சனி, 24 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல் தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சென்ற ஆண்டு நான் பொள்ளாச்சியில் இருந்த போது அந்தத் துயரம் நிகழ்ந்தது. வளர்ந்து வந்து கொண்டிருந்த இளந்தோழர் ஒருவரைச் சாலை விபத்தில் இழந்தோம். சந்தோசு என்ற இயற்பெயர் கொண்ட தோழர் மகிழவனின் அந்தக் கொடிய இழப்பின் நினைவை அவருக்கு நெருங்கிய நண்பரான தோழர் ப. ஆறுச்சாமி பகிர்கிறார்…

மகிழவன் நினைவுகள்! கனவுகள்! – ப. ஆறுச்சாமி

22.02.2022 அன்று “நடக்கக் கூடாதது நடந்து விட்டது !”.

தந்தை பெரியாரின் இலக்கினை உயிர்மூச்சாக எடுத்துக்கொண்டு “தமிழ்நாடு தமிழுருக்கே” என்ற கொள்கையை நெஞ்சில் சுமந்து பயணித்த இளந்தோழர் இன்று நம்மோடு இல்லை! காலம் விரைவாக எடுத்துக் கொண்டது தோழர் மகிழவனை !.

காலத்திற்குப் பேசும் சக்தி கிடையாது, ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும். தோழர் மகிழவனது நினைவுகள் இன்றும் மனதோடு மனதாகி பேசிக் கொண்டும், கண்ணீரோடு வந்து கொண்டும் இருக்கின்றன. வாழ்க்கை பொருளுள்ளது என்பதை எனக்கு உணர்த்தியவன் மகிழவன்.

தோழர் மகிழவனது ஆசைகள், கனவுகள் அனைத்தும் இவ்வுலகை விடப் பெரியவை! என்பதை நான் நன்கு அறிவேன்.

ஆனால் அந்த ஆசைகளை, கனவுகளைத் தூக்கிச் செல்ல நம் தோள்கள் அணியமாகி விட்டனவா? இல்லை, அணியமாகிக் கொண்டுள்ளனவா? என்பதை அவரவர் மனத்தில் போட்டுக் கொளுத்திக் கொள்ளுங்கள். “நானும் கொளுத்துகின்றேன் “!.

“உண்மைச் சுடர் போல… அதை என்ன முயன்றாலும் மறைத்து வைக்க முடியாது. சீறிக் கொண்டு வெளிச்சம் தரும். திலீபனும் வெல்வான், பிரபாகரனும்  வெல்வான்தமிழர் ஆளத் தமிழீழம் படைக்கப்படும்.” – தோழர் மகிழவன்

இந்த வரிகளை உணர்வோடு  நீங்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள், மகிழ்ச்சி!

எல்லாவற்றையும் ஒதுக்கி நிதானித்து யோசித்துப் பாருங்கள். திலீபனும் வெல்வான், பிரபாகரனும் வெல்வான்.தமிழர் ஆளத் தமிழீழம் படைக்கப்படும். இந்த உறுதிதான் தோழர் மகிழவன்!

“வாருங்கள் தங்கைகளே, தோழர்களே! தோழர் மகிழவனது ஆசைகள், கனவுகள் ஆகியவற்றைச் சுமந்து கொண்டுபோய் உலகிற்கு விருந்தாக மாற்றுவோம் !”.

ப.ஆறுச்சாமி

22.02.2023

   தாழி மடல் 110

வெள்ளி, 23 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி தாெடர்ச்சி)


இனிய அன்பர்களே!

·         ஒடுக்கப்பட்ட மாணவர்களை இழிவுபடுத்தித் தற்கொலைக்குத் தள்ளி விடுதல்;

        பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடதுசாரி, அம்பேத்துகர்வழி, பெரியார்வழி, சிறுபான்மை நலன், தேசிய இன நலன் சார்ந்த மாணவர் இயக்கங்கள் மீது இழிவும் வன்முறையும்  ஏவுதல்;

        தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதி வழி இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கத் தூண்டுதல்;

        மாணவர் சங்கத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்தல், கெடுத்தல்;

        வெறுப்புக் கூச்சல், வெறுப்புரைகள் வழியாகப் பலகலைக்கழக அறிவுச் சூழலையும் அமைதிச் சூழலையும் சிதைத்தல்;

        இந்திய அரசமைப்பு வழிப்பட்ட மதச் சார்பின்மைக்கும், குடியாட்சியத்துக்கும், கூட்டாட்சிக் கொள்கைகளுக்கும், அறிவியல் வரலாற்றுப் பார்வைக்கும் எதிராக இந்துத்துவ வல்லாண்மைக் கருத்துகளைத் திணித்தல்.

இந்தியா எங்கிலும் உயர் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றிப் பார்ப்பனிய இந்துத்துவக் கோட்டைகளாக மற்ற நா.தொ.ச.(ஆர்எசுஎசு) தனது மாணவர் பிரிவான அ.இ.மா.ச. (ஏபிவிபி) வழியாக முரட்டுத்தனமாகச் செயல்பட்டு வருகிறது. கல்லூரிப் பேராசிரியர்கள் சிலருடன் கல்லூரி, பல்கலைக்கழக ஆட்சிகள் சிலவும் கூட இதற்கு உடந்தையாக இயங்கி வருகின்றன. இந்தப் போக்கின் ஒரு வெளிப்பாடுதான் தில்லி ச.நே.ப. (J.N.U.)-இல் தமிழ்நாசர் மீதும் மற்ற மாணவர்கள் மீதும் நா.தொ.ச.(ஆர்எசுஎசு) குண்டர்கள் நடத்திய வன்செயல். கல்வி நிறுவனங்கள் மீதான நா.தொ.ச.(ஆர்எசுஎசு) வன்தாக்கிற்கு எதிராகப் பல்வேறு பலகலைக்கழக மாணவர் அமைப்புகளையும் இணையவழி ஒருங்கிணைக்கிற முயற்சி செய்து வருகிறோம். அதற்கான பரப்புரை இயக்கத்தின் தொடக்கமாக (உ)ரோகித் வேமுலாவின் இறுதி மடலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

