சனி, 29 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2

 




 (தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1. தொடர்ச்சி)

ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2

ஆனால் அப்போது என் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஊர்ப்புறத்தில் தங்கி மக்களோடு வாழ்ந்து மக்களோடு உழைக்க வேண்டும் என்ற தலைமையின் கட்டளையை ஏற்று அப்போதுதான் சில நாளாய்க் கூலிக்குக்  கரும்பு வெட்டப் போய்க் கொண்டிருந்தேன். வெட்டத் தெரியாமல் வெட்டிக் கரும்புத் தோகைகள் உடலெங்கும் கோடு கிழித்திருந்தன. கடின உழைப்புக்குப் புதியவன் என்பதால் உடம்பு கொதித்து வயிற்றுப் போக்கு வேறு வாட்டிக் கொண்டிருந்தது. இதை அறிந்ததும் புலவர் “சரி, நீங்கள் போய் உடம்பைச் சரிசெய்து கொண்டு சிலநாள் கழித்து வாருங்கள்!” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

புலவருக்குக் கடிதம் கொடுத்து என்னை அனுப்பிய தோழர் ஏ.எம்.கே. “நீங்கள் நேராக அங்கே செல்ல வேண்டா, அண்ணாமலையில் கணேசனைப் பார்த்துக் கொடுத்துவிட்டுக் காத்திருங்கள். அவர் ஒரு மாணவரை அனுப்பி பதில் வாங்கித் தருவார்” என்று கூறியிருந்தார். ஆனால் கடிதம் கொண்டு போன மாணவரிடம் வலியுறுத்திச் சொல்லி என்னை ஊருக்கே வரவழைத்து விட்டார் புலவர். ஏன் அப்படிச் செய்தார்? ஏன் என்னைத் தங்கச் சொன்னார்? ஏன் உடம்பை சரிசெய்து கொண்டு சில நாள் கழித்து வரச் சொன்னார்? இந்த வினாக்களுக்கு அப்போது எனக்கு விடை தெரியவில்லை. அவ்வளவு ஏன், இந்த வினாக்கள் அப்போது மனத்தில் எழவேயில்லை என்பதுதான் உண்மை.

தென்னந்தோப்பில் வெடிகுண்டு செய்யும் போது நிகழ்ந்த விபத்தில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் மூவரும் உயிரிழந்து புலவரும் காயமடைந்த செய்தி நீண்டநாள் கழித்து வெளிப்பட்ட போது, தோழர் ஏ.எம்.கே.யிடமிருந்து நான் பெற்ற விளக்கம் மேற்சொன்ன வினாக்களுக்கு விடை தந்தது.

பெண்ணாடம் பகுதியில் புலவர் திட்டமிட்டிருந்த ‘அறுவடை இயக்க’த்திலும் பிறவற்றிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு பங்கு இருந்தது. என்னையும் பங்கு பெறச் செய்யும் புலவரின் எண்ணம் ஈடேறாமலே போயிற்று. (ஈடேறியிருந்தால் இந்தக் கதையைச் சொல்ல நான் இருந்திருக்க மாட்டேன்.)

புலவரிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்று சௌந்தரசோழபுரத்திலிருந்து புறப்பட்டு, அப்போது நான் தங்கி இயக்கப் பணி செய்து கொண்டிருந்த பெரும்பண்ணையூருக்குச் சென்று விட்டு சிலநாளில் சோழநம்பியாரைப் பார்க்க அதிராம்பட்டினம் சென்றேன்.

அப்போது அவர் அங்கு விடுதியில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். வள்ளுவன் சேர்ப்பிக்கச் சொன்ன கடிகாரத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். அவர் எங்கள் அரசியல் குறித்து நிறையக் கேள்விகள் கேட்டார். எங்கள் நிலைப்பாடு அவருக்குச் சரியாகப் படவில்லை என்று புரிந்து கொண்டேன்.

… அதே வள்ளுவன். அதே நம்பி என்னோடும் புலவரோடும் சிறைத் தோழர்களாக இருந்து போராடிய நினைவுகளின் சுமையோடு நிகழ்காலத்துக்கு வருகிறேன். ஓய்வறியாத புலவர் இறுதியாக ஓய்வு கொண்டு விட்டதைக் காணவும், அவரது இறுதிப் பயணத்தில் நடக்கவும் நூற்றுக்கணக்கான தோழர்கள் பழையவர்களும் புதியவர்களுமாய், முதியோரும் இளையோருமாய் வந்து குவிந்து கொண்டிருகிறார்கள். அவர்களுக்கிடையே வள்ளுவனும் நம்பியும் ஓடியாடி இறுதிப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். யாரும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கவில்லை. அவர்களும் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

அவர்களுக்கு அப்பா, மற்றவர்களுக்குத் தோழர், தலைவர் என்ற வேறுபாடே இல்லை. எல்லோருக்குமே புலவர், அவ்வளவுதான். வள்ளுவனும் நம்பியும் மட்டுமல்ல, இதோ தமிழரசி, இதோ கண்ணகி, அதோ அஞ்சுகம்! அடுத்தடுத்த தலைமுறைகளும் வந்து விட்டதன் அடையாளமாக இளைஞர்கள், சிறுவர், சிறுமியர், சின்னக் குழந்தைகள்! ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யார் யார் என்று எனக்கே தெரியவில்லை. 

வசந்தத்தின் இடிமுழக்கம் என்று சாரு மசூம்தாரால் வருணிக்கப்பட்ட நக்குசல்பாரிப் புரட்சி தமிழகத்தில் எதிரொலித்த போது அதைப் போருக்கான அழைப்பாக ஏற்று களமிறங்கிய முன்னோடிகளில் ‘புலவர்’ கலியபெருமாளும் ஒருவர். தமிழில் புலவர் படிப்பு படித்தவர் என்பதால் இயக்கத் தோழர்கள் அவரைப் புலவர் என்றார்கள். சில காலம் ஆசிரியப் பணி செய்ததால் மக்கள் அவரை ‘வாத்தியார்’ என்றார்கள்.

