சனி, 7 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 232 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 7 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை 8

என் பெயர் (உ)ரோசி கிப்புகென். குக்கி இனம். அகவை 70. என் மகள் மேரி மெய்த்தி இனத்தவரான சேக்கப்பு சிங்கு என்பவரை மணந்து கொண்டாள். மெய்த்திகளுக்கும் குக்கிகளுக்குமான இன மோதலின் மையப் புள்ளியாக விளங்கிய சூரசந்த்துபூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் குடிசை வீட்டில் தனியாக இருக்கிறேன்.

குடும்பத்தில் மற்றவர்கள் உயிருக்கஞ்சி வெளியேறிப் போய் முகாம்களில் இருக்கின்றனர். யார் எங்கே எப்படி இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள எனக்குள்ள ஒரே வழி நான் வைத்திருக்கும் குடும்ப நடைபேசி(‘வாக்கிடாக்கி’) ஒன்றுதான். தொலைப்பேசி சரிவர இயங்கவில்லை. மே 3ஆம் நாள் கலகத்துக்குப் பின் இணையம் தடை செய்யப்பட்டு விட்டது.

பல நாள் மௌனத்துக்குப் பின் மே 30ஆம் நாள்தான் நடைபேசி(‘வாக்கிடாக்கி’) ஒலியெழுப்பியது. மருமகன் நடுக்கத்துடன் பேசினார். கிழக்கு இம்பாலுக்கு வெளியே ஒரு சிற்றூரிலிருந்து ஓடிப்போய் கும்பியில் மெய்த்தி துயர்தணிப்பு முகாம் ஒன்றில் அவர்கள் தஞ்சமடைந்திருந்தனர். மேரி யார் என்ற ஐயம் மெய்த்திகளுக்கு வளர்ந்து வருவதாக அவர் சொன்னார்.

என் பேரன் “பாபா! பாபா!” என்று கதறுவதை என்னால் கேட்க முடிந்தது. மணிப்பூர் காவல்துறையின் அதிரடியினர்(காமாண்டோ) வந்திருப்பதாகச் சேக்கப்பு சொன்னார். “அவர்கள் உங்களைத்தான் தேடுகிறார்கள்” என்றார். பேசிக் கொண்டிருக்கும் போதே தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மீண்டும் தொடர்பு கிடைத்த போது மகள் மேரியின் அலறல் கேட்டது. “அப்படிச் செய்யாதீர்கள், என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சிக் கதறிக் கொண்டிருந்தாள்.

இரவு என்ன நடந்தது என்பதை மறுநாள் காலை குடும்பத்தினர் அனைவருக்கும் சேக்கப் அறியத் தந்தார். இரவு 9.30 அளவில் கமாண்டோ சேக்கப்பிடம் “உன் மனைவி எங்கே?” என்று கேட்டாராம். அரண்டு போய் இதோ என்று காட்டினாராம்.

அதிரடி(கமாண்டோ)ப் படையினர் அவள் மறுக்க மறுக்க அவளைப் பிடித்துப் போய் விட்டார்கள். அவளைத் தனிமையான ஓரிடத்துக்கு இழுத்துப் போனார்கள். இதன் பிறகு அவள் பிணம்தான் கிடைத்தது. சான்டேல் மாவட்டத்தில் சுக்குனுவுக்கும் (இ)லாங்கிங்குசின்னுக்கும் இடையே ஆடையில்லாத உடல் கிடந்தது. மணிப்பூரில் சவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தின் பிணவறையில் மேரியின் உடல் இருப்பதாகச் சேக்கப்பு சொன்னார்.

மேரி கொலை செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் பதிந்த முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. ஆனால் (காமாண்டோ) அதிரடிப் படையினர் அவளை வல்லுறவு செய்து கொன்றதாகச் சேக்கப்பு சொல்கிறார். ஆனால் இந்தச் செய்திக்குப் பின் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

என் மகள் செத்திருக்க முடியாது என்றுதான் நம்புகிறேன். ஒரு பெண்ணிடம் இந்த மனிதர்களால் எப்படி இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்ள முடியும்?

காதை 9

என் பெயர் நான்சி சோங்குலாய். என் மகள் (உ)ரோசி சோங்குலாய். மே 5ஆம் நாள் இம்பாலில் வண்டி(கார்) கழுவுமிடத்தில் ஆண்களும் பெண்களுமடங்கிய ஒரு வன்முறைக் கும்பலால் தாக்கபப்ட்ட குக்கி-சோமி இனப்பெண்கள் இருவரில் என் மகளும் ஒருத்தி.

