சனி, 15 ஆகஸ்ட், 2015

வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கங்களின் சங்கம விழா

  Fetna-thamizhvizhaa01

வட  அமெரிக்கத் தமிழ் விழா 2015

   தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை[FeTNA – Federation of Tamil Sangams of North America] சார்பில் இந்த ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தில் சான் ஓசே [San Jose] நகரில் சீரும் சிறப்புமாக பேரவைத் தமிழ் விழா நடந்துள்ளது. இந்தத் தமிழர் மாநாட்டில் கிட்டத்தட்ட 2500 தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.
  இரண்டு நாள் முழு நிகழ்வில் ஏராளமான தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கு ஏறியன. முதல் நாள் தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்புப் பாடலோடு விழா தொடங்கியது.
  திருக்குறள் மறை ஓதியும், பாரதியார் பாடல்கள், சங்க இலக்கிய பாடல்கள், பாரதிதாசனின் தமிழ்ப் பாடல்கள் ஆகியனவற்றை வளைகுடா தமிழ் மன்றத்தின் குழந்தைகள் மிக அருமையாக அழகு தமிழில் பாடி ஆடினார்கள். இந்த முதல் நிகழ்ச்சிகளே பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
  குழந்தைகள் கலந்து கொண்ட “திருக்குறள் தமிழ்த் தேனீ” நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல அமெரிக்க மாநிலத் தமிழ்ச் சங்கங்களில் முதல் நிலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப் போட்டி பேரவை மேடையில் நிகழ்ந்தது. குறளின் பொருளைச் சொல்லும் பொழுது, குழந்தைகள் குறளையும், அதன் அதிகாரத்தையும் சொல்லும் பொழுது, பார்வையாளர்கள் அரங்கு நிறைந்த கரவொலியோடு எண்ணற்ற மகிழ்ச்சியும் அடைந்தார்கள். இந்தப்போட்டியில் பங்குப் பெற்ற ஐந்து குழந்தைகளும் பரிசுகளைப் பெற்றார்கள், முதல் பரிசு பெற்ற பெண் குழந்தை ஈழத்தைச் சார்ந்த பெண். இந்தக் குழந்தை ஐபேட்(iPad) கருவியைப் பரிசாகப் பெற்றார்.
  இந்த வருடம் சிறப்பு விருந்தினராக “இலங்கை வடக்கு மாகாண முதல்வர், மாண்புமிகு நீதியரசர் சி.வி. விக்னேசுவரன்” கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். தமிழ் மொழியின் முதன்மை, தமிழர்களின் எதிர்கால நலன் முதலியன குறித்துப் பகிர்ந்து கொண்டார். நீதியரசர், முதல் அமைச்சர் – இலங்கையில் நடந்தது “ஒரு இனப் படுகொலையே” என்பதைச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி இருப்பதை – அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒருமனமாகப் பாராட்டினார்கள்.
 முனைவர் இராசம் அவர்களை வரவழைத்துப் பாராட்டியது. முனைவர் இராசம், “நமது வீட்டில் வளரும் குழந்தைகள் மருத்துவராக, பொறியாளராக அல்லது எந்தத் துறை எடுத்தாலும், இல்லத்தில், நமது உறவினர்களோடு தமிழில் உரையாடுவது மிக மிக முதனமையானது” என்றார். அவர் ” ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் வர இருக்கும் தமிழ் இருக்கைக்குத் தன்னிடம் உள்ள நிதியைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தில்லை குமரனிடம் கொடுத்து உதவினார். தமிழ் நாட்டில் இருந்து நல்ல மொழி ஆளுமை உள்ள, முனைவர் பட்டம்பெற்ற தமிழ் ஆசிரியரை – அந்தப் பதவிக்கு வர வழைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
  வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். கல்வியாளர்கள் குழு தமிழ் பயிற்றுவிக்க ஒரு தமிழ்ப் பேராசியர் வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கிய மகிழ்ச்சியான செய்தியைப் பேரவை மேடையில் அவர் அறிவித்தார்.
