சனி, 28 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): நாற்று பறித்த இராமன்

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6) – தொடர்ச்சி)

 நாற்று பறித்த ராமன்

பொன் நாடார் கொலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகும் தோழர் ஏ.எம். கோதண்டராமன் சில மாதக் காலம் கடலூர் மத்திய சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். இடையிடையே வேறு சில வழக்குகளுக்காக அவர் சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார். கடலூர் நீதிமன்றத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு இருந்தது.

யாவற்றிலும் பெரிய வழக்கு — சதி மற்றும் கொலை வழக்கு — தஞ்சை நீதிமன்றத்தில் ருந்தது. நானும் இலெனினும் எந்த வழக்கில் தண்டனை பெற்றிருந்தோமோ அதே வழக்கு! அந்த வழக்கில் முதல் எதிரி நான், கடைசி எதிரி ஏஎம்கே. மொத்தம் ஏழு எதிரிகளில் முதலில் பிடிபட்ட எங்கள் நால்வர் மீதும் வழக்கு விசாரணை முடிந்து தண்டனையும் கொடுத்தாயிற்று. மற்றவர்கள் அது வரை பிடிபடாததால் அவர்கள் மீதான வழக்கைப் பிரித்து(Split) நடத்தியாக வேண்டும்.

இப்போது ஏஎம்கே பிடிபட்டு விட்டதால், அவரை மட்டும் குற்றக் கூண்டில் நிறுத்தி மீண்டும் ஒரு முறை வழக்கு விசாரணையை நடத்தியாக வேண்டும்.

அப்போது திருச்சி சிறையில் இருந்த நாங்கள் தஞ்சை நீதி மன்றத்தில் ஏ.எம். கே. மீதான வழக்கு விசாரணை தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம். வழக்கின் மீது அக்கறை கொண்டதால் அல்ல. அது பற்றி நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை . தஞ்சையில் வழக்கு என்றால் ஏஎம்கேயை திருச்சி சிறையில்தான் வைத்தாக வேண்டும். அவரைப் பார்த்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அவரைப் பார்த்து அவரோடு பேசவும் நாங்கள் ஆவல் கொண்டு காத்திருந்தோம்.

என்னையும் இலெனினையும் பொறுத்த வரை பாச உணர்ச்சிக்கு மேற்பட்ட ஒரு காரணமும் இருந்தது. நாங்கள் எந்த இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறைப்பட்டோமோ அந்த இயக்கத்துடன் சிறையில் கருத்து மாறுபாடு கொண்டு விலகி நின்றோம். வருங்காலத்துக்கான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தோம்: வெளியே எங்களை வழிநடத்திய தோழர் ஏஎம்கேயுடன் இது குறித்து விவாதிக்க விரும்பினோம். அதற்காக அவரது வருகையை எதிர்பார்த்திருந்தோம்.

தோழர் இலெனினைப் பொறுத்த வரை, ஏஎம்கேயால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்துக்கு வந்தவர். ஆனால் நம்புவதற்கே கடினமான செய்திதான், அப்போதெல்லாம் அவருக்கு ஏஎம்கேயை ஏஎம்கே. என்று தெரியாது. பெரியவராகவும் தோழர் சங்கரனாகவும்தான் தெரியும். முன்பின் அறிமுகமில்லாத — இன்னார் என்றே தெரியாத — ஒருவரின் வழிகாட்டுதலை நம்பி ஏற்று, மனைவி மக்களைத் துறந்து உயிரைக் கொடுக்கவும் சித்தமாய்ப் புரட்சிகர இயக்கத்தில் இணைவது என்றால்… அந்தப் பெருமையில் பெரும் பங்கு ஏஎம்கேயின் ஒப்படைப்புணர்வையும் அயராத உழைப்பையும் சாரும்.

தோழர் ஏஎம்கேதான் என்னைப் பந்துவக்கோட்டை வரச்சொல்லி இலெனின், குருமூர்த்தி,  இராசப்பா முதலான தோழர்களிடம் அறிமுகம் செய்து வைத்தவர். அப்போதெல்லாம் தோழர் இலெனின் அவரைப் பெரிய ஐயா என்றும் என்னைச் சின்ன ஐயா என்றும் அழைப்பார்.

இலெனினும் மற்றத் தோழர்களும் ஏஎம் கோதண்டராமன் என்ற பெயரையே ‘கியூ’ பிரிவு போலீசார் சொல்லித்தான் தெரிந்து கொண்டார்கள். அந்தப் பெயருக்குப் பின்னாலிருந்த வரலாற்றைச் சிறையில் நான் அவர்களுக்குச் சொன்னேன்.

வட ஆற்காடு மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள ஆனைமநல்லூர் ஏஎம்கேயின் சொந்த ஊர். நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறிவுக் கருத்துகளிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இயங்கி வந்தார். திகவிலிருந்து திமுக பிரிந்த போது இரண்டும் வேண்டா என்று பொதுவுடைமைக் கட்சிக்கு மாறி விட்டார். வயது 16, ஆண்டு 1950.

வேலூர் ஊரிசு கல்லூரியிலும், பிறகு சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த போது, தீவிர அரசியல் ஈடுபாட்டுடன் பொதுவுடைமை இயக்கத்துக்காக உழைத்தார். படிப்பு முடிந்து சிறிது காலமே வழக்கறிஞராகப் பணி புரிந்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் புரட்சிக்காகவே ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞருக்குக் கறுப்பு மேலாடையும் அங்கியும் மாட்டி வழக்குரைஞர் தொழில் செய்வது சரிப்பட்டு வரவில்லை. ஒருநாள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு முழு நேர இயக்கப் பணிக்கு வந்து விட்டார்!

மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகத் தொழிற்சங்கப் பணியாற்றத் தோழர் ஏஎம்கே ஆவடி-அம்பத்தூர் பகுதிக்கு அனுப்பப்பட்டார். வில்லிவாக்கத்திலிருந்து பட்டாபிராம் வரை ஏராளமாய்ப் புதிய தொழிற்சாலைகள் முளைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தப் பகுதியில் தொழிலாளர்களை அமைப்புவழியில் திரட்டித் தொழிற்சங்கம் கட்டும் பொறுப்பை ஏஎம்கே திறம்பட நிறைவேற்றினார்.

1967 தேர்தலுக்குப் பின் மா.பொ.க. (சிபிஎம்) கட்சிக்குள் மூண்ட கருத்துப் போராட்டத்தில் தலைமையுடன் கடுமையாக மோதிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஏஎம்கே. அவரோடு சேர்த்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் தொழிற்சங்கத் தலைவர் குசேலரும் ஒருவர்.

நக்குசலைட்டு(Naxalite) இயக்கம் எனப் பெயர் பெற்ற இ.பொ.க.(மா.இலெ.)/CPI(M.L.) கட்சியைத் தமிழகத்தில் தோழர் எல். அப்புவுடன் சேர்ந்து நிறுவியவர் ஏஎம்கே .உடனடி ஆயுதப் போராட்டம், சிற்றூர்ப் புறங்களில் வருக்கப் பகைவரை அழித்தொழிப்பது,  மக்கள்திரள் போராட்டங்களைக் கைவிட்டு கரந்தடிப் போர் முறையை (Guerrilla warfare) மேற்கொள்வது என்றெல்லாம் கட்சி நிலையெடுத்த போது, தயக்கமோ தாமதமோ இல்லாமல் இந்த முடிவுகளை ஏற்று, நகர வாழ்வையும் தொழிற்சங்க அரசியலையும் துறந்து தஞ்சை மாவட்டச் சிற்றூர்ப்புறத்துக்கு வந்து விட்டார் ஏஎம்கே!

