சனி, 21 ஜனவரி, 2023

தமிழ்நாடு காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? – சுப.உதயகுமாரன்

 அகரமுதல




காவல்துறை அரசா? சுப.உதயகுமாரன் எச்சரிக்கை மணி

தோழர் தியாகு எழுதியமைக்கான கருத்தூட்டக் கட்டுரை

தமிழகக் காவல்துறைக்குள் ஒரு காவித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறதோ எனும் ஐயம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குமரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரைக் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எந்தவிதமான முகாந்திரமும் இன்றி, “உங்களுக்கு அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும், அப்படித்தானே?” என்று என்னிடம் கேட்டார். இந்த தவறான, தேவையற்ற, முறையற்ற கேள்வி என்னோடிருந்த தோழர்களையும், என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்போது  “கலவரம் நடந்தே தீரும்” என்று பொதுவெளியில் கூச்சமின்றிப் பொறுப்பின்றிப் பேசுகிறவர்கள் அரசியல் செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தில், அப்படி ஒரு கலவரம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்கிற நோக்கத்தோடு, “மத நல்லிணக்கச் சந்திப்பு” எனும் ஒரு நிகழ்வை நாங்கள், குமரி மக்கள் நல்லிணக்கக் குழுவினர், ஒருங்கிணைத்தோம்.

நவம்பர் 18, 2022, வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு புனித சவேரியார் கோவிலிலுக்கும், நண்பகல் 12 மணிக்கு அருள்மிகு நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலுக்கும், பிற்பகல் 1 மணிக்கு மாலிக்குத் தினார் பள்ளிவாசலுக்கும் சென்று, அங்கு குழுமியிருக்கும் மக்களுடன் கலந்துறவாடி, இந்த “மத நல்லிணக்க சந்திப்பை” நடத்தத் திட்டமிட்டோம்.

குறிப்பிட்ட மூன்று ஆலயங்களின் நிருவாகிகளைச் சந்தித்து அனுமதி வாங்கினோம்; அவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு ஒத்துழைக்க முன்வந்தனர். நாகர்கோவில் மாநகரத்தலைவர், திமுகவின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. இரெ. மகேசு ஆகியோர் எங்களோடு மூன்று வழிபாட்டுத்தலங்களுக்கும் வருவதற்கு இசைவு தெரிவித்தார். பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள். மும்மதங்களையும் சார்ந்த பொதுமக்கள் கலந்துகொள்வதற்கு மகிழ்ச்சியுடன் முன்வந்தனர்.

ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில் நவம்பர் 16, 2022 அன்று நாகர்கோவில் நகரக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் என்னை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து, இந்த நிகழ்வை நடத்த இது உகந்த நேரமல்ல; எனவே மேற்படி நிகழ்வை அனுமதிக்க இயலாது என்று சொன்னார்.

நாங்கள் பொதுவெளியில் எதுவுமே செய்யத் திட்டமிடாத நிலையில், காவல்துறையின் அனுமதியை கோரவேண்டியத் தேவையே எழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, மத நல்லிணக்கம் பற்றிப் பேச எல்லாமே உகந்த நேரம்தான்சனநாயக நாட்டில் மக்களுக்கு இந்த உரிமைகூட கிடையாதா என்றெல்லாம் வாதிட்டேன்.

அது அவரது தனிப்பட்ட முடிவல்ல என்பதை அவரது கண்ணியமான அணுகுமுறை தெளிவாகத் தெரிவித்தது. உடனே குமரி மக்கள் நல்லிணக்கக் குழுவினர் மாநகரத்தலைவரைச் சந்தித்து முறையிட்டோம். அவரும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் பேசி நிகழ்வை அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 17, 2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்து, ஆட்சித்தலைவர் அலுவலகம் சென்றோம். அவர் இல்லாததால், கோட்டாட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற அதிகாரிகளை சந்தித்துப் பேசினோம்.

காவல்துறைக் கண்காணிப்பாளர் மாலை ஐந்து மணியளவில் தன்னுடைய அலுவலகத்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, அங்கே சென்றோம். ஆனால் பணி நிமித்தமாக மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கு சென்றிருந்த அவரால் குறிப்பிட்ட நேரத்தில் வர இயலவில்லை. அவரிடம் நேரில் பேசிவிட்டு நிகழ்வை நடத்துவதா அல்லது நீக்குவதா என்கிற இறுதி முடிவை எடுக்கலாம் என்றிருந்தோம்.

ஆனால் இரவு 7:45 மணிக்குக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் கைப்பேசியில் என்னை அழைத்து, “இந்த நிகழ்வை இப்போது நடத்த வேண்டா, மூன்று வாரங்கள் கழித்துப் பார்க்கலாம்” என்று சொன்னார். ஆனால் இரவு 9:36 மணிக்கு மாநகரத்தலைவர் அவர்களின் உதவியாளர் என்னைக் கைப்பேசியில் அழைத்து, மாநகரத்தலைவர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசியிருக்கிறார். காலையில் முடிவு சொல்வார்கள் என்று தெரிவித்தார்.