மாணவப் பருவத்திலிருந்தே புலவரின் போராட்ட வாழ்க்கை தொடங்கி விட்டது. மயிலம் கல்லூரி விடுதியில் வீரசைவ மாணவர்களுக்கும் மற்றப் பிரிவு மாணவர்களுக்கும் இடையில் சாதிப் பாகுபாடு காட்டியதை எதிர்த்துக் கலியபெருமாள் போராடினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்துகள்பால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டதுதான் அவரது அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. ஐம்பதுகளின் தொடக்கத்தில் பொதுமை இயக்கம் கடும் அடக்குமுறைக்கு உள்ளாகிக் கீழத் தஞ்சையில் களப்பால் குப்பு, இரணியன், சிவராமன் போன்றோர் இன்னுயிர் ஈந்தனர். பொதுமை இயக்கத்தின் ஈகமும் வீரமும் இளம் கலியபெருமாளைச் சிவப்பின் பக்கம் ஈர்த்தன.

1952 – 54 காலத்தில் பெண்ணாடம் பகுதியில் இரட்டைக் குவளை முறை, முடிதிருத்தகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிதிருத்த மறுப்பது போன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தைப் புலவர் முன்னின்று நடத்திய போது பொதுவுடைமைக் கட்சி அவருக்குத் துணை நின்றது. அந்தப் போராட்டங்கள் வெற்றி பெற்றதோடு புலவரும் பொதுமைக் கட்சியில் சேர்ந்து விட்டார்.

நக்குசல்பாரி இயக்கத்தைத் தமிழ்நாட்டில் கட்டுவதற்காக ஈகம் செய்தவர்கள் பலர். ஆனால் ஒரு குடும்பம் முழுவதுமே அதற்காக ஈகம் செய்ததென்றால் அது புலவரின் குடும்பமே!

குடும்பம் என்றால் அவருடைய மனைவி மக்கள் மட்டுமல்ல, புலவர் எடுத்த முயற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதற்காக எல்லா வகையிலும் இன்னலுற்றவர் அவரது மனைவியின் அக்காள் அனந்தநாயகி.

“மாணவர்கள் படிப்பையும் குடும்பத்தையும் துறந்து ஊர்ப்புறத்துக்குச் சென்று ஆயுதப் புரட்சிக்கு உழவர்களைத் திரட்ட வேண்டும்” என்ற சாரு மசூம்தாரின் அழைப்பைத் தமிழ்நாட்டில் ஏற்று வெளியே வந்த முதல் மாணவன் நான். வெளியே வந்த சில நாளில் (1969 அட்டோபரில்) நான் முதன்முதலாகப் புலவரைச் சந்தித்தது அனந்தநாயகி அவர்களின் கொடுக்கூர் இல்லத்தில்தான். தஞ்சை மாவட்டம் ஆடுதுறைக்கருகில் குமணந்துறையில் இயக்கத்தின் முதல் மாநாடு இரகசியமாய்க் கூடிய போது எல்லா ஏற்பாடுகளையும் செய்து விருந்தோம்பியவர் ‘பெரியம்மா’ அனந்த நாயகிதான்.

தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 152

வெள்ளி, 28 ஜூலை, 2023

ஆளுமையர் உரை 58,59 & 60 : தமிழ்க்காப்புக்கழகம்: இணைய அரங்கம்: 30.07.2023

 




எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்- 416)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 58,59 & 60  : இணைய அரங்கம்:

நிகழ்ச்சி நாள்: ஆடி 14, 2054 /30.07.2023  ஞாயிறு

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

தமிழ்மாமணி இதழாளர் கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர்.

இலக்கிய மாமணி பாவலர் பேராசிரியர் சே. பானு ரேகா

திருக்குறள் அருவினையாளர் இளைய ஒளவை முனைவர் தாமரை

நிறைவாக    தமிழ்த்தேசியர் தோழர் தியாகு  

  நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1.

 



(தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இயக்குநர் வெற்றிமாறனின் கலைப் படைப்பாக வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் தமிழ்ப் பரப்பில் பல உரையாடல்களைக் கிளறி விட்டுள்ளது. படத்தின் கதையும் கதைமாந்தர்களும் கற்பனையே என்று தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில கதைமாந்தர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் மெய்யாகவே வாழ்ந்து மறைந்த சிலரை நினைவூட்டுகின்றன. சில நிகழ்வுகளும் அப்படியே!

குறிப்பாகவும் சிறப்பாகவும் பெருமாள் வாத்தியார் என்ற பெயர் தோழர் கலியபெருமாளை மனத்திற்கொண்டே சூட்டப்பட்டது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. வெற்றிமாறனும் இதை மறுத்ததாக எங்கும் காணேன்.

தமிழ்நாட்டில் ‘நக்குசலைட்’ எனப்படும் மா-லெ கட்சியின் தொடக்கக் காலத் தலைவர்களில் ஒருவரான தோழர் கலியபெருமாள் தமிழாசிரியராக இருந்தவர் என்பதால் அப்பகுதி வாழ் மக்களிடையே வாத்தியார் என்று பெயர் பெற்றிருந்தார். இயக்கத்தில் புலவர் என்று மதிப்புடன் அழைக்கப்பெற்றார். இதெல்லாம் தெரிந்தே வெற்றிமாறன் தன் கதைத் தலைவனுக்குப் பெருமாள் வாத்தியார் என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

விடுதலை வெளிவந்த நாள் முதலே அப்படம் குறித்து என் பார்வையைச் சொல்லுமாறு ஊடகர்கள் பலரும் கேட்டு வருகின்றார்கள். நம் தோழர்கள் என்னைத் திரையரங்கிற்கு அழைத்துப் போய்ப் படம் பார்க்கச் செய்தும் விட்டார்கள். நான் வலையொளிகள் பலவற்றிலும் செவ்வியாக என் பார்வையைச் சொல்லியிருக்கிறேன். நீங்களும் கண்டிருக்கக் கூடும். என்னிடம் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் புலவர் கலியபெருமாளைப் பற்றியவைதாம்.