அடுத்துப் பேரவையினர், மகிழினி மணிமாறனைச்சிறப்பித்தனர்.
கவிமாமணி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இவை மட்டுமல்லாது  இலக்கிய வினாடி வினா, கருத்துக்களம், பேச்சரங்கம்- போன்ற வேறு பல நிகழ்ச்சிகள் மக்கள் கவனத்தை ஈர்த்தன.
  இந்த விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்ச்சியாக இசைப்பேரறிஞர் பாபநாசம் சிவன் அவர்களுக்கு 30 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வாய்ப்பாட்டு, கருவியிசை[வில்யாழ்(வயலின்), வீணை, புல்லாங்குழல்,முழவு(மிருதங்கம்), கைப்பறை(கஞ்சிரா)]  மூலம் நினைவு அஞ்சலிப் பாமாலை வழங்கப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியைச் சுகி சிவா, வித்துவான் முல்லைவாசல் சந்திரமௌலி உருவாக்கி வழங்கினார்கள்.
முனைவர் செளம்யா கதைகளை விளக்கி, பாபநாசம் சிவன் பாடல்கள், நந்தனார் வரலாற்றுப் பாடல்கள் ஆகியவற்றை இசைக்குழுவுடன் பாடினார்.
அமரர் கல்கியின் காவியங்களில் ஒன்றான சிவகாமியின் சபதம், நாடக வடிவில் சிறப்பாக அரங்கேறியது. பாகிரதி சேசப்பன் எழுத்து வடிவத்தில் சிரீதர் மைனர் இசை அமைப்பில் இடம்பெற்ற இந்நாடகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வளைகுடாப்பகுதிப் பகுதியைச் சேர்ந்த பல கலைஞர்கள் இதில் பங்காற்றினார்கள்.
“பூ உலகின் நண்பர்கள்” அமைப்பாளர் சுந்தரராசன் உரையாற்றினார்.
“சங்கங்களின் சங்கமம்” என்ற தலைப்பில்,   நிகழ்ந்த வாசிங்டன் வடக்கு, வாசிங்டன் தெற்கு, தல்லசு, கரலினா, பென்சில்வேனியா, புதுயார்க்கு, புதுசெர்சி, கனெடிக்டெட்டு, சிகாகோ, செயிண்ட்லூயிசு, அட்லாண்டா, மினசோட்டா, சாக்ரமேண்டோ, கனடா, வளைகுடா தமிழ் மன்றம் முதலான சங்கங்களின் அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சங்கங்களின் சங்கமம் நேரத்தில் திருக்குறள் சார்ந்த நடனம், மரபுக் கலைகள் – கோலாட்டம், காவடியாட்டம், சிலம்பம் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று மக்கள் மனதைக் கவர்ந்தன.
பேச்சாளர் சுமதிசிரீ தலைமையில் ”மொழியா, கலையா” என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கம் இருந்தது. அவரோடு தியாகராசர் கல்லூரி தமிழ் ஆசிரியர் முனைவர் பேச்சிமுத்துவும் தமிழனின்மொழி உணர்வு மற்றும் கலை உணர்வைப் பற்றி எடுத்துரைத்தார்.
பேரவையில் சிறந்த குறும்படம், திரைப்படம், ஒளிப்பட விருதுகள் வழங்கப்பட்டன.
பேரவைத் தமிழ் விழாவின் இரண்டாவது நாளில் அரிசரண், பூசா,உரோகிணி, ஆலாப் இராசு திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் அமீது கணீர்க்குரல் அரங்கத்தை அதிர வைத்தது.
தமிழ் தொழில் முனைவர் கூட்டத்தில் ஏறத்தாழ 600 பேர் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் இருந்து தியாகராசர் பொறியியல் கல்லூரி தாளாளர், பெரும் தொழில் அதிபர் கரு.முத்து கண்ணன் கலந்து கொண்டு, தொழில் முனைவோர் கூட்டத்தைச் சிறப்பித்தார். “புதிய தொழில் தொடங்கிப் பல கோடிகள் சம்பாதிக்கவேண்டும் என்பது உங்கள் இலக்காக இருக்கக் கூடாது, பலருக்கும் உதவ வேண்டும் என்பது உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்றார்.
அடுத்த ஆண்டு தமிழ்ச்சங்கப் பேரவை விழா நியூசெர்சி மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
 – செய்தி உதவி: மயிலாடுதுறை சிவா.