முதல் சந்திப்பிலேயே என்னைப் பார்த்து, “மற்றதையெல்லாம் உடைப்பது இருக்கட்டும், உங்கள் குடும்பத்தை உடைத்து விட்டு வெளியே வாருங்கள்” என்று சொன்னவர் ஏஎம்கே.

அந்த முதல் சந்திப்பை மறக்கவியலாது. நக்குசல்பாரி இயக்கமாக அறியப்பட்ட மா-இலெ கட்சியை எனக்கு அறிமுகம் செய்தவர், என்னை இயக்கத்துக்கு வென்றெடுத்தவர் பேராசிரியர் இராதாகிருட்டிணன் (இப்போது தோழர் மருதமுத்து). அவரும் நானும் தோழர் பாசுகரனும் ஆசிரியர் தோழர் சிவானந்தமும் சில மாணவர்களும் குடந்தை நகரில் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருந்தோம். கல்கத்தாவிலிருந்து வந்து கொண்டிருந்த (இ)லிபரேசன் இதழையும் கோவையிலிருந்து வந்து கொண்டிருந்த ‘புதிய தலைமுறை’ இதழையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். நாங்களே ‘புதிய உலகம்’ என்ற திங்களேடு தொடங்கத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ஏட்டுக்கு ஆசிரியர் என்று முடிவாகியிருந்தது. ஆனால் எங்களுக்குக் கட்சியோடு தொடர்பில்லை.

திருச்சிராப்பள்ளியில் ஆசிரியர் தோழர் ’அசுரனோடு’ இராதாவுக்குத் தொடர்பிருந்தது. கட்சியோடு தொடர்பு வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.  

1969 செட்டம்பர்த் திங்கள் ஒரு வெள்ளிக் கிழமை இரவு அசுரனோடு பெரியவரும் (ஏஎம்கே) குடந்தையில் பேராசிரியர் இராதாவின் இல்லத்துக்கு வந்து சேர்ந்தனர். அக்கா இந்திரா எங்களுக்கு உணவு பரிமாறியவுடனே ஏஎம்கே ’உட்காருவோமா?’ என்று கேட்டு, சுற்றி எங்களை உட்கார வைத்துக் கொண்டு அறிக்கையுரை அளிக்கத் தொடங்கி விட்டார். உடனே ஆய்தப் போரட்டம், ஊர்ப்புறத்துக்குச் சென்று அழித்தொழிப்புக்கு விவசாயத் தொழிலாளர்களை ஆயத்தப்படுத்துவது என்று சொல்லி விட்டு, அழித்தொழிப்பை நியாயப்படுத்த சாரு மசூம்தார் கூறியவற்றை எடுத்துக்கட்டினார். 1905 முதல் உருசியப் புரட்சியின் தோல்வி குறித்து இலெனின் எழுதிய “மாசுகோ எழுச்சி குறித்து”/ “On the Moscow Uprising” என்ற கட்டுரையைப் படித்துக்காட்டி விளக்கினார்.   

விடியற்காலை புறப்படும் முன் ”சரி, நீங்க என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். “தியாகு எப்போதோ முடிவு செய்து விட்டார், கட்சித் தொடர்புக்காகத்தான் காத்திருந்தோம், இப்போதைக்கு அவரை ஆசிரியராகப் போட்டு பத்திரிகை நடத்தத் திட்டமிட்டிருக்கோம்” என்று இராதா சொன்ன போது ஏஎம்கே வேகமாகத் தலையசைத்து மறுத்தார்: ”தியாகு ஒரு பாட்டாளிய மாணவர் (proletarian student) எனத் தோன்றுகிறது. அவரை உடனே சிற்றூருக்கு அனுப்புங்கள். பத்திரிகை வேலையெல்லம் மற்றவர்கள் பாருங்கள். புரட்சிதான் அவசரப் பணி.” என்னைப் பார்த்து தியாகு, முதலில் உங்கள் குடும்பத்தை த் துண்டித்துக் கொள்ளுங்கள் (“Thiagu, you first break your family”) என்று சொல்லிப் பெரும்பண்ணையூர் தோழர் ஆர். மாணிக்கம் முகவரியை எழுதிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். இரண்டே நாளில் படிப்புச் சான்றிதழ்கள் அனைத்தையும் எரித்து விட்டு நான் பெரும்பண்ணையூர் சேரி போய்ச் சேர்ந்தேன்.]

அவரோடு ஏறத்தாழ ஓராண்டுக் காலம் தஞ்சை மாவட்டத்துச் சேரிகளில் வேலை செய்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. வேலை என்றால் இயக்க வேலை மட்டுமல்ல!

மக்களுடன் ஒன்றுகலப்பதன் பகுதியாக நான் வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கிய போது என்னை அவர் பாராட்டினார். பாராட்டிய தோடு நில்லாமல் அவரும் வயல் வேலைகளைப் பழகிக் கொண்டு செய்யத் தொடங்கி விட்டார்.

பட்டுக்கோட்டைப் பக்கம் நம்பிவயல் அருகே ஒரு சிற்றூரில் நாங்கள் இருவரும் நாற்றுப் பறிக்கும் வேலைக்குப் போயிருந்தோம். அந்த நிலம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தோழர் ஒருவருக்குச் சொந்தமானது. நாற்றுப் பறிக்க வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சேரிக்காரர்களே என்றாலும், குடியானவத் தெருவிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.

வேலைக்கு நடுவில் அனைவருக்கும் வரப்பில் வைத்துத் தொன்னையில் கூழ் ஊற்றுவார்கள். வரிசையாக நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடிக்க வேண்டும். குடியானவத் தெருக்காரர்கள் அது வரை சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாலும் கூழ் வாங்கிக் குடிக்க வராமல் ஒதுங்கி நின்று கொள்வார்கள். நிலவுடைமையாளராகவே இருந்தாலும் சேரிக்காரர் சேரிக்காரர்தான்கூலிக்காரராகவே இருந்தாலும் சாதிக்காரர் சாதிக்காரர்தான் என்பதில் அவர்கள் தெளிவாய் இருப்பார்கள்.

ஏஎம்கேயும் நானும் வரிசையில் நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடித்த போது குடியானவத் தெருக்காரர்களுக்குத் திகைப்பு! அது வரை எங்களைத் தங்கள் ஆள் என்று எண்ணியிருக்க வேண்டும்!

கூழ் குடித்து முடித்து சேற்று நீரில் கைகழுவி புறங்கையால் வாய் துடைத்து வெற்றிலைபாக்கு மென்று சுவைத்தபடி ஏஎம்கே மீண்டும் நாற்றுப் பறிக்கக் கால் மடித்து உட்கார்ந்த போது அருகிலிருந்தவர் சன்னமான குரலில் கேட்டார்:

“ஏனையா நீங்களும் போய் அவன்களுடன் கூழ்  வாங்கிக் குடிக்கிறீர்கள்? ஏதோ வேலைக்கு வந்துவிட்டோம் என்பதால் சாதியை விட்டுவிட முடியுமா?”

