமொழியாகுமா? அப்போதும் தமிழ் ஆளும் மொழி ஆகாது, அடிமை மொழியாகவே நீடிக்கும். அடிமைமொழியைக் கற்பதில் எத்தனைப் பேருக்கு ஆர்வம் வரும்?

இந்திப் பிரசார சபா தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னாட்டின் பல மாநிலங்களிலும் ஏராளமானோர் இந்தி படிக்க உதவியது. நான் இந்திப் பிரசார சபையில் படித்தவன். ஆளப்படும் மொழியான போதிலும் இந்தியத் தேசிய உணர்வு சார்ந்து பலரும் இந்தி படித்தனர். விடுமை (சுதந்திரம்) என்னும் அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின், குறிப்பாக அரசமைப்பு இயற்றப்பட்ட பின் இந்தியக் குடியரசு இந்திக் குடியரசாகி விட்டது. அஃதாவது இந்தி ஆளும் மொழியாகி விட்டது. இந்தி கற்பதற்குச் சிறப்பு ஊக்கம் ஏதும் தேவைப்படவில்லை. இன்றைய நிலையில் தமிழ்நாடு நீங்கலாக இந்தியாவெங்கிலும் மும்மொழித் திட்டப்படி இந்தி கட்டாயமாகவே கற்பிக்கப்படுகிறது.

குடியேற்ற(காலனி)ஆதிக்கக் காலத்திலேயே பயில்மொழியாக இந்தி திணிக்கப்படுவதைத் தமிழ்நாடு எதிர்த்தது (1937-38). ஆனால் இன்று தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்துக்கு வெளியே இந்தி கட்டயாமாகவே கற்பிக்கப்படுகிறது. மாநிலக் கல்வி வாரியத்தின் கீழேயும் கூடத் தனியார் பதின்மப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன்) இந்தி கற்பிக்கப்படவே செய்கிறது. பிராசார சபா வழியாகத்தான் இந்தி கற்க வேண்டும் என்ற தேவை பெரும்பாலும் அற்றுப் போய் விட்டது. காந்தி நிறுவிய இந்தி பிரசார சபா கிட்டத்தட்ட வாழ்ந்து முடித்து விட்டது.

சரி, தமிழ்ப் பிரசார சபா தொடங்கப்படும் வரலாற்றுப் பகைப் புலம் என்ன? தமிழ்த் தேசிய உணர்வின் பாற்பட்டு தமிழ் கற்கும் ஆர்வம் ஓங்கி மிளிரும் அளவுக்கு தமிழ்நாட்டு இறைமை மீட்பு இயக்கம் வலுப்பெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் பாற்பட்டு அடையாளத் தன்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சிதான் தாய்த் தமிழ் கல்விப் பணி. அது வளர வேண்டிய அளவுக்கு வளரவில்லை என்பதே மெய்.

2009 முள்ளிவாய்க்காலுக்கு முன் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே காணப்பட்ட தமிழ் கற்கும் ஆர்வத்தைப் புலம்பெயர் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலையோடு ஒப்புநோக்குவது கருத்துக்குரியது. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களாகவே கணக்கில் கொள்கிறேன்.

இந்தப் புலம்பெயர் தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே தமிழார்வத்தை விதைக்க அங்கங்கே தமிழார்வலர்கள் தனிப்பட்ட முறையிலும் சங்கம் வைத்தும் செய்து வரும் முயற்சிகள் இருப்பினும், குழந்தைகளிடையே தமிழ் கற்கப் பெரிதாக ஆர்வம் இல்லை என்பதே உண்மை. புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கிடையிலும் முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழ் கற்கும் ஆர்வம் குறைந்திருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நான் 1994 அமெரிக்கப் பயணத்தின் போது சிக்காகோவில் ஒரு தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்காக அங்குள்ள பாலாசி கோயிலுக்குப் போயிருந்தேன். பாலாசி கோயிலில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழும் இந்தியும் கற்றுக் கொடுப்பதற்கான தனித்தனி வகுப்புகள் நடக்கின்றன. தமிழ்க் குழந்தைகள் தமிழை விடவும் இந்தி கற்பதிலேயே கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். ஒரு குழந்தையின் பெற்றோர் எனக்கு விளக்கமளித்தார்:

“இந்திய அரசோடு தொடர்பு கொள்ள இந்தி வசதியாக உள்ளது. அரசிடமிருந்து இந்தியில் விடையும் கிடைக்கிறது. இந்திய அரசின் ஊக்கமும் கிடைக்கிறது. தமிழக அரசோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமே போதுமானதாக உள்ளது. நாம் தமிழில் விண்ணப்பம் அனுப்பினால், அரசிடமிருந்து  விடை வராது, வந்தாலும் ஆங்கிலத்தில்தான் வரும்.”

தமிழர்கள்தான் இப்படி என்றால் மற்ற மொழிக்கரர்களின் நிலை என்ன? நம்மைப் போலவே மொழிப்பற்றுள்ள வங்காளிகள் எப்படி? வங்கதேசத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறிய வங்காளி ஒருவரைக் கேட்டேன். அவர் சொன்னார்:

“வங்கதேச விடுதலைக்கு முன்பு எங்கள் மக்களில் பெரும்பாலார் வங்காளி கற்பதால் என்ன பயன்? என்றுதான் கேட்பார்கள். உருது மொழி கற்பதில் ஆர்வமாய் இருப்பார்கள். அது பாக்கித்தானின் ஆட்சிமொழி. விடுதலைக்குப் பின் வங்காளி கற்க ஆர்வம் வளர்ந்துள்ளது.”