புலவர் மறைந்த நேரத்தில் தமிழ்த் தேசம் ஏட்டில் நான் அவருக்கு எழுதிய அஞ்சலியுரையை ஈண்டு படைக்கிறேன். இது மெய்யான புலவரைப் பற்றியது. பெருமாள் வாத்தியாரைப் பற்றியதன்று.

ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்

ஏறக்குறைய ஒரு திங்கள் முன்பு சென்னையில் தோழர் சோழநம்பியார் இல்லத்தில் தோழர் புலவரைச் சந்தித்தேன். அதற்கு ஓரிரு நாள் முன்புதான் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பியிருந்தார். நான் “புலவர்!” என்று குரல் கொடுத்ததும் படுக்கையில் எழுந்து உட்கார முயன்றார். உடனிருந்த அம்மா வாலாம்பாள், “வாப்பா!” என்று என்னை அழைத்து நாற்காலியில் உட்காரச் சொல்லி விட்டு, “இப்பவெல்லாம் அவருக்கு எதுவும் நினைவிலில்லை.” என்றார்கள்.

புலவர் சிரித்துக்கொண்டே மறுத்தார். அம்மா, “இப்ப எங்க இருக்கீங்க? உங்களைப் பார்க்க யார் வந்திருக்காங்க?” என்று சோதிப்பது போல் கேட்க, புலவர் வெற்றிப் புன்னகையுடன் சொன்னார்: “தெரியுமே! சென்னையில நம்பி வீட்டில் இருக்கிறேன். தியாகு என்னைப் பார்க்க வந்திருக்கிறார்!”

அம்மாவிடம் நலம் விசாரித்துக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து ‘தமிழ்த்தேசம்’ புதிய இதழைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டேன். அதுவே புலவருடன் என் கடைசிச் சந்திப்பாகி விட்டது.

சென்ற 16-5-2007 காலையில் வழக்கறிஞர் அரிபாபுவிடமிருந்து “புலவர் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது” என்று செல்பேசிக் குறுஞ்செய்தி வந்தது. அன்று மாலை 5 மணியளவில் அவரிடமிருந்தே மற்றொரு குறுஞ்செய்தி – ‘புலவர் கு. கலியபெருமாள் மறைந்தார்’. 18-5-2007 வெள்ளி காலை 8 மணியளவில் பெண்ணாடம் அருகே சௌந்தரசோழபுரம் கிராமத்தில் புலவரின் உடலருகே நின்று வணங்குகிறேன். அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்த அம்மா என்னை மற்றவர்களிடம் “தியாகு” என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.

இதே வீடு, இதே இடம்… இங்குதான் 1970 சனவரியில் ஒருநாள் கட்டிலில் புலவருக்கருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டில் அவருடன் அம்மாவும் வள்ளுவனும் இருந்தார்கள். புலவர் வள்ளுவனை அழைத்து என்னிடம் அறிமுகப்படுத்தி, “இவனுக்கு ஒரு சந்தேகம், நீங்களே தெளிவு படுத்துங்கள்” என்றார். வள்ளுவனை என் அருகில் உட்காரச் சொல்லி “கேளுங்கள்” என்றேன்.

“அப்பா முழுமையாக இயக்கத்துக்கே போய் விட்டார். நீங்களும் இயக்கத்துக்கு வந்து விட்டதாகச் சொல்கிறார். எங்களையும் இயக்கத்தில் ஈடுபடச் சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் இயக்கத்திற்கே போய் விட்டால் குடும்பம் என்னாவது?”

வள்ளுவனுக்கு நான் பதில் சொன்னேன். “புரட்சி என்பது சமூக மாற்றத்துக்காகத்தான். சமூக மாற்றம் நடந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருக்க முடியும். புரட்சியின் நன்மைகள் நம் குடும்பங்களுக்கும் சேர்த்துதான்.”

என் விளக்கம் புலவருக்குப் பிடித்திருந்தது.

“நீங்கள் தலைமறைவாய் இருப்பதாகச் சொன்னார்கள். இப்படி வீட்டிலேயே இருக்கிறீர்களே?” என்று புலவரைக் கேட்டேன். அவர் சிரித்தார்.

“ஆமாம், தலைமறைவுதான். ஆனால் இந்த ஊர் நமக்குத் தளப் பிரதேசம் போல. எல்லாரும் நம் மக்கள்தான். காவலர் வந்தால் உடனே தகவல் கொடுத்து விடுவார்கள். நான் பின்பக்கமாக எழுந்து போய்விடலாம்.”

பின்னால் திரும்பிப் பார்த்தேன். விரிந்த வயல்பரப்பு தெரிந்தது. பின்பக்கம் வாசல், கதவு என்று எதுவுமில்லை.

… அந்தப் பழைய நினைவுகளோடு நிகழ்காலத்துக்கு மீள்கிறேன். இப்போதும் அந்த வீடு அப்படியேதான் இருக்கிறது – இந்த 38 ஆண்டுகளில் மேலும் இடிந்து மேலும் சிதலமாகிக் கிடப்பதைத் தவிர!

காலம் அரித்த சுவர்களுக்கிடையே, கலகலத்து நொறுங்கிய ஓடுகளின் கீழே, அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரன் உறங்குகிறான் – முடிவாக!

… அந்த முறை புலவர் என்னை “சில நாள் இருந்து விட்டுப் போகலாமே?” என்றார். “உங்களிடம் இருந்து பதில் வாங்கிக் கொண்டு போய் பெரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டுமே?” என்றேன். பெரியவர் என்றால் தோழர் ஏ.எம். கோதண்டராமன், சுருக்கமாக ஏ.எம்.கே. “அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் புலவர்.

தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 152

வியாழன், 27 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

வைக்கோல் போரில் மாடு படுத்துக் கிடக்க நியாயமுண்டு. ஆர்.எசு.எசு. ஆளுநர் ஆர்.என். இரவி படுத்துக் கிடக்க நியாயமே இல்லை. வைக்கோல் போரில் படுத்துக் கிடக்கவே நியாயமில்லை என்றால், சட்டப் பேரவை இயற்றும் சட்டமுன்வடிவுகளைக் கீழே போட்டு ஏறிப் படுத்துக் கிடக்க ஏது நியாயம்?