பிறகு இரவு 9:30 மணியளவில் நாகர்கோவில் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் என்னை அழைத்து “நிகழ்வுக்கு அனுமதியில்லை, கடிதம் அனுப்புகிறேன்” என்று தெரிவித்தார். நள்ளிரவு 12:40 மணிக்கு வீட்டுக்கு வந்த காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி மறுப்புக் கடிதம் தந்துவிட்டுச் சென்றார்கள். அதில் “கோட்டார் காவல் நிலையத்திற்குட்பட்ட” கிறித்தவ தேவாலயத்தையும், இசுலாமியப் பள்ளிவாசலையும் மட்டும் குறிப்பிட்டுவிட்டு, அதே நாகர்கோவில் காவல்துறை உட்கோட்டத்தின் கீழ் வரும் “நேசமணி நகர் காவல்நிலைய ஆளுகைக்கு உட்பட்ட அருள்மிகு நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில்” நிகழ்வை கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள்.

மேலும் “தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மதநல்லிணக்கச் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியானால் ஒரு மதநல்லிணக்கச் சந்திப்பைக்கூட நடத்த முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் “தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சூழ்நிலை” மோசமாக இருக்கிறது எனும் தோற்றம் உருவாகிறது. தமிழ்நாடு அரசின் மற்றும் ஆளும் கட்சியின் நிலைப்பாடும் இதுதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

பொதுமக்கள் கூடுவது, சந்திப்பது, பேசுவது எல்லாமே சட்ட ஒழுங்கு சிக்கலாகப் பார்க்கப்படுவது ஒரு ‘காவல்துறை அரசு’ உருவாவதற்கான அறிகுறி. பொதுவெளிகளில் நடத்தப்படும் நிகழ்வுகளை காவல்துறைக்குத் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம்தான். அண்மையில் அரங்கக் கூட்டங்களுக்கும் அனுமதி வாங்க வேண்டும் எனும் வழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது காவல்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியத் தேவையில்லை என்றாலும், கேட்காவிட்டாலும், அனுமதி மறுக்கும் (அதாவது தடை செய்யும்) ஒரு புதிய ஏற்பாட்டை காவல்துறை உருவாக்குகிறது.

ஆளுங்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் நிகழ்வுக்கே தடைவிதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேல்மட்டத் தலைவர்களின் நிலைமையும் மேம்பட்டதல்ல. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அராஜகத்தை தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னது ஓர் அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டு. “ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் போராளிகளின் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவேன்” என்று வள்ளியூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதிமொழி அளித்த இப்போதைய முதல்வர் அவர்கள் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற விடாமலிருப்பது இன்னொரு எடுத்துக்காட்டு.

காவல்துறையின் அனைத்து மட்டங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு சாக்குப்போக்கு “மேலிடத்து உத்தரவு” என்பதாகும். அந்த “மேலிடம்” தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமும் அல்ல, திமுகவின் அண்ணா அறிவாலயமும் அல்ல என்றால், அது எங்கே இருக்கிறது? தமிழ்நாடு காவல்துறை உண்மையிலேயே யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறதுகாவல்துறைக்கு வெளியே ஓர் அதிகார மையம் இருக்கிறதோஅவர்கள்தான் இறுதி முடிவுகள் எடுக்கிறார்களோ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

மக்கள் சிக்கல்களுக்காக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், ஒரு போராட்டம் நடத்தினால், ஐந்தாறு காவல்துறையினர், உளவுத்துறையினர் முகத்துக்கு நேரே வந்து நின்று காணொளி எடுக்கிறார்கள், படங்கள் எடுக்கிறார்கள், குறிப்பு (notes) எடுக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு காவல்துறை அதிகாரி புகார் அளிக்க, இன்னொரு அதிகாரி வழக்குப் பதிவு செய்யும் வினோதத்தையும் பார்க்கிறோம்.

இப்போது தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளிலும் மூக்கை நுழைத்து காட்சிப்படம் எடுக்கிறார்கள். கடந்த அட்டோபர் 18, 2022 அன்று என்னுடைய தந்தையார் திரு. சு. பரமார்த்தலிங்கம் அவர்கள் மரணமடைந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் திமுகவைத் தோற்றுவித்தக் காலத்திலிருந்தே கட்சிக்காக உழைத்த அப்பாவின் விருப்பப்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் ஏனைய மாவட்ட திமுக முன்னணியினரும் அப்பா உடலத்தின் மீது திமுக கொடியைப் போர்த்திய நிலையில் அப்பாவின் இறுதி ஊர்வலம் அட்டோபர் 19, 2022 அன்று காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து தொடங்கியது. அப்போது நான்கைந்து உளவுத்துறையினர் காட்சிப்படம் எடுத்தார்கள்.