நானறிந்த இன்னொரு செய்தி: அமெரிக்காவில் குடியேறிய தமிழர் ஒருவர் அங்கு பிறந்து வளர்ந்த தன் மகளைத் தமிழ் படிக்கச் செய்யப் படாத பாடு பட்டார். தமிழின் அருமையை உணர்த்துவதற்காக ஒரு முறை மகளைத் தமிழ்நாட்டுக்கே அழைத்து வந்தார். ஒரு முழு நாள் சென்னையைச் சுற்றிப் பார்த்த பின் மகள் சொன்னாராம்:

“நான் இவ்வளவு காலமும் அமெரிக்காவில் தமிழ் தேவையில்லை என்றுதான்  நினைத்திருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன், தமிழ்நாட்டிலும் தமிழ் தேவையில்லை என்பதை!”  

தமிழ் ஆளும் மொழியாக இருக்க வேண்டும், அல்லது ஆட்சியைப் பிடிக்கப் போராடும் நிலையிலாவது இருக்க வேண்டும். இல்லையேல் தமிழ் படிக்கும் ஆர்வம் தமிழ்நாட்டுக்கு வெளியே பொங்கி வராது; தமிழ்நாட்டிலும் மங்கிப் போகும்.

மோதியின் தமிழ் பிரசார சபா என்ன செய்யப் போகிறது? தமிழை ஆளும் மொழியாக்கப் போகிறதா? அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தப் போகிறதா? திருத்தக் கோரிப் போராடப் போகிறதா? பிறகெப்படித் தமிழ் கற்கும் ஆர்வம் பெருகப் போகிறது? தமிழ் பிரச்சார சபா திறந்தும் யாரும் படிக்க வரவில்லை என்று இழுத்து மூட வேண்டியதுதான்! அல்லது தமிழ்ப் பிரசாரம் என்ற பெயரில் இராமாயணம், மகாபாரதம், பகவத்(து) கீதை படிக்க வேண்டியதுதான்! ஆர்எசுஎசு நோக்கம் நிறைவேறும்.

தமிழ் வாழ வேண்டுமென்றால் தமிழ் ஆள வேண்டும். இந்தியக் கட்டமைப்பு இப்போதுள்ள வடிவிலோ, மோதியின் பேரவாப்படி இன்னும் மோசமான வடிவிலோ நீடித்துள்ள வரை தமிழ் ஆளப் போவதுமில்லை! வாழப் போவதுமில்லை.

சற்றே உற்றுநோக்குங்கள்! ஊடுருவிப் பாருங்கள்! மெல்லத் தமிழ் கொல்லப்படுவதைக் காண்பீர்கள்! இந்தியாவில் – குறிப்பாக மோதியின் இந்தியாவில் – தமிழ் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மொழியழிப்புக்கு அடிப்படை இந்தியக் கட்டமைப்பில் தமிழர்கள் அடிமைகளாக இருப்பதே! அடிமையின் மொழியைக் காப்பற்ற வேண்டுமானால் அடிமைத்தனம் ஒழிய வேண்டும்! அல்லது அந்த அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக அடிமைகள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். ஆண்டைகளின் தயவில் வாழலாம், அடிமைகளாகவே!

மோதியின் தமிழ்ப் பிரசார சபா – இந்திய இந்துத்துவ அரசு தமிழ் மொழியழிப்பு செய்வதை மறைக்கும் திரையே தவிர வேறல்ல!

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல்
 174

தோழர் தியாகு எழுதுகிறார் 154 : காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும் மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி தொடர்ச்சி)

காந்தியாரின் இந்திப் பிரசார சபாவும்

மோதியாரின் தமிழ்ப் பிரசார சபாவும் 1

 

இனிய அன்பர்களே!

வாயால் வடை சுடுவதில் வல்லவரான இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி புதிதாக ஒரு வடை சுட்டிருக்கிறார். அதுதான் ‘தமிழ்ப் பிரசார சபா’.

இந்தி மொழியைப் பரப்ப 1918ஆம் ஆண்டு காந்தியார் தென்னிந்திய இந்திப் பிரசார சபை (தட்சிண் பாரத் இந்தி பிரசார சபா) அமைத்தது போல் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி நாடெங்கும் தமிழ்ப் பிரசார சபா அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். மாநிலத் தலைநகரங்களில் தமிழ் பிரசார சபைக்குக் கிளைகள் அமைக்கப்படும் என்றும், இவை தமிழறிஞர்களின் பொறுப்பில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்தப் பிரசார சபைகளில் தமிழ் கற்றுத் தேர்ச்சி பெறுவோர்க்கு சான்றிதழும் பட்டயமும் வழங்கப்படுமாம்!

மோதியின் அறிவிப்பில் இந்தத் தமிழ் பிரசார சபைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற ஒரு கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. அஇஅதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலத்தில் இதே போன்ற தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைக்க இந்திய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பியதாகவும், ஆனால் இந்திய அரசு நிதி வழங்காமையால் அத்திட்டம் கருக்கலைந்து போனதாகவும் அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராசன் சொல்கிறார்.

மோதி திருக்குறள் சொல்வார், பாரதியார் என்பார், புறநானூறு, அகநானூறு எல்லாம் பேசுவார், தமக்குத் தமிழ் தெரியவில்லையே என்று வருந்துவார், தமிழ்தான் உலகிலேயே பழமையான மொழி என்றெல்லாம் பெருமை பீற்றுவார். சமற்கிருதத்தை விடவும் தமிழ் பழமையானது என்று சொல்லுமளவுக்குக் கூட செல்வார். இப்போது தமிழ் பிரசார சபை என்றும் தம்பட்டம் அடிப்பார். ஆனால் இதற்கு நிதி ஒதுக்குவது பற்றி மட்டும் ஊமையாக இருந்து கொள்வார் என்றால், எப்படி இவரது தமிழ்க் காதலை நம்புவது?