ஏஎம்கே சிரித்துக் கொண்டே சொன்னார்: ”நாங்களும் சேரிதான். சொந்தக்காரர்கள். வெளியூரில் இருந்து வந்துள்ளோம்.”

கேட்டவர் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டார். அன்றிரவு ஏஎம்கேயிடம் நான் கேட்டேன்: “நீங்கள் அப்படிச் சொன்னீர்களே, அவன் நம்மைத் தெரிந்து கொண்டு காட்டிக் கொடுத்துவிடப்  போகிறான்”

அப்போது நாங்கள் தலைமறைவாக இருந்தோம். ஏஎம்கே சொன்னார்:

நாம் புரட்சி செய்ய வேண்டும் என்றால் நம்முடைய வருக்க நிலையிலே இருந்து இறங்கி வருகிற மாதிரி சாதி நிலையிலே இருந்தும் இறங்கி வர வேண்டும். நமக்குச் சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. சாதி பேரில் மிக அதிகமாக ஒடுக்கப்படுகிறவர்களுடன் ஒன்றாயிட வேண்டும். அதை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அதுதான் நமக்கு உண்மையான பாதுகாப்பு.”

தஞ்சையில் நடைபெறவிருந்த வழக்கு விசாரணைக்காகக் கடலூரிலிருந்து ஏஎம்கே திருச்சி சிறைக்கு மாற்றப்படும் செய்தி கிடைத்து நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். திருச்சி சிறைக்குக் கொண்டுவரப்பட்ட போது அவரும் கூட எங்களையும் மற்ற தோழர்களையும் சந்திக்கும் ஆவலோடுதான் வந்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவரை எங்களோடு வைக்காமல், தனியாக ஓரிடத்தில் அடைத்து வைத்தார்கள். ஏமாற்றம்! ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள எங்களுக்குத் தேவைப்பட்டது மனவுறுதி!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு – தாழி மடல் 20

வெள்ளி, 27 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6)

 அகரமுதல

     27 January 2023      



(தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? – தொடர்ச்சி)

ஏ. எம். கே. (6)

மனவுறுதி

சட்டத்தின் ஆட்சி என்றும், சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் சட்டம் தன்வழிச் செல்லும் என்றும் அரசிலிருப்பவர்கள் எவ்வளவுதான் பிரமாதமாய்ப் பறைசாற்றினாலும், அரசு இயந்திரத்தின் அடக்குமுறைக் கருவிகளே சட்டத்தை மீறுகிற சந்தர்ப்பங்களில் இந்தக் கோட்பாடுகளை எல்லாம் வசதியாக மறந்து விட்டுச் கண்களில் கறுப்புத் துணி கட்டி விடுவார்கள்.

இதை நியாயப்படுத்த அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? ஆயுதப் படையினரின் மனவுறுதி கெட்டு விடக் கூடாதாம். சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது மக்களின் மனவுறுதிதானே தவிர, ஆயுதப் படையினரின் மனவுறுதி அன்று. ஓர் உண்மையான மக்களரசுக்கு மக்களின் மனவுறுதிதான் முதன்மையாக இருக்க வேண்டும்.

‘மனவுறுதிக் கோட்பாடு’ பல வழிகளிலும் செயல்படுவதால்தான், ஆயுதப் படையினர் கொலையே செய்தாலும் சட்டத்தின் கையில் சிக்காமலிருக்க முடிகிறது. சிக்கினாலும் எளிதில் தப்பிவிட முடிகிறது.

கடலூர் சிறைக்குள் பொன் நாடாரை அடித்துக் கொன்ற சிறை அதிகாரிகளின் ’மனவுறுதி’யும் கூட அரசுக்கு முக்கியமாய்த் தெரிந்திருக்க வேண்டும். விசாரணை முடிந்து நீண்ட காலம் கழிந்தபின் தண்டனை ஏதுமின்றியோ, அற்பசொற்பத் துறைவழித் தண்டனைகளுடனோ அவர்கள் வேலைக்குத் திரும்ப அழைக்கப் பட்டார்கள். ஒரே ஒருவர். அதிலும் அவர்கள் அனைவரிலும் உயரதிகாரியான சிறைக் கண்காணிப்பாளர் மட்டும் வேலைநீக்கம் செய்யப்பட்டார்.

கைதியின் மரணத்துக்காக ஒரு சிறைக் கண்காணிப்பாளர் வேலைநீக்கம் செய்யப்பட்டது — கைதிகள் நடத்திய போராட்டத்தினால் இப்படி ஒரு விளைவு ஏற்பட்டது — சாதாரண நிகழ்வு அன்று. இந்த சாதனை குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் வேலைநீக்கத்துக்கான உண்மைக் காரணம் தெரிய வந்தது.

பொன் நாடாரைக் கொலை செய்ததற்காகவோ, அந்தக் கொலைக்கு உடந்தையாய் இருந்ததற்காகவோ, அந்தக் கொலையைத் தடுக்கத் தவறியதற்காகவோ சிறைக் கண்காணிப்பாளர் வேலைநீக்கம் செய்யப்படவில்லை. ஓர் இரவு முழுக்கச் சிறைக் கைதிகளை க் கதவடைப்புச்  செய்யாமல் விட்டதற்காகவே அவர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்நீதி கேட்டுப் போராடிய கைதிகளை வலுவந்தமாய்ப் பிடித்துக் கொட்டடியில் அடைக்காமல் விட்டதுதான் கொலைப் பாதகத்தை விடவும் கொடுங்குற்றம்! இதுவும்கூட மனவுறுதிக் கோட்பாட்டின் வேலைதானோ என்னவோ!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 19

தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?

 அகரமுதல


தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? 




(தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5), கடலூர் இரவு-தொடர்ச்சி)

நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா?

எங்குச் சுற்றினாலும் இங்குதான் வந்து நிற்க வேண்டும் என்பது போல், காலநிலை மாற்றம் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் புதைபடிவ எரிபொருளின் வாசலில்தான் நிறுத்தப்படுகிறோம்.

செடிகொடிகள் மரங்கள் விலங்குகள் (மனிதனும் கூட) மண்ணில் புதைந்து நீண்ட காலம் மக்கிச் சிதைந்துதான் புதைபடிவ எரிபொருள் உண்டாகிறது. அது கரி வளி, நீரகம் எனும் இரு தனிமங்களால் ஆனது. நிலக்கரி, எண்ணெய் (கல்+நெய் = கன்னெய், பெற்றோல்), இயற்கை எரிவாயு ஆகியவை முதன்மையான புதைபடிவ எரிபொருள்கள் ஆகும்.

நிலக்கரி என்பது பாறையடுக்குகளில் படிவுகளாகக் காணப்படுகிறது. பாறையும் மடிந்த செடி கொடி மரங்களும் விலங்குகளும் மக்கிய நிலையில் அடுக்கடுக்காகக் குவிந்து நிலக்கரி ஆகின்றன. ஒரு நிலக்கரித் துண்டின் எடையில் பாதியளவு புதைபடிவச் செடி கொடிகள் மரங்களாக இருக்க வேண்டும்.

காவிரித் தீரத்தில் புதைபடிவ எரிபொருள் கிடைப்பதற்குக் காரணம்: காட்டாறாகப் பெருகிவந்த காவிரியாறு செடி கொடிகள் மரங்களை எல்லாம் சாய்த்து மண்ணில் புதையச் செய்து விட்டது. இலட்சக்கணக்கான ஆண்டுகளில் அது மக்கிக் கரியும் பிற எரிபொருளும் ஆயிற்று. 