(உ)ரோசியுடன் பணி செய்யும் தோழி ஒருத்திதான் எங்கள் குடும்பத்துக்குத் தகவல் கொடுத்தாள். இந்த இரு பெண்களையும் மெய்த்தி இனப் பெண்கள்தாம் பிடித்து மெய்த்தி ஆண்களிடம் ஒப்படைத்தார்கள் என்று அவள் தெரிவித்தாள். அன்று மாலையே அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டார்கள்.

இந்தப் பெண்களின் மிருகத்தனத்தை நினைத்தால்தான் எனக்குப் பேரதிர்ச்சியாகவும் பெருங்கவலையாகவும் உள்ளது. இந்தப் பெண்களால் இரண்டு இளம்பெண்களை வெறிகொண்ட ஆண்கள் கூட்டத்திடம் ஒப்படைக்க முடிந்தது எப்படி? குக்கி-சோமி, மெய்த்தி யாராய் இருந்தால் என்ன. பெண்களே பெண்களுக்கு இதை எப்படிச் செய்யலாம்?

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 264

வெள்ளி, 6 அக்டோபர், 2023

திருக்குறள் ஆய்வரங்கம் 1028 : சனாதன எதிர்ப்பு : கு. மோகனராசு

 


தமிழ்நாடு அரசின்

செய்தி மக்கள் தொடர்புத் துறையும்

உலகத் திருக்குறள் மையமும்

இணைந்து நடத்தும்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1028

திருக்குறள் உலக நூல் அன்று அது சனாதன தரும நூல் என்னும் பரப்புரையை மறுத்து, திருக்குறள் உலக நூல்- சனாதன எதிர்ப்பு நூல் என்பதை நிலைநாட்டும் புள்ளிவிவர அடிப்படையிலான நுட்பமான தொடர் ஆய்வுப் பொழிவுகள்

🕢 காலம் : தி. ஆ. 2054, புரட்டாசி 20

07-10-2023  சனிக்கிழமை  காலை 10-00 மணி

🌲 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

தலைமையுரை :

திருக்குறள் சிந்தனையாளர் இலக்குவனார் திருவள்ளுவர்,

சென்னை  (ஆசிரியர் – அகர முதல)

திருக்குறள் தொடர் பேருரை:   (  2 1/2  மணி நேரம் )

பொருள் :     திருக்குறள் உலக நூல்  – தொடர் 27

திருக்குறள் சனாதன எதிர்ப்பு நூல் – பகுதி : 2

சனாதனம் – மாற்றத்திற்கு உரியது

ஆய்வுரை வழங்குபவர்:

கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர் அருள்திரு திருக்குறள் புனிதர்

 பேராசிரியர் முனைவர்  கு. மோகனராசு

உண்மையை அறிந்து உலகிற்கு உணர்த்த வாருங்கள்!

தங்கள் வரவு உறவு நாடும்,

முனைவர் கு. மோகனராசு,

பொறுப்பாளர்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம்

கேள்வி நேரம் உண்டு

இடைவேளைத் தேநீரும் நண்பகல் உணவும் உண்டு

குறிப்பு :

சிறந்த வினா கேட்கும் ஒருவருக்கு  ரூபாய் நூறு மதிப்புடைய நூல் பரிசாக வழங்கப்படும்

சான்றாதாரங்களோடு மறுப்புரை வழங்கும் ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் மதிப்புடைய நூல்கள் பரிசாக வழங்கப்படும்.





தோழர் தியாகு எழுதுகிறார் 232 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 7

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 231 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 6 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை 7

என் பெயர் (இ)ரெய்னா ஃகாவுகிப்பு. குக்கி இனப் பெண். அகவை 18. நாட்டைக் குலுக்கிய அந்த மே 4 காணொளி 75 நாளுக்குப் பின் வெளிவந்து, உச்சநீதிமன்றத்தை அதிர்ச்சி தெரிவிக்கச் செய்து, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதியைப் பேச வைத்தது அல்லவா? அதன் பிறகு அதே போன்ற பல வன்கொடுமைச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. அந்த வன்கொடுமைகைளில் சிக்கிச் சிதைந்த பெண்களில் நானும் ஒருத்தி.