(உ)ரோகித்து வேமுலா இறுதி மடல்

வணக்கம். நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும் போது நான் இருக்க மாட்டேன். என்னிடம் சினங்கொள்ளாதீர்கள். எனக்குத் தெரியும், உங்களில் சிலர் என்னிடம் மெய்யாகவே அக்கறைப்பட்டீர்கள், என்னை நேசித்தீர்கள், என்னை மிக நன்றாக நடத்தினீர்கள். எவர் மீதும் எனக்குக் குறைசொல்ல எதுவுமில்லை. எப்போதும் எனக்கு என்னிடத்திலேதான் சிக்கல்கள் இருந்தன. எனது ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடைவெளி வளர்ந்து வருவதாக உணர்கிறேன். நான் பெரிய அசுரனாகி விட்டேன். எழுத்தாளன் ஆக வேண்டும் என்றுதான் எப்போதுமே விரும்பினேன். காரல் சாகனைப் போல் அறிவியல் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அறிவியலை, விண்மீன்களை, இயற்கையை நேசித்தேன். 

பிறகு மக்களை நேசித்தேன். மக்கள் நீண்ட காலமுன்பே இயற்கையை விட்டு விலகிப் போய் விட்டார்கள் என்று அறியாமல் மக்களை நேசித்தேன். நம் எண்ணங்கள் கைமாறி வரக்கூடியவை. நமது நேசம் கட்டி வளர்க்கப்படுவது. நமது நம்பிக்கைகள் வண்ணம் பூசியவை. நமது தனித்தன்மை செயற்கைக் கலையின் ஊடாகவே செல்லுபடியாகிறது. காயப்படாமல் நேசிப்பது மெய்யாகவே கடினமாகி விட்டது.

ஒரு மாந்தனின் மதிப்பு அவனது நேர் ஓர்மையும் மிக அண்மைய வாய்ப்புமாகச் சுருங்கி விட்டது. ஒரு வாக்காக. ஓர் எண்ணாக, ஏதோ ஒன்றாக. மாந்தன் ஒரு போதும் ஒரு மனமாக நடத்தப்படவில்லை. விண்மீன் தூளால் ஆன ஒரு புகழ்ப் பொருளாக. களத்தில், படிப்பில், தெருக்களில், அரசியலில், சாவதிலும் வாழ்வதிலும்.

 இவ்வகையான கடிதம் முதல் முறையாக எழுதுகிறேன். முதல் முறையாகக் கடைசிக் கடிதம். பொருள் விளங்க எழுதத் தெரியவில்லை என்றால் மன்னியுங்கள்.

நான் இத்துணைக் காலமும் உலகைப் புரிந்து கொண்டது தவறாகவே இருக்கலாம். அன்பை, வழியை, வாழ்க்கையை, இறப்பைப் புரிந்து கொண்டது தவறாகவே இருக்கலாம். அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் எப்போதும் விரைந்து கொண்டே இருந்தேன். வாழ்க்கை தொடங்கி விட வேண்டும் என்ற தவிப்பு. இத்துணைக் காலமும், சிலருக்கு வாழ்க்கையே சாவக்கேடு. என் பிறப்பு எனக்கு நேர்ந்த உயிர்பறிக்கும் விபத்து. குழந்தைப் பருவத் தனிமையிலிருந்து என்னால் மீள முடியவே இல்லை. கடந்த காலத்திலிருந்து வருவது என் மதிக்கப்படாத குழந்தைமை.

இந்த நேரம் நான் காயபப்படவில்லை. எனக்கு வருத்தமில்லை. வெறுமையாக இருக்கிறேன், அவ்வளவுதான். என்னைப் பற்றிக் கவலை இல்லை. 

அது  இரங்கத்தக்க நிலை. எனவேதான் இப்படிச் செய்கிறேன்.

கண்ணாடியில் தெரியும் பொருட்கள் அவை தோன்றுவதை விட நெருக்கத்தில் இருப்பது (ஒருபோதும் இல்லை.) (உரோகித்தின் முகநூல் பக்கத்திலிருந்து)

மக்கள் எண்னைக் கோழை எனலாம். நான் போன பின் தன்னலக்கரன் அல்லது முட்டாள் எனலாம். என்னை என்ன சொல்வார்கள் என்ற கவலை எனக்கில்லை. சாவுக்குப் பின் வாழ்வு, பிசாசுகள், ஆவிகள் பற்றிய கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ஏதாவது நம்புவதாக இருந்தால், விண் மீன்களுக்குப் பயணம் செய்யலாம் என்று நம்புகிறேன். வேறு உலகங்ளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கடிதத்தைப் படிக்கிற நீங்கள் எனக்காக ஏதேனும் செய்யக் கூடும் என்றால், எனக்கு 7 மாதக் கால ஆய்வுதவித் தொகை வர வேண்டியுள்ளது. இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் உரூபாய். என் குடும்பத்தினரிடம் அதைக் கொடுக்கச் செய்யுங்கள். இராம்சிக்குக் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கொடுக்க வேண்டும். அவர் அதைத் திருப்பிக் கேட்டதே இல்லை. ஆனால் அருள்கூர்ந்து அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள். என் இறுதி நிகழ்வு அமைதியாகவும் சரளமாகவும் நடக்கட்டும். வந்தேன் போனேன் என்பது போல் நடந்து கொள்ளுங்கள். எனக்காகக் கண்ணீர் உகுக்காதீர்கள். வாழ்வதை விடச் சாவது எனக்கு மகிழ்ச்சி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

“நிழல்களிலிருந்து விண்மீன்களுக்கு.”