கன்னெய் என்பது படிவுற்ற பாறையடுக்குகளில் களிப்பாறை(shale) போன்று திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. இந்த மூலப்பொருளைச் சூடாக்கி கெட்டியான எண்ணெய் ஆக்கி, இதைப் பயன்படுத்தி வளியெரிநெய் (gasoline) செய்யலாம். வட அமெரிக்காவில் கன்னெய்யை வளியெரிநெய் என்றுதான் சொல்வர். இயற்கை எரிவாயு வழக்கமாகக் கன்னெய்ப் படிவுகளுக்கு மேல் சிப்பங்களாக (அல்லது பொட்டலங்கள் போல்) காணப்படுகிறது. கன்னெய் இல்லாத படிவப் பாறை அடுக்குகளிலும் எரிவாயு காணப்படுவதுண்டு. இயற்கை எரிவாயு முதன்மையாக ஈரவளியால்(methane) ஆனது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்படுத்தப்படும் மொத்த ஆற்றலில் 81 விழுக்காடு நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயுவிலிருந்து பெறப்படுவதாகும். வீடுகளில் குளிர் போக்கிக் கதகதப்பூட்டவும், ஆலைகளில் எந்திரம் இயக்கவும், சாலையில் வண்டியோட்டவும் தேவையான மின்னாற்றல் இப்படித்தான் இயற்றப்படுகிறது.

புவியானது அள்ள அள்ளக் கொடுக்கும் அட்சய பாத்திரமன்று. இருக்கிற நிலக்கரியை எல்லாம் எடுத்துத் தீர்த்து விட்டால் புதிய நிலக்கரி கிடைக்க இலட்சக்கணக்கான ஆண்டுகளாகும். எண்ணெயும் எரிவாயுவும் கூட இப்படித்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே புதைபடிவ எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டும். அதாவது புவித்தாயின் அடிவயிற்றிலேயே விட்டுவைக்க வேண்டும்.

இரண்டாவதாக, கடந்த 20 ஆண்டுகளில் மாந்தச் செயல்பாடுகளால் கரியுமிழ்வுகள் பெருகிப் போனதில் கிட்டத்தட்ட முக்கால் பங்கிற்குப் புதைபடிவ எரிபொருள்களே பொறுப்பாகும். இப்போது புதைபடிவ எரிபொருள் மீதான சார்புநிலையைக் குறைக்கவும், இந்த எரிபொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் கெடுவதைக் குறைக்கவும் வழியுண்டா? என்று அறிவியலரும் பொறியியலரும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

நிலக்கரியைக் காட்டிலும் இயற்கை எரிவாயு 50 விழுக்காடு குறைவாகவே உமிழ்வுடையது என்பதால் எரிவாயு கொண்டு வண்டியோட்டும் படியான ஊர்திகளை வணிக அளவில் கிடைக்கச் செய்யும் தொழில்நுட்ப ஆய்வுகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காற்று மண்டலத்திலிருந்து கரியிருவளியைப் பிடித்து நிலத்தடியில் பதுக்கி வைக்கும் ஆய்வுகளும் நடக்கின்றன.

எல்லாம் சேர்ந்து புதைபடிவ எரிபொருளின் தீங்கைக் குறைத்துப் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்திக் காலநிலை மாற்றத்துக்குத் தடை போட்டு விடுமா? விடும் என்ற நம்பிக்கை இல்லை. இந்த நிலத்தடி பூதங்களை வெளியே வர விடாமல் உள்ளேயே அடைத்து வைப்பதற்குத்தான் வழி தேட வேண்டும். முதலில் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு பரவாமல் தடுக்கப்பட வேண்டும்.

ஒரு சில ஆண்டுகள் முன்பு பச்சை வேட்டைக்கு எதிராகச் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது அருந்ததி இராய் கேட்டார்:

“நாம் களிக்கனிமத்தை மலையிலேயே விட்டு விடலாமா? “(“Shall we leave the bauxite in the mountains?”)

அலுமினியத்துக்கு இன்றியமையாத மூலப் பொருள் களிக்கனிமம் (bauxite)எனும் தாது. களிக்கனிமச் சுரங்கங்களாலும் களிக்கனிமத்திலிருந்து ஈயம் செய்யும் செய்முறையாலும் பாரிய சூழற்கேடு நிகழ்கிறது. அதைத் தவிர்ப்பதற்காகக் களிக்கனிமம் எடுப்பதை நிறுத்தி விடுவோமா? அதாவது, உங்கள் சுரங்கக் கொள்கை என்ன? என்று கேட்டார் அருந்ததி இராய்.

நம் சுரங்கக் கொள்கை என்ன? நிலக்கரியை நிலத்திலேயே விட்டு விடுவோமா?

தோழர் தியாகு

தரவு –தாழி மடல் 19

வியாழன், 26 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5) : கடலூர் இரவு

 அகரமுதல








(தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் தொடர்ச்சி)

கடலூர் இரவு

சிறைப்பட்ட எவரும் சிறையிலிருந்து தப்ப எண்ணுவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது அந்த எண்ணத்தைச் செயலாக்க முற்படுவதும் இயல்புதான். சாதாரணமான ஒருவருக்கே இப்படி யென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டு ஏதேனுமொரு குறிக்கோளுக்காகச் சிறைப்பட்டவர்களுக்கு அதுவே புகழ்தரும் சாதனையாகி விடுகிறது.

ஒளரங்கசீப்பின் ஆகுரா சிறையிலிருந்து தப்பியது வீர சிவாசிக்கும்,தென் ஆப்பிரிக்க பூவர் சிறையிலிருந்து தப்பியது வின்சுடன் சர்ச்சிலுக்கும், ‘வெள்ளையனே வெளியேறு!’போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சிறையிலிருந்து தப்பியது செயப்பிரகாசு நாராயணனுக்கும், அதே ஆட்சியின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பியது நேதாசி சுபாசுசந்திர போசுக்கும், சப்பானியச் சிறையிலிருந்து தப்பியது இராணுவத் தளபதி பி.பி. குமாரமங்கலத்துக்கும், வேலூர் சிறையிலிருந்து தப்பியது ஏ.கே. கோபாலனுக்கும் புகழார்ந்த சாதனைகள் என்பதில் ஐயமில்லை. இவ்வகைச் சாதனையாளர்களை முழுமையாகப் பட்டியலிடுவதானால் நீண்டு கொண்டே போகும்.

இவர்களே இப்படியென்றால்… அரசை மாற்றுவதல்லதகர்த்து நொறுக்குவதே புரட்சி என்று ஆயுதமேந்திப் போராடிச் சிறைப்பட்டவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயல்வதிலும் அதிசயம் ஒன்றுமில்லை . அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால்தான் அதிசயம்.

பொன் நாடார் கொலைக்கு நீதி கேட்டு கடலூர் சிறையில் நடை பெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் தோழர் ஏ.எம். கோதண்டராமனுக்குத் துணைநின்றவர்களுக்கு அவர் ஒரு புரட்சிக்காரர் என்பது தெரியும். வாய்ப்புக் கிடைத்தால் கோதண்டராமன் தப்பிச் சென்று விடுவார் என்பதும் தெரியும். ஆகவேதான் அவரிடமிருந்து ஓர் உறுதிமொழி கோரப்பட்டது:

“இந்தப் போராட்டம் முடியும் வரை சிறையிலிருந்து தப்பிச் செல்வதில்லை என்று நீங்கள் எங்களுக்கு உறுதி கொடுக்க வேண்டும்.”

“ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?”

“தோழரே, நம் கைதிகள் இப்போதிருக்கும் மனநிலையில் எதுவும் செய்வார்கள். சிறை வாயிலை உடைத்துத் திறக்கச் சொன்னால் திறந்து விடுவார்கள். மதிலேறிக் குதிக்கச் சொன்னால் குதிப்பார்கள். எல்லாவற்றையும் கொளுத்தச் சொன்னால் கொளுத்துவார்கள். எவ்வளவு பெரிய காவலர் படை வந்தாலும் நாம் பணியப் போவதில்லை. தாக்குதல் என்று வந்தால் சிறையே போர்க்களமாகி விடும். அந்தக் குழப்பத்தில், அந்தக் களேபரத்தில் நீங்கள் சிறையிலிருந்து தப்புவது ரொம்பச் சுலபம். தப்பிச் செல்வது உங்களுக்குச் சரிதான். ஆனால் இந்தப் போராட்டம்? நீங்கள் இருப்பதால்தான் எதிரி பயப்படுகிறான். நீங்கள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் எங்களை அடித்து நொறுக்கிக் கூடையில் அள்ளிப் போயிருப்பான். நம் ஆட்களும் நீங்கள் இருப்பதால்

கட்டுப்பாடாக இருக்கிறார்கள். இல்லையேல் அவனவன் விருப்பத்திற்கு எதாவது செய்து விடுவான். எல்லாம் வீணாகி விடும். நாங்களே கூட உங்களை நம்பித்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களை விட்டுப் போவதில்லை என்று உறுதி கொடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். உயிரைக் கொடு என்றாலும் கொடுக்கிறோம்.”

ஏ.எம். கே. சிறிது நேரம் மௌனமாகி விட்டார். இடது கை விரல்களால் மூக்குச் சரிவுகளைத் தேய்த்து, மீசையைத் தடவி, பிறகு உள்ளங்கையில் முகவாயை நட்டுக் கொண்டு சொன்னார்:

“சரி… சரி… நன்றாகப் புரிகிறது. இந்தப் போராட்டத்தில் ஒரு முடிவு

தெரியும் வரை நான் தப்பிச் செல்ல மாட்டேன். அந்த எண்ணத்துக்கே இடம் தர மாட்டேன். இது உறுதி. என்னை நம்புங்கள்.”

“உங்களை நம்பாமல் வேறு யாரை நம்பப் போகிறோம்? நீங்கள் சொன்னதே போதும், இனி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.”

பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏ.எம். கே.யிடம் நான் கேட்டேன் :

“நீங்கள் இப்படி உறுதி கொடுத்தீர்களே, உண்மையிலேயே தப்பிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

“அந்த வாய்ப்பு அப்போதே இருந்தது. ஆனால் தப்பிச் செல்லக் கூடாது என்றுதான் இருந்தேன்.”

“ஏன்?”

“வாய்ப்புக் கிடைத்தால் தப்பிச் செல்ல வேண்டும் என்பது பொதுவாகச் சரி. ஆனால் மக்களைத் திரட்டி நிறுத்தி விட்டுக் களத்திலிருந்து ஓடிப் போவது சரியல்ல. சிறை என்று பார்த்தால் ஓடத்தான் தோன்றும். போராட்டக் களம் என்று பார்த்தால்தான் அங்கிருந்து ஓடக் கூடாது என்று புரியும்.”

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. எந்த நேரமும் காவலர் படை உள்ளே நுழையும், பிறகு கண்ணீர்ப் புகை, தடியடி… ஏன், துப்பாக்கிச் சூடு கூட நிகழலாம். அந்தக் கைதிகள் எல்லாவற்றுக்கும் அணியமாய் இருந்தார்கள்.

ஏ.எம். கே.வுக்குத் துணைநின்று போராட்டத்தை ஒழுங்கு செய்து வழி நடத்திக் கொண்டிருந்த குழுவில் ஒருசிலர் ஆயுள் கைதிகள் – வேறு சிறைகளிலிருந்து  மாற்றப்பட்டவர்கள்.

பாளையங்கோட்டைச் சிறையில் சோறே இல்லாமல் தொடர்ந்து நான்கைந்து நாள் கேழ்வரகுக் களி மட்டும் கொடுக்க உறுதியாகப் போராடித் தடியடிக்கு ஆளாகிச் சிறைமாற்றல் செய்யப்பட்ட சில ஆயுள் கைதிகள் இப்போது கடலூரில் ஏ.எம்.கேவுக்குத் துணைநின்றார்கள். ஆனால் கறுப்புக் குல்லாய்க் கைதிகள் சிலரும் தேர்ந்த தொழிற்சங்க ஊழியர்களைப் போல் செயல்பட்டுப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கொண்டுவந்ததுதான் வியப்புக்குரியது.

கறுப்புக் குல்லாய்களை ஒன்றுபடுத்தவும் முடியாது, போராடச் செய்யவும் முடியாது என்று அது வரை நிலவி வந்த தப்பெண்ணம் அந்தக் கடலூர் இரவில் நொறுங்கிக் கொண்டிருந்தது. சோறுகுழம்புக்காகப் போராடத் திரளாத அந்தக் கைதிகள்ஒரு சக கைதி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருந்தார். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்தார்கள்

“கைதி செத்தால் காக்காய் செத்தாற்போல்” என்ற சிறைப் பழமொழிக்குச் சவால் விடுத்தது அந்தப் போராட்டம். ஆகவேதான் கறுப்புக் குல்லாய்க்குள்ளிருந்த மானுடத்தை அந்தப் போராட்டத்தால் வெளிப்படுத்திக் காட்ட முடிந்தது.

குற்றவாளிகளை மனிதர்களாக்குவது ஒடுக்கு முறையல்ல, ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமே என்பது அங்கே மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டது.

ஏ.எம்.கே. அதிகம் பேசக் கூடியவரல்ல. நீண்ட உரைகள் நிகழ்த்தும் வழக்கமும் அவருக்கு இல்லை. தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அப்படித்தான். சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் கூர்மையாகவும் சொல்வார். எதையும் பூசி மெழுகிப் பேச அவருக்குத் தெரியாது.

அந்தப் பதற்றமான இரவிலும் அவர் அவராகவே இருந்தார். இடையிடையே தேவையைப் பொறுத்துச் சுருக்கமாகப் பேசினார். சந்தேகங்களைப் போக்கினார். அனைவருக்கும் துணிவூட்டினார். வழி நடத்தும் பொறுப்பிலிருந்த தோழர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார். யாரும் அன்றிரவு உறங்கவில்லை..