என் கதையைச் சொல்கிறேன், கேளுங்கள். இம்பாலில் புதுச் செக்கோன் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தேன். இந்தப் பகுதியில் குக்கி-சோமிக்கள், நாகர்கள், மெய்த்திகள், நேபாளிகள் என்று எல்லா இனத்தவரும் பல்லாண்டுகளாகச் சேர்ந்துதான் வாழ்ந்து வந்தோம். இந்தப் பகுதியில் என் இனத்துக்காகவே ஒரு நாள் என்னை மிருகத்தனமாகத் தாக்குவார்கள் என்று கற்பனையும் செய்ததில்லை நான்.

கலவரம் மூண்ட போது என் குடும்பத்தினர் இம்பாலை விட்டு வெளியேறி விட்டனர். என்னால் அவர்களுடன் சேர்ந்து வெளியேற முடியவில்லை. நான் இசுலாமியர் வசிக்கும் ‘பங்கல்’ வட்டாரத்தில் குக்கித் தோழி ஒருத்தியின் வீட்டில் ஒளிந்திருந்தேன். (முசுலிம்கள் அனைவரையும் பங்கல் என்று குறிப்பிடுவது மெய்த்திகளின் வரலாற்று வழக்கம்.) இந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து அரை மணிநேரத் தொலைவுதான். இரு வாரக் காலத்துக்கு மேல் அங்கு பதுங்கியிருந்தேன். பங்கல்களுக்கும் கலவரத்துக்கும் தொடர்பில்லை என்பதால் நான் பாதுகாப்பாக இருப்பதாய் உணர்ந்தேன்.

என் தோழியின் கணவர் முசுலிம். அவர் வெளியே போய் தேவைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வருவார். ஆனால் என்னைப் பொறுத்த வரை பாரதிய சனதா மாநில அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பினேன். நிலைமை சீரடையவில்லை என்றதும் நம்பிக்கை குறைந்து போயிற்று. என் தோழிகள் தங்கள் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படலானார்கள். இந்த நிலையில்தான் எப்படியாவது என் குடும்பத்திடம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்கலானேன்.

பயணச் செலவுக்காகப் பணம் எடுக்க என் தோழியுடன் புதுச் செக்கொனில் இருக்கும் ஏடிஎம்முக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெண்ணிற பொலேரோவிலும் நீலநிற சுவிப்ட்டிலும் கும்பலாக வந்த மெய்த்தி ஆண்கள் எங்களை வளைத்துக் கொண்டனர். எங்களை ஆதார் அட்டையைக் காட்டச் சொன்னார்கள். எனக்கு இடம்கொடுத்ததற்காக என் தோழியைத் தாக்கலானார்கள். பிறகு என்னைத் திட்டி அடிக்கத் தொடங்கினார்கள். என் தோழியை விட்டு விட்டு என்னைப் பிடித்து பொலேரோ வண்டிக்குள் தள்ளினார்கள்.

அங்கிருந்து கிட்டத்தட்ட 24 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வாங்கீ அயங்பேலி என்ற மெய்த்தி இனத்தவர் நிறைந்து வாழும் பகுதிக்கு வண்டி விரைந்தது. வண்டிக்குள்ளும் என்னை அடித்துத் துவைத்துக் கொண்டே வந்தார்கள். உன்னைக் கொன்று விடுவோம், குக்கிகளை ஒருவர் விடாமல் வேட்டையாடி அழிப்போம் என்றார்கள்.

வாங்கீ அயங்குபேலியில் ஆண்களும் பெண்களுமான மேலும் பலர் வந்து சேர்ந்தனர். அவர்கள் பனேக்கு என்னும் மெய்த்திகளின் மரபுச் சேலை உடுத்தியிருந்தார்கள். அந்தப் பெண்கள்தாம் ‘மீரா பைபி’க்கள் (பெண் சுடரேந்திகள்). இவர்களுக்கு அன்னையர் என்ற பெயரும் உண்டு. இந்த அமைப்பு குடிவெறிக்கும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கும் மனிதவுரிமை மீறல்களுக்கும் பெண்கள் மீதான தாக்குதலுக்கும் எதிராகப் போராடுவதற்கென 1970களில் நிறுவப் பெற்றது. அறப் போராட்டங்களுக்காக அது உலகப் புகழ் பெற்றது.