ரவியின் அடாவடித்தனத்தால் முடங்கிக் கிடக்கும் முன்முயற்சிகளில் ஒன்று சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்னெடுப்பாகும். இது குறித்து சித்த மருத்துவப் பேரியக்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அவர்கள் கேட்டுள்ள வடிவில் ஆதரவு தாருங்கள், தமிழர்களே!

சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்

சித்த மருத்துவம் – தமிழர்களின் மாபெரும்  பண்பட்ட வாழ்வியலின் மருத்துவப்  பேரறிவு ஆகும்.

தமிழர்களின் நாகரிகம். பண்பாடு, மொழி, இலக்கியம் போன்றவை எவ்வாறு  சிறப்புற்று விளங்குகின்றனவோ அதே போன்று சிறப்பு மிக்கதே சித்த மருத்துவம். 

சித்த மருத்துவம்  பல ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் மருத்துவமாக  விளங்கி வருகிறது .உலகளாவிய நோய்த்தொற்று பரவும் (CORONA, Dengue) இக்காலங்களில் கூட மிகச் சிறப்பாகச் செயல்பட்டு  மக்களைக் காத்து  வருகிறது.

ஆனால் நவீன அறிவியல் உகத்தில் சித்தமருத்துவம் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள, மெய்ப்பிக்க உயர் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவை அடிப்படைத் தேவைகளாக உள்ளன. 

அதனடிப்படையில் சித்த மருத்துவர்கள் மற்றும் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதுவே சித்த மருத்துவத்திற்கென்று அமையப்போகும் முதல் பல்கலைகழகம் ஆகும். ஆனால்  அருத்தமற்ற காரணங்களுக்காகத்  தமிழக ஆளுநர். திரு ஆர்.என். இரவி அவர்கள் இந்தப் பல்கலைகழகச் சட்ட வரைவிற்கு ஒப்புதல் அளிக்காமல்   இரண்டு ஆண்டுக் காலமாகக் காலந்தாழ்த்தி வருகிறார்.

மிக நீண்ட காலம் கிடப்பில் வைக்கப்பட்டுள்ள  வரைவுகள் ‘இறந்ததற்கு’ச் சமம் என்று  தன்னிச்சையாக அறிவிக்கிறார்.

அவரின் இத்தகைய செயல் சித்த மருத்துவர்கள்,  ஆர்வலர்கள் மற்றும் உலகத்  தமிழ் மக்களிடையே பெரும்  அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இச்சூழ்நிலையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டி  நாம் அனைவரும்  உலகம் தழுவிய சில செயல்பாடுகளை முன்னெடுப்பது நம் கடமையாக உள்ளது  . 

அந்த வகையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு விரைவில் ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி ஆளுநர் அவர்களிடம் கோரிக்கை வைக்கும் விதமாகவும்,  உலகத்  தமிழ் மக்கள் சித்த மருத்துவப் பல்கலைகழகத்தை எந்த அளவிற்கு எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிவிக்கவும் ஒரு ONLINE VOTING METHOD சித்த மருத்துவப் பேரியக்கத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய கோரிக்கைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் Change.org என்ற இணையத்தளத்தில் பதியப்பட்டுள்ளது. 

நம் கோரிக்கைகளை வாசித்து விட்டுச் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக  நாம் அனைவரும் வாக்களித்தால் போதுமானது!!

தாங்கள் சார்ந்த அமைப்புகள், இயக்கங்கள், நண்பர், சுற்றத்தார் போன்றோர்களையும் ஆதரவு அளிக்க   வேண்டுகிறோம்.

இந்திய, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு , ஆத்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் உலகெங்கும் உள்ள  தமிழர்களிடம்  தங்கள் மேலான ஆதரவை    வாக்களித்துத் தெரிவிக்க வேண்டுகிறோம் .  உலகம் தழுவிய தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து  சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை அமைத்திடுவோம் –  உறுதியாக!

 தமிழால் இணைவோம் !

சித்த மருத்துவப்  பல்கலைக்கழகம்   அமைப்போம்!

தொடர்புக்கு:

மின்வரி :globalsiddhasociety@gmail.com

மரு.விசய் விக்கிரமன் : 98943 08584

பேரா.அமலானந்தன் : 94892 35387

மரு.தீனதயாளன் : 9626719626

புதன், 26 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 159 : மௌனத்தின் சொல்வன்மை

 





(தோழர் தியாகு எழுதுகிறார் 158 : மே நாள் விடியல்! தொடர்ச்சி)

மௌனத்தின் சொல்வன்மை


1886 மேத் திங்கள் 4ஆம் நாள் சிக்காகோவின் ஏயங்காடி (Haymarket)யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக 31 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 8 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

இவர்களில் சாமுவேல், பெல்டன், சவாசு ஆகியோருக்கு ஆளுநர் மன்னிப்பு வழங்கினார். உலூயிலிங்கு தூக்குதண்டனைக்கு முதல்நாள் சிறைச் சாலையில் அழிகுண்டு (Dynamite) வெடித்து இறந்தார்.

ஆல்பருட்டு பார்சன்சு, ஆல்காட்டு பைசு(Spies), ஃபிசர், எங்கெல் ஆகிய மற்ற நால்வரும் 1887  நவம்பர் மாதம் 11ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர்.

சிக்காகோவின் குக் கவுண்டி நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கும் இடையில் உள்ள தியர்பார்சன் தெருவின் நடைபாதையில் தூக்குமேடை அமைக்கப்பட்டது.

மறுநாள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை.


முதல்நாள் இரவு தூக்கம் வருமா? அவர்கள் நன்கு உறங்கினார்கள். காரணம் அந்தச் சாவை மகத்தானது என நினைத்தார்கள்.