நள்ளிரவு தாண்டி விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது வாயிற்பக்கம் சலனம் தெரிந்து அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவ அதிகாரி, கா.க.(S.P.) மற்றும் சில அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். ஏ.எம்.கேயிடம் மாவட்ட ஆட்சியர் சருமா சொன்னார் :

”நிலவரத்தை அரசுக்குத் தெளிவாகச் சொல்லி விட்டேன். உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்களும் சொல்லி விட்டார்கள். சடலத்தைக் காலையில்தான் அகற்றுவோம். முறையான பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். விசாரணையும் நடைபெறும். இப்போது நீங்கள்…”

”நடவடிக்கை என்றால், கொலைக் குற்றத்துக்காகச் சிறை அதிகாரிகளைக் கைது செய்வீர்களா? அரசு அப்படித்தான் ஆணையிட்டுள்ளதா?”

“விசாரணைக்குப் பிறகுதானே நடவடிக்கை எடுக்க முடியும்?”

”சரி….அது வரை பணி விலக்கமாவது பண்ணுவீர்களா?  இதே கண்காணிப்பாளர், இதே சிறை அதிகாரிகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்துவதை எப்படி ஏற்க முடியும்?”

”அது பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. இப்போது…”

“என்ன இப்போது?”

”இப்போது நீங்கள் கதவடைப்பிற்குள் போய் விட வேண்டும். அரசாங்கத்தில் இதை மிகவும் கடுமையாகக் கருதுகிறார்கள். எங்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.”

“இல்லை , அது முடியவே முடியாது. என்ன நடந்தாலும் நடக்கட்டும். உருப்படியாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் நாங்கள் போராட்டத்தைக் கைவிட முடியாது.”

“ஓர் இரவு முழுவதும் சிறையில் கதவடைப்பிற்குள் போகவில்லை என்றால்,அரசு அதைக் கடுமையாகக் கருதும்…”

சிறைக்குள் கைதி அடித்துக் கொல்லப்படுவதை நாங்கள் அதை விடக் கடுமையாகக் கருதுகிறோம்.

”அவர்கள் போய் விட்டார்கள். காவல்துறைப் படையோடு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கைதிகள் சுதாரிப்பாய் இருந்தார்கள். ஆனால் காவல்துறைப் படை வரவே இல்லை. விடிந்த பின் மாவட்ட ஆட்சியர் வந்து, “உங்கள் கோரிக்கைப்படியே சிறைக் கண்காணிப்பாளரும் இதர சிறை அதிகாரிகளும் பணி விலக்கம் செய்யப்படுறார்கள், இன்னும் சிறிது நேரத்தில் சிறைத் துறைத் துணைத் தலைவர் (D.I.G.) வந்து விசாரணையைத் தொடங்குவார்” என்று தெரிவித்தார். போராட்டம் இந்த அளவில் வெற்றிகரமாக முடிந்தது.

சிறைத் துறை துணைத் தலைவர் (D.I.G.) வந்த பிறகு ஏ.எம். கே.யை அழைத்துப்

பேசினார்.

‘’நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள அனைவரையும் பணி விலக்கம் செய்து விட்டோம் போதுமா?”

“போதாது.”

”ஏன்?”

“கொலைக் குற்றத்துக்கு பணி விலக்கம்தான் தண்டனையா?”

“இல்லையில்லை, இப்போதைக்குப் பணி விலக்கம். விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை .”

“கைது செய்து கொலை வழக்குப் போட வேண்டாமா? என்பதுதான் கேள்வி.”

“…..”

“போகட்டும். இந்த அளவுக்கு உங்களை நடவடிக்கை எடுக்க வைப்பதற்கே இவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது. இது வரை எத்தனையோ கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதுதான் முதன் முதலில் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளோம். ஆனால் ஓர் எச்சரிக்கை.”

“என்ன?”

“விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். சாட்சிகளை மிரட்டுவது, வேறு சிறைக்கு மாற்றுவது எதுவும் கூடாது.”

“அதற்கு நான் உறுதியளிக்கிறேன்.”

“கொஞ்ச நாளைக்கு அப்படி இப்படி நாடகமாடி விட்டுப் பழையபடி எல்லாரையும் வேலைக்கு எடுத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால் நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். கொலைக்குக் கொலைதான். என்னை நீங்கள் வேறு சிறைக்கு மாற்றி விட்டாலும் அது நடக்கும். இங்கு கைதிகளே குழு(squad) அமைத்து அதைச் செய்து முடிப்பார்.”

“இல்லை! இல்லை!… உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.”

“குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் உங்கள் மருமகன் அவருக்காக எந்தச் சலுகையும் காட்ட மாட்டீர்கள் அல்லவா?

“மாட்டேன். எல்லாருக்கும் சட்டம் ஒன்றுதான்.”

” எங்களுக்கும் உங்களுக்குமா?”

சி.து.து.த.(D.I.G.) சிரித்து மழுப்பி விட்டுப் புறப்பட்டார்.

சிறிது காலம் கழித்து விசாரணை நடைபெற்றது. இடைக்காலத்தில் ஏஎம்கே சாட்சிகளை முறையாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.

விசாரணையின் போது ஏஎம்கேயும் சாட்சி சொன்னார். விசாரணை அதிகாரியாக வந்த சி.து.து.த.(D.I.G.)  கேட்டார் :

”நீங்கள் நீதிமன்றத்தையே புறக்கணிக்கிறவர்.. இந்த விசாரணையில் எப்படிப் பங்குபெறுகிறீர்கள்?”

“என் கொள்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டா. நான் சொல்வதைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அது போதும்.”

விசாரணை முடிந்த பிறகும் முடிவு வராமலே சில ஆண்டுகள் கழிந்தன. 1977 அல்லது 78 இல் விடுதலையாகி வந்து ஏ.எம்.கே. சென்னையில் தங்கியிருந்த போது ஓர் உணவகத்தில் சிறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். பொன்நாடார் கொலைக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

ஏஎம்கே அவரிடம் கேட்டார் : “என்ன ஐயா எப்படியிருக்கிறீர்கள்?”

“நன்றாக இருக்கிறேன்.. எல்லாம் உங்கள் புண்ணியத்தில்தான்.”

“அது எப்படி?”

“உங்களால்தான் பணி விலக்கம்  ஆனேன். இப்பொழுது தொழில் நன்றாக நடக்கிறது. பணிவிலக்கத்தில் இருப்பதால் முக்கால் சம்பளமும் கிடைக்குது — வசதியாக இருக்கிறேன். நன்றிங்க.”

முடிவில், சிறைக் கண்காணிப்பாளர் தவிர, மற்றவர்கள் ஒவ்வொருவராய்த் திரும்ப எடுக்கப்பட்டு வேலைக்குத் திரும்பினார்கள். கண்காணிப்பாளர் மட்டும் பணி நீக்கம்  செய்யப்பட்டார்.

தமிழகச் சிறை வரலாற்றில் ஒரு கைதியின் மரணத்துக்காக வேலையிழந்த ஒரே சிறைக் கண்காணிப்பாளர் அவர்தான். ஆனால் அவரை வேலைநீக்கம் செய்வதற்கு அரசு காட்டியிருந்த காரணம்தான் பெரிய கொடுமை!

(தொடரும்)

தோழர் தியாகு எழுதுகிறார்

தரவு : தாழி மடல் 18

புதன், 25 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5) : கடலூர் இரவு

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் தொடர்ச்சி)

கடலூர் இரவு

சிறைப்பட்ட எவரும் சிறையிலிருந்து தப்ப எண்ணுவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது அந்த எண்ணத்தைச் செயலாக்க முற்படுவதும் இயல்புதான். சாதாரணமான ஒருவருக்கே இப்படி யென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டு ஏதேனுமொரு குறிக்கோளுக்காகச் சிறைப்பட்டவர்களுக்கு அதுவே புகழ்தரும் சாதனையாகி விடுகிறது.