உமா அண்ணா, இந்த வேலைக்கு உங்கள் அறையைப் பயன்படுத்த வருந்துகிறேன்.

அம்பேத்துகர் மாணவர் சங்கக் குடும்பத்தினருக்கு, உங்களுக்கெல்லாம் ஏமாற்றமளிப்பதற்காக வருந்துகிறேன். நீங்கள் என்னை மிகவும் நேசித்தீர்கள். எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.

கடைசியாக ஒரு முறை, செய் பீம்!

சம்பிரதாயங்களை எழுத மறந்து விட்டேன். என்னை நானே மாய்த்துக் கொள்ளும் இந்தச் செயலுக்கு யாரும் பொறுப்பில்லை. தங்கள் செயல்களாலோ சொற்களாலோ யாரும் இந்தச் செயலுக்கு என்னைத் தூண்டவில்லை.

இது என் முடிவு. இதற்கு நானே பொறுப்பு.

நான் போன பிறகு இதற்காக என் நண்பர்களையோ பகைவர்களையோ தொல்லைப்படுத்தாதீர்கள்!

[நாளைய தாழி மடலில்: ரோகித்து வேமுலா தற்கொலை ஏன்?]

(தொடரும்)

தோழர் தியாகு, தாழி மடல் 109

வியாழன், 22 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ! தாெடர்ச்சி)

 

தருசன் சோலங்கி!

மீண்டும் ஒரு (உ)ரோகித் வெமுலா! உயர்கல்விக் கூடங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறிக்கு மீண்டும் ஓர் உயிர்ப் பலி!

அகமதாபாத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட மாணவன். பெயர் தருசன் சோலங்கி.

வயது பதினெட்டு.  தந்தை குழாய் வேலை பார்ப்பவர்; தாய் வீட்டு வேலை செய்பவர். அரிதின் உழைத்து மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி) இல் இ.தொ. (பி.டெக்) வகுப்பில் இடம் பிடித்து விட்டார்.

படிக்கத் தொடங்கி மூன்றே மாதம் கழிந்திருந்த நிலையில் கடந்த பிப்பிரவரி 12 ஞாயிறு மதியம் விடுதிக் கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

கல்லூரி வளாகத்துக்குள் தொல்லைக்கு ஆளான பின் சோலங்கி உயிரை மாய்த்துக் கொண்டாராம்!

மும்பை இ.தொ.நு.(ஐஐடி)- இ ல் முதலாண்டு மாணவரான  பதினெட்டு வயதான சோலங்கியை ஒடுக்கப்பட்டவர் என்று தெரிந்து சாதி சொல்லி இழிவு செய்ததே அவரைத் தற்கொலைக்குத் தள்ளியதாகச் செய்தி! அவர் ஒடுக்கப்பட்டவர் என்று தெரிந்தவுடன் மற்றவர்கள் அவரோடு பேசுவதை நிறுத்தி விட்டனராம்! “ஓசியில் படிக்க வந்து விட்டதாக” அவரைக் கேலி செய்தனராம்! இதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சோலங்கி தற்கொலையே செய்து கொண்டிருந்தாலும் கல்வி நிறுவனங்களில் சமூக நீதியை மறுக்கும் பார்ப்பனிய முற்றாதிக்கத்தால் கொலை செய்யப்பட்டதாகவே கருத வேண்டும். கல்வி நிலையங்களில் இந்துத்துவப் பார்ப்பனியம் பலவாறு நடத்தி வரும் தொடர் தாக்குதலின் ஒரு வெளிப்பாடே இது. இதற்குப் பலியாகும் பி.வ. மற்றும் ப.வ. (பி.சி,எசு.சி.) பிரிவினரே ஆவர். இந்தக் கொடிய வதை மூலம் சூத்திர பஞ்சம மாணவர்களைத் திட்டமிட்டு மட்டம் தட்டி அவர்களில் பலரைத் தற்கொலைக்கும் தள்ளிவிடுபவர்கள் பார்ப்பனரும் பிற முன்னேறிய சாதியினரும்தான்.

பல இ.தொ.நு.(ஐ.ஐ.டி.)க்களில் பயிலும் ப.வ.-பி.வ.  (எசுசி-பிசி) மாணவர்கள் “அம்பேத்துகர்-பெரியார் கல்வி வட்டம்” எனும் அமைப்புகளை உருவாக்கி இந்தச் சித்திரவதைகளுக்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள்.

மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி)- இல் அம்பேத்துகர்-பெரியார்-புலே கல்வி வட்டம் இயங்கி வருகிறது. சென்னை இ.தொ.நு. (ஐ.ஐ.டி.)-இலும் அம்பேத்கர்-பெரியார் கல்வி வட்டம் இயங்கி வருகிறது.

மறுபுறம் பார்ப்பனியத்தின் தரப்பிலும் இந்துத்துவப் பார்ப்பனிய மதவெறி மாணவர் அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அண்மையில் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இதன் விளைவுகளைப் பார்த்தோம்.

தலித்திய ஆற்றல்கள் ஏனைய குடியாட்சிய ஆற்றல்களோடு இணைந்து நின்று இ.தொ.நு.(ஐ ஐ டி) போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலிருந்து பார்ப்பனியத்தைக் களைந்தெடுக்க அன்று (உ)ரோகித்து வெமுலா அழைத்தார்! இன்று தருசன் சோலங்கி அழைக்கிறார்!  