ஒளிப்படங்களைப் பின்வரும் இணைப்புகளில் கண்டு மகிழ்க1

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 1-25

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 26-50

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 51-75

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 76-100

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 101-125

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 126-150

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 151-175

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 176-200

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 201- 225

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 226-250 [-237]

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 251 – 275

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 276 – 300

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 301 – 325

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 326 – 350

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 351 – 375

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 376 – 400

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 401 – 425

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 426 – 450

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 451 – 475

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 475 – 500

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 501 – 525 [-503]

வ.அ.த.ச.பேரவை 28 ஆவது ஆண்டுவிழா- 2015 : ஒளிப்படங்கள் 526 – 547



வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? – இலக்குவனார் திருவள்ளுவன்


என்று கொண்டாடுவோம்

விடுதலை நாளை?

இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 14 ஆக. 2014 , வெப்துனியா
(தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன், உரிமையற்ற நாட்டிலே விடுதலைக் கொண்டாட்டமா? என வினவுகிறார். ஆயினும் இவற்றைப் பேசும் உரிமை இன்னும் இருக்கிறது என்பதை நினைவூட்டி, இதனை  வெளியிடுகிறோம். – ஆசிரியர்)
“என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
… … …
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்”
என்று மாக்கவி பாரதியார் அடிமை ஆட்சியில் பாடினார். இன்றும் நாம் மனம் வெதும்பிப் பாடும் வகையில்தான் இந்திய நாடு உள்ளது. இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று 67 ஆண்டுகள் நிறைவுற்ற பின்னும், நாம் நிறைவான வாழ்க்கைக்குப் போராட வேண்டி உள்ளது.
  1947ஆம் ஆண்டு ‘இலக்கிய’ இதழ் விடுதலை மலரில் அதன் ஆசிரியரான தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், அரசியல் விடுதலை பெற்ற நாம், கல்வி முதலான ஒவ்வொரு துறையிலும் விடுதலை பெறுவது எப்போது எனக் கேள்வி கேட்டிருந்தார்; அந்நாள்தான் உண்மையான விடுதலை நாள் எனக் குறிப்பிட்டிருந்தார். இன்றும் அதே நிலைதான் என்னும் பொழுது அரசியல் விடுதலையின் பயனை நாம் பெறவில்லை என்றுதானே பொருள்.