தமிழ்ப் பிரசார சபைக்கு நாளைக்கே இந்திய அரசு ஒரு தொகை ஒதுக்கக் கூடும். அது எவ்வளவு என்பதும், எப்படிச் செலவிடப்படும் என்பதும்தான் முகன்மைக் கேள்விகள். இது வரைக்குமான பட்டறிவு என்ன? இந்திக்கும், சமற்கிருதத்துக்கும் இந்திய அரசால் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? தமிழுக்கு எவ்வளவு? இப்போது மோதி இதில் பெரிய மாற்றம் செய்யப் போகிறாரா?

இந்தியக் குடியரசு அமைந்த காலத்திலிருந்து இந்தி, வடமொழி (சமற்கிருதம்) தவிர வேறு எந்த மொழி வளர்ச்சிக்காகவும் நடுவண் அரசு நிதி ஒதுக்கியதில்லை. அப்போது இந்திய அரசமைப்பின் எட்டாம் அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 14 மொழிகள் இடம் பெற்ற போதிலும் இந்திக்கும் சமற்கிருதத்துக்கும் மட்டுமே இந்திய அரசின் காசு செலவிடப்பட்டது. இப்போது இந்த அட்டவணையில் 22 மொழிகள் இடம் பெற்றுள்ள போதிலும் இந்திக்கும் சமற்கிருதத்துக்கும்தான் சிறப்புச் சலுகையாகக் கொழுத்த செலவு!

1977க்குப் பின் வடமொழி செம்மொழி என்று சொல்லி அதற்கென இந்திய அரசு வழக்கத்துக்கு மேல் சிறப்பு ஒதுக்கீடு செய்தது. செம்மொழிகள் என்ற வகையில் அரபு, பாரசீக மொழிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்கீடு செய்தது.

நான் 1994ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மாநாட்டுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றிருந்த போது சிக்காகோவில் திரு பாபு அவர்களின் இல்லத்தில் சில நாள் தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னிடம் “தமிழைச் செம்மொழியாக ஐநா அறிந்தேற்கச் செய்ய வேண்டும்” என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.

“நாங்கள் ஏற்கெனவே ஐநா அமைப்பான யுனெசுகோ-வை அணுகி வருகிறோம். ஆனால் அரசு வழியாக இந்தக் கோரிக்கை வந்தால்தான் எடுபடும். இந்திய அரசிடம் இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பலரிடம் இது பற்றிப் பேசியிருக்கிறோம். தமிழ் அமைப்புகள் இதற்கு முன்முயற்சி எடுத்தால் வெற்றி பெற முடியும்.”

யாரும் அறிந்தேற்றாலும், இல்லையென்றாலும் தமிழ் எல்லா வகையிலும் செவ்வியல் மொழிதான். செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழிதான்! பரிதிமாற் கலைஞர் முதல் முனைவர் வா.செ. குழந்தைச்சாமி வரை செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழியான உயர்தனிச் செம்மொழி தமிழ் என்ற கருத்தை நிறுவினார்கள். ஆனால் தமிழின் செம்மொழித் தகுதியை ஐநாவின் கல்வி பண்பாட்டு அமைப்பு அறிந்தேற்றால் பல வகையிலும் தமிழுக்கு வளம் சேர்க்க வழி பிறக்கும். இந்திய அரசு வடமொழிக்குச் செலவிடுவது போல் தமிழுக்கும் செலவிட வேண்டி வரும்.    

நான் என் ஐயத்தைச் சொன்னேன்: “தமிழை ஒரு தேசிய மொழியாகவே இந்திய அரசமைப்பு அறிந்தேற்கவில்லை. தமிழ்நாட்டிலேயே ஆட்சிமொழி, கல்விமொழி, நீதிமொழி என்ற நிலைகளை முழுமையாக அடையப் போராட வேண்டியுள்ளது. செம்மொழி அறிந்தேற்பால் என்ன பெரிய பயன் விளைந்து விடப் போகிறது?”

“செம்மொழித் தகுதி என்பது தனி. அதற்கு அங்கீகாரம் பெறுவது தமிழுக்கான ஆக்கப் பணிகள் செய்ய உதவும். மற்றபடி உங்கள் போராட்டம் தொடர்வதில் சிக்கல் இல்லை.”       இதற்கிடையில் தமிழைச் செம்மொழியாக அறிந்தேற்கக் கோரி சாலை இளந்திரையன், சாலினியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களும், புலவர் சுந்தரராசனைச் செயலாளராகக் கொண்ட தலைநகர்த் தமிழ்ச் சங்கமும் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டத்தாலும், விடா முயற்சியாலும் செம்மொழிக் கோரிக்கை வலுப்பெற்றது. செம்மொழிக் கோரிக்கைக்காகப் போராடத் தில்லி சென்றிருந்த போதுதான் சாலினியார் ஒரு சாலை நேர்ச்சியில் (விபத்து) உயிரிழந்தார்.

2004ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று மன்மோகன் சிங்கு தலைமையிலான அமைச்சரவையில் திமுகவும் இடம்பெற்று, தமிழ் செம்மொழி என்று அறிந்தேற்கப் பெற்றது. “அம்மா எனக்கும்” என்று தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியம் என்று ஒவ்வொரு மொழியாகக் கேட்ட போது எல்லாமே செம்மொழிதான் என்று அறிவிக்கப்பட்டது – தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்குவதைப் போலத்தான்! அல்லது கோயிலில் சுண்டல் வழங்குவதைப் போலத்தான்!