(தொடரும்)

தோழர் தியாகு, தாழி மடல் 109

புதன், 21 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் தாெடர்ச்சி)

செந்தமிழ்க்கோ!

 இனிய அன்பர்களே!

இனவழிப்புத் துயரத்தில் அமிழ்ந்த ஈழ மண்ணிற்கு மிக நெருக்கமான ஒரு தமிழ்நாட்டுப் புள்ளியில்…  கோடியக்கரைக் கடலில் உப்புநீரில் கால் நனைத்துப் பின் கரையேறிக் கதிரொளி முதுகுதொட ஊக்கத்துடன் நெடுநடைப் பயணத்தைத் தொடங்கிய போது எங்கள் அணியில் முதல் வீரரராக இயக்கக் கொடியேந்தி நேர்கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நடந்தவர் தோழர் செந்தமிழ்க்கோ. யார் இந்தத் தாடிக்காரர்? எனக்கு அதுதான் அவரோடு முதல் அறிமுகமே. எங்கள் அணியில் அவர்தான் மூத்தவர். ஆனால் அயராச் சுறுசுறுப்பில் அவர்தாம் இளைஞர். 

2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பின் கவிந்திருந்த இருண்ட சூழலில் சோர்வகற்றி எழுந்து நடக்க ஒரு திட்டம் வகுத்தோம். அதுவே தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணமாக வடிவம் பெற்றது. என் தலைமையில் காவிரித் தீரத்தில் திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் ஊர் ஊராக நடப்பதெனத் திட்டம். சனவரி 25ஆம் நாள் கோடியக்கரையில் தொடங்கி 47 நாள் நடந்து மார்ச்சு 12ஆம் நாள் குடந்தையில் நிறைவு செய்தோம். பயணம் முழுவதிலும் பிடித்த கொடியை ஒருநொடியும் தாழ்த்தாமல் உயர்த்திய படியே நடந்தவர் தோழர் செந்தமிழ்க்கோ! உணவருந்தும் போது கூட கொடியைக் கீழே வைக்க மாட்டார். நடைப்பயணத்தில் அரட்டை விளையாட்டு மற்றவற்றைத் தவிர்க்குமாறு இளம் தோழர்களிடம்  வலியுறுத்தும் போது செந்தமிழ்க்கோவைப் பாருங்கள் என்றுதான் சொல்வேன்.

அது ஒரு நீண்ட நடைப்பயணம். முழுவதும் நடக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, எல்லா நேரமும் சாலையில் நடக்க முடியாது. வயல் வரப்பில் நடக்க வேண்டி வரும். வழியில் அங்கங்கே உட்கார்ந்து காலாற்றிப் பயணம் தொடர்வதுண்டு. அப்போதும் செந்தமிழ்க்கோ அமர்ந்தால் அரிது.

பயணம் முடிந்து கலைந்து போன பின் தோழர் செந்தமிழ்க்கோவுடன் தொடர்பு அருகி விட்டது. மார்க்சியம் அனா ஆவன்னா நூல் வெளியீட்டுக்காக வேலூர் சென்ற போது ஒரு முறை சந்திக்க வாய்த்தது.

தொழிலாளர் சீரமைப்பு இயக்கத் தோழர் சேகர் அண்மையில் ஒரு நாள் செய்தி அனுப்பினார்: “தமிழர் தமிழ்மண் இயக்கத் தோழர் ஐயா செந்தமிழ்க்கோ உடல்நலமில்லாமல் இருக்கிறார். ஒரு நாள் நீங்களும் வாருங்கள், போய்ப் பார்த்து விட்டு வருவோம்.” ஆவலோடு காத்திருந்த நேரம் என் உடல்நலங்குன்றி, பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. நேற்று அம்பேத்கர் சிறுத்தைகள் தோழர் எட்வினுடன் சேகர் வேலூர் சென்று செந்தமிழ்க்கோவைப் பார்த்தத்தோடு என்னையும் அவரோடு புலனம் வழி கண்டு பேச வைத்தார். அவரால் ஒன்றும் பேச முடியவில்லை. சொல்லில் வெளிப்படுத்த முடியாத அன்பின் நிறையைச் சொல்வது கடினம்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல் 109

செவ்வாய், 20 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு தொடர்ச்சி)

பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம்

இனிய அன்பர்களே!

குசராத்தில் 2002ஆம் ஆண்டு நரேந்திர மோதி ஆட்சியில் நடந்தது என்ன? மதக் கலவரமா? இல்லை. தற்செயலாக வெடித்த வன்முறை நிகழ்ச்சிகளா? இல்லை.

உண்மையில் நடந்தது இசுலாமிய மக்கள் மீதான இனக் கொலைதிட்டமிட்ட இனக் கொலை. நரேந்திர மோதி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வழிநடத்திய இனக் கொலை என்பதை நாம் முன்பே அறிந்து வைத்துள்ளோம், பல முறை கூறியுள்ளோம் என்றாலும் பி.ஒ.நி.(பிபிசி)யின் மோதி வினா ஆவணப் படம் மீண்டும் ஒரு முறை தெளிவாகக் காட்டியுள்ளது.

குசராத்து இசுலாமியர் இனக் கொலைக்கு நீதி பெற வேண்டும். இந்த இனக் கொலையின் பகுதிகளான தனித்தனி வழக்குகளில் மிகச் சிலவற்றில் நீதிமன்றங்களில் குற்றத் தீர்ப்பு கிடைத்துள்ளது. சில இடைக்கால வெற்றிகளும் கிடைத்துள்ளன. பில்கிசு பானு வழக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் இந்த வழக்குகளிலும் கூட கொலை, கொலை முயற்சி, தீவைப்பு, பாலியல் வல்லுறவு, சதி போன்றவையே  குற்றச்சாட்டுகள். இனக்கொலைக் குற்றச்சாட்டே இல்லை. ஏன்? ஏனென்றால் இந்தியாவின் குற்றவியல் சட்டங்களில் அப்படி ஒரு வகைக் குற்றமே இடம்பெற வில்லை.