  முன்பு தமிழ்நாட்டில் ‘குடிதழுவிய கோனாட்சி’ நடைபெற்றது. மன்னரின் தலைமையில் உண்மையான மக்களாட்சி நடைபெற்றது அப்போது. அமைச்சர்கள் தலைமையில் மன்னராட்சி நடைபெறுவது  இப்போது. மக்கள் தலைமையில் மக்களாட்சி நடைபெறுவது எப்போது?
  தடையற்று எண்ணுவதற்கு, எண்ணியவற்றை உரைப்பதற்கு, உரைத்தவற்றைச் செயற்படுத்துவதற்கு உரிமை உள்ள நாடே விடுதலை நாடாகும். ஆனால், இங்கோ, ஆட்சிக்கு எதிராக, ‘இம்’ என்றால் வழக்கு வாழ்க்கை, ‘ஏன்’ என்றால் சிறை வாழ்க்கை என்பதே வழக்கமாகி விட்டது.
  பல தேசிய  இனங்கள் வாழும் நாடு விடுதலை நாடெனில், அங்கே தேசிய இனங்கள் எழுச்சி பெற்று உரிமையுடன் வாழ வேண்டும். இங்கோ தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றன. சமற்கிருதத்தாலும் இந்தியாலும் தேசிய மொழிகள் ஒழிக்கப்படுகின்றன. அப்படியென்றால் விடுதலை யாருக்கு?
  இங்கே சிலரிடம் செல்வம் குடி கொண்டுள்ளது. பிறரிடம் வறுமை அடைக்கலமாகியுள்ளது. சிலரின் மறைவான கறுப்புப் பணம் வெளியே வந்தால் அறுபது ஆண்டுகளுக்கேனும் வரி விதிக்காமல் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், அச்சிலர் பெறும் பாதுகாப்பு, பிறருக்கு இன்மையால் பெரும்பான்மையர் அல்லலுறும் செல்வ நாடாக நம் நாடு திகழ்கிறது.
உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு (திருக்குறள் 734)
என்னும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தரும் நாட்டிற்கான இலக்கணம் இங்கே காணவில்லை! காரணம் அறிந்தும் களைவார் யாருமில்லை! பசியும் பிணியும் மேலோங்கிப் பகைமை விளையாடும் நாடாகவே நம் நாடு உள்ளது.
  விடுதலை நாள்களிலும் குடியரசு நாள்களிலும் உரைக்கப்படும் உரை ஒன்றே! நாள்தான் வெவ்வேறு! எனவே இவ்வெற்றுரைகளால் வறுமைக்கு முற்றுப்புள்ளியிட முடியவில்லை!
  கல்வியையே கேடற்ற சிறந்த செல்வமாகக் கருதுவது தமிழர் நெறி. இந்திய அரசோ கல்விக்கு ஒதுக்கும் நிதியின் அளவு, பிற நூறு நாடுகளை விடக் குறைவே! படைத் துறைக்கு மிகுதியாகச் செலவழித்தும் வல்லரசின் கனவில்தான் நாட்டுத் தலைவர்கள் உள்ளனரே தவிர, நம் நாடு வல்லரசாகவும் இல்லை! நல்லரசாகவும் இல்லை! எங்கும்  ஊழல்! எதிலும் ஊழல்! படைத் துறையிலோ ஊழலே ஆட்சி செய்கிறது! எனவே, நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
  இந்தியா பெரிய நாடு எனப் பெருமை பேசுகின்றனர். ஆனால், மிகச் சிறிய நாடான சிங்கள இலங்கை, இந்நாட்டு மக்களைக் கடற்பரப்பில் கொன்றொழித்து வரும் பொழுது தட்டிக் கேட்க இயலவில்லை.
  அணி சேராத் தனித்துவம் மிக்க நாடு என்றும் உலக நாடுகளின் உரிமைக்கு முதல் குரல் கொடுத்து உற்றுழி உதவும் நாடு என்றும் ஆளுவோர் பெருமை பேசுகின்றனர். ஆனால் பொருந்தாக் கூட்டணி அமைத்து, ஈழத்தில் பன்னூறாயிரத் தமிழ் மக்களை அழிப்பதையே தன் கடமையாகக் கொண்டு செயல்படுகிறது.
  தமிழ்நாட்டில் இரண்டு தலைமுறை மக்கள் தங்கள் தாய்மொழியான தமிழை அறியாமல் வாழச் செய்யும் கல்வி முறையும் ஆட்சி முறையுமே இங்கே உள்ளது.
  தமிழர்களின் உழைப்பிலும் செல்வத்திலும் கட்டப்பட்ட கோயில்களில் தமிழர்கள் தமிழுடன் நுழைய உரிமை இல்லை!
  மேல் அறமன்றங்களில் தமிழுக்கு அறம் மறுக்கப்படுகின்றது!
  இசையரங்கங்களில் தமிழிசையைத் தொலைப்பவர்களுக்கே தலைமை!
  ஊடகங்களில் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாக ஆக்குபவர்களுக்கே வாய்ப்பு!