முதலில் அந்த ‘மீரா பைபி’ பெண்கள் என்னை அடிக்கத் தொடங்கினார்கள். “உங்களைப் போல நானும் ஒரு பெண்” என்று நான் மன்றாடிய போது அவர்கள் இன்னும் கடுமையாகத் தாக்கினார்கள். இந்தப் பெண்கள் இன்னும் சில ஆண்களையும் அழைத்துக் கொண்டார்கள். அந்த ஆண்கள் இலச்சினை பொறித்த கருப்பு நிற T–சட்டை அணிந்திருந்தார்கள். அவர்கள் மெய்த்தி இந்து அமைப்பான அரம்பை தெங்கோல் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். என்னைக் கொன்று விடும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

அந்த ஆண்கள் என் கண்ணைக் கட்டி கையைக் கட்டி இம்பாலின் வட பகுதியில் உள்ள (இ)லங்கோல் மலைக் குன்றுகளுக்கு இழுத்துச் சென்றார்கள். “நாங்கள் சொன்னபடி கேள்” என்று அதட்டினார்கள். என்னை வல்லுறவு கொள்ளப் போவதாக மிரட்டினார்கள். நான் அழுது புலம்பி என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். ஒருவன் துவக்குக் கட்டையால் ஓங்கியடித்தான். என் கண்களிலும் காதுகளிலும் குருதி வடிந்தது. நான் இணங்க மாட்டேன் என்று தெரிந்ததும் என்னைக் கண்ட படி தடவத் தொடங்கினார்கள்.

நான் உணர்விழந்தேன். விழித்துப் பார்த்த போது என் கீழாடை அவிழ்க்கப்பட்டிருந்தது. அது விடிகாலை நேரம். என்னை அவிழ்த்து விடுங்கள், கடன் கழிக்க வேண்டும் என்றேன். அது உன் கடைசி விருப்பம் என்றால் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிச் சிரித்தனர். கண்கட்டையும் கைகட்டையும் அவிழ்த்து விட்டனர். நான் சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்து மலையில் உருண்டேன். சேறும் சகதியும் குருதியுமாகச் சாலையில் விழுந்து கிடந்த என்னை ஒரு பங்கல் மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டுநர் காப்பாற்றினார். வெண்ணிற பொலேரோ வண்டி தொடர்ந்து வரக் கண்டு அருகிலிருந்த விட்ணுப்பூர் காவல் நிலையத்துக்கு எதிரில் கொண்டுபோய் நிறுத்தினார். காவல் நிலையத்துக்கு எதிரில் நான் நிற்கக் கண்ட வெறியர்கள் கிளம்பி விட்டனர்.

ஆனால் மெய்த்திக் காவலர்களை எப்படி நம்புவது? என்னைப் புதுச் செக்கோனில் கொண்டுபோய் இறக்கி விடும்படிக் கேட்டேன். சிவசேனைக்காரரும் முன்னாள் பாசக சட்டமன்ற உறுப்பினருமான டி.டி. ஃகாவுகிப்பு என்னை வரவேற்றுப் பேணினார்.

இம்பாலிலிருந்து சற்றொப்ப 136 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தொலைவில் கொகிமாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தார். நான் மீண்டு வந்து விட்டேன் என்றாலும் என் குடும்பத்தினரின் கவலை தீரவில்லை. நான் பயங்கரக் கனாக் கண்டு விழித்துக் கத்துவதாக என் தங்கை (உ)டோனா ஃகாவுகிப்பு (வயது 16) சொல்கிறாள்.

இப்போது எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? என்று கவலைப்படுவீர்கள் என்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன்.

மணிப்பூரில் இம்பாலுக்கு வடக்கே காங்குபோக்குபி மாவட்டத்தில் குக்கி – சோமி இன மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் துயர் தணிப்பு முகாமில் தங்கியுள்ளேன். முன்பு ஏதோ பயிற்சிக் கழகமாக இருந்த இடத்தை இப்போது எங்களுக்கான ஏதிலி முகாமாக மாற்றி அமைத்துள்ளனர். நெல் வயல்கள் சூழ்ந்த இந்த முகாமில் கிட்டத்தட்ட 30 குக்கி-சோமி இனக் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

என் உடலெங்கும் காயங்கள். அதற்காக மருத்துவம் செய்து கொள்கிறேன். நேரம் தவறாமல் மாத்திரைகள் உட்கொள்கிறேன். இந்தக் காயங்கள் ஒரு நாள் ஆறி விடும். ஆனால் எனக்கு மே 15ஆம் நாள் நேரிட்ட அந்தக் கொடுமை தந்த மன வலிக்கு மட்டும் மருந்தில்லை மக்களே! நடந்தவற்றை மறக்க நினைத்தாலும் மறக்க முடியவில்லை. விழிப்பிலும் உறக்கத்திலும் அந்த நினைவுகளும் கனவுகளும் வாட்டி வதைக்கின்றன.