அதேபோல தகனத்திற்கு முன்னால் நடந்த இறுதிச் சடங்குகளையும் உளவுத்துறையினர் வீடியோ எடுத்தார்கள். தாங்கொணா துயரத்தில் இருந்த என்னால் இதனைத் தட்டிக்கேட்க இயலவில்லை. யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது? என்னுடைய தந்தையாரோ, நானோ தீவிரவாதிகள் அல்லர், கொலைக் குற்றவாளிகள் அல்லர். கொள்ளைக்காரர்கள் அல்லர். எங்களை ஏன் இப்படி அத்துமீறி படம் எடுக்க வேண்டும், காட்சிப்படம் எடுக்க வேண்டும்?

நாகர்கோவில் கோட்டாட்சித் தலைவர், குமரி மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற அதிகாரிகளிடம் இது குறித்து நேரில் சந்தித்து முறையிட்டிருக்கிறேன். விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் முறைப்படி முறையிடத் திட்டமிட்டிருக்கிறேன்.

யாரும் எதற்காகவும் எந்த விதத்திலும் இயங்காதீர்கள், வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடப்பதே உங்கள் சனநாயகக் கடமை எனும் செய்தி நமக்கெல்லாம் உரக்கச் சொல்லப்படுகிறது. உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்றெல்லாம் பெருமை கொள்ளும் நமக்கு இது ஓர் எச்சரிக்கை மணியாகவே அமைய வேண்டும். தமிழ்நாடு அரசும், ஆளும் கட்சியான திமுகவும் இந்த நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும், இதுகுறித்து மக்களின் ஐயங்களைப் போக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

சுப. உதயகுமாரன்

தோழர் தியாகு எழுதுகிறார் 19 :ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி)

ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

ஒரு கட்டத்துக்குப் பின் பொன் நாடார் பரிதாபமாய்க் கெஞ்சத் தொடங்கினார்.

“என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் ஐயா. என்னைக் கொன்றுவிடாதீர்கள் ஐயா.!”

இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று மெளனமாகிப் போனார். அதன் பிறகும் அடி நிற்கவில்லை சில நிமிடங்கள் கழிந்த பிறகுதான், சந்தேகம் வந்து அடியை நிறுத்தி விட்டுப் பார்த்தார்கள் – பொன் நாடார் பிணமாகியிருந்தார்

நெடுமாடத்தில் (டவரில்) நடந்த இந்தக் கொலையைத் தம் கொட்டடிகளின் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த கைதிகளுக்குத் தாங்க முடியா அதிர்ச்சி! அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதி! கம்பிக் கதவுகளை பிடித்துக் கொண்டு நின்றவர்கள் பயந்து பின்வாங்கி உள்ளே சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்கள்.

பொன் நாடாரின் பிணம் சிறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சவக் கிடங்கில் வைக்கப்பட்டது.

சிறையில் அன்றிரவு யாரும் தூங்கவில்லை. ஏ.எம்.கேயும்தான்! கொலைகாரர்களைத் தப்ப விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காகச் சிறைக் கைதிகளைத் திரட்டுவதற்கான வழிவகைகள் பற்றி யோசித்துச் சில முடிவுகள் எடுத்து, நம்பிக்கைகுரிய சில காவலர்கள் வழியாக இரவோடிரவாய் முக்கியத் ’தோழர்’களுக்குச் சொல்லியனுப்பினார். விடிவதற்குள் ஒரு செயல்திட்டம் தயாராக இருந்தது.

காலை எட்டு மணிக்கெல்லாம் ஏ.எம். கே, சிறை மருத்துவ மனைக்குச் சென்று சிறை மருத்துவர்கள் இருவரிடமும் சொன்னார்:

“பொன் நாடார் சாவுக்கு நீங்க இரண்டு பேரும் காரணமில்லை. நீங்க அடிக்கவில்லை, சாகடிக்கவில்லை. ஆனால், முறையாக பிண ஆய்வு இல்லாமல் உடம்பு இங்கே இருந்து வெளியே போகக் கூடாது. போனதென்றால் உங்களைச் சும்மா விட மாட்டோம். கண்காணிப்பாளரைக்  காப்பாற்றலாம் என்று நினைக்காதீர்கள். உங்களால் அவரைக் காப்பாற்ற முடியாது. அவராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.”