ஒளரங்கசீப்பின் ஆகுரா சிறையிலிருந்து தப்பியது வீர சிவாசிக்கும்,தென் ஆப்பிரிக்க பூவர் சிறையிலிருந்து தப்பியது வின்சுடன் சர்ச்சிலுக்கும், ‘வெள்ளையனே வெளியேறு!’போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சிறையிலிருந்து தப்பியது செயப்பிரகாசு நாராயணனுக்கும், அதே ஆட்சியின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பியது நேதாசி சுபாசுசந்திர போசுக்கும், சப்பானியச் சிறையிலிருந்து தப்பியது இராணுவத் தளபதி பி.பி. குமாரமங்கலத்துக்கும், வேலூர் சிறையிலிருந்து தப்பியது ஏ.கே. கோபாலனுக்கும் புகழார்ந்த சாதனைகள் என்பதில் ஐயமில்லை. இவ்வகைச் சாதனையாளர்களை முழுமையாகப் பட்டியலிடுவதானால் நீண்டு கொண்டே போகும்.

இவர்களே இப்படியென்றால்… அரசை மாற்றுவதல்லதகர்த்து நொறுக்குவதே புரட்சி என்று ஆயுதமேந்திப் போராடிச் சிறைப்பட்டவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயல்வதிலும் அதிசயம் ஒன்றுமில்லை . அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால்தான் அதிசயம்.

பொன் நாடார் கொலைக்கு நீதி கேட்டு கடலூர் சிறையில் நடை பெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் தோழர் ஏ.எம். கோதண்டராமனுக்குத் துணைநின்றவர்களுக்கு அவர் ஒரு புரட்சிக்காரர் என்பது தெரியும். வாய்ப்புக் கிடைத்தால் கோதண்டராமன் தப்பிச் சென்று விடுவார் என்பதும் தெரியும். ஆகவேதான் அவரிடமிருந்து ஓர் உறுதிமொழி கோரப்பட்டது:

“இந்தப் போராட்டம் முடியும் வரை சிறையிலிருந்து தப்பிச் செல்வதில்லை என்று நீங்கள் எங்களுக்கு உறுதி கொடுக்க வேண்டும்.”

“ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?”

“தோழரே, நம் கைதிகள் இப்போதிருக்கும் மனநிலையில் எதுவும் செய்வார்கள். சிறை வாயிலை உடைத்துத் திறக்கச் சொன்னால் திறந்து விடுவார்கள். மதிலேறிக் குதிக்கச் சொன்னால் குதிப்பார்கள். எல்லாவற்றையும் கொளுத்தச் சொன்னால் கொளுத்துவார்கள். எவ்வளவு பெரிய காவலர் படை வந்தாலும் நாம் பணியப் போவதில்லை. தாக்குதல் என்று வந்தால் சிறையே போர்க்களமாகி விடும். அந்தக் குழப்பத்தில், அந்தக் களேபரத்தில் நீங்கள் சிறையிலிருந்து தப்புவது ரொம்பச் சுலபம். தப்பிச் செல்வது உங்களுக்குச் சரிதான். ஆனால் இந்தப் போராட்டம்? நீங்கள் இருப்பதால்தான் எதிரி பயப்படுகிறான். நீங்கள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் எங்களை அடித்து நொறுக்கிக் கூடையில் அள்ளிப் போயிருப்பான். நம் ஆட்களும் நீங்கள் இருப்பதால்

கட்டுப்பாடாக இருக்கிறார்கள். இல்லையேல் அவனவன் விருப்பத்திற்கு எதாவது செய்து விடுவான். எல்லாம் வீணாகி விடும். நாங்களே கூட உங்களை நம்பித்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களை விட்டுப் போவதில்லை என்று உறுதி கொடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். உயிரைக் கொடு என்றாலும் கொடுக்கிறோம்.”

ஏ.எம். கே. சிறிது நேரம் மௌனமாகி விட்டார். இடது கை விரல்களால் மூக்குச் சரிவுகளைத் தேய்த்து, மீசையைத் தடவி, பிறகு உள்ளங்கையில் முகவாயை நட்டுக் கொண்டு சொன்னார்:

“சரி… சரி… நன்றாகப் புரிகிறது. இந்தப் போராட்டத்தில் ஒரு முடிவு

தெரியும் வரை நான் தப்பிச் செல்ல மாட்டேன். அந்த எண்ணத்துக்கே இடம் தர மாட்டேன். இது உறுதி. என்னை நம்புங்கள்.”

“உங்களை நம்பாமல் வேறு யாரை நம்பப் போகிறோம்? நீங்கள் சொன்னதே போதும், இனி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.”

பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏ.எம். கே.யிடம் நான் கேட்டேன் :

“நீங்கள் இப்படி உறுதி கொடுத்தீர்களே, உண்மையிலேயே தப்பிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

“அந்த வாய்ப்பு அப்போதே இருந்தது. ஆனால் தப்பிச் செல்லக் கூடாது என்றுதான் இருந்தேன்.”

“ஏன்?”

“வாய்ப்புக் கிடைத்தால் தப்பிச் செல்ல வேண்டும் என்பது பொதுவாகச் சரி. ஆனால் மக்களைத் திரட்டி நிறுத்தி விட்டுக் களத்திலிருந்து ஓடிப் போவது சரியல்ல. சிறை என்று பார்த்தால் ஓடத்தான் தோன்றும். போராட்டக் களம் என்று பார்த்தால்தான் அங்கிருந்து ஓடக் கூடாது என்று புரியும்.”

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. எந்த நேரமும் காவலர் படை உள்ளே நுழையும், பிறகு கண்ணீர்ப் புகை, தடியடி… ஏன், துப்பாக்கிச் சூடு கூட நிகழலாம். அந்தக் கைதிகள் எல்லாவற்றுக்கும் அணியமாய் இருந்தார்கள்.

ஏ.எம். கே.வுக்குத் துணைநின்று போராட்டத்தை ஒழுங்கு செய்து வழி நடத்திக் கொண்டிருந்த குழுவில் ஒருசிலர் ஆயுள் கைதிகள் – வேறு சிறைகளிலிருந்து  மாற்றப்பட்டவர்கள்.

பாளையங்கோட்டைச் சிறையில் சோறே இல்லாமல் தொடர்ந்து நான்கைந்து நாள் கேழ்வரகுக் களி மட்டும் கொடுக்க உறுதியாகப் போராடித் தடியடிக்கு ஆளாகிச் சிறைமாற்றல் செய்யப்பட்ட சில ஆயுள் கைதிகள் இப்போது கடலூரில் ஏ.எம்.கேவுக்குத் துணைநின்றார்கள். ஆனால் கறுப்புக் குல்லாய்க் கைதிகள் சிலரும் தேர்ந்த தொழிற்சங்க ஊழியர்களைப் போல் செயல்பட்டுப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கொண்டுவந்ததுதான் வியப்புக்குரியது.