என் கதையைச் சொல்ல இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன். நடந்ததை நடந்தபடி சொல்லும் தெளிவோடும் துணிவோடும் இருக்கிறேன். ஆனால் எத்தனையோ குக்கி இனப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்ல இப்போது உயிருடனில்லை. உயிருடன் இருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சிக் கிடக்கின்றார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 263


வியாழன், 5 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 231 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 6

      05 October 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை (6)

என் பெயர் சோசுவா ஃகான்சிங்கு. மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்தவன். என் மனைவி மீனா ஃகான்சிங்கு (அகவை 45) மெய்த்தி இனத்தைச் சேர்ந்த கிறித்தவப் பெண். எங்கள் ஏழு வயது மகன் தொன்சிங்கு ஃகான்சிங்கு. எங்கள் உறவினரான லிடியா (இ)லூரம்பம் (அகவை 37). அவரும் மெய்த்தி கிறித்தவர்.

நாங்கள் அனைவரும் இம்பாலில் இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். எங்களுக்கு ஆபத்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

சூன் 4ஆம் நாள். 20-அசாம் தோணணி துப்பாக்கிப் படைப் பிரிவின் தண்ணீர் வழங்கல் ‘தோலனி’ல் என் மனைவி மீனாவும் மகன் தொன்சிங்கும் அறைக்குள் இருந்தனர். நான் தரைத் தளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தேன். அப்போது என் மகன் சாளரத்தில் இருமுறை துள்ளி விழக் கண்டேன். அவன் சுடப்பட்டுக் குண்டு பாய்ந்து காயமடைந்தான். எப்படி யாரால் சுடப்பட்டான் என்று தெரியவில்லை. யாரோ மறைந்திருந்து சுட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

“ஃகே பா! ஃகே பா!” [அப்பா! அப்பா!] என்று என் மகன் அலறினான். மூன்றாவது முறை அவனிடமிருந்து ஓசை இல்லை. என் மனைவி மெய்த்தி மொழியில் கத்தினாள்: “தாதா, அங்காங்கு யதாரே” [தாதா, நம் மகன் போய் விட்டான்!”]

நாங்கள் எங்கள் குழந்தையை இராணுவ ஆய்வு அறைக்குத் தூக்கிப் போனோம். தலையில் குண்டு பாய்ந்து குருதி பெருகிக் கொண்டிருந்தது. அவர்களால் இவனைக் காப்பாற்ற முடியாது என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது.

அவர்கள் அவனை ஊருக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போது என் மனைவி மெய்த்தி என்பதால் எதுவும் நேராது என்று நினைத்தேன். நாங்கள் இருப்பது இராணுவ முகாம் என்பதால் அவசர ஊர்தியில் இம்பால் செல்வதில் ஆபத்தில்லை என்று என் மனைவி கருதினார். அவசர ஊர்திக்கு வழிக்காவலாக மூன்று கொமாண்டோ சிப்சி வண்டிகள் அழைக்கப்பட்டன. ஆனால் இராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லவில்லை.

மனைவியுடன் சென்ற தோழி (இ)லிடியாவும் மெய்த்திதான். (இ)லிடியாவின் கணவரும் மெய்த்திக்னு கிறித்தவர். அவர்களுக்கு ஏதும் தீங்கு நேராது என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேறாகி விட்டது.

என் மகனும் மனைவியும் எங்கள் உறவினரான (இ)லிடியாவும் மணிப்பூர் இம்பாலில் உயிருடன் எரிக்கப்பட்டனர். மெய்த்தி வன்முறை வெறிக்கும்பல் அவர்களைப் பிடித்து எரித்து விட்டது. ஆனால் எப்போது அவர்கள் செத்தார்கள் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை. சூன் 4ஆம்நாள் இரவு 7 மணியளவில் அவர்கள் இறந்து விட்டாலும், 5ஆம் நாள் எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை. 6ஆம் நாள்தான் எனக்கு செய்தி தெரிந்தது. என் மனைவியின் குடும்பம் மெய்த்தி இனம் என்பதால் உள்ளூர் செய்தி பார்த்து என் மாமனார்தான் எனக்குத் தகவல் தந்தார். கதறியழுவது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.