  கலைத் துறைகளிலும் தமிழ், கொலை செய்யப்படுவதைத் தடுப்பாரில்லை!
 தமிழாய்ந்த தமிழர்க்குத் தமிழ்த் துறைகளில் இடமில்லை!
தமிழே அறியாமல் தமிழ்நாட்டில் படிக்கவும் பணியாற்றவும் முடியும் என்பதால் பணியிடங்களில் தமிழைக் காண இயலவில்லை! உணவகங்கள், பிற கடைகள், தெருக்களிலும் இதே அவல நிலை!
பிற மொழி எழுத்துகளையும் பிற மொழிச் சொற்களையும் கலந்து தமிழை இது வரை அழித்தது போதாது என மேலும் அழிக்கும் தமிழ்ப் பகைவர் கூட்டத்தினரின் மேலாதிக்கமே எங்கும்!
  தனியர் உரிமை  என்பது மன்பதையின்  ஊடாகவே திகழவேண்டும் என்கிறார் காரல் மார்க்சு. இங்கோ தனியர் உரிமை என்பது மன்பதைக்கு எதிரான செல்வரின் கயமையாகவே உள்ளது. எனவே, செல்வத்தில், கோடியில் புரளுவோர் எல்லா உரிமைகளையும் தங்களுக்கு வாய்ப்பாகப் பெற்றுச் செழிக்கின்றனர்! பிறர் தெருக்கோடியில் புரண்டு அல்லலுறுகின்றனர்!
  இங்கே உரிமை  என்பது ஆட்சியாளர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பெருஞ்செல்வர்களுக்கும் மட்டுமே என்பதே இலக்கணமாகிவிட்டதால் உண்மையான உரிமையை மக்கள் துய்க்க இயலவில்லை!
  தாய்மொழியில் கல்வி பயிலக்கூடப் போராட வேண்டி உள்ளது இங்கே! போராடியும் பயனற்ற நிலையே நிலவுகிறது இப்பொழுதும்! இதனால் உண்மையான அறிஞர்கள் இங்கே உருவாக முடியவில்லை! ஆங்கிலேயரை அகற்றிவிட்டு அவர்களின் ஆங்கிலத்தை ஏந்தி வாழும் சூழலில் தாய்மொழி அரியணை ஏறுவது எங்ஙனம் முடியும்? தமிழ்நாட்டில் தமிழ் எங்ஙனம் ஆள முடியும்?
 பிற இனத்தவரை வரவேற்கும் தமிழ்நாட்டில் தமிழின மக்களுக்குச் சிறைக் கொட்டடியைவிட மோசமான சிறப்பு முகாம்களே கட்டாயப் புகலிடம்! தமிழுக்கும் தமிழர்க்கும் குரல் கொடுத்துக்கொண்டே மறுபுறம் இன்னல் விளைவிக்கும் இழிநிலை!
“தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்”
தமிழர்க்குத் தலைவர்களாம்!
தமிழைக் காக்கும் தகைமையாளர்களாம்!
“விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன்
வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!”
எனக் கவிஞர் சீனி நைனா முகம்மது கொண்ட கவலை நீங்கும் நாள் எந்நாளோ?
  இந்த நிலை மாறாமல் நாம் விடுதலை இன்பத்தைத் துய்ப்பது எவ்வாறு?
  இவ்வாறு உரிமையற்ற நாட்டில் வாழ்ந்துகொண்டு, உரிமை பெற்றதாக விடுதலை நாளைக் கொண்டாடும் கீழ்மையை அடுக்கிக் கொண்டே போகலாம்! ஆனால், இதற்கெல்லாம் காரணம் மக்களாகிய நாமும்தான்! நாம் நம்மளவில் பிறர் உரிமைகளை மதிப்பவர்களாகவும் ஊழலற்றவர்களாகவும் நேரிய வழியில் உழைப்பவர்களாகவும் ஊழலுக்கு இடம் தராதவர்களாகவும் இருந்தால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பபடும் ஆட்சியாளர்களும் அவ்வாறுதானே அமைவர்!
“மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் ச
மானமாக வாழ்வமே!”
என்றும்
“எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்”
என்றும் மாக்கவி பாரதியார் கண்ட கனவை நடைமுறைப்படுத்துவோம்! சாதி,சமய வேறுபாடற்ற ஏழை, செல்வர் பாகுபாடற்ற, எல்லார்க்கும் எல்லாம் எளிதில் கிடைக்கும் விடுதலை நாடமைய உழைப்போம்!
  எனவே, நம்மைத் திருத்துவோம்!
  உண்மை விடுதலையை எய்தும் வகையில் ஆட்சியை அமைப்போம்! உண்மையான விடுதலை நாளை அடுத்த ஆண்டில் கொண்டாடுவோம்!
 webdunai-muthirai-logo
 