ஆல்பருட்டு பார்சன் மட்டும் தனக்கு மிகவும் பிடித்தமான பாட்டை பாடிக் கொண்டிருந்தார். காலை எழுந்தவுடன் அவர்கள் விரும்பிய உணவு வழங்கப்பட்டது.

காவலர்கள் “மது வேண்டுமா?” என்று கேட்டனர். பார்சன்சு “இல்லை நான் தெளிவோடு செல்ல விரும்புகிறேன். மிதமான குடிப்பழக்கம் உள்ளவர்கள்  இரக்கத்தால் ஒரு துளி கண்ணீர் சிந்தலாம்” என்றார்.


தூக்கிலிடும் போது கண்ணீர் வரக் கூடாது எனபதில பார்சன்சு உறுதியாக இருந்தார்.  காழ்நீரும் நொறுவையும் (காபியும் பிசுகெட்டும்) கேட்டார். கொடுத்தனர்.

  அருந்தி முடித்தவுடன் பார்சன் “இப்போது நன்றாக  உணர்கிறேன் முடித்து விடலாம்“ என்று  தூக்கிற்கு அணியமானார்.

காலை 11.30 மணிக்கு செரிஃப் மாட்சன்,  சிறைஅலுவலர் ஃபோல்சு, குக்கவுண்டி மருத்துவர்  மற்றும் காவலர்கள் பலர் முன்னிலையில் நால்வரும் அழைத்துவரப்பட்டனர்.

அங்குத் தூக்குத் தண்டனை ஆணை வாசித்துக் காட்டப்பட்டது  தூக்கிலிடுவதைப் பார்க்க  அனுமதிக்கப்பட்ட  200 பேர் கூடியிருக்க, நால்வரும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்தக் காட்சியை நேரில் பார்த்த செய்தியாளர் இவ்வாறு எழுதியுள்ளார்:

“எவ்விதக் கவலையுமின்றி  நால்வரும் அவரவர் இடத்தில் நின்றார்கள். கழுத்தில் மாட்டப்பட்ட கயிற்றைச் சரிசெய்ய ஃபிஷர் உதவினார்.

பைசின் கயிறு இறுக்கமாக இருந்தது. அது சற்று வசதியாகச் சரிசெய்யப் பட்டவுடன் அவர் புன்னகையுடன் “நன்றி“ என்றார்.


பின்னர் பைசு முழங்கினார் “இன்று எங்கள் குரல் நெரிக்கப்பட்டு, மௌனமாக்கப்படுகிறோம். எங்கள் குரலை விடவும் இந்த மௌனம் சொல்வன்மை மிக்கதாக மாறும் ஒரு காலம் வரும்.

“இதுதான் என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம்” என்றார் எங்கெல்.

பார்சன்சு கடைசியாகப்  பேசினார்: “ஓ! அமெரிக்கர்களே! நான் பேசலாமா?  செரிஃபு மாட்சன் அவர்களே, என்னைப் பேச விடுங்கள்! மக்களின் குரல் கேட்கட்டும்!”


பின்னர் மதியத்திற்கு சில நிமிடம் முன்னதாக அடிப்பலகை உருவப்பட்டது.

அச்சமே இல்லாமல் அந்த மாவீரர்கள் சிரித்த முகத்துடனும், பெருமிதத்துடனும் சாவை எதிர்கொண்டனர்.

அடுத்த நாள் அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நவம்பர் 13 ஆம் நாள் தொழிலாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று தியாகிகளின் உடல்களைப் பெற்றுக் கொண்டனர்.

இறுதி நிகழ்வில் 5 இலட்சம் மக்கள் திரண்டனர். ஈகியரின் 5 உடல்களையும் அடக்கம் செய்யும் போது, அவர்களின் வழக்கறிஞர் கேப்டன் பிளாக்கின் இவ்வாறு பேசினார்:

“இங்கே நாம் குற்றவாளிகளின் உடல்களருகே நிற்கவில்லை. அவர்களின்  சாவில் அவமானப்பட எதுவுமில்லை. அவர்கள் சுதந்திரத்திற்காக,  சிந்தனை சொல் செயலில் கட்டற்ற பேச்சுரிமைக்காக, மனித நேயத்துக்காக உயிர் கொடுத்தார்கள். அவர்களின் நண்பர்களாக இருந்ததில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.

(வில்லியம் அடல்மன், “மேநாள் ஈகியரின் மகத்தான வரலாறு”  புத்தகத்திலிருந்து)
தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 176

செவ்வாய், 25 ஜூலை, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 158 : மே நாள் விடியல்!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இன்று அதிகாலை 4.30 –  கைப்பேசி ஒலித்தது. இது நண்பர் சம்ராசின் அழைப்பு. 1974 மே முதல் நாள் இந்த அதிகாலை நேரம் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அனைவரையும் எழுப்பி விட்டு போராட்டத்துக்கு அணியமானதை நினைவு கொள்ளும் அழைப்பு.

தலைவர் ஏசிகே, தோழர் இலெனின், பாலகிருட்டிணன் எல்லாரும் போய் விட்டார்கள். அந்த ஆண்டே பாலகிருட்டிணன் தூக்க்கிலிடப்பட்டார். இடைப்பட்ட ஆண்டுகளில் இலெனின் மறைந்தார். சில ஆண்டுகளுக்கு முன் ஏசிகே போய் விட்டார். சென்ற ஆண்டு ஒண்டிமுத்து இருந்தார். அந்தப் போராட்டத்தில் அவர் வகித்த பங்கு மிகச் சிறப்பானது. சேலத்தில் அவரை  அடித்துக் காலை ஒடித்துத் தூக்கிப் போட்டார்கள்.   

அந்தப் போராட்டத்தில் முனைப்புடன் இயங்கியவர்களில் யாராவது எங்காவது பிழைத்துக் கிடந்தால் போய்ப் பார்க்கலாம். சென்ற ஆண்டு புதுக்கோட்டையில் குருமூர்த்தியைப் பார்த்தேன்.