என் மனைவியும் மகனும் இறந்த செய்தியை மற்ற இரு பிள்ளைகளுக்கும் சொல்லாமலிருந்தேன். எப்படியோ செய்தி கிடைத்து அவர்கள் துடித்தழுது மயங்கி விழுந்து விட்டார்கள்.

என்னால் இந்தத் துயரத்திலிருந்து மீள முடியவில்லை. என் மகன் குக்கிக்கும் மெய்த்திக்கும் மகனாகப் பிறந்தது அவன் குற்றமா? அவன் மெய்த்திகளுக்கு மருமான் இல்லையா? மனிதர்கள் இந்த அளவுக்கு மனிதத் தன்மையற்று நடந்து கொள்வதை இப்போதுதான் பார்க்கிறேன்.

நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நான்கைந்து மெய்த்தி இல்லங்கள் உள்ளன. அவர்களுக்கு நாங்கள் எந்தக் கேடும் செய்ததில்லை. ஆனால் அவர்கள் இபப்டிச் செய்து விட்டார்கள். மெய்த்திகளின் மனப்போக்கு இப்போதுதான் எனக்கு விளங்குகிறது.

நான் என் மெய்த்தி உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வெறுப்புச் சிந்தையிலிருந்து விடுபடுங்கள். நாங்களும் உங்கள் மீது வன்மம் வளர்க்க மாட்டோம். இது மிக மோசமான குற்றம், இதற்கு மேல் ஒரு குற்றத்தை எண்ணிப் பார்க்க முடியாது. நான் உங்களைப் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்: இவ்வகையான மனப்போக்கை விட்டொழியுங்கள்.

இறுதியாக, “ஃகே பா! ஃகே பா!” என் மகனின் கடைசிக் குரல் என்னை வாட்டுகிறது. மூன்றாவது முறை அவன் என்னை அழைக்க மாட்டானா? “ஃகே பா!”

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 262

புதன், 4 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை (5)


என் பெயர் தியன்ன வைப்பே சௌண்டாக்கு. மணிப்பூர் மாநிலம் பெய்டாச்சிங்கு சிற்றூரில் கிறித்துவ சமயக் குரு. மே 7ஆம் நாள் பெரிய வெறிக்கும்பல் ஒன்று எங்கள் ஊரைத் தாக்கியது.

மறுநாள் இரு குழந்தைகளின் தாயான 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்து கருகிய நிலையில் கிடக்கக் கண்டேன். உடலில் ஆடையில்லை. இம்பாலில் உள்ள ஓர் அரசு மருத்துவமனைக்கு அந்த உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அது இப்போது எங்குள்ளது என்று தெரியவில்லை.

மே 6ஆம் நாள் கருஞ்சட்டை அணிந்து ஆயதமேந்திய ஆட்கள் ஊருக்குள் வந்தார்கள். மணிப்பூர் காவல் துறையின் ‘அதிரடிப்படை’களும் வன்முறைக் கும்பலுடன் சேர்ந்து வந்திருந்தார்கள்.

பின்கதை: காங்குபோக்குபியில் பதியப்பெற்ற இன்னொரு சுழிய முதல் தகவல் அறிக்கையில் [ZERO FIR] கண்டுள்ளபடி, மே 4ஆம் நாள் இம்பால் கிழக்கில் இரு பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்து விட்டனர். அந்தப் பெண்களில் ஒருத்தியின் தாய் முறைப்பாடு செய்து முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளார். கோனுங்கு மாமாங்கு அருகிலுள்ள தங்களின் வாடகை வீட்டில் வைத்து நூறு இருநூறு பேர் கொண்ட வெறிக்கும்பல் தங்களைத் துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார். கொலையுண்ட பெண்களின் உடல்கள் இது வரை கிடைக்கவில்லை. காவல்துறை “அடையாளந்தெரியாத குற்றவாளிகள்” மீது வழக்குப் பதிந்துள்ளதாம்!

