வெள்ளி, 6 நவம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-157: யாழ்ப்பாணத்துக்குப் பொருளாதாரத் தடை!



இலங்கை அரசு ராணுவத்துக்காக மட்டும் தினந்தோறும் 4 கோடி ரூபாய் செலவிடுகிறது. இந்தச் செலவு என்பது, தமிழர்களை ஒடுக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனைச் சமாளிக்க கொரில்லா யுத்தம் தொடங்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் கொண்ட ஓர் இயக்கமாக, அமைப்பாக, மரபுவழி ராணுவமாக உருமாற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான மாதச் செலவு 6 கோடி ரூபாய் ஆகிறது. ஸ்ரீலங்கா ராணுவச் செலவு மாதம் ரூ.125 கோடி என்றால், அதைப் புலிகள் ரூ.8 கோடி ரூபாய் செலவில் சாத்தியப்படுத்த முனைவது எவ்வாறு? புலிகளின் விடுதலைப் போராட்டத்துக்கான நிதி, அம் மக்களிடமிருந்தே திரட்டப்பட்டது. இந்த நிதியை அவர்கள் "மண்மீட்பு நிதி' என்று அழைத்தனர். தமிழீழ மண்ணில் குறிப்பிட்டப் பகுதியை, தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக வைத்திருந்தாலும், ஒரு சுதந்திர அரசை அவர்கள் இன்னும் நிறுவவில்லை. அதனால், அரசு ரீதியான நிதி வளங்களை வேறு நாடுகளில் இருந்து திரட்ட முடியாது. சொந்த மக்களின் வளங்களும் விவசாயம் செய்ய முடியாமல், தொழில் நடத்த வழியில்லாமல், அழிக்கப்பட்டு, முடக்கப்பட்டு விட்டதால், அவர்களிடம் பெரிய அளவில் தொகையைப் பெறுவது என்பதும் முடியாது. இது குறித்து, பழ.நெடுமாறன் தனது நூலில், "வசதியும் வாய்ப்பும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இரண்டு பவுன் தங்கம் அல்லது ஆயிரம் ரூபாயை மண்மீட்பு நிதிக்கு அளிக்குமாறு புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். இது நன்கொடை அன்று. மாறாக, மக்கள் அளிக்கும் இந்தத் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் புலிகள் அதற்கான கடன் பத்திரங்களை அளிக்கிறார்கள். கடனாகப் பெறப்படும் இந்த இரண்டு பவுன் தங்கமானது, பின்னர் அவர்களுக்கே திரும்ப அளிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 100 கடன் பத்திரங்களுக்குரிய தங்கம் அவ்வாறு திரும்ப அளிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ள அவர், இந்த மண்மீட்பு நிதிக்கு, உதவி அளிக்க மக்கள் பெருமளவில் முன்வந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். "விடுதலைப் புலிகளால் கொடுக்கப்படும் மீளக்கொடுப்பமைவுப் பத்திரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ மீட்பு நிதி பத்திரச் சான்றில், நிதிப் பொறுப்பாளர் என்ற இடத்தில் தமிழேந்தியும், விடுதலைப் புலிகள் தலைவர் என்ற இடத்தில் வே.பிரபாகரனும் கையெழுத்திட்டிருந்தனர். இந்த நிதியைக் கட்டாயப்படுத்திப் பெறவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள வசதியற்றவர்களை ஒதுக்கிவிட்டு, வசதிமிக்க 1 லட்சம் குடும்பத்தினரிடம் மட்டுமே இந்த நிதி பெறப்பட்டது என்றும் இந்த நிதியை புலிகள் திருப்பித் தரமாட்டார்கள் என்று வதந்தியும் பரப்பப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தங்கத்தைத் தர மக்களிடையே தயக்கம் இருந்தது. ஆனால் மாதந்தோறும் 100 குடும்பங்களுக்கு அந்தக் கடன் திரும்பக் கொடுக்கப்பட்டது. அப்போதும் வதந்திகள் வேறுவகையாகக் கிளம்பியது. அதிகம் பெறவே, திரும்பக் கொடுக்கிறார்கள் என்ற பிரசாரத்தைக் கிளப்பினர். அவர்களிடம் நிலைமை விளக்கப்பட்டது என்றும் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். இதையெல்லாம் மீறி அந்த மண்மீட்பு நிதிக்குப் பெருமளவில் தங்கம் குவிந்தது என்கிறது புலிகள் வெளியீடு. இலங்கை அரசு, ராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாது எனக் கருதி, ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடையை பிரேமதாசா அரசு மேலும் இறுக்கியது. ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட உணவுப் பொருள், மளிகைச் சாமான்கள், உயிர்காக்கும் மருந்துப் பொருள்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எண்ணெய் வகைகள், சோப்பு வகைகளுடன் மேலும் பல பொருள்களின் தடை பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் (1) ஆயுதங்கள், (2) வெடிமருந்துகள், (3) விளையாட்டுத் துப்பாக்கிகள், (4) மின்சார வயர்கள், (5) தூரத்துக் கட்டுப்பாட்டுக் கருவிகள், (6) மின்.எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருள்கள், (7) தலைக் கவசங்கள், (8) நுணுக்குக் காட்டிகள், (9) தொலைநோக்குக் கண்ணாடி (டெலஸ்கோப்), (10) காம்பஸ், (11) பாதுகாப்புப் படையினரின் உடைகளையொத்த துணிவகைகள், (12) இரும்புகள், இரும்புக் கம்பிகள், (13) அலுமினியம், அலுமினியப் பொருள்கள், (14) சாக்குப் பைகள், (15) சிமெண்ட், (16) சைக்கிள் ரேசர்கள், (17) மரங்கள், (18) முட்கம்பிகள், (19) கம்பி வெட்டும் கருவிகள், (20) தீப்பற்றும் பொருள்கள், (21) கற்பூரம், (22) நிலக்கரி, (23) யூரியா உரம், (24) சகலவகையும் சார்ந்த பேட்டரிகள், (25) வானொலி உதிரி பாகங்கள், (26) மின்கருவிகள், (27) பிளாஸ்டிக் கேன்கள், (28) மோட்டார் வாகன டயர்கள், (29) மோட்டார் வாகன உதிரி பாகங்கள், (30) மோட்டார் சைக்கிள்கள், (31) அச்சிடும் தாள்கள் (எல்லாவகையும்), (32) அச்சு இயந்திரங்கள், அதன் பாகங்கள் மற்றும் அதன் உபயோகப் பொருள்கள், (33) ஜெராக்ஸ் போன்ற பதிவு எந்திரங்கள், (34) பாடசாலைப் பைகள், (35) தங்கம், கட்டியாகவும் நகைகளாகவும், (36) மதுபானங்கள், (37) மேலும் சில உயிர்காக்கும் மருந்துகள், மற்றும் அறுவைச்சிகிச்சைக் கருவிகள் (ஆக்ஸிஜன் உள்ளிட்டவை), (38) உராய்வுப் பொருள்கள், (39) பாலிதீன் பைகள் எல்லாவகையும், (40) மெழுகு, மெழுகுவர்த்திகள், (41) டர்பென்டைன் போன்ற பொருள்கள், (42) அனைத்து வகை சோப்புகள், (43) அனைத்துவகை ரசாயனப் பொருள்கள், (44) சோயா-புட்டியில் அடைக்கப்பட்ட உணவுகள், (45) இனிப்பு வகைகள் ஆகியவை யாழ்ப்பாணம் உள்ளிட்டவை வடக்கு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கோ ஆயுதங்கள் (வெடிகுண்டுகள்), வெடிமருந்துகள், யூரியா உரம் மட்டும் தடை என்றும் அறிவிக்கப்பட்டது. தடை செய்யப்பட்டப் பொருள்கள் வவுனியா பிரதேசத்திலிருந்து, ஆனையிறவைத் தாண்டிச் செல்வது என்பது குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதையும் மீறி எடுத்துச் செல்கிறவர்கள் தேசிய விரோதிகள் என்றும் தண்டிக்கப்பட்டார்கள். இவ்வாறு பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி, யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கூட்டுத்தண்டனையை பிரேமதாசா நிர்வாகம் மேலும் இறுக்கியபோதிலும், யாழ்ப்பாணவாசிகள் இதுபற்றி அஞ்சவில்லை. இதுகுறித்து வே.பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது ஈழத்தமிழர்கள் இரு யுத்தங்களை ஒருசேர நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முதலாவது, எமது தாயகத்தை எதிரிகளிடமிருந்து மீட்பதற்கான விடுதலைப் போராட்டம். இரண்டாவது, போதிய உணவை உற்பத்தி செய்து, பொருளாதாரம் என்ற பெயரில் சிங்கள அரசால், உணவுப் பொருள்களை வடக்கு-கிழக்குக்கு அனுப்புவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை முறியடிப்பது. இந்த இரு போராட்டங்களிலும் நாம் வெற்றி பெற்று எமது லட்சியமான தமிழீழத்தை அடைவோம் என்பதில் உறுதியுடன் இருக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஆங்கிலேய ஆட்சியில் தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்களை அறிமுகம் செய்து, அவர்களின் நிர்வாக வசதிக்காக தமிழீழத்தையும் மற்ற பகுதிகளையும் ஒருங்கிணைத்து, கொழும்பு நகரை உணவுச் சந்தைப்படுத்தலின் பிரதான மையமாக்கினர் என்றும், ஆங்கிலேயரைத் தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளும் தமிழர்கள், தமிழ்ப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கொழும்பில் தங்கி வாழும் தன்மையை ஊக்கப்படுத்தினர் என்றும், இவர்களின் முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தை கொழும்பில் உள்ள நிறுவனங்கள் மூலம் பெறுகிறவரை, விடுதலைப் போராட்டம் வெற்றிபெற முடியாது என சிங்கள இனவெறியர்கள் கருதிச் செயல்படுகின்றனர் என்றும் இதன் காரணமாகவே விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுகிற நிலையை அடையும்போதெல்லாம் ஸ்ரீலங்கா அரசு பொருளாதாரத் தடையை எமது பகுதிகள் மீது விதிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். "இதனைச் சமாளிக்க உணவு உற்பத்தி மற்றும் எல்லாவகையிலும் தன்னிறைவு அடைதல், தமிழீழத்தை அடைவதற்கான மிக அத்தியாவசிய முன்தேவையாக உள்ளது' என்றும் அவர் அவ்வறிக்கையில் வலியுறுத்தியிருந்தார். இதன்படி, பொருளாதாரத் தடையை முறியடிக்க உணவுப் பொருள் தேவையில் 30 சதவீதத்தை தமிழீழப் பகுதியில் உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வென்றனர். அந்நிலையிலும் பற்றாக்குறை அவர்களை மேலும் நிர்பந்திக்க, உணவு உற்பத்தியில் மேலும் தீவிரம் காட்டினர். கல்விக்கான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலையிலும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் மின்சக்தி பெற சைக்கிள் டைனமோ முறையும், விளக்கெரிய திரி விளக்குகளும் பயன்படுத்தப்பட்டன. சவக்காரத் தடையைப் போக்க, பனம்பழச்சாற்றைக் கொண்டு உடைகளைச் சலவை செய்தல் உள்ளிட்ட பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி வென்றனர்.நாளை: போராட்டம் தொடர்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக