சனி, 27 டிசம்பர், 2014

“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா


chellame_virudhu08

‘செல்லமே’ மாத இதழ் சார்பில்

2014 ஆம் ஆண்டிற்கான

“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்”

விருதுகள் வழங்கும் விழா

சென்னையில் நடைபெற்றது.

  தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான ‘செல்லமே’ தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக்கொண்டு, மக்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 அருவினையாளர் (சாதனையாளர்)களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நடைபெற்றது.
 இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட அருவினையாளர்களில் 12 அகவை யோகேசு என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மின்னணுத்துடைப்பான் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார்.
தீபக்
மாற்றுத்திறனாளியான இவர் இலண்டனில் மனநலமருத்துவத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். பெரிய, பெரிய மருத்துவமனைகளில் பணி புரியாமல் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தொண்டாற்றுவதற்கு ஒப்படைத்துக் கொண்டுள்ளார்.
மோகனா சோமசுந்தரம்
ஓய்வு பெற்ற பேராசிரியரான இவர் மார்பகப் புற்றுநோயில் இருந்து போராடி மீண்டு வந்தவர். கிட்டதட்ட 38 வருடங்களாகத் தமிழ்நாடு அறிவியல் கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றார். சிற்றூர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு அறிவியலை எளிமையாக விளக்கும் பணியினைச்செய்து வருகின்றார்.
நாகராசன்
நெசவாளியான இவர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். கிட்டதட்ட 10,000க்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார் இவர்.
வைகிங்‘ ஈசுவரன் – ‘வைகிங்‘ நிறுவன முதலாளியான இவர் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபர். மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த இவர் தனது கனவுகளை நனவாக்கக் கடுமையாக உழைத்தவர்.
அல்போன்சு லிக்கோரி
சென்னை, செங்குன்றத்தினைச்சேர்ந்த இவர் புழல் பகுதியில் வேலை பார்க்கும் செங்கல் சூளை, அரிசி ஆலை கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உணவூட்டம், நலவாழ்வு பற்றிய விழிப்புணர்வுகளைப் பற்றி விளக்கமளிக்கும் பணியினைச் செய்து வருகின்றார்.
மருத்துவர். ரிபப்ளிக்கா சிரீதர்
சென்னையின் முன்னாள்   மாநகரஅண்ணலான(Sheriff) ஆர்.எம் தேவின் மகளான இவர் ஒரு மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருகின்றார். இலவச நோய்த் தடுப்பு விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி வருகின்றார்.
வேலு சரவணன்
தமிழ்நாட்டின் புகழ்வாய்ந்த தெருக்கூத்து கலைஞரான இவர் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்று வருவதுடன், குழந்தைகளுக்கு தன்னுடைய கலையின் மூலமாக நல்லொழுக்கங்களையும் கற்பித்து வருகின்றார்.
முத்துகிருட்டிணன்
எழுத்தாளரான இவர் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன் இந்தியப் பண்பாடு, கலை, வரலாறு குறித்த கருத்துகளையும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி வருகின்றார்.
சிரீதர் வேம்பு
இவர் இசுகோ பல்கலைகழகத்தின் நிறுவனர். எல்லாக் கணிய(மென்பொருள்) நிறுவனங்களும் வேலை வாய்ப்பிற்காகப் படையெடுக்கும் போது, வேம்புவின் இசுகோ மட்டும் சிற்றூர்களை நோக்கிப் படையெடுக்கின்றது. இவருடைய பல்கலையில் சிற்றூர்ப்புற மாணவர்களுக்கு கணிய(மென்பொருள்) நிறுவனங்கள் குறித்துக் கற்பிக்கப்படுகின்றன.
இராம்கோ குழுவின் முதன்மை அதிகாரியான பி.ஆர்.இராமசுப்ரமணிய இராசா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் பேசிய அவர், “பெற்றோர்களாக இருப்பது ஒரு கடினமான பணி. அத்தகைய பெற்றோர்களை வழிநடத்தும் சிறப்பான பணியினை ‘செல்லமே’ இதழ் மேற்கொண்டு வருகின்றது” என்று செல்லமே குழுவினருக்குப்புகழாரம் சூட்டினார்.
chellame_virudhu07
-புலி உறுமுது



தேனிமாவட்டத்தில் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்

money02

தேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும்

குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்

  தேனிமாவட்டத்தில்   ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது.
  தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள், போலியான ஐம்பொன்சிலை, கோயம்புத்தூர் பகுதிகளில் 14 மாற்று(கேரட்டு) நகைகளை வெண்ணீலிமம்(கே.டி.எம்.)916 நகை விலை குறைவு எனக்கூறி பலவிதமான ஏமாற்றுவேலைகளைச் செய்து வந்தனர்.
  இதில் பாதிக்கப்பட்ட பலர் புகார் கொடுத்ததால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக போதிய மழையில்லை. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கருநாடகா, மும்பை போன்ற நகரங்களுக்குப் பிழைப்பிற்காக வேலை தேடிச்சென்றனர். வேலை தேடிச்சென்ற இடத்தில் அங்குள்ள மோசடி வித்தைகளைக் கற்றுவந்து அந்தச் சித்துவேலைகளைக் காண்பித்து அப்பாவிகளிடம் பணம் மோசடி செய்து வருகிறார்கள்.
  இவற்றைத்தவிர வனவிலங்குகளின் போலியான மான்கொம்பு, நரிப்பல், புலிநகம் ஆகியவற்றைக் காண்பித்துப் பணம் பறித்து வருகின்றனர். இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் முறையீடு அளித்தால் தங்கள் குடும்ப மதிப்புப் பாதிக்கப்படும் என எண்ணி ஊரைவிட்டுச் சென்றுவருகின்றனர். சிலர் பண நெருக்கடியால் மஞ்சள்அறிக்கை கொடுத்துத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்தக் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல் தேனி, வத்தலக்குண்டு பகுதியில் தங்கும் விடுதிகளில் தங்கிப் பணத்தை வாங்கிக்கொண்டு போலிக்காவலரைக் காண்பித்துப் பணம் கொடுத்தவர்களை அடித்த நிகழ்வுகளும் உண்டு.
  இந்தக் குற்றஉடைமைக் கும்பல் போடி, கம்பம், கூடலூர், நத்தம், கொடைக்கானல் என பணிப்பின்னல் வைத்துச் செயல்பட்டு வருகிறது. எனவே மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், தனிப்படை அமைத்து இவ்வாறு ஏமாற்றும் மோசடிக் கும்பலைக் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஏற்கெனவே ஏமாற்றிப் பணம் பறித்த பழைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினால் இன்னும் பல மோசடிகள் வெளியே வரும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
58vaigai aneesu




உழைக்கும் மாற்றுத்திறனாளி சேகரனுக்கு உதவி தேவை.

58-sekaran01

தன்னம்பிக்கையுடன் தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி

58vaigai aneesu
திண்டுக்கல் மாவட்டம், கே.சிங்காரக்கோட்டையைச்சேர்ந்தவர் சேகரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துள்ள. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இக்குழந்தைகளைக் கெங்குவார்பட்டியில் உள்ள  ஏதிலியர் இல்லத்தில் படிக்க வைத்துள்ளார். இவர் கால்நடைகளான குதிரை,  மாடுகளுக்குக் குளம்பாணி(இலாடம்) அடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.  இத்தொழிலின் பொருட்டு இவர் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குச் சென்று தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.
  கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இயந்திரங்களின் பயன்பாடு அரிதாக இருந்தது. அப்பொழுது  வேளாண்மைக்குக் கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன. நிலத்தை உழுதல், பரம்படித்தல், சந்தைகளுக்குப் பொருட்கள் கொண்டு செல்லல், தோப்புகளில் உள்ள மாங்காய்,தேங்காய் போன்ற பொருட்களை எடுத்து வருதல் என அனைத்துப் பணிகளும் கால்நடைகளை மையப்படுத்தியே நடைபெற்றன. அதன்பின்னர் இயந்திரமயமானது. நிலத்தை உழுது பயிர் விதைத்து அறுவடை செய்து சந்தைப்படுத்துதல் வரை இயந்திரமயமானது. இதனால் கால்நடைகளின் தேவைகள் குறைந்தன.
58hoofed-shoe02
   மேலும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் தைப்பொங்கலை ஒட்டி கால்நடைகளின் திருநாளான மாட்டுப்பொங்கல் அன்று கால்நடைகளின் கொம்புகளுக்கு  வண்ணம் பூசி கால்நடைகளின் கால்களில் உள்ள பழைய  குளம்பாணிகளை (இலாடங்களை) அகற்றிவிட்டுப் புதிய குளம்பாணி அமைப்பது வழக்கமாக வைத்திருந்தனர்.
  உழவர்களிடம் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு கால்நடைகள் மட்டுமே உள்ளன. இக்கால்நடைகளை நம்பி மாற்றுத்திறனாளியான சேகரன் ஊர் ஊராகக் கால்நடைகளுக்குக் குளம்பாணி அடிப்பவர்கள் உதவியோடு சென்று  குளம்பாணி அடித்து வருகிறார்.
  இதன்  தொடர்பாகச்  சேகரன் கூறியதாவது: “கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் மாதவருமானத்தில் வரக்கூடிய பணத்தை வைத்து என்னுடைய வாழ்க்கையை நிம்மதியாகச் செய்து வந்தேன். தற்பொழுது கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் வருவாய் குறைந்தது. குழந்தைகளைப் படிக்க வைக்கவேண்டும் என எண்ணி கெங்குவார்பட்டியில் உள்ள  ஏதிலியர் குழந்தைகள் படிக்கும் ஆசிரமத்திற்கு அனுப்பிவிட்டேன். எனக்கு ஊனமுற்றோருக்கு வழங்கக்கூடிய சக்கர வாகனம் கொடுத்தால் மாற்றுத்தொழில் செய்யலாம் என எண்ணியுள்ளேன். ஒரு காளையின் நான்கு கால்களில்  குளம்பாணி அடிப்பதற்கு  உரூ.250 கூலியாகப் பெற்றுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான  தகடு, ஆணி போன்றவற்றைத் திண்டுக்கல்லில் இருந்து வாங்கி வருகின்றேன். அதற்கு  உரூ.200 வரை ஆகிறது. எனக்கு ஒரு மாட்டிற்குக் குளம்பாணி அடித்தால் 50 உரூபாய் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மாடுகளுக்குக் குளம்பாணி அடிக்கும் வேலை கிடைப்பதே அரிதாகிவிட்டது. எனவே எனக்கு யாராவது அரசு சார்பில் வழங்கக்கூடிய மூன்று சக்கர வாகனம் அல்லது இயந்திரத்தோடு கூடிய வாகனத்தை கொடுத்தால் எனக்கு வருமானம் அதிகமாகக் கிடைக்கும் 
வாய்ப்புள்ளது” என்றார். 58hoofed-shoe01

அவருடய தொலைபேசி எண்-9345493917. உதவுகின்ற மனப்பான்மை உடையவர்கள் தொடர்புகொள்ளுங்கள்