உண்மையில் அந்தச் சிறை மருத்துவர்களுக்குக் கண்காணிப்பாளரைக் காப்பாற்றும் எண்ணமில்லை. அவர்களோடு அவருக்கு அப்படி ஒரு முரண்பாடு. அவர்களோடு மட்டுமல்ல, அநேகமாய் ஒவ்வொருவருடனும் அவருக்கு முரண்பாடு இருந்தது. இந்த முரண்பாடுகளையெல்லாம் முழுக்கப் பயன்படுத்திக் கொள்வது ஏ.எம்.கே.யின் திட்டம்.

காலையிலேயே சிறைக் கைதிகள் அனைவரும் தட்டைக் கவிழ்த்து விட்டனர். உண்ணாவிரதம் மட்டும் போதாதென்று எல்லாக் கைதிகளும் நடு மைதானத்தில் வந்து உட்கார்ந்தார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் பிணத்தை வெளியே விட்டு விடக் கூடாது என்பது ஏ.எம். கே.யின் உறுதியான கட்டளை.

கண்காணிப்பாளர் தன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. மற்ற அதிகாரிகளுக்கும் என்ன செய்வதென்று விளங்கவில்லை. அவர்களின் திண்டாட்டம் கைதிகளுக்கு ஊக்கம் தந்த்து. ஏ.எம்.கே. வழிகாட்டியபடி அவர்கள் காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள் :

“நாங்கள் வெளியில் குற்றம் செய்தோம் என்று தண்டனை கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இங்கு எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லா விட்டால் என்னாவது? இங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது. நாங்கள் கொலை செய்தால் தண்டனை, எங்களைக் கொலை செய்தால் தண்டனை கிடையாதா? கொலை செய்ய வேண்டி ஏன் வந்தது என்று கோர்ட்டில் போய்ச் சமாதானம் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் கொலை நடந்துள்ளது என்ற உண்மையை மறைக்க விட மாட்டோம். உங்களோடு எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் எங்களோடு சேர்ந்து போராடா விட்டாலும் பரவாயில்லை. எங்கள் போராட்டத்தில் குறுக்கிடாமல் இருங்கள். அது போதும்.”

காவலர்களிடையே இருந்த நண்பர்கள் சிலரும் இதே வழியில் மற்றக் காவலர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிரச்சாரம் பலித்தது. சிறை நிருவாகம் இந்தக் காவலர்களைப் பயன்படுத்திக் கைதிகள் மீது தாக்குதல் தொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஏதாவது செய்ய வேண்டுமானால் வெளியிலிருந்து காவல்துறைப் படையை வரவழைத்தால்தான் முடியும். அதில் பல சிக்கல்கள் இருந்தன.

நடந்திருப்பது ஒரு கொலை என்பதை மறைக்க வழியில்லாமற் போனது முதல் காரணம். இது தொடர்பாகப் பொய் சொல்லிக் கைதிகளை ஏமாற்ற வழியில்லை. இரண்டிலொன்று பார்த்து விடும் மன நிலையில் திரண்டிருந்த கைதிகளை அச்சுறுத்தவும் வாய்ப்பில்லை. சிறை நிருவாகம் காவலர்களிடமிருந்தும் அந்நியப் பட்டிருந்தது. அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டவராகச் சிறைக் கண்காணிப்பாளர் இருந்தார்.

மதியம் வரை புதிய அசைவுகள் ஒன்றுமில்லை . பிற்பகல் கிட்டத்தட்ட இரண்டு மணிக்கு ஏ.எம்.கே. தன் கொட்டடியிலிருந்து நெடுமாடத் தி டலுக்குச் சென்று கைதிகளுக்கு நடுவில் உட்கார்ந்து விட்டார். அவரது வருகை அவர்களுக்குத் துணிவும் ஊக்கமும் தந்தது.

கண்காணிப்பாளர் வந்து தொலைவில் நின்று கொண்டு ஏ.எம்.கே.யைக் கூப்பிட்டார். ஏ.எம். கே. மறுத்து விட்டார்.

“எது வேண்டுமென்றாலும் இங்கே வந்து பேசுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி கொடுக்கிறோம். ஆனால் என்னை இங்கே இருந்து கொண்டு போய்விடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அது மட்டும் நடக்காது.”

கண்காணிப்பாளர் தன்னோடு வந்திருந்த சிறு படையை ஏவி, “அவரைப் பிடித்து வாருங்கள்” என்றதுதான் தாமதம்… கைதிகள் தரப்பிலிருந்து சரமாரியாகக் கற்கள் பறந்தன. கண்காணிப்பாளரும் மற்றவர்களும் சிறை வாயில் நோக்கி ஓடச், சிறைக்குள் அதிகாரிகளும் காவலர்களும் கூடப் பின்னாலேயே ஓடலானார். கைதிகள் சிறைவாயில் வரை துரத்திச் சென்று அத்துடன் நின்று கொண்டார்கள்.

சிறைக்குள் மருந்துக்கும் காக்கிச் சட்டை இல்லை. சிறை முழுக்கக் கைதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிகாரிகளும் காவலர்களும் மதிலுக்குத்தான் நிருவாகம் என்ற நிலை.