அப்படியானால் இனக் கொலை குற்றமே இல்லையா? இந்தியச் சட்டங்களின் படி இல்லை. பன்னாட்டுச் சட்டங்களின் படி மட்டுமே அது குற்றம். பன்னாட்டுச் சட்டங்களின் படியான குற்றங்கள் பன்னாட்டுக் குற்றங்கள் எனப்படுகின்றன. போர்க் குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம் போல் இனக்கொலை ஒரு பன்னாட்டுக் குற்றம். ஒரு நாட்டுக்குள் நடந்தாலும் பன்னாட்டுக் குற்றம். பன்னாட்டுக் குற்றங்களை வினவுவதற்கும், புலனாய்வு செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் பன்னாட்டுப் பொறிமுறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நரேந்திர மோதி வகையறாவை இனக் கொலைக் குற்றத்துக்காகக் கூண்டிலேற்ற விரும்பினால் பன்னாட்டு விசாரணை கோர வேண்டும். இந்தக் கோரிக்கையும் இதற்கான போராட்டமும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான மோதியின் பாசிசத்துக்கு எதிரான பன்னாட்டு ஆற்றல்களை அணிதிரட்ட உதவும்.

மோதியின் பாசிசம் குசராத்து அளவிலோ இந்திய அளவிலோ மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும் விழுது விட்டு வேர் பரப்பி நிற்கிறது. பாசிச எதிர்ப்பு ஆற்றல்களும் தமது செயற்களம் தமிழ்நாடாகவே இருந்தாலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் பன்னாட்டுத் தோழமைகளைக் கண்டு அணிசேராமல் காவியை வீழ்த்த முடியாது. குசரத்து இசுலாமியர் இனக்கொலைக்குப் பன்னாட்டு வினவல் என்ற கோரிக்கை இத்திசையில் பெரும்பயனுடைத்து.

ஈழத் தமிழர் இனவழிப்புக்கு நீதிபெறப் பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்பதை அனைவரும் – சிங்களப் பேரினவாத அரசும் அதன் கூட்டாளிகளும் தவிர – ஏற்றுக் கொள்கிறோம். ஈழத்து நியாயம்தான் குசராத்துக்கும்!

இசுலாமியர் இனவழிப்புக்கும் அதானி-மோதி ஒட்டுமுதலியக் கூட்டின் பெருவீக்கத்துக்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள வேண்டும். அதானியின் மோசடிகள் மோதியின் அரவணைப்பில் நடந்தன, அதானியின் கொள்ளை மோதியின் அரசியல் வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இசுலாமியர் இனக் கொலையும் அதானியின் பகல் கொள்ளையும் ஒரே பாசிச நாணயத்தின் இரு பக்கங்களே. கொலையும் கொள்ளையும் உலக மயத்தின் நச்சு விளைச்சல்களே. இன்றைய உலகில் சுரண்டலும் அநீதியும் உலக மயமாகும் போது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டமும் பன்னாட்டுப் பரிமாணங்கள் பெறத்தான் வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல் 108

திங்கள், 19 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ் நாசரின் பேச்சு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி – தொடர்ச்சி)

குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு

தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எசுஎசு மாணவர் பிரிவான அ.பா.மா.அ. (ஏபிவிபி) குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அன்புத் தோழர் தமிழ்நாசர் தாக்கப்பட்டதை அறிவீர்கள். அப்பொழுது  குருதிக் காயத்தோடு அவரது மருத்துவமனைப் படமும் கண்டு நானும் தோழர்களும் பதறிப் போனோம்.

சப்தர்சங்கு மருத்துவமனையில் காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு திரும்பி வந்ததும் தொலைபேசி வழி அவர் தெரிவித்தவை வருமாறு:

ச.நே.ப.(J.N.U.) மாணவர் சங்க அலுவலகத்தில் ‘நூறு பூக்கள்’ (100 FLOWERS) என்ற குழுவைச் சேர்ந்த மாணவர்கள் பிப்பிரவரி 19 இரவு ஒரு திரைப்படம் காட்டத் திட்டமிட்டிருந்தார்கள். அவர்கள் அவ்வப்போது இப்படி முற்போக்கான படங்கள் திரையிடுவது வழக்கம்தான். அ.பா.மா.அ. (ஏபிவிபி) உறுப்பினர்கள் இதைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சங்க அலுவலகத்துக்குள் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அலுவலகத்தில் மாட்டியிருந்த தந்தை பெரியார் படத்தையும் மற்ற முற்போக்காளர் படங்களையும் உடைத்து நொறுக்கி விட்டு, வெறுப்பு முழக்கங்கள் (HATE SLOGANS) எழுப்பினார்கள். வெளியே திரண்ட நூறு பூக்கள் மாணவர்களில் இருவரை அடித்து விட்டார்கள். செய்தி புலனம் வழியாகப் பல்கலையில் பரவ, நாங்கள் குழுக்குழுவாக அங்கே சென்றோம். நூறு பூக்கள் மாணவர்களை அ.பா.மா.அ. (ஏபிவிபி) ஆட்கள் அடித்து சட்டை எல்லாம் கிழிந்திருந்தது. 