ஒண்டிமுத்து கடைசி வரை என்னோடு தொடர்பில் இருந்தார். என்னுடனேயே வந்து தங்கி விடும் படி அழைத்துக் கொண்டிருந்தேன். அவருக்கும் ஆசைதான், குடும்பத்தினர் விடவில்லை. பலவித நோய்கள், எல்லாவற்றிலும் கொடிதான வறுமைப் பிணி. ஒரு நாள் வீட்டில் அனைவரும் திருச்செந்தூர் போன போது அவரும் போனார். கடலில் குளித்து விட்டுக் கரையேறிய சற்றைக்கெல்லாம் இதயம் நின்று விட்டது. மகள் செங்கொடி எனக்குத் தகவல் சொன்னார்.

அந்த மே நாள் இன்றும் என்னுள் ஆயிரம் நினைவுகளைக் கிளறி விடும். மே நாள் போராட்டங்களின் வரலாற்றில் இதற்கொரு சிற்றிடம் ஒதுக்கியாக வேண்டும். முன்பு சுவருக்குள் சித்திரங்களில் எழுதியதையே இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

மே நாள் விடியல்!

நேரத்தில் படுத்து நேரத்தில் எழுவது சிறைச்சாலையில் கடைப்பிடிக்கப்படும் விதிகளில் ஒன்று. இரவு 9 மணிக்குப் பிறகு விழித்திருப்பதும் காலை 5 மணிக்குப் பிறகு தூங்குவதும் சிறைக் கட்டுப்பாட்டை மீறுவதாகக் கருதப்படும். சரியாகக் காலை 5 மணிக்கெல்லாம் காவலர்கள் ஒவ்வொரு தொகுதியிலும்  எழு(‘ரைசு’) என்று குரல் கொடுத்துக் கொண்டே செல்வார்கள். 5.30-க்கு வரிசை யில்(‘ஃபைல்’) உட்கார்ந்து விட வேண்டும்.

வரலாற்றில் முத்திரை பதித்த அந்த மே நாளில் (1974 மே 1) திருச்சி மத்திய சிறையில் காலை 4.30-க்கு எழு(‘ரைசு’) என்ற சத்தம் கேட்டது. குரல் கொடுத்தவர்கள் காவலர்கள் அல்லர். கைதிகள். சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கத்தின் முக்கிய ஊழியர்கள்தான் அந்தந்த அடைப்பிலும் கைதிகளை அவ்வளவு சீக்கிரம் எழுப்பி, காலை 5 மணிக்குள் வரிசை( ‘ஃபைல்’) உட்காரச் செய்தார்கள். பிறகு ஒவ்வோர் அடைப்பிலும் ஒருவர் எழுந்து முன்னால் போய் நின்று கோரிக்கை சாசனத்தையும் போராட்ட அறிவிப்பையும் சங்கத் தலைமையின் அறைகூவலையும் ஒன்றன் பின் ஒன்றாய் உரக்கப் படித்தார்.

இருபத்தைந்து அம்சக் கோரிக்கை சாசனம் குறித்து முன்பே சொல்லியிருக்கிறேன். போராட்ட அறிவிப்பின்படி காலவரம்பற்ற உண்ணாவிரதம் தொடங்கும் பதினொருவரின் பெயர்களும் தெரிவிக்கப்பட்டதோடு – பாலகிருட்டிணன், ஏ.சி.கத்தூரிரெங்கன், தியாகராசன் (நான்), ஒண்டிமுத்து, வேலுச்சாமி, சாபர் அலி,  நாகப்பன், சவுடப்பன், பழனிச்சாமி, இருதயராசு, தியாகராசன் (மற்றொருவர்) பெருந்திரள் அடையாள உண்ணாவிரதம், அடையாள வேலைநிறுத்தம், முடிவில் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் ஆகியவற்றுக்கான தேதிகள் குறிக்கப்பட்டிருந்தன. சங்கத் தலைமையின் அறைகூவலானது, சிறைப்படுத்தப்பட்டோர் போராட்டக் காலத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்தியது. அறைகூவலில் காணப்பட்ட அந்த வாசகத்தை நான் மறக்கவில்லை:

“சிறை அதிகாரிகள் இந்தப் போராட்டத்தை வன்முறை வழியில் நசுக்க முற்படலாம். அவர்கள் நம் மீது கொடிய அடக்குமுறையை ஏவலாம். ஆனால், எவ்வளவுதான் ஆத்திரமூட்டப்பட்டாலும் நாம் நிதானம் இழந்துவிடக் கூடாது. அவர்கள் அடித்தாலும் அடிக்கட்டும். நம் கை கால்களை ஒடித்தாலும் ஒடிக்கட்டும். நாம் திருப்பி அடிக்க மாட்டோம். நமக்கு நம் கோரிக்கைகள்தான் முக்கியம். இந்தக் கோரிக்கைகளை அடைவதற்காக உயிரை இழக்கவும் தயாராய் இருப்போம்”.

 இந்த மூன்று ஆவணங்களும் அந்த விடியற்காலை நேரத்தில் ஒருங்கே எல்லாத் தொகுதிகளிலும் உரத்துப் படிக்கப்பெற்ற போது, அதுதவிர சிறைக்குள் வேறு சத்தமில்லை. கைதிகளை எழுப்பச் சென்ற காவலர்கள், அவர்கள் ஏற்கெனவே எழுந்து விட்டதைக் கண்டார்கள்.

 ‘இது என்ன சத்தம்’ என்ற திகைப்புடன் அங்கங்கே நின்று அந்த வாசிப்பைக் கேட்டார்கள்.

இவை யாவும் மரணத் தண்டனைக் கூடத்திலும் செவ்வனே நடைபெற்றன. தனிக் கொட்டடிகளால் ஆனது என்பதால் கண்டத்தில் வரிசை(‘ஃபைல்’) உட்கார முடியாது. ஆகவே, தோழர் பாலகிருட்டிணன் குரல் கொடுத்து அனைவரையும் எழுப்பி விட்டு இப்படி அறிவித்தார்:

“தோழர்களே! நம் தோழர் தியாகு இப்போது பேசப் போகிறார். ஒவ்வொருவரும் கதவோரம் வந்து உட்கார்ந்து உற்றுக் கேளுங்கள்“.