கூட்டத்துக்கு நடுவிலேயே கலந்தாலோசனைகள் நடைபெற்றன. வெளியிலிருந்து ஆயுதப் படைக் காவல்துறை வந்து தாக்குதல் தொடுக்குமானால் என்ன செய்வது என்று ஒரு கேள்வி எழுந்தது.

(தொடரும்)

தரவு: தாழி மடல் 

வெள்ளி, 20 ஜனவரி, 2023

இணையத் தமிழ்ச்சுடர் தேமொழியின் இரு நூல்கள் வெளியீடு (2023)

 அகரமுதல


தமிழ்மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடு

இலக்கிய மீளாய்வு

நன்னூல் பதிப்பகம்

பெரியார் பெருமை பெரிதே





தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3)

 அகரமுதல





ஏ. எம். கே. நினைவாக (3)

(தோழர் தியாகு எழுதுகிறார் 18 : கரி படுத்தும் பாடு))

காக்கி மனப்போக்கு

பொன்னப்ப(நாடா)ர் நெல்லை மாவட்டத்துக்காரர். ஆயுள் சிறைத் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில்தான் சில ஆண்டுகள் கழித்து முடித்தார். பிறகு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அடைக்கலமும் இருளாண்டியும் சிவலிங்கமும் மற்றவர்களும் அந்தச் சிறையிலிருந்து தப்பிச் சென்ற போது பொன்னப்ப (நாடா)ர் அங்குதான் இருந்தார்.

சில ஆண்டுகள் கழித்து அவர் ஏதோ சிறைக் குற்றத்துக்காகத் திருச்சியிலிருந்து கடலூருக்கு மாற்றப்பட்டார்.

திருச்சி சிறையிலிருந்து தப்பிச் சென்ற மற்றவர்களெல்லாம் பிடிபட்ட பிறகும் பிடிபடாமலிருந்தவர் அடைக்கலம். ஒரு முறை சந்தேக வழக்கில் சிக்கி, அடைக்கலம் வேறு பெயரில் விசாரணைக் கைதியாகக் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர்தான் அடைக்கலம் என்று அதிகாரிகளுக்குத் தெரிந்து, அவரைக் கொண்டு போய் எவ்வளவு அடி அடித்தும் அவர் தன்னை அடைக்கலம் என்று கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை.

என்றாலும், அவர்தான் அடைக்கலம் என்று உறுதி செய்து விட்டார்கள். அடியினால் மூளை கலங்கியதா அல்லது வெறும் நடிப்பு தானா என்று தெரியவில்லை. அடைக்கலம் மனநோயாளியாக்கப்பட்டு, தனிக் கொட்டடியில், நிருவாணமாய் அடைக்கப்பட்டார். திருச்சிக்குச் சிறை மாற்றம் செய்யப்பட்ட பிறகும் பித்தர் கொட்டடியில்தான் ஆடையின்றி அடைபட்டிருந்தார்.

கடலூர் சிறையில் அடைக்கலத்தைக் காட்டிக் கொடுத்ததே பொன்னப்ப நாடார்தான் என்று சிறைக் கைதிகளிடையே பரவலாகப் பேசப்பட்டது. அது மெய்யோ பொய்யோ … அதிகாரிகளுக்கு அவர் நெருக்கமானவராகவே இருந்தார். முன்கோபக்காரரான அவர் ஒரு தண்டனைக் காவலராகவும் இருந்தார்.

சிறை வாழ்க்கையில் பொன்னப்ப நாடார் என்ற பெயர் பொன் நாடாராகச் சுருங்கியிருந்தது. எல்லாரும் அவரை அப்படித்தான் அழைத்தனர்.

பொன் நாடாருக்கும் சமூகவுணர்வுக்கும் ரொம்ப தூரம். ஆனால் தன் சொந்த நலத்துக்காகச் சிறை அதிகாரிகளை எதிர்க்கத்தான் வேண்டும் என்றால் தயங்காமல் எதிர்ப்பார்; மூர்க்கமாகவும் முரட்டுத் தனமாகவும் எதிர்ப்பார். அவருடைய சொந்த நலம் நியாயமானதாகவோ சட்டப்படியானதாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை. சிறைக்குள் நடைபெறும் கஞ்சா வியாபாரம் போன்ற சமூக விரோதக் காரியங்கள் அனைத்திலும் அவருக்குப் பங்கு இருந்தது.

சிறை நிருவாகத்தை எதிர்த்துக் கைதிகள் போராடும் போதெல்லாம் பொன் நாடார் அதிகாரிகளின் பக்கம் நிற்பார்.