தாழி: சுழிய முதல் தகவல் அறிக்கை [ZERO FIR] என்றால் என்ன? குற்றத்தால் பாதிப்புற்றவர் குற்றம் நடைபெற்ற சரகத்திற்குரிய காவல் நிலையத்தில்தான் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றில்லாமல், எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் முறைப்பாடு செய்யலாம், அதாவது முதல் தகவல் அறிக்கை பதியலாம் என்பதற்கான வழிவகைதான் சுழிய முதல் தகவல் அறிக்கை. மணிப்பூரில் நடந்த குற்றங்களுக்கு முறைப்பாடு செய்ய இது பெரிதும் பயன்பட்டு வருகிறது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 261

செவ்வாய், 3 அக்டோபர், 2023

ஆளுமையர் உரை 67,68 & 69 : இணைய அரங்கம்: 08.10.2023

 


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை

 (திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழே விழி!                                  தமிழா விழி!                                            

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 67, 68 & 69  : இணைய அரங்கம்

புரட்டாசி 21, 2054 ஞாயிறு  08.10.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

“தமிழும் நானும்” – உரையாளர்கள்

மாண்பமை  முனைவர் வி.திருவள்ளுவன், துணைவேந்தர்,         

            தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

நீருயிரி வளர்ப்பு அறிவுரைஞர் நா.அ.பசீர் அகமது,

           தலைவர், தமிழ் ஐக்கியச் சங்கம், கொச்சின்.

இன்னிசை இளந்தென்றல் பொறி.சங்கர் நாராயணன்,  

           நியூசிலாந்து

தொகுப்புரைஞர்:   குமுகாயப் போராளி தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி, தமிழ்ப்பல்கலைக்கழகம்




தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – 3

காதை 3

நான் குக்கி இனப் பெண். பெயர் வேண்டா. அகவை 29. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். இனி அங்கு திரும்பிச் சென்று படிப்பைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என்ன நடந்தது? சொல்கிறேன்.

மே 3 இரவு, விடிந்தால் 4 – இம்பாலில் மணிப்பூர் பல்கலை வளாக விடுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நுழைந்தது. அவர்கள் தடிகளும் கத்திகளும் வைத்திருந்தார்கள். குக்கி-சோமி பழங்குடிச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களையும் பணியாளர்களையும் ஆசிரியர்களையும் அவர்கள் தேடினார்கள். நாங்கள் நால்வர், அனைவரும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவியர், மிரண்டு போய் ஒரு கழிப்பறைக்குள் பதுங்கிக் கொண்டோம்.

கொலைக் கருவிகளோடு வந்த கும்பல் எழுப்பிய கூச்சல்: “சிதா குக்கி நூப்பி லிப்ரா?” [யாராவது குக்கி பெண் இருக்கிறாளா?] “குக்கி நூப்பி ஃகட்லோ” [குக்கிப் பெண்களைக் கொல்வோம்!]

அவர்கள் மாணவியர் அனைவரையும் கட்டாயப்படுத்தி அறைக்கு வெளியே வரச் செய்து, வாய்க்கு வந்த படி திட்டவும் தொல்லைப்படுத்தவும் செய்தனர்.

நாங்கள் நால்வர் மட்டும் வெளியே வராமல் கழிப்பறைக்குள்ளேயே ஒளிந்திருந்தோம். விரைவில் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள், கதவைத் தட்டி உடைத்தே விட்டார்கள். நாங்கள் வெளியே வந்தோம். எங்களில் மூவர் வேறு பழங்குடியைச் சேர்ந்தவர்கள். அவர்களை அறைக்குப் போய் அடையாள அட்டை கொண்டுவரச் சொன்னர்கள். இந்த அலமலப்பில் நான் நழுவிச் சென்று தாழ்வாரத்தில் பதுங்கிக் கொண்டேன். சிக்கிக்கொண்ட மற்றவர்களை அந்தக் கும்பல் மோசமாகத் திட்டி இழிவு செய்தது.
விடிகாலை 3.30 அளவில் அசாம் தோளணித் துப்பாக்கிப் படையினர் வந்து அப்பெண்களை மீட்டு இம்பாலில் மிக அண்மையில் இருந்த மணிப்பூர் காவல்துறை வளாகத்துக்கு அழைத்துப் போயினர்.