 சரியாக 5 மணிக்கு நான் அந்த ஆவணங்களை வாசிக்கத் தொடங்கினேன். கண்டம் முழுக்கவும், எங்களுக்குப் பின்புறம் இருந்த ‘பி’ வகுப்புக் கைதிகளும் கூடக் கேட்கும்படி உரக்கப் படித்தேன். அதேநேரம் சிறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த எழுச்சிக் குரல்களோடு எனது குரல் கலந்து பரவியது.

 அன்றைய தினம் சிறைஅலுவலர் விடுப்பில் இருந்தார். அவருக்குப் பதிலாக இணைக் கண்காணிப்பாளர் கணக்கெடுக்க வந்திருந்தார். கோபுரத் திடலில்(டவர் மைதானத்தில்) நடுநாயகமாய் அவர் அமர்ந்திருக்க… அவருக்கு இருபுறமும் ஏனைய அதிகாரிகள் நின்று கொண்டிருக்க, ஒருபக்கம் காவலர்களும் மறுபக்கம் தண்டனைக் காவலர்களும் வருகை அழைப்பிற்காக (‘ரோல் காலுக்காக’) அணிவகுத்து நின்றார்கள். இணைக் கண்காணிப்பாளரின் தனிப்பணியாளும் (‘ஆர்டர்லி’யும்) தண்டனைக் காவலருமான ஒண்டிமுத்து இணைக் கண்காணிப்பாளருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். ஒருங்கே எல்லா அடைப்புகளிலிருந்தும் சத்தம் கேட்ட போது இணைக் கண்காணிப்பாளர் திகைப்புற்றார். அந்தத் திகைப்பு அடங்குவதற்குள்ளேயே ஒண்டிமுத்து நடுவில் வந்து நின்று காற்சட்டைப் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்து விரித்துப் படிக்கலானார். ஆம், அவை போராட்ட ஆவணங்கள்.

கண்காணிப்பாளருக்கோ, இணைக்கண்காணிப்பாளருக்கோ தனிப்பணியாளாக (‘ஆர்டர்லி’யாக) இருப்பது எல்லாக் கைதிகளுக்கும் வாய்க்கக் கூடிய பேறு’ அல்ல. கைதிகள் மட்டுமல்லாமல் காவலர்களும்கூட இந்த் தனிப்பணியாட்கள் (‘ஆர்டர்லி’கள்) மீது பொறாமை கொள்வார்கள். இணைக் கண்காணிப்பாளர் தனக்கு ஏவலரான கைதி ஒருவரே தன்னெதிரில் போராட்ட அறிவிப்பு செய்யக் கேட்கும் போது எவ்வளவு அதிர்ச்சியுறுவார்! அந்த அதிர்ச்சியினால்தானோ என்னவோ ஒண்டிமுத்து வாசித்து முடிக்கும் வரை அவர் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார். இதர அதிகாரிகளும் காவலர்களும் தண்டனைக் காவலர்களும் சிலையாகச் சமைந்து நின்றார்கள். வாசித்து முடித்த பின் ஒண்டிமுத்து அந்தக் கடிதங்களைத் தன் ‘ஐயா’விடமே அளித்தார்.


கணக்கு முடிந்த பிறகும் அடைப்பு (லாக்கப்பு) திறக்காமலே, இணைக் கண்காணிப்பாளர் சிறை வாயிலுக்கு விரைந்து சென்று கண்காணிப்பாளருக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் கண்காணிப்பாளர் சிறைக்கு வந்து விட்டார். பின்னாலேயே சிறைஅலுவலரும் வந்து விட்டார்.

 இதற்கிடையில் ஒவ்வோர் அடைப்பிலும் போராட்ட வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். அறைகூவலில் காணப்பட்ட ஒரு வேண்டுகோளுக்கு அங்கேயே அப்போதே கைதிகள் செவி சாய்த்தார்கள். தங்களால் இயன்ற வரை போராட்ட நிதிக்குப் பங்களித்தார்கள் பீடியாகவோ, பணமாகவோ! அங்கங்கே சங்கப் பொறுப்பாளர்கள் நிதி பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.

கண்காணிப்பாளர் ஏனைய அதிகாரிகளோடு ஒவ்வொரு தொகுதிக்கும் வந்த போது, உண்ணாவிரதிகள் கையொப்பமிட்ட கோரிக்கை சாசனம் அவரிடம் தரப்பட்டது. கடைசியாகக் கண்டத்துக்குச் சிறைஅலுவலர் மட்டுமே வந்த போது, நானும் பாலகிருட்டிணனும் அவரிடம் கோரிக்கை சாசனம் கொடுத்தோம்.

சிறைஅலுவலர் என்னிடம் சொன்னார்: “திரு. தியாகராசன், உங்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லை”.

 “இல்லை ஐயா. நீங்கள் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும். நான் எதற்காகச் சிறைப்பட்டேன், எதற்காகச் சிறையில் இருக்கிறேன் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது”.

“அது சரி, நான்தான் ஏமாந்து விட்டேன். சிறைக்குள்ளிருந்து கொண்டு இதையெல்லாம் உருட்டச்சு (‘ரோனியோ’) செய்திருக்கிறீர்கள். இது எப்படி முடிந்தது? மேலிடத்திலிருந்து எங்களைக் குடைந்து விடுவார்களே! கையால் எழுதிக் கொடுத்திருக்கக் கூடாதா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. எங்கள் கோரிக்கைகள் குறித்துப் பேசுவதானால் பேசுவோம். இல்லையேல் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்”.

“செய்யத்தான் போகிறேன். உங்களுக்கு இந்த உண்ணாவிரதம் போராட்டமெல்லாம் சகசம். ஒரு தூக்குக் கைதியையும் இதில் சேர்த்திருக்கிறீர்களே! இதனால் எங்களுக்கு எவ்வளவு கேள்வி வரும் தெரியுமா?”