இப்போது, தமிழ், வடமொழி உட்பட 6 இந்திய மொழிகள் செம்மொழிகளாக அரசின் அறிந்தேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆறு மொழிகளுக்கும் இந்திய அரசு செய்யும் நிதி ஒதுக்கீட்டை ஒப்பாய்வு செய்தால் இந்திய அரசின் பாகுபாடான அணுகுமுறை தெட்டெனப் புலப்படும்.

2017-18, 2018-19, 2019-20 ஆகிய மூன்றாண்டுகளை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். மோதி ஆட்சிக்கு உட்பட்ட இந்த மூன்றாண்டுகளில் தெலுங்கு, கன்னட மொழிகள் ஒவ்வொன்றுக்கும் சம அளவில் முதலாண்டு ஒரு கோடியும், இரண்டாம் ஆண்டு 99 இலட்சமும், மூன்றாம் ஆண்டு 1.07 கோடியும் ஒதுக்கப்பட்டன. ஒடிய, மலையாள மொழிகளுக்கு வளர்ச்சி மையங்களும் அமைக்கவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை.

அதேநேரத்தில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையைச் சேர்ந்த தன்னாட்சி அமைப்பான மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் (CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL – CICT) தமிழுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறைந்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் ரூ.10.59 கோடியும், 2018-19இல் ரூ.4.56 கோடியும், 2019-20இல் ரூ.7.7 கோடியும் ஒதுக்கப்பட்டன. இது நாடாளுமன்றத்தில் அரசு சார்பில் தரப்பட்ட தகவல்.

இதே மூன்றாண்டுகளில் வடமொழிக்கு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா?   

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சிவசேனா உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் அளித்த விடையில், “மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) இராசுட்டிரிய சமற்கிருத சன்சுதானத்தை நிறுவியதாகவும், அதற்காக கடந்த 3 ஆண்டுகளில் உரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது. சன்சுதானுக்கு 2019-20-ஆம் ஆண்டில் உரூ.231.13 கோடியும், 2018-19இல் உரூ214.28 கோடியும், 2017-18இல் உரூ198.31 கோடியும் ஒதுக்கப்பட்டன” எனக் கூறப்பட்டது.

அதாவது மூன்றாண்டுக்கும் சேர்த்து ஏழு கோடி மக்கள் பேசும் தமிழுக்கு 22 கோடிக்கும் குறைவு. 2011ஆம் ஆண்டுக் கணக்குப்படி வெறும் 45 ஆயிரம் பேர் பேசும் வட மொழி சமற்கிருதத்துக்கு உரூ.643 கோடி! 45 ஆயிரம் பேருக்குத் தெரிந்த மொழிக்கு 643 கோடி! தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடிப் பேருக்குத் தெரிந்த மொழிக்கு 22 கோடி!  

வடமொழி யாருக்கும் தாய்மொழி இல்லை! அது மக்கள் மொழியன்று, செத்த மொழி!  தமிழ்நாட்டில் அக்கிரகாரத்திலும் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆண்டவனோடு அந்தரங்கம் பேசுவதற்கு மட்டும்தான் வடமொழி! அது இலத்தீன் போல் வெறும் சமயச் சடங்கு மொழி! அதற்கு ஏன் இவ்வளவு பெருந்தொகை செலவிட வேண்டும்? அந்த மொழியில்தான் புராணங்கள் உள்ளன, வேதங்கள் உள்ளன. வருண சாதிக் கட்டமைப்பைக் காத்து இந்துத்துவ அரசியலை ஊட்டி வளர்க்க வடமொழி தேவை.

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல்
 174

வெள்ளி, 21 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 153 : சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்! தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இந்த மடலின் முதல் தலைப்பில் காணப்படும் கலைச் சொற்கள் பலருக்கும் புதியனவாய் இருக்கக் கூடும். அவற்றை விளங்கச் செய்யும் நோக்கில் “சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி” என்ற தலைப்பில் ஏர் 2018 நவம்பர் 7 (புரட்சி நாள்) இதழில் இடம்பெற்ற என் கட்டுரையை இப்போதைய தேவை கருதி உங்களுடன் பகிர்கிறேன்.

 சொல்லடிப்போம் வாங்க!   

சோசலிசப் புரட்சி எனும் குமுகியப் புரட்சி

சோசலிசப் புரட்சியைக் குமுகியப் புரட்சி என்று எழுதியிருந்தேன்.  ஓரிரு ஆண்டுகளாகவே இந்தத் தமிழாக்கத்தைப் பயன்படுத்தி வருகிறேன். 

இன்று உலகில் வெற்றி பெற்ற முதல் சோசலிசப் புரட்சி ஆகிய நவம்பர் புரட்சி நடைபெற்ற நாள். (முதல் பாட்டாளியப் புரட்சி ஆகிய பாரிசு கொம்யூனைக் கணக்கில் கொள்ளாமல் சொல்கிறேன்). அந்தப் புரட்சியின் சாதனைகளில் ஒன்று உலகெங்கும் சோசலிசச் சிந்தனைகளைப் பரவச் செய்ததாகும். சோசலிசச் சிந்தனைகளை நான் குமுகியச் சிந்தனைகள் என்கிறேன்.