 

எப்படி விடுதலை நாளாகும்? – ஆ.சு.மணியன்


indiyakodi-flag

எப்படி விடுதலை நாளாகும்?

வாழ்க்கையில் குறையில்லாத மனிதனில்லை. சில குறைகளை முயன்றால் போக்கிவிடலாம்.
குறை என்னவென்று சொன்னால்/முறையிட்டால்தானே தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம்.
உலக அளவில் தமிழன்மட்டும்தான் தாய்மொழியில் குறையைச் சொல்ல/முறையிட முடியாது என்றால் எப்படி விடுதலை நாளாகும்?
இரண்டாம் உலகப்போரில் மொழிவழிவிடுதலை வழங்கப்பட்டன. ஆனால் உலகின் முதன்மொழியான செம்மொழித்தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்கள் தமிழர்நாட்டில் இருக்கின்றனர். உலகின்   அன‌ைத்து நாட்டிலும் தமிழர் இருக்கிறனர். ஆனால் தமிழுக்கும் தமிழனுக்கும் விடுதலை இல்லை. உலகப்பொதுமறை வழங்கிய இலக்கிய இலக்கணமுடைய தமிழில் குறையை முறையிடும் உரிமை வழங்கப்படவில்லை என்றால் எப்படி விடுதலைநாளாகும்?
வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான் என்று போராடிக் கொள்ளைக்காரனிடம் இன்றுவரை அடிமையாகத் தமிழன் இருக்கும்போது எப்படி விடுதலை நாளாகும்?
 தமிழனை, ஈழத்தமிழனை அழித்திட வேண்டும் என்பதில் ஒன்றிய இந்தியாவின் நடுவணரசு காட்டும் கவனம், வேகம் இப்போது மீயுயர் முறைமன்றத்தில் பார்க்கிறோமே! அடிமையாக்கத் துடிக்கும் வட நாட்டானை / இந்திக்காரனை அடிமையாக வைத்திருக்கும் திராவிடனை விரட்டும் நாளே விடுதலை நாள். தமிழ்நாட்டில் தெலுங்கு மலையாள கன்னடனுக்குப் பிறந்தவர்களுக்கு,   வடநாட்டானுக்கு, ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்களுக்கே ஆகத்து 15விடுதலை நாள். தமிழர்களுக்கு மீண்டும் அடிமையானநாள். எனவே தமிழர்களுக்கு மகிழ்ச்சியில்லை.
முறைமன்றத்தில் தமிழில் முறையிடவேண்டும் தமிழில் கல்வி கற்க/ கற்பிக்கப்பட வேண்டும். வடநாட்டானை, திராவிடனை வெளியேற்றி தமிழன் ஆட்சிக்கு வரும்நாளே விடுதலை நாளாம் என்கிறோம்.
பெரியார் ஆகத்து15ஐ விடுதலைநாள் இல்லை என்றது இன்றும் பொருந்துகிறது.
தாய்மொழி போற்றாதஅரசு ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டரசுதான். ஏன்.தமிழர்நாட்டை ஆள்வது திராவிடன் எனும் தெலுங்கு மலையாள, கன்னடனே! தமிழனை இந்து என்றும் திராவிடன் என்றும் குழப்பி தமிழனாக வாழவிடவில்லை. தமிழர்களாகிய நாம் தமிழரென விழித்து ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெறுவோம்.
தமிழன் ஆட்சிக்கு வரும் நாளே விடுதலைநாள். கோடிக்கணக்கான தமிழர்கள் இருப்பதால் அத்தமிழர்கள் தமிழனுக்குத் தேர்தலில் வாக்களித்தால் வெற்றி உறுதி என்கிறோம்.
– ஆ.சு.மணியன், திருத்துறைப்பூண்டி
9976712362 / 9751160989