ஏ.எம்.கே. சிறையில் செய்து கொண்டிருந்த காரியங்கள் எதுவும் பொன் நாடாருக்குப் பிடிக்கவில்லை. இதனால் சிறை அமைதி கெடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிறை அமைதியாக இருந்தால்தானே அவரைப் போன்றவர்கள் அமைதியாக ஞானப்பழம் – அதுதான் கஞ்சா – விற்கலாம். அமைதியாக மற்றக் கைதிகள் உணவைத் திருடிப் பங்கு போட்டுக் கொள்ளலாம். அமைதியாக எல்லா அயோக்கியத்தனங்களும் செய்யலாம்!

பொன் நாடாரும் இன்னும் ஓரிரு தண்டனைக் காவலர்களும் சேர்ந்து ஏ.எம்.கே.யிடம் சென்று மிரட்ட வேண்டும் என்று கூட ஒரு திட்டம் இருந்தது. பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற கேள்விக்கு விடை காண முடியாததால் அந்தத் திட்டம் கடைசி வரை நிறைவேறவே இல்லை.

இந்த நிலையில் பொன் நாடாருக்கும் ஒரு சிறை அதிகாரிக்கும் கடுமையான பூசல் உருவாயிற்று. கஞ்சா வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட விவகாரம்தான் என்று சொல்லப் பட்டது. பூசல் முற்றி ஒரு கட்டத்தில் பகிரங்கமாக வெடித்து விட்டது.
வாய்ச்சொல் முற்ற, சிறை அதிகாரி பொன் நாடாரைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட, பதிலுக்கு நாடாரும் திட்ட, சண்டை வந்து விட்டது. சோதனையிடுவதன் பேரால் நாடார் மேல் அந்த அதிகாரி கைவைக்க, நாடார் கோபமாய்த் தட்டி விட்டார்.

யோவு, என்னை நீ சோதனை போட்ருவியாலே? நீ அவ்வளவு யோக்கியனாலே? நீ பண்ற திருட்டுத்தனம்லாம் எனக்குத் தெரியும்லே? காக்கிச் சட்ட போட்ருக்கியே, அதுக்குள்ளருக்க ஒடம்புல்லாம் கைதி சோறுதான்லே! ஒழுங்கா போய்டு… திரும்ப என்மேல கை வைத்தால் முறிச்சுப் போட்டுடுவேன். தெரிஞ்சுக்கலே!”

மீறிக் கை வைத்த அதிகாரியை பொன் நாடார் அடித்தே விட்டார்.
காவல் துறையானாலும் சிறைத் துறையானாலும், காக்கிச் சட்டைக்கென்று ஒரு மனப்போக்கு உண்டு. அவர்கள் மற்றவர்களைக் கூசாமல் அடிப்பார்கள். அதுவே இயல்பானது என்று கருதிக் கொள்வார்கள். அவர்களுக்கு அப்படி ஒரு பிறப்புரிமையே இருப்பது போலத்தான்! ஆனால் தங்கள் மீது மற்றவர்கள் கைவைத்து விட்டாலோ மிருக வெறி கொள்வார்கள். ஆத்திரம் கண்களை மறைக்க, எதுவும் செய்யத் துணிவார்கள். நியாய அநியாயம் எல்லாம் பார்க்க மாட்டார்கள்.

பொன் நாடாரிடம் அடி வாங்கிய சிறை அதிகாரி மற்ற அதிகாரிகளிடம் தகவல் சொன்ன போது, அவர்கள் கடுங்கோப முற்றார்கள். “கைதி நாய்க்கு இவ்வளவு திமிரா?” என்று பொருமினார்கள். கண்காணிப்பாளரின் அறையில் கூடிப் பேசினார்கள்.

இரவு பத்து மணி சுமாருக்கு பொன் நாடார் நெடுமாட த்திற்குக் கொண்டு வரப்பட்டார். கண்காணிப்பாளர் மட்டும் அவரது அறையில் இருந்தார். சிறை அலுவலர், துணை அலுவலர், உதவி அலுவலர்கள், முதன்மைத் தலைமைக் காவலர், சேமத் தலைமைக் காவலர் ஆகியோரோடு ஒருசில காவலர்களும் நெடுமாடத்தில் இருந்தார்கள்.

அவர்கள் பொன் நாடாரைச் சுற்றி நின்று மூர்க்கமாய் அடிக்கத் தொடங்கினார்கள். பொன் நாடார் போட்ட எதிர்ப்புக் கூச்சல் அவர்களை மேலும் ஆத்திரம் கொள்ளச் செய்தது. தடியால் அடித்தார்கள், கையால் குத்தினார்கள், காலால் உதைத்தார்கள், உருட்டிப் புரட்டி நொறுக்கினார்கள்.