சோசலிசம், கம்யூனிசம், மார்க்குசியம் என்ற கருத்தாக்கங்கள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நவம்பர் புரட்சியால் பரவின. இவற்றுக்கு இணையான தமிழ்ச் சமன்களை அப்போதே தேடத் தொடங்கினர். கம்யூனிசத்தைப் பொதுவுடைமை என்று பாரதியும் திரு.வி.கவும் அடுத்து வந்த தமிழறிஞர்களும் பெயர்த்தனர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இதையே பொதுமை என்று சுருக்கினார். “பொதுமை நோக்கிச் செல்கின்றதிந்த வையம்!”

பொதுவுடைமையைக் காட்டிலும் பொதுமை பொருத்தமானது என்று கருதுகிறேன். இது குறித்துப் பிறகு பேசுவோம்.

இப்போது சோசலிசத்தை எடுத்துக் கொள்வோம். இராசகோபாலாச்சாரியார் (இராசாசி) முதலில் சோசலிசத்தை ’அபேதவாதம்’ (வேற்றுமையின்மை) என்று மொழிபெயர்த்தாராம். பேதமும் தமிழன்று, வாதமும் தமிழன்று என இப்போது சொல்லி விடலாம். ஆனால் அப்போது அது ஒரு நன்முயற்சி. அபேதவாதம் எதிர்மறையாக இருந்ததால் சோசலிசத்தை நேர்நிறையாகக் குறிப்பிட  ”சமதருமம்” என்ற சொல்லாட்சி புழக்கத்துக்கு வந்தது.

  சிங்காரவேலர், சீவா, பெரியார் தொடங்கி இன்றும் பலர் சோசலிசத்தை சமதருமம் என்று குறிப்பிடக் காண்கிறோம். மனுதருமம், வருணதருமம் என்பது போல் சமதருமம் இயல்பாக ஒட்ட மறுக்கிறது. சோசலிசத்தை வெறும் தருமமாகச் சுருக்குவதும் கோட்பாட்டில் பிழையானது.

அபேத வாதம், சம தருமம் இரண்டுமே தமிழல்ல என்பதால் தமிழ்ப்பற்றுமிக்க சோசலிசவாதிகள்  நிகரமை என்று குறிப்பிடத் தொடங்கினர். நிகர் என்றால் சமம், நிகர்மை என்றால் சமத்துவம், நிகரமை என்றால் சமதர்மம் / சோசலிசம் என்பது இவர்களின் பார்வை. அபேதவாதம், சமதர்மம் என்பவை தமிழல்ல, நிகரமை தமிழ்தான்.

ஆனால் அந்தத் தமிழல்லாத சொற்களைப் போலவே நிகரமையும் சோசலிசத்தின் உட்கருத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றியது. எனவேதான் சோசலிசம் என்றே தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன். இதனைத் தமிழுக்குக் கொண்டுவரும் தேடல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டேன். அந்த முயற்சியிலிருந்து விளைந்ததே குமுகியம் என்ற சொல்.

Socialism  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அடிச் சொல் society. Society என்றால் சமூகம். சமூகம் தமிழன்று என்பதால் பாவாணர் குமுகம் என்று சொல்லடித்துக் கொடுத்தார். சமூகம் குமுகம் ஆயிற்று, சமுதாயம் குமுகாயம் ஆயிற்று. குமுக அமைப்புகள் அவற்றின் பொருளாக்க உறவுகளின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. தொல் பொதுமை (புராதனப் பொதுவுடைமை), அடிமையுடைமை, நிலக் கிழாரியம் (பிரபுத்துவம்) முதலமை (முதலாளித்துவம்) இந்த ஒவ்வொரு குமுக வடிவமும் வெவ்வெறு பொருளியல் அடித்தளம் கொண்டவை. பொருளியல் அடித்தளத்தின் சாறம் (அல்லது சாரம்?) ஆக்கப் பொறிகளின் (உற்பத்திச் சாதனங்களின்) உடைமை…

 முன்சென்ற அமைப்புகளிலிருந்து சோசலிச அமைப்பை வேறுபடுத்தும் அடிப்படைத்தன்மை  ஆக்கப்பொறிகளின் உடைமைதான். சோசலிசத்தில் ஆக்கப் பொறிகள் அனைத்தும் சமூகவுடைமை அல்லது குமுகவுடைமை ஆகின்றன. இந்தக் கோணத்தில் சோசலிசத்தை சமூகவுடைமை அல்லது குமுகவுடைமை என்றழைப்பதில் பிழை இல்லை. ஆனால் பொருளியல் ஒரு குமுக அமைப்பின் அடிப்படையாக இருக்கும் போதே அரசியல், பண்பாடு போன்ற கூறுகளும் சேர்ந்ததுதான் குமுகம் ஆகும். பொதுவுடைமையை காட்டிலும் பொதுமை சிறப்பானது என்பது இதனால்தான். அதே போல் குமுகவுடைமை என்பதை விடக் குமுகமை சிறப்பானது என்ற முடிவுக்கு வந்தேன்; Socialist system என்பதைக் குமுக அமைப்பு என்போம்.

Socialism என்பது ஒரு குமுக அமைப்பின் பெயர் மட்டுமன்று. அது ஒரு கருத்தமைப்பின் பெயருமாகும். குமுக அமைப்பைக் குறிக்க குமுகமை எனலாம். கருத்தமைப்பைக் குறிக்க குமுகியம் எனலாம்.

வேறு மொழிகளில் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் பார்த்தேன். இந்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் சமாசுவாத்(து) என்கிறார்கள். அதாவது சமூகவாதம், இதற்கான தூய தமிழ், குமுகியம்தானே?