காவல்துறை அங்கு வந்து விட்டது ஆனால் அவர்கள் அனைவரும் வெளியில்தான் இருந்தார்கள். சங்க அலுவலகத்துக்குள் மிகவும் அருவருப்பான வெறுப்புக் கூச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. உள்ளே இருந்த புகைப்படங்களில் மார்க்குசு, இலெனின், பெரியார், சோதிபா புலே, சந்திரசேகர் ஆசாத்து இவர்களின் படங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டார்கள்.

அவர்கள் உள்ளே இருந்து கொண்டு அந்த வெறுப்புக் கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.  பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான ஒருவித கெட்ட வார்த்தைகளால் ஆன முழக்கங்கள் அவை. அவர்களில் பெரும்பாலார் பிஏ படிக்கின்ற மாணவர்களாக இருக்கிறார்கள். இப்போது புதிதாக வந்திருக்கிறார்கள் எம்ஏ, பிஎச்டி படிக்கின்ற மாணவர்கள் பெரும்பாலும் இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இது போன்று பிஏ படிக்கின்ற மாணவர்களை வைத்துதான் பிற்போக்கு இந்துத்துவ அரசியல் செய்கின்றார்கள்.  

சரி, இப்படி நடந்து கொண்டிருக்கும் போதே துணை வேந்தரிடம் புகார் அளிப்போம் என்று சொல்லி நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். அப்போது  அவர்களும் நமக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டே அந்தக் கதவை நோக்கி நடந்து வருகின்றனர்.

நூறு பூக்கள் குழுவினர் இன்றைக்கு உறுதியாக அந்த அலுவலகத்தில் அந்தப் படத்தை ஓட்டிக் காட்டுவோம், புகார் நாளைக்குக் கொடுப்போம் என்று சொன்னதால் நாங்கள் திரும்பி வருகிறோம் காரணம் அவர்கள் மாணவர் சங்க அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள் என்று சொல்லி நாங்கள் அனைவரும் திரும்பி வருகிறோம் அப்படித் திரும்பி வந்த குழு அந்த அலுவலகத்தில் படத்தை ஓட்டுகிறது. அங்கு உள்ளே படம் ஓடிக் கொண்டிருக்கிறது நாங்கள் சிலர் வெளியில் நின்று கொண்டிருந்தோம் ஒருவேளை அந்தக்  கும்பல் திரும்பவும் வந்து ஏதேனும் குழப்பம் செய்து விடக் கூடாது. அப்படிச் செய்தால் அதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிப் பேர் நாங்கள் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறோம்.

அப்படி நின்று கொண்டிருக்கிற போது அந்தக் கும்பல் எங்களைக் கண்காணித்துத் தகவல் திரட்ட தொடங்கி விட்டது  அதன்பிறகு பிறகு 15 முதல் 20 பேர் உள்ளே கடுமையான முறையில் நுழைகிறார்கள். நீங்கள் இப்படி நுழையக் கூடாது, இதற்கு முன்பே பல பொருட்களைச் சேதப்படுத்தி விட்டீர்கள் என்று சொல்லி நாங்கள் அந்த கும்பலைத் தடுக்கிறோம் அப்போது ஒரு தள்ளுமுள்ளு நடைபெறுகிறது அந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் முரட்டுத்தனமாக உள்ளே நுழைந்து விடுகிறார்கள் 

அப்படி அவர்கள் உள்ளே நுழைகிற போது உள்ளே சுமார் 20 மாணவர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒரு பதினைந்து பேருக்குக் குறைவில்லாமல் இருப்பார்கள். அந்தக் கும்பல் அங்கு கையில் கிடைக்கின்ற கம்பு குச்சி, கிடைக்கின்ற  மற்ற பொருட்களைக் கொண்டு மாணவர்களை அடிக்கத் தொடங்கி விட்டனர். குறிப்பாக ஒவ்வொரு மாணவரையும் இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கி விட்டனர். பிறகு ஒரு மாணவரைப் பலர் சேர்ந்து அடிக்க தொடங்கி விட்டனர்.

அப்போது எதிர்த்தரப்பில் டெல்லி காவல்துறை போல் ஏறத்தாழ 10 பேர் சீருடையல்லாத உடையில் வந்திருந்தார்கள். நீங்கள் யார் என்று நாங்கள் விசாரித்தோம். நீங்கள் காவல்துறையா என்று கேட்டோம். எதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. வாயையே திறக்கவில்லை. அவர்கள் அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையை நாங்கள் தடுக்கிறோம் என்கிற பெயரில்  அடித்துக் கொண்டிருந்த அ.பா.மா.அ. (ஏபிவிபி) கும்பலைத் தடுக்காமல்  நம்மை மட்டும் தடுத்துக் கொண்டிருந்தார்கள் –  அப்போதுதான் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெரியார் படத்தை யார் உடைத்தது என்று கேட்டோம்.

நாங்கள்தான் உடைத்தோம், அப்படித்தான் உடைப்போம் என்று சொல்லி அந்தக் கும்பலில் ஒரு ஆறு ஏழு நபர்கள் சுற்றி  அடிக்கத் தொடங்கி விட்டார்கள் அப்படி அடிக்கிற அந்க்த கும்பலில் ஒருவன் ஏதோ ஒரு பொருளை கொண்டு என்னை அடித்து விட்டான். அது என்ன என்று அப்போது என்னால் கணிக்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்துதான் கவனித்தேன் தலையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அந்தக் கும்பல் நம் பசங்களை இழுத்து அடித்துக் கொண்டிருந்த போது, நாம் அவர்கள் மீது அடி விழாதபடி பாதுகாத்துக் கொண்டு வருவதில் கவனமாக இருந்தோம். அப்படித்தான் இது  நடந்து கொண்டிருந்தது. சரி, நம் தலையில் இரத்தம் வந்து கொண்டிருக்கிறது, வெளியில் நிற்போம் சிறிது நேரம் என்று சொல்லி அங்கு இருந்த காவல்துறையின் வண்டி அருகே நின்று கொண்டிருந்தேன். ஒரு பத்து நிமிடம் ஆசுவாசப்படுத்தி கொண்டு மறுபடியும் அங்கே சென்று மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நின்று கொண்டிருந்த போது –  அப்போது அந்தக் கும்பல் என்னைப் பார்த்து அவன் அங்கேதானடா நிற்கிறான் என்று சொல்லி 20-25 பேர் தாக்கத் தொடங்கி விட்டனர்.