தொடரும்
தரவு: தாழி மடல்

வியாழன், 19 ஜனவரி, 2023

சலகெருது நாள்-பழமை பேசி

 அகரமுதல     19 January 2023      



சலகெருது நாள்

பொங்கற்திருவிழா என்பது, காப்புக்கட்டு, கதிரவன் பொங்கல், ஊர்ப்பொங்கல், பெரிய நோன்பு, மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல், பாரிவேட்டை,வேடிக்கைநாள், மூக்கரசு, சலகெருதுநாள், பூப்பொங்கல், விடைநாள் என்பதாக அமைந்த ஒருவாரகாலத் திருவிழா.

 காணும்பொங்கலன்று பொது இடங்களுக்குச் சென்று களித்திருந்து வருதல், உற்றார் உறவினரைக் கண்டுவருதல், சல்லிக்கட்டு காண்பதென்பதுதான் பொதுவாகப் பார்க்கப்படுகின்றவொன்று. ஆனால் அன்றைய நாளிலே, சேவற்கோச்சை, புறாப்பந்தயம், தகர் சமர் எனப்படுகின்ற கிடாமுட்டு, ரேக்ளாபந்தயம், முயல்வேட்டை, தேனெடுப்பு, வழுக்காம்பாறை, ஆற்றங்கரை, மலைமுகடு, காட்டுமுகடு போன்ற இடங்களிலே தின்பண்டங்களுடன் கூடிக் கதை பேசிக்களிக்கும் மூக்கரச்சும் இடம் பெறும்.

இதேநாளில்தான் சலகெருது ஆட்டங்களும் இடம் பெறும். இது பழைய சிஞ்சுவாடி சமீன், மைவாடி சமீனுக்குட்பட்ட வட்டாரத்துக்கேவுரிய தனிப்பட்ட வாடிக்கையாக இன்றளவும் நிலைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  

 காப்புக்கட்டிய தருணத்திலிருந்து பூப்பொங்கல் முடியும் தருணத்துக்குள் (நான்கு நாட்கள்) சினைமாடு ஈன்றுமேயானால் அது ஆலாமரத்தூர்/சோமவாரப்பட்டியில்இருக்கின்ற ‘ஆல் கொண்ட மால்’ திருக்கோயிலுக்குச் சொந்தமானது என்பது மரபு.

பிறந்த கன்று கிடாரிக்கன்றாக இருக்குமேயானால் அது குடிக்குமளவுக்கும் விட்டு விட்டுப் பிறகுதான் பசுமாட்டின் உரிமையாளர் அதனின்று பால்கறக்கலாம். பால்குடி மறந்தபின், அந்தக் கன்றினைக் கொண்டு போய் திருக்கோயில் வசம் ஒப்படைத்து விட வேண்டும். காளைக்கன்றாக இருக்குமிடத்து, அது சாமிக்கன்றென அழைக்கப்படுகின்றது.

கீழ்த்தாடையில் பால்பற்கள் விழுந்து புதிய பற்கள் முளைக்கும் போது, அதாவது அதன் மூன்றாவது வயதில், ஊர்ப்பெரியவருடன் அந்த சாமிக்கன்று ஆல்கொண்ட மால் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றது. அங்கே அதற்கு சிறப்புவழிபாடு நிகழ்த்தி, வழிபாடு செய்யப்பட்ட திருநீர் அதன்மீது தெளிக்கப்பட்டுச் சலகையடிக்கப்படுகின்றது.

 சலகைச்சடங்கின் ஒருபகுதியாகக் காதுகளின் ஓரங்களை நறுக்கிப் பின்னர் ஆண்மைநீக்கத்திற்காக விதைப்பைகள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றது.

இப்படியாகப்பட்ட சடங்கின் நிமித்தமே அவை சலகெருது என அழைக்கப்படுகின்றது. கொம்பு, நெற்றி, முதுகின்மேற்பகுதி முதலான இடங்களில் மஞ்சள்பூசப்பட்டு, திருநீறு குங்குமம் வைக்கப்பட்டு, கழுத்தில் காணிக்கைப் பை கட்டவிடப்பட்டு,கிழக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தேங்காய் பழம் வைத்து வழிபடுவர் கோயிலில் கூடியுள்ள ஊர்மக்கள். இதன்பின்னர் அனைவராலும் தொழத்தக்க சலகெருதுவாக உருவெடுக்கின்றது அந்தக் காளைக்கன்று கயிறு கொண்டு கட்டப்படமாட்டாது. எவர் நிலத்திலும் மேய்ந்து கொள்ளலாம். ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், உருமிமேளத்துடன் கூடிய ஆட்டத்துக்கு அது பயிற்றுவிக்கப்படும். சலங்கைகள் பூட்டப்பட்டு, உருமிமேளத்துடன் கூடிய நளினமான ஆட்டத்துக்கும் வேகத்துக்கும் ஏற்றபடி வளைந்து வளைந்து தலையைச் சிலுப்பியபடியே அது ஆடும் கலைஞனுக்குச் சவால் விடுக்கும்வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தும்.