நவம்பர் புரட்சி குமுகமைப் புரட்சி! குமுகமைக் குமுகம் படைப்பதற்கான புரட்சி! அறிவியல் குமுகியத்தின் வெற்றியை நிலைநாட்டிய குமுகியப்  புரட்சி!

தொடர்ந்து பேசுவோம்!

தோழர் தியாகு
தாழி மடல்
 173

வியாழன், 20 ஜூலை, 2023

ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்: இணைய அரங்கம்: 23.07.2023

 


கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர்,திருக்குறள் 414)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்:  இணைய அரங்கம்:

நிகழ்ச்சி நாள்: ஆடி 07, 2054 /23.07.2023  ஞாயிறு

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழிசை அறிஞர் பேராசிரியர் முனைவர் சண்முக. செல்வகணபதி

எழுத்தாளர் கவிஞர் அகணி சுரேசு, கனடா

கலைமாமணி குறட் செம்மல் முனைவர் சேயோன்

இணைப்புரை : தமிழ்த்தேசியர் தோழர் மகிழன்

நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி

தோழர் தியாகு எழுதுகிறார் 152 : சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்!

 






(தோழர் தியாகு எழுதுகிறார்  151: சித்திரம் அல்லேன் தொடர்ச்சி)

சறுக்கல் ஏன்? மீளாய்வு செய்யுங்கள்!

இனிய அன்பர்களே!

பன்னாட்டுப் பெருமுதலின் விருப்பத்துக்கேற்ப வேலைநேரத்தை நீக்குப்போக்காக மாற்றியமைக்கும் முடிவு பரவலான கடும் எதிர்ப்பைச் சந்தித்த பின், அம்முடிவை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.தாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டுமெனக் கோருகின்றோம். இந்தச் சறுக்கல் ஏற்பட்டதற்கான காரணங்களை மீளாய்வு செய்யவும் அடியோடு களையவும் வேண்டும்.

திருத்தச் சட்டத்தை முன்மொழிந்த திமுக ஆட்சியும் சரி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டணிக் கட்சிகளும் சரி, ஒரே குரலில் பேசும் வசனம் “நாங்கள் வளர்ச்சியை விரும்புகிறோம்” என்பதாகும். மோதி சொல்கிறார் வளர்ச்சி! மு.க.தாலின் சொல்கிறார் வளர்ச்சி!  இடதுசரிக் கட்சிகள் சொல்கின்றன வளர்ச்சி! அரசுகளின் திட்டங்களை எதிர்ப்பவர்கள் கூட “நாங்கள் வளர்ச்சியை எதிர்க்கவே இல்லை” என்று தலையிலடித்து சத்தியம் செய்கின்றார்கள்.

வளர்ச்சி என்றால் என்ன? என்று உடைத்துப் பேசுங்கள். வளர்ச்சி என்று சொல்லித்தானே அதானிகள், அம்பானிகளை வளர்த்து விடுகிறார் மோதிஜி? மோதியின் இந்த வளர்ச்சிக் கொள்கையைத்தான் நீங்களும் கடைப்பிடிக்கின்றீர்கள் என்றால் மோதியையும் அதானியையும், அவர்களின் ஒட்டு முதலியத்தையும், அதன் தொடர்ச்சியான மோசடிகளையும் எதிர்ப்பதாகச் சொல்வதில் என்ன பொருள் இருக்க முடியும்?

சுருங்கச் சொல்லின் புதுத்தாராளிய வளர்ச்சியைத்தான் வளர்ச்சி என்று சொல்லிக் கடைப்பிடிக்கின்றீர்கள். வளர்ச்சியல்ல சிக்கல், புதுத்தாராளிய வளர்ச்சிதான் சிக்கல்! புதுத் தாராளியம் தொழிலாளர் நலனுக்கு எதிரானது! உழவர்களை ஓட்டாண்டியாக்குவது! சிறு குறு நடுத்திட்ட தொழில் முனைவோரை ஒடுக்கிப் பெருங்குழுமங்களை கொழுக்கச் செய்வது!

புதுத் தாராளியம் குமுகிய, குடியாட்சிய, இயற்கைநல, சூழல்நல, சமூகநல, சமூகநீதிக் கொள்கைகளுக்குப் புறம்பானது!

அண்மையில் சமூகநீதிக் கூட்டமைப்பின் மாநாட்டில் மு.க.தாலின் உரையாற்றிய போது தனியார் துறையில் இடஒதுக்கீட்டின் தேவை பற்றிப் பேசினார். ஆனால் தனியார் முதலீட்டைத் தமிழ்நாட்டுக்கு வருந்தியழைக்கும் போது, தனியார் துறையில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஒரு வேண்டுகோளாகக் கூட வலியுறுத்த வில்லையே, ஏன்? சமூக நீதி தெற்கு என்றால் புதுத் தாரளியம் வடக்கு என்பது அவருக்கே தெரிந்துள்ளது.

மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கம் எப்படி வீழ்ந்தது? முதலமைச்சராக இருந்த புத்ததேவ பட்டாச்சார்யா “உலகமயம் தவிர்க்கவியலாதது” என்று பறைசாற்றினார். சிங்கூர், நந்திகிராம் அவலங்கள் அதனால்தான் நேரிட்டன. புதுத்தாரளியம்தான் ஒரே வழி என்றால், அதற்கு உங்களைக் காட்டிலும் பாசகவே பொருத்தம் என்று வாக்காளர்கள் முடிவு செய்ய மாட்டார்களா?

திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் பாசிச பாசகவை எதிர்ப்பது உண்மையானால் அதன் புதுத் தாராளிய வளர்ச்சிக் கொள்கையை எதிர்க்க முன்வர வேண்டும்.

