திருப்பூர்பெரியசாமிஅவர்களுக்குஉதவுங்கள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்
அன்பார்ந்ததமிழ்ப்பெருமக்களே !
மொழிப்போர் ஈகியர், திருப்பூர்ப. பெரியசாமி அவர்களைத் தமிழ் உணர்வாளர்கள் நன்கு அறிவர்.
1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூரில் கலந்து கொண்டு போராடியவர் திரு. பெரியசாமி அவர்கள். அப்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளைச் செயலாளராக இருந்தார். இப்போது அவருக்கு அகவை 83.
இந்தித் திணிப்பை எதிர்த்து அவர் ஏற்றிய கருப்புக் கொடியை இறக்கச் சொல்லி காவல் துறை பெரியசாமிக்குக் கட்டளையிட்டது. கருப்புக் கொடியை இறக்க மறுத்துவிட்டார் பெரியசாமி.
1965 – இந்தி எதிர்ப்புப் போர் என்பது, தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய உரிமைப் போராட்ட நிகழ்வாகும். திருப்பூரில் ஏராளமானவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல், குமாரபாளையம் – பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும்இந்தியை எதிர்த்த தமிழர்களை சுட்டுக் கொன்று அவர்தம் பிணங்களைச் சரக்குந்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் எரித்தனர். தமிழ்நாடு முழுவதும் முந்நூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்டவர்களின் உண்மையானஎண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும் 1965 மொழிப்போர் வரலாற்றை எழுதிய பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் தமது “இந்திஎதிர்ப்புப்போராட்டவரலாறு” – நூலில் குறிப்பிடுகிறார்கள் (பாகம் 1, 2).
வரலாற்றுச் சிறப்புமிக்க அப்போராட்டத்தில் பங்கு கொண்ட பெரியசாமி அவர்கள் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப்போட்டார்கள். பெரியசாமி தலைமறைவாகிவிட்டார்.
மூன்று மாதம் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவரே நேரில் வந்து தன்னைஒப்படைத்துக் கொண்டார்.
நீதிமன்றம் இளைஞர் பெரியசாமிக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்தது. ஏழு மாதச் சிறை வாசத்திற்குப் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் பெரியசாமி விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர், தி.மு.க.வில் முதன்மையாளராகச் செயல்பட்டார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். வேலம்பாளையம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிற்காலத்தில், மொழிப்போர் ஈகி பெரியசாமி அவர்கள், மொழிப்போரில் உயிரீகம் செய்தோர் குடும்பத்தினர் – சிறை சென்றவர்கள். அவர்களின் குடும்பத்தினர் என எல்லாரையும் ‘மொழிப்போர் தியாகிகள் சங்கம்‘ நிறுவி ஒன்று திரட்டினார். அதன் தலைவராக ஈகி பெரியசாமி செயல்பட்டு வருகிறார். மொழிப்போர் ஈகியருக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து உதவித் தொகை பெற்றுத் தருவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டார்.
மொழிப்போரில் மிகப்பெரிய ஈகம் செய்த திருப்பூர் நகரில், அந்த ஈகியருக்கு நினைவுச் சின்னம் எதுவும் எழுப்பப்படவில்லை. ஈகி பெரியசாமி அவர்களின் முயற்சியால்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் மொழிப்போர் ஈகியர் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
இலஞ்சம் ஒழிப்புச் சங்கம் நிறுவி, கையூட்டு ஊழலுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்தினார். அதற்கான இயக்கங்கள் நடத்தினார். கையூட்டு கொடுக்கக்கூடாது என்ற ஒழுக்கத்தை மக்களிடம் பரப்பினார்.
பின்னர், தமிழ்நாட்டில் தமிழைக் கல்வி மொழியாக – ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற இலட்சியத்திற்கு முதன்மை கொடுத்துச் செயல்பட்டு வந்தார். தமிழ் மொழி – இன உணர்வாளர்களின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்நாடெங்கும் பல்வேறு போராட்டங்களிலும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு வந்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2005 மே 21 அன்று, ஈரோட்டில் நடத்திய “வெளியாரை வெளியேற்றுவோம்” மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடெங்கும் உள்ள மொழி இன உணர்வாளர்களுடனும், பல்வேறு கட்சி – இயக்கத் தலைவர்களோடும், உறுப்பினர்களோடும் நல்ல உயிரோட்டமான உறவு வைத்துக் கொண்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் புயல்போல் செயல்பட்டார். அக்காலத்தில், கட்சி எல்லை கடந்து இன உணர்வோடு ஈழ விடுதலைக்கான போராட்டங்கள், மாநாடுகள், கூட்டங்களில் பங்கேற்றார்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு மேல் கடுமையாக நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுப் பல்வேறு மருத்துவம் பார்த்தும் குணமாகாமல் வீட்டிலேயே முடங்கிப் போயுள்ளார். குடல் நோய் தீராமல் மிகவும் துன்பப்பட்டு வருகிறார். சொந்தத் தொழில், வீடு, கார் என வாழ்ந்த ஐயா பெரியசாமி அவர்கள், நோய் பாதிப்பால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். மிகக் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் உழல்கிறார். மருத்துவத்திற்கும் பணமில்லாமல் துன்புறுகிறார்.
ஈகி பெரியசாமி அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கிறது! தமிழ் உணர்வாளர்கள் ஈகி ப. பெரியசாமி அவர்களுடைய வங்கிக் கணக்கில் நிதியளித்து, பேருதவி செய்ய வேண்டுமெனத் தமிழ்ப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஐயாவின் சேமிப்புக் கணக்கில் உரூபாய் ஐயாயிரம் செலுத்தியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
[தோப்பில் முகமது மீரான் புரட்டாசி 11, 1975 / செப்டெம்பர் 26, 1944 – சித்திரை 27, 2050 / மே 10, 2019]
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார்.
முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் ஊரில் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் சலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளிட்டுள்ளார். 1997இல் சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்குத் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பெற்றது.
கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறிக் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில நாள்களாக எழுத்துப்பணிக்கு ஓய்வு அளித்திருந்தார். எழுத்துப் பணிக்கு முழு ஓய்வளிக்கும் வகையில் உடலநலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவரது உடல் நல்லடக்கம் இன்று மாலை நெல்லை பேட்டையில் நடக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! ஆளுக்கொரு மரம் நாட்டுவோம்! – தலைமையர் வி.உருத்திரகுமாரன்
பெரும் இனவழிப்பொன்றின் ஊடாகத் தமிழர் தேசத்தை வன் கவர்வு செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுப்பெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசியத் துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளைத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்களின் விடுதலைர உணர்வை நீர்த்துப் போகச் செய்யச் சிங்களப்பேரினவாதம் பகீரத முயற்சி எடுத்த போதும் அவை வெற்றியடையவில்லை. தமிழ் மக்கள் தமது விடுதலை உணர்வை முழுமையாக வெளிப்படுத்தப் போதிய அரசியல் வெளி தமிழர் தாயகத்தில் இல்லாத போதும் தமக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துவகை வாய்ப்புகளையும்; பயன்படுத்தித் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது உரிமைக்குரலை வெளிப்படுத்திக் கொண்டவாறுதான் உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தைத் தமிழ் மக்கள் ஏற்கெனவே இருக்கும் அனைத்துலக அரங்குகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வரங்குகள் பலவற்றில் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் நாடுகளின் வசமே இருப்பதால், அரசற்ற தமிழ்மக்கள் அங்கு நீதியினைப் பெறுவது இலகுவானதொரு நிகழ்வாக இருக்கப்போவதில்லை என்பது புரிகின்றது. எனவே நீதிக்கான எமது போராட்டத்திற்காக புதிய போர்க்களங்களை உருவாக்குவது இன்றியமையாததாகும்.
மாறிவரும் உலகச் சட்ட நடைமுறை அதற்கான வாய்ப்புகளைத் தருகின்றது. இப்போது பன்னாட்டுச் சட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டுவரும் ‘உண்மைகளை அறியும்’ உரிமையின் அடிப்படையிலும் (right to the truth), ‘தெரிந்து கொள்வதற்கான உரிமையின்’ அடிப்படையிலும் (right to know) பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை நிலைநாட்டும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் (Victim Driven International Justice (VDIJ ) என்னும் நீதிக்கான முன்முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இம் முன்முயற்சி நாம் புதிதாகத் திறக்கவுள்ள நீதிக்கான போர்க்களங்களில் சிறப்பியல்பாகும்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தந்த ஆழ்ந்த சோகம் நெஞ்சக்கூடெங்கும் நிரம்பியிருக்க, தமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டினை உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்கள் நினைவேந்தும் நாட்களை இலங்கை அரசு அனுமதிக்காதுதடுக்கக்கூடிய நிலைகளும் தற்போது உருவாகியிருக்கின்றன. இலங்கைத்தீவில் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்விளைவாகப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படலாம். எத்தகைய தடைகள் வந்தாலும் ஈழத்தமிழ் தாயகத்திலும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் மக்களால் நினைவுகூரப்பட்டே ஆகும்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பையும் தமிழர் துயரத்தின் வெளிப்பாடாகப் பறையறிவிக்கப்பட்ட தமிழீழத் தேசியத் துக்க நாளையும் அடையாளப்படுத்தும் வகையில் இரண்டு செயல்களை உலகில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நாம் தோழமையுடன் வேண்டுகிறோம்.
மே 18 – தமிழீழத் தேசிய துக்க நாளன்று, ஈழத்தமிழர் தாயகம், தமிழகம், மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பையும் தமிழர் துயரத்தினையும் வெளிப்படுத்த வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையிலும், உலகச் சுற்றுச் சூழலை மேம்படுத்த உதவும் வகையிலும் நாம் ஆளுக்கொரு மரத்தை இக் காலப்பகுதியில் நாட்ட வேண்டும். இதனைத் தமிழ் மக்கள் தாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்திலும் மேற்கொள்ள வேண்டும். நாம் நாட்டும் ஒவ்வொரு மரக்கன்றின் ஊடாகவும் நாம் தமிழின அழிப்பில் மாண்டுபோன உறவுகளை நினைவு கூர வேண்டும்
இவ்வாறு தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கை அரசின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமை அவையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன்கோரியுள்ளார்.
இது தொடர்பில் ஐ.நா மனித உரிமை அவை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார்(Michelle Bachelet) அவர்களுக்கு எழுதியுள்ள மடலில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் பல தடவைகள் ஐ.நாவுக்கும் அனைத்துலகக் குமுகாயத்திற்கும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு மாறாகக் கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை ஏவிவிடுவதற்கான நிலைமை அங்கு காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவின் தற்போதைய நிலைமைகளில் இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரக்கால நிலையென்பது, தமிழர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலைமை அங்குக் காணப்படுகின்றது.
இந்நிலையில் ஐ.நா ஆணையாளர் அவர்கள் இது தொடர்பில் தீவிரகங கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மடலில் கோரியுள்ளார்.