உருமிமேளத்தின் வீச்சா, கலைஞனின் ஆட்டமா, சலகெருதுவின் ஆட்டமாயென்பதில் பெரும்போட்டி நிகழும். சுற்றிலும் நின்று ஊர்மக்கள் வேடிக்கை பார்த்துக் களிப்பெய்துவர்.

 ‘(ஞ்)சாகோ’ எனச் சொல்லியபடித் தன்கைகளில் இருக்கும் சிலம்புகளையும் அந்தக் கலைஞன் வெவ்வேறு விதமாகச் சமிக்கைகள் செய்து கொண்டே உயர்த்தியும் தணித்தும் ஆடிவர சலகெருதுக்கும் கலைஞனுக்கும் ஆட்டத்தில் பெரும்போட்டி நிகழும். இப்படியான ஆட்டங்களினூடே அந்தந்த ஊர்மக்கள், அந்தந்த ஊர் சலகெருதுகளுடனும்மேளதாளத்துடனும் ஆட்டபாட்டங்களுடனும் ஆல்கொண்ட மால் திருக்கோயில் நோக்கிஅணியணியாகச் செல்வர். இந்த இரு சமீன்களுக்குரிய பகுதிகளிலே எங்கும் ஆரவாரம் கோலோச்சும். இதுதான் சலகெருதுநாள். *சலகெருதுநாள் வாழ்த்துகள்*

-பழமை பேசி

ஆசிரியர் குறிப்பு:    இராசகம்பளத்து நாயக்கர் வகுப்பார் கோயில் மாடு ஓட்டம் நடத்துவர். இதனையே அவர்கள் ‘சலகெருது’ என்று அழைக்கின்றனர். உடுமலை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒக்கலிகர் வகுப்பார் முதலியவர்களால் இவ்வாறு சலகெருது நாள் கொண்டாடுகின்றது. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சலகெருது நாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாடு முழுவதும் அல்லது எல்லா வகுப்பினரும் பரவலாக இவ்வாறு அழைப்பதில்லை. சலகெருது மாடுகள் நலச்சங்கம் என்றும் ஊர் மக்கள் சங்கம் வைத்துள்ளனர்.

சலகு என்றால் படைப்பயிற்சி எனப்பொருள்.படைப்பயிற்சி போன்ற பயிற்சிஉடைய எருது என்னும் பொருளில் இச்சொல் வழங்குகிறது. சலகு என்றால் காயடித்தல்/விதையடித்தல் என்றும் பொருள்கள. ஒருவேளை இவ்வெருதுகள் காயடிக்கப்படுமோ எனத் தெரியவில்லை. உரிய ஊர்க்காரர்களைக் கேட்டால் தெரியும்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திசைக்கூடல் – 316

 அகரமுதல




தை 06, 2054  / சனவரி 20, வெள்ளிக்கிழமை...

இந்திய நேரம் மாலை 8:00 மணி..

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 

திசைக்கூடல் – 316

இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சியில் 

தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடான 

அறியப்பட வேண்டிய தமிழகம்” 

நூல் திறனாய்வு – கலந்துரையாடல்

நூல் திறனாய்வாளர்:

திரு. இரா. முத்து கணேசு 

முதுகலை வேதியியல் ஆசிரியர்

நாடார் மேல்நிலைப்பள்ளி

கோவில்பட்டி

“அறியப்பட வேண்டிய தமிழகம்” –  தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக வெளியீடான இந்நூல் பேராசிரியர் தொ.ப. வினுடனான நேர்காணல் ஒன்றினையும் தொ.ப. பயணித்த அவரை நன்கு அறிந்த அறிஞர்களிடமிருந்து தொ.பா வின் நூல்களைப் பற்றிய திறனாய்வுகளையும் நமக்குத் தருகிறது. ‘அறியப்படாத தமிழகம்’ தொ.ப. வினுடைய நூல். அவருடைய ஆய்வுகள் முழுக்க முழுக்க சமூகம் மற்றும் மனிதனைக் குறித்தது என்பதை இந்தத் தமிழகம் அறியவேண்டும் என்பதே இந்நூல் நமக்குத் தரும் செய்தியாகும். இந்நூலின் திறனாய்வு மற்றும் கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுக. 

நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:

திரு. மு. விவேகானந்தன்,

கருத்தரங்கப் பொறுப்பாளர்,

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தமிழ்நாடு, இந்தியா

நேரலை:

இணைப்பு வரி:   

https://us06web.zoom.us/j/84159419415?pwd=OHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09

கூட்ட எண்: 841 5941 9415

கடவுச் சொல் : thfi

இராசேசுவரி தமிழ் மொழிபெயர்ப்பியல் ஆய்விருக்கை – நிகழ்வெண் 1

 அகரமுதல

     19 January 2023