மு.க.தாலின் குறிப்பிட்ட திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதால் தன் சனநாயகப் பண்பை மெய்ப்பித்திருப்பதாக ‘திராவிட மாடல்’ ஆதரவாளர்கள் பெருமைப்படுகின்றார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட இந்தத் திருத்தச் சட்டத்தை சட்டப் பேரவையில் முன்மொழிவதற்கு முன் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் இந்த சனநாயகப் பண்பு மிளிர்ந்ததா? குத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல, மீண்டும் சறுக்காமலிருக்க எச்சரிக்கை காக்க வேண்டும் என்பதற்காகவே கேட்கிறோம்.

பாசிசத்துக்கு எதிரணியில் இருப்பதாகத் திமுக தலைமை அகநோக்கில் சொல்லிக் கொள்கிறதோ இல்லையோ, புறநோக்கில் அது அந்த அணியில் இருப்பதாகவே நம்புகிறோம். திமுக தலைமை கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்சியிலும் குடியாட்சியத்தை மதிக்கா விட்டால் அதன் பாசிச எதிரப்புத் தகைமை கேள்விக்குள்ளாகும். முடிவுகளின் உள்ளடக்கம் மட்டுமல்ல, முடிவெடுக்கும் வழிமுறையும் குடியாட்சியத் தன்மையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.     

தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 
    172

தோழர் தியாகு எழுதுகிறார் 151: சித்திரம் அல்லேன்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 150 : கீழடியும் தென்முடியனூரும் தொடர்ச்சி)

சித்திரம் அல்லேன்


இனிய அன்பர்களே!

எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் போல் எல்லாருக்கும் கிடைத்து விட மாட்டார்கள். பள்ளி செல்வதற்கு முன்பே அப்பாதான் ஆசிரியர். வீடுதான் முதல் பள்ளிக்கூடம். மிகவும் சிறு வயதிலேயே கற்கை தொடங்கி விட்டது.

திருவாரூரில் வீட்டருகே இருந்த ‘பாத்திமா கான்வெண்டில்’ சேர்த்த போது எடுத்தவுடனே இரண்டாம் வகுப்பு. பிறகு இரட்டை வகுப்பேற்றம் (double promotion) கொடுத்து நான்காம் வகுப்பில் போட்டார்கள். மடப்பள்ளியில்(கான்வெண்டில்) ஆசிரியர்கள் நிருவாகிகள் பெரும்பாலும் கிறித்துவ அருட்சகோதரிகள்தாம். அப்போது ஒருநாள் மாதாகோயில் நிகழ்ச்சிக்காக மெழுகுவத்தி வாங்கக் காசு கேட்டார்கள். காலணாவோ அரையணாவோ இருக்கலாம். நான் அம்மாவைக் கேட்டேன். அவர்கள் அப்பாவிடம் சொல்லி விட்டதோடு “இதே வேலையாப் போச்சு” என்று விசிறியும் விட்டார்கள்.

அப்பாவுக்கு வந்தது கடுஞ்சீற்றம்! என்னை இழுத்துக் கொண்டுபோய் அருட்பெண்ணிடம்(சிசுட்டரிடம்) நிறுத்தி மா.சா.(டி.சி.) கேட்டுக் கத்தினார்கள். மா.சா.வோடு நந்தவனம் தொடக்கப் பள்ளிக்கு அழைத்துப் போய் நான்காம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள். நான்காம் வகுப்பு ஆசிரியர் என் பேர்க்காரர்: தியாகராசன். திருவாரூரில் தியாகராசன், அடுத்தபடி தட்சிணாமூர்த்தி அதிகம்.

என் நான்காம் வகுப்பு ஆசிரியர் தியாகராசன்தாம் பிற்காலத்தில் ஆரூரான் என்றும் சின்னக்குத்தூசி என்றும் பெயர் பெற்றார். ஆசிரியர் வரிசையில் உயர்நிலைப் பள்ளியில் பிசி கணேசன், சிவசண்முகம் என்று பலரும் வந்தனர், என்னைச் செதுக்கினர் என்றாலும் நான் எப்போதுமே சின்னக் குத்தூசியைத்தான் என் முதல் ஆசிரியராகக் குறிப்பிட்டு வந்தேன். நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின் சிறைமீண்டு வந்து சென்னையில் தங்கிய போது எல்லாரிடமும் நான் சின்னக்குத்தூசியின் மாணவன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது குங்குமத்தில் பாவை சந்திரன் ஆசிரியராக இருந்தார், அப்பாவிடம் படித்தவர். என்னிடம் மூலதனம் தமிழாக்கம் பற்றி நண்பர் வந்தியத்தேவனை அனுப்பிப் பேட்டி எடுத்து வெளியிட்டார்.

அந்தப் பேட்டி பற்றிப் பேசிக்கொண்டிருந்த போதும் சின்னக்குத்தூசி என் ஆசிரியர் என்றேன். இதைச் சொன்ன போது சின்னக் குத்தூசி சொன்னாராம்: “அது அந்தக் காலம். இப்போது அவர்தான் எனக்கு ஆசிரியர் என்று சொல்லுங்கள்.”

பெரியார் திடலில் ஒருமுறை ஆசிரியர் வீரமணியுடன் பேசிக் கொண்டிருந்த போது சின்னக் குத்தூசியைப் பற்றிச் சொன்னேன். வீரமணி சொன்னார்: “நீங்கள் அவருடைய மாணவர். அவர் எங்கள் மாணவர்.” சின்னக்குத்தூசிதான் பெரியார் சுயமரியாதைப் பயிற்சி நிறுவனத்தின் முதல் மாணவர் என்று விளக்கினார்.