நான் அறவே நம்பிக்கை இழந்து விட்டேன். இனி ஆராய்ச்சிப் படிப்பை மீண்டும் தொடர முடியாது. அன்றாடத் தேவைகளுக்காகத் தில்லியில் ஓர் அழைப்பு மையத்தில் வேலை செய்கிறேன்.
பல்கலைக் கழகத்துக்குத் திரும்பிச் செல்ல முடியவே முடியாது. இனவெறி தலைவிரித்தாடுகிறது. திரும்பிச் செல்வது முட்டாள்தனம். வீட்டை இழந்து விட்டோம். திடீரென்று தெருவில் நிற்கிறோம். அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும் போது முனைவர் பட்டம் அற்பமாகி விடுகிறது. என் பாடம் விலங்கியல். என் ஆய்வு மாதிரிகள் எல்லாம் வளாகத்தில் உள்ளன. எல்லாம் போயிற்று.


காதை 4

மே 3 – 4 இரவு வேளையில் இம்பாலில் மணிப்பூர் பல்கலை வளாக விடுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நுழைந்து குக்கி குமுகாயப் பெண்களை அறை அறையாகத் தேடிய போது உள்ளே இருந்த மாணவிகளில் நானும் ஒருத்தி.

அந்தக் கொலைவெறிக் கூச்சல் எங்களை நடுநடுங்கச் செய்தது. மோசமான வசவுக்கும் கடுமையான மிரட்டலுக்கும் நாங்கள் ஆளானோம்.

நான் இப்போதும் மணிப்பூரில்தான் இருக்கிறேன். இடத்தை வெளியிட முடியாது. அறைக்கு வெளியே வருவதற்கே அஞ்சிக் கிடக்கிறேன். நடந்தவற்றின் கொடுநினைவுகள் என்னை வாட்டுகின்றன. நொறுங்கிப்போன வாழ்க்கையை திரட்டியள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.

என் முனைவர் பட்ட ஆய்வுரையைச் சீர்மை செய்யும் இறுதிக் கட்டத்தில் உள்ளேன். என் எதிர்காலம் எப்படி இருக்குமோ, தெரியவில்லை.

பின்கதை: மணிப்பூர் பல்கலை வளாகத் தாக்குதல் போல் ஆறு நிகழ்ச்சிகள் தேசிய மகளிர் ஆணையத்தின் பார்வைக்குச் சென்றுள்ளன. இரண்டு செயற்பாட்டாளர்களும், வட அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள ஒரு குடியியல் சமூக அமைப்பும் இந்நிகழ்ச்சிகள்பால் மகளிர் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவற்றில் ஒன்று மே 4ஆம் நாள் காங்குபோக்குபி மாவட்டத்தில் பி. பைனோம் சிற்றூரில் பெண்கள் மீது நடந்த தாக்குதலும் கூட்டு வல்லுறவும் ஆகும். இந்த நிகழ்ச்சியின் காணொளிதான் எங்கும் பரவி அதிர்ச்சியளித்தது.

முறையீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள மற்ற சில நிகழ்ச்சிகள்: மே 4ஆம் நாள் இம்பாலில் நைட்டிங்கேல் செவிலியர் கழகத்தில் இரு இளம்பெண்கள் இழிவுபடுத்தப்பட்டனர். மே 5ஆம் நாள் காங்குபோக்குபி மாவட்டம் பெய்ட்டைசிங்கு சிற்றூரில் 45 வயதுப் பெண் கொலை செய்யப்பட்டார். மே 15ஆம் நாள் வாங்கீயில் 18 வயதுப் பெண் பாலியல் தாக்கிற்கு ஆளாக்கப்பட்டாள்.

வாங்கீயைச் சேர்ந்த 18 வயதுப் பெண் தான் தாக்குண்ட போது பட்ட துன்பத்தை நினைவுகூரும் காணொளி வெளிவந்துள்ளது. ஆனால் துயரப்பட்டவர்களில் பெரும்பாலார் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டிருப்பதால் பேச விரும்பவில்லை. பல குடும்பங்களும் பழிவாங்கப்படுவோம் என்றஞ்சி முதல் தகவல் அறிக்கை பதியவே முன்வரவில்லை.

தேசிய மகளிர் ஆணையம் தனக்கு வந்த முறையீடுகள் அனைத்தையும் மணிப்பூர் அரசுத் தலைமைச் செயலருக்கும் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கும் முன்னனுப்பியிருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் விடை ஏதும் வரவில்லை.
++
மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்று
நரேந்திர மோதி – அமித்துசா கும்பல்

உடனடியாகப் பதவி விலகக் கோருவோம்!
குக்கி இனவழிப்புக்கு நீதி கோருவோம்!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 260