அந்த வேளையில் மருத்துவ ஊர்தி(ஆம்புலன்சு) வருகிறது. நான் உட்பட இரண்டு நண்பர்கள் அந்த மருத்துவ ஊர்தியில் ஏறுகிறோம் – மருத்துவமனை செல்வதற்காக. அந்தக் கும்பல் மருத்துவ ஊர்தியைச் சுற்றி நின்று கொண்டு சாத்தப்பட்ட கதவுகளைத் தட்டித் தட்டித் திறக்க முயற்சி செய்வதும் சன்னல் வழியாகக் கைகளை நீட்டி  உள்ளே இருந்த எங்களை அடிப்பதுமாக அவர்கள் மொழியில் மிரட்டல் விடுத்துக் கொண்டே இதைச் செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் மூவரையும் அந்த வண்டியிலிருந்து வெளியில் இழுக்க முயற்சிக்கிறார்கள். அதன் பிறகு அந்த மருத்துவ ஊர்தி ஓட்டுநரிடம் வேகமாகச் செல்லுங்கள் என்று சொல்லி நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம் மருத்துவமனைக்கு. 

இதில் இரண்டு விடயம் இருக்கின்றது தோழர். ஒன்று இது போன்ற தாக்குதல் அனைத்து மாணவர்கள் மீதும் நடைபெறுவது, நாம் அந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புக் காட்டுகிற போது தாக்குதல் இன்னும் மூர்க்கமாகிறது.  குறிவைத்துத் தாக்குகிறார்களா என்று கேட்டால், அந்த முடிவுக்குதான் வர வேண்டி உள்ளது. காரணம் தமிழகத்தில் வேங்கைவயலில் நடந்த சாதி வன்கொடுமை குறித்து நாங்கள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே முழக்கமிட்டு எங்களுடைய ஆதரவை அந்த மக்களுக்குக் கொடுத்திருந்தோம். பிறகு இட ஒதுக்கீட்டுச் சங்கம் (Reservation Clun) என்று இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். 

நாம் எதிர்ப்புக் காட்டும் போது  அந்தக் கும்பல் சொல்கிறது: “தமிழ்நாடு, கேரளா, நீங்கள் எல்லாரும் சிறுபான்மை நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்? நாங்கள்தான் இங்கு பெரும்பான்மை நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.” இப்படிச் சொல்வதும் இப்படித் தாக்குதல் தொடுப்பதும் இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே தொடர்ச்சியாக நடைபெற்று வருகிற ஒன்றுதான் இது.

இரண்டாவது விடயம் பி.ஒ.நி. / பிபிசி ஆவணப்படம் திரையிடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிற போது இதே அ.பா.மா.அ. (ஏபிவிபி) கும்பலைச் சார்ந்தவர்கள் மாணவர்கள் மீது கல் எறிந்தார்கள். அப்படிக்  கல்லைக் கொண்டு எறிந்தது மட்டுமல்லாமல் அந்த திரையிடலுக்கு வந்து சென்ற மாணவர்கள் அனைவரையும் இழுத்து வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாக்குதலில் நம் தமிழ் மாணவர் ஒருவர் – உடலில் சிக்கல் கொண்ட ஊனமுற்ற மாணவர் ஒருவர் – உள்ளூர இரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அவர் பெயர் பிரவீன்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக அப்போதே நாங்கள் துணைவேந்தருக்குப் புகார்க் கடிதம் ஒன்று எழுதினோம். இப்போதைய து.வே.(விசி)  சாந்திசிரீ துளிபுடி பண்டிதர் ஆவார். அவர் தன்னைத் தமிழ் என்று சொல்லிக் கொள்வார். அவருடைய தாய் தந்தையில் ஒருவர், தமிழ் ஒருவர் தெலுங்கு. இங்கு அனைவரிடத்திலும் வணக்கம் என்று சொல்லித்தான் தன்னுடைய பேச்சையே தொடங்குவார். நானும் தமிழ்தான் என்று சொல்வார். அதற்காகவே அந்தப் புகாரில் தாக்குதலுக்கு உள்ளான நாங்கள் தமிழ் மாணவர்கள் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தோம். அதில் 25 பேர் கையெழுத்திட்டே அனுப்பி இருந்தோம். அந்தக் கடிதத்தில் இதை முக்கியமாகக் குறிப்பிட்டு இருந்தோம். எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இதுபோன்று திரையிடல் அன்று அ.பா.மா.அ. (ஏபிவிபி)கும்பல் கல் எறிந்து விட்டார்கள். கல் எறிந்து தாக்குதல் நடத்திய கும்பல் எங்கள் முன்புதான் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை  தாக்குதல் நடத்திய அந்தக் கும்பலின் மீது நீங்கள் நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான் எங்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இருப்பதாக நாங்கள் கருத முடியும் என்று, 25 பேர் கையெழுத்திட்டே இந்தப் புகார்க் கடிதத்தை அவருக்கு அனுப்பினோம். அந்தப் புகார்க் கடிதம் குறித்து இதுவரை எவ்விதப் பதிலும் எங்களுக்கு வரவில்லை. அந்தப் புகார்க் கடிதம் குறித்துப் பேசுவதற்கு எங்களுக்கு இதுவரை நேரங் கூட கொடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் இப்படி ஒரு தாக்குதல் மறுபடியும் நடைபெற்று இருக்கிறது.