சின்னக்குத்தூசி அப்போது முரசொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சென்னையில் பத்திரிகையாளர்கள் அனைவரும் அவரைப் பெரிதும் மதித்தனர். விகடன் ஆசிரியர் குழுவினருடனும் அவருக்கு நல்ல உறவு என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால்தான் அவர் சொல்லித்தான் அவர்கள் என்னை அழைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இல்லை, உங்கள் கடிதம்தான் உங்களை எங்களுக்குக் காட்டியது என்று இராவு சொல்லி விட்டார்.

“நீங்கள் எங்கள் இதழில் எழுத வேண்டும், இது ஆசிரியர் (பாலசுப்ரமண்யம்) விருப்பம்” என்றார்.

விகடன் இதழ்களில் அறிவியல் கட்டுரைகள் வருகின்றன. ஆனால் அறிவியல் என்றால் இயற்கை அறிவியல் மட்டும் போதாது. சமூக அறிவியல் அதை விடவும் தேவை. நான் சமூக அறிவியல் எழுதலாம். விடுதலை இயக்கங்களின் வரலாற்றை எழுதினால் நன்றாக வரும்.

ஆனால் அவர்கள் வேறு குறி வைத்திருந்தார்கள். “முதலில் உங்கள் சிறைவாழ்க்கை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். பிறகு மற்றதை எழுதலாம்” என்றனர். சிறை வாழ்க்கை பற்றி எழுதுவதில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. சிறையில் நாங்கள் தொடங்கிய இயக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அது பற்றி வெளிப்படையாக எழுதும் நேரம் இன்னும் வரவில்லை என்பது என் பார்வையாக இருந்தது.

இதற்கு முன்பே தராசு சியாமும் நக்கீரன் கோபாலும் என்னைச் சிறை வாழ்க்கை பற்றி எழுதக் கேட்டதுண்டு. அவர்கள் முதலில் என் வழக்கைப் பற்றி எழுத வேண்டும் என்றனர். குறிப்பாக அழித்தொழிப்பு நடவடிக்கையிலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றனர்.

நான் அதை ஏற்கவில்லை. அழித்தொழிப்பு நாங்கள் செய்த புரட்சி என்று பெருமை கொள்ளும் நிலையில் நாங்கள் (தோழர் இலெனினும் நானும்) இல்லை. அது மோசமான அரசியல் பிழை என்ற முடிவுக்கு வந்திருந்தோம். அதனால் புரட்சிக்கு நன்மை இல்லை என்பதோடு சில கேடுகளும் நேரிட்டிருந்தன. அது பற்றிப் பகுத்தாய்ந்து எழுதுவதானாலும் அதற்குரிய நேரமும் இடமும் இதுவன்று.

என்னை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று உட்கார வைத்தனர். அவர் சொன்னார்: தியாகு, நீங்கள் தோழர்தானே? சூவியில் எழுதும் போதும் நீங்கள் தோழராகவே எழுதலாம், எங்களுக்காக நீங்கள் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம். எதை எழுதலாம் எதை எழுத வேண்டா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாங்கள் குறுக்கிட மாட்டோம். எங்களை நீங்கள் ஏற்கச்செய்ய வேண்டியதில்லை. உங்கள் வாசகரை நீங்கள் ஏற்கச் செய்தால்போதும்.

என்னைச் சிறைக்கு அனுப்பிய வழக்கு பற்றியோ என் சிறை வாழ்க்கை பற்றியோ இப்போதைக்கு எழுத மாட்டேன். சிறையில் நான் சந்தித்த மனிதர்களைப் பற்றி மட்டும் எழுதுவேன். சுவருக்குள் சித்திரங்கள் என்ற பெயரையும் நானே கொடுத்தேன். சித்திரங்கள் தீட்டுவேன், நானே சித்திரமாக மாட்டேன். எல்லாவற்றையும் பாலசுப்ரமண்யம் ஏற்றுக் கொண்டு ஓர் அறிமுக உரை எழுதிக் கொண்டுவரச் சொன்னார்.

அடுத்த ஓரிரு நாளில் எழுதி எடுத்துப் போனேன்.
“ஓ, சூவிக்கென்று எழுதி வந்தீர்களா? உங்கள் பத்திரிகையில் இப்படித்தான் எழுதுவீர்களா? உங்கள் எழுத்தில் வருக்கச் சீற்றம் இல்லையே? விகடனையும் என்னையும் மறந்து விட்டு எழுதி வாருங்கள்.”

நான் எழுதிய எதையும் அவர் நீக்கியதோ மாற்றியதோ இல்லை. மாற்றம் வேண்டுமென நினைத்தால் எனக்கே சொல்லியனுப்புவர். ஆனால் முடிவை என்னிடமே விட்டு விடுவார். நல்ல ஆலோசனைகள் சொல்வார்.

சுவருக்குள் சித்திரங்கள் முதற்சில பகுதிகள் எல்லாம் சித்திரங்களே! மாணிக்கம் செட்டியார்! சுப்பையா கவுண்டர்! வரதராச ஐயர்! எம்.ஆர். இராதா கூட வருவார். என்னைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம்! இந்தப் போக்கை மாற்றி என்னை உள்ளே இழுத்து விட்டவர் ஒரு நாள் இராவு அறையில் என்னைச் சந்தித்த எழுத்தாளர் திரு சா. கந்தசாமி! எப்படி? நாளை சொல்கிறேன்.
தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 121