“வரட்டும். பதில் சொல்கிறோம்”.

”உங்களையா கேட்கப் போகிறார்கள்? எங்களைத்தான் கேட்பார்கள். எனக்காக ஒன்றே ஒன்று செய்யுங்கள். பாலகிருட்டிணனை மட்டும் விட்டு விடுங்கள். அதுதான் அவருக்கும் நல்லது”.

 “முடியாது ஐயா. மரணத் தண்டனைக் கைதிகளுக்கும் சேர்த்தே கோரிக்கை வைத்துள்ளோம். அதில் அவர்களுக்கும் பங்கிருக்க வேண்டும்”.

பாலகிருட்டிணனிடம் சென்ற சிறைஅலுவலர் எதுவும் பேசாமல், முறைத்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்.

உண்ணாவிரதிகள் பழைய கண்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டனர். என்னையும் அங்கே கொண்டுசென்று தனிக் கொட்டடியில் அடைத்து வைத்தனர். பாலகிருட்டிணன் மரணத் தண்டனைக் கைதியானதால் அவரை மட்டும் எங்களோடு வைக்காமல் தொடர்ந்து சி.பி. கண்டத்திலேயே வைத்திருந்தனர்.

என்னைத் தனியாகவும் மற்றவர்களை இருவர் மூவராகவும் கொட்டடிகளில் அடைத்திருந்தனர். எங்களுக்கு ‘பாரா’ கொடுக்க ஒரு சரியான ‘பட்ட மரத்தை’ அனுப்பியிருந்தனர். அவரிடம் நாங்கள் தண்ணீர் கேட்டபோது, “நீங்கள் தண்ணீர் கேட்டால் மோர் கொடுக்கச் சொல்லி துரை உத்தரவு” என்று பதிலளித்தார். உண்மையிலேயே எங்கள் எதிரில் ஒரு பானை நிறைய மோர் வைக்கப்பட்டிருந்தது.

கண்காணிப்பாளர் எங்களிடம் வந்த போது ஏ.சி.கே.யைப் பார்த்து, “நீங்கள் செய்வது சட்ட விரோதம். வெளியில் சங்கம்(யூனியன்) நடத்துவது போல் இங்கு நடத்த முடியாது” என்றார்.

ஏ.சி.கே. சொன்னார்: “சட்டமே சரியில்லை என்றுதான் வேறு சட்டம் கேட்கிறோம்”.

“எதையாவது கேளுங்கள். எனக்கென்ன வந்தது? ஆனால், தேவை யில்லாமல் என்னையும் மேலாளையும் வம்புக்கிழுத்து, எங்கள் மீது ஊழல் புகார் சுமத்தி, விசாரணை வேண்டும் என்கிறீர்கள். இதற்கு என்ன ஆதாரம்?”

”விசாரணையில் சொல்கிறோம்”.

“நீங்கள் செய்யும் காரியத்தின் விளைவுகள் மோசமாக இருக்கும் தெரியுமா?”

”தெரியும். எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் இதில் இறங்கியுள்ளோம்”.

கண்காணிப்பாளர் என்னிடம் வந்த போது, “உண்ணாவிரதம்
இருப்பவர்களுக்குத் தண்ணீர் தர மறுப்பது சரியல்ல” என்று சுட்டிக்காட்டினேன்.

“நாங்கள்தான் மோர் தருவதாகச் சொல்கிறோமே?” என்று பதிலளித்து விட்டுப் போய் விட்டார்.

மதியச் சாப்பாடு எங்கள் அறைகள் எதிரே வைக்கப்பட்டது. கூடுதல் தாளிப்புடன் ‘சிறப்புக்’ குழம்பு வேறு.

 “நீங்கள் எப்போது கேட்டாலும் திறந்து சாப்பாடு தரும்படி கண்காணிப்பாளர் உத்தரவு” என்று பாரா காவலர் சொன்னார்.

இடையில் சிறை மருத்துவர் எங்களைப் பரிசோதிக்க வந்த போது, அதிகாரிகள் தண்ணீர் தர மறுப்பது பற்றிச் சொன்னோம்.

அவர் சொன்னார்:

“இப்படிச் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. உண்ணா விரதத்தின்போது மிகப் பெரிய ஆபத்தே நீரிழப்புதான் (dehydration). தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் சொல்லிப் பார்க்கிறேன். சரிப்படா விட்டால் அறிக்கை எழுதுகிறேன்”.

மருத்துவர் மேற்கொண்ட முயற்சியால் இரவு 7 மணிக்கு மேல் எங்களுக்குக் குடிக்க நீர் கொடுத்தார்கள்.

போராட்டம் தொடங்கிய முதல் நாளே போராட்டத்தை ஆதரிக்காமல் நிருவாகத்துடன் ஒத்துழைப்பவர்கள் எத்தனை பேர், யார் யார் என்று அதிகாரிகள் கணக்கெடுத்தார்கள். ஏழு அல்லது எட்டுப் பேர் இவ்விதம் முன்வந்தார்கள். இவர்களில் ஓரிருவர் தங்கள் சொந்த நலன் என்றால் தனித்து நின்று விடாப்பிடியாகப் போராடக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலன் கருதாத ‘போர்க்குணம்’ சமூக விரோதமாய்த் திரிவது இயல்பே.

இந்த ஏழெட்டுக் கருங்காலிகளையும் தனி  அறையில் (‘செல்’லில்) பூட்டி
வைக்கும்படி கண்காணிப்பாளர் ஆணையிட்ட போது அவர்களுக்கு
அதிர்ச்சி. “எங்கள் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா?” என்று ஒருவர்
கேட்டே விட்டார்.

கண்காணிப்பாளர் அளித்த விளக்கம் இதுதான்: “அவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும் கடமை எனக்குள்ளது. அதற்கு உங்களைத்தனியறையில் ( ‘செல்’லில்0 வைப்பது தவிர வேறு வழியில்லை”.

தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 175