மாணவர் சங்கம் எங்களுடன்தான் நிற்கிறது. இந்தச் சிக்கலில் இந்த சூழலில் நேற்றைக்குத் தமிழகத்தைச் சேர்ந்த நா.உ.(எம் பி) செந்தில்குமார் வந்திருந்தார்.  இந்தத்  தாக்குதல் கேள்விப்பட்டு அப்படி நா.உ.(எம் பி)  வந்திருக்கிற போது பெரியார் படம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.  அந்தப் படத்தைச் சங்கத் தலைவர்,   நான் உட்பட அனைவரும் சேர்ந்துதான் அதை உடைத்த இடத்தில் மாட்டினோம்.  

பிறகு நா.உ.(எம் பி)  செந்தில்குமார் அவர்கள் வந்திருந்ததைக் கேள்விப்பட்டு து.வே.(வி.சி) அவர்கள் அழைத்திருந்தார்கள் எங்களை. அப்போது இந்தத் தாக்குதல் குறித்துப் புகார் மனு ஒன்று எழுதிக் கொடுங்கள் இதன் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொன்னார்கள். அப்போது நா.உ.(எம் பி) செந்தில்குமாரிடம் கல்லூரி நிருவாகத்தினர் சொன்னார்கள்: இரண்டு தரப்பையும் உறுதியாக நாங்கள்  பார்க்க வேண்டும். தாக்குதல் நடவடிக்கை குறித்தான ஆதாரங்கள் கிட்டும் பட்சத்தில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இரண்டு தரப்பினர் மீதும் புகார் இருக்கிறது என்பது போன்று  சொன்னார்கள்.  

நா.உ.(எம் பி) செந்தில்குமார் அங்கே இருக்கின்ற போதே மாணவர்கள் நாங்கள் திருப்பிக் கல்லூரி நிருவாகத்திடம் கேள்வி எல்லாம் கேட்டோம். இதற்கு முன்பே இது போன்ற தாக்குதல் குறித்துப் புகார் கொடுத்திருக்கும் பட்சத்தில் அந்தப் புகாருக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்ற போது நா.உ.(எம் பி)  அவர்கள் சொன்னார்கள்: “இப்போது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்!”    

இறுதியில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்: இது போன்ற  தாக்குதல்களை இது போன்ற கும்பல்கள் இங்கு உள்ள மாணவர்கள் மீது நடத்துவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. இதற்கு முடிவு கட்டத் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல் 107

ஞாயிறு, 18 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் தொடர்ச்சி)

இரத்தினம் மணி

தாழி குறிப்பு: வழக்கறிஞர் இரத்தினம் அன்று போலவே இன்றும் களத்தில் நிற்கிறார். 1980ஆம் ஆண்டு சென்னைச் சிறையில் என்னையும் தோழர்களையும் நேர்காண வந்த இளைஞர் இரத்தினம் இப்போதும் அதே துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். பகைவர்களையும் நண்பர்களையும் உறங்க விட மாட்டார்.   

திண்ணியம் வழக்கைத் திறம்பட நடத்திய வழக்கறிஞர் சு.க. மணி என் கல்லூரி நண்பர், குடந்தை கல்லூரியில் அறிவியல் இளநிலையில் எனக்கு ஓராண்டு மூத்தவர். சேக்குசுபியரின் ஒதெலோ நாடகத்தின் ஒரு காட்சியை ஓரங்க நாடகமாக மேடையில் நடித்துக் காட்டுவார். இருளின் பின்னணியில் கரும்போர்வை உடுத்திச் சிறு ஒளிச் சுடர் ஏந்தி ஆங்கில உச்சரிப்போடு ஆங்கிலம் பேசி குரல் ஏற்றி இறக்கி மிரட்டி விடுவார் மிரட்டி!

கல்லூரித் தேர்தலில் ஆங்கிலப் பேரவைத் தேர்தல் முக்கியமானது. அதில்தான் கூடுதலான மாணவர்களுக்கு வாக்குரிமை. கல்லூரியில் பார்ப்பன மாணவர்கள் அதிகம், அதிலும் அப்போது சுதந்திராக் கட்சியும் திமுகவும் கூட்டணி. ஆங்கிலப் பேரவைத் தலைவராக 14  ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்ப்பனரல்லாத மாணவர் மணிதான் என்று பேசிக் கொண்டார்கள். அப்போதெல்லாம் எசு.கே. மணி! அடுத்த ஆண்டு (68-69 என்று நினைவு) அதே பொறுப்புக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். சில மாதம் முன்பு இளைஞர் அரண் தோழர்களைச் சந்திக்கக் குடந்தை சென்றிருந்தேன். கல்லூரி வாயிலருகே தோழர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது பெரியவர் ஒருவர் அருகில் வந்து என்னை நலம் வினவி விட்டுச் சொன்னார்: “அந்தத் தேர்தலில் நான் உங்களுக்கு வாக்கு அளித்தேன்.” ‘தேர்தலில் வாக்குறுதி ஏதும் தந்தேனா?’

*தோழர் சு.க. மணிதான் நம்முடைய பேராசிரியர் க. நெடுஞ்செழியனுக்கும் சட்டத் துணைநின்றவர்.

இரத்தினங்களும் மணிகளும் என்றும் மங்குவதில்லை!

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல் 107