கறுப்புக் குல்லாய்களை ஒன்றுபடுத்தவும் முடியாது, போராடச் செய்யவும் முடியாது என்று அது வரை நிலவி வந்த தப்பெண்ணம் அந்தக் கடலூர் இரவில் நொறுங்கிக் கொண்டிருந்தது. சோறுகுழம்புக்காகப் போராடத் திரளாத அந்தக் கைதிகள்ஒரு சக கைதி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருந்தார். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்தார்கள்

“கைதி செத்தால் காக்காய் செத்தாற்போல்” என்ற சிறைப் பழமொழிக்குச் சவால் விடுத்தது அந்தப் போராட்டம். ஆகவேதான் கறுப்புக் குல்லாய்க்குள்ளிருந்த மானுடத்தை அந்தப் போராட்டத்தால் வெளிப்படுத்திக் காட்ட முடிந்தது.

குற்றவாளிகளை மனிதர்களாக்குவது ஒடுக்கு முறையல்ல, ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமே என்பது அங்கே மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டது.

ஏ.எம்.கே. அதிகம் பேசக் கூடியவரல்ல. நீண்ட உரைகள் நிகழ்த்தும் வழக்கமும் அவருக்கு இல்லை. தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அப்படித்தான். சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் கூர்மையாகவும் சொல்வார். எதையும் பூசி மெழுகிப் பேச அவருக்குத் தெரியாது.

அந்தப் பதற்றமான இரவிலும் அவர் அவராகவே இருந்தார். இடையிடையே தேவையைப் பொறுத்துச் சுருக்கமாகப் பேசினார். சந்தேகங்களைப் போக்கினார். அனைவருக்கும் துணிவூட்டினார். வழி நடத்தும் பொறுப்பிலிருந்த தோழர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார். யாரும் அன்றிரவு உறங்கவில்லை..

நள்ளிரவு தாண்டி விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது வாயிற்பக்கம் சலனம் தெரிந்து அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவ அதிகாரி, கா.க.(S.P.) மற்றும் சில அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். ஏ.எம்.கேயிடம் மாவட்ட ஆட்சியர் சருமா சொன்னார் :

”நிலவரத்தை அரசுக்குத் தெளிவாகச் சொல்லி விட்டேன். உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்களும் சொல்லி விட்டார்கள். சடலத்தைக் காலையில்தான் அகற்றுவோம். முறையான பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். விசாரணையும் நடைபெறும். இப்போது நீங்கள்…”

”நடவடிக்கை என்றால், கொலைக் குற்றத்துக்காகச் சிறை அதிகாரிகளைக் கைது செய்வீர்களா? அரசு அப்படித்தான் ஆணையிட்டுள்ளதா?”

“விசாரணைக்குப் பிறகுதானே நடவடிக்கை எடுக்க முடியும்?”

”சரி….அது வரை பணி விலக்கமாவது பண்ணுவீர்களா?  இதே கண்காணிப்பாளர், இதே சிறை அதிகாரிகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்துவதை எப்படி ஏற்க முடியும்?”

”அது பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. இப்போது…”

“என்ன இப்போது?”

”இப்போது நீங்கள் கதவடைப்பிற்குள் போய் விட வேண்டும். அரசாங்கத்தில் இதை மிகவும் கடுமையாகக் கருதுகிறார்கள். எங்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.”

“இல்லை , அது முடியவே முடியாது. என்ன நடந்தாலும் நடக்கட்டும். உருப்படியாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் நாங்கள் போராட்டத்தைக் கைவிட முடியாது.”

“ஓர் இரவு முழுவதும் சிறையில் கதவடைப்பிற்குள் போகவில்லை என்றால்,அரசு அதைக் கடுமையாகக் கருதும்…”

சிறைக்குள் கைதி அடித்துக் கொல்லப்படுவதை நாங்கள் அதை விடக் கடுமையாகக் கருதுகிறோம்.

”அவர்கள் போய் விட்டார்கள். காவல்துறைப் படையோடு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கைதிகள் சுதாரிப்பாய் இருந்தார்கள். ஆனால் காவல்துறைப் படை வரவே இல்லை. விடிந்த பின் மாவட்ட ஆட்சியர் வந்து, “உங்கள் கோரிக்கைப்படியே சிறைக் கண்காணிப்பாளரும் இதர சிறை அதிகாரிகளும் பணி விலக்கம் செய்யப்படுறார்கள், இன்னும் சிறிது நேரத்தில் சிறைத் துறைத் துணைத் தலைவர் (D.I.G.) வந்து விசாரணையைத் தொடங்குவார்” என்று தெரிவித்தார். போராட்டம் இந்த அளவில் வெற்றிகரமாக முடிந்தது.

சிறைத் துறை துணைத் தலைவர் (D.I.G.) வந்த பிறகு ஏ.எம். கே.யை அழைத்துப்

பேசினார்.

‘’நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள அனைவரையும் பணி விலக்கம் செய்து விட்டோம் போதுமா?”

“போதாது.”

”ஏன்?”

“கொலைக் குற்றத்துக்கு பணி விலக்கம்தான் தண்டனையா?”

“இல்லையில்லை, இப்போதைக்குப் பணி விலக்கம். விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை .”

“கைது செய்து கொலை வழக்குப் போட வேண்டாமா? என்பதுதான் கேள்வி.”

“…..”

“போகட்டும். இந்த அளவுக்கு உங்களை நடவடிக்கை எடுக்க வைப்பதற்கே இவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது. இது வரை எத்தனையோ கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதுதான் முதன் முதலில் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளோம். ஆனால் ஓர் எச்சரிக்கை.”

“என்ன?”

“விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். சாட்சிகளை மிரட்டுவது, வேறு சிறைக்கு மாற்றுவது எதுவும் கூடாது.”

“அதற்கு நான் உறுதியளிக்கிறேன்.”

“கொஞ்ச நாளைக்கு அப்படி இப்படி நாடகமாடி விட்டுப் பழையபடி எல்லாரையும் வேலைக்கு எடுத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால் நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். கொலைக்குக் கொலைதான். என்னை நீங்கள் வேறு சிறைக்கு மாற்றி விட்டாலும் அது நடக்கும். இங்கு கைதிகளே குழு(squad) அமைத்து அதைச் செய்து முடிப்பார்.”

“இல்லை! இல்லை!… உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.”

“குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் உங்கள் மருமகன் அவருக்காக எந்தச் சலுகையும் காட்ட மாட்டீர்கள் அல்லவா?

“மாட்டேன். எல்லாருக்கும் சட்டம் ஒன்றுதான்.”

” எங்களுக்கும் உங்களுக்குமா?”

சி.து.து.த.(D.I.G.) சிரித்து மழுப்பி விட்டுப் புறப்பட்டார்.

சிறிது காலம் கழித்து விசாரணை நடைபெற்றது. இடைக்காலத்தில் ஏஎம்கே சாட்சிகளை முறையாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.

விசாரணையின் போது ஏஎம்கேயும் சாட்சி சொன்னார். விசாரணை அதிகாரியாக வந்த சி.து.து.த.(D.I.G.)  கேட்டார் :

”நீங்கள் நீதிமன்றத்தையே புறக்கணிக்கிறவர்.. இந்த விசாரணையில் எப்படிப் பங்குபெறுகிறீர்கள்?”

“என் கொள்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டா. நான் சொல்வதைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அது போதும்.”

விசாரணை முடிந்த பிறகும் முடிவு வராமலே சில ஆண்டுகள் கழிந்தன. 1977 அல்லது 78 இல் விடுதலையாகி வந்து ஏ.எம்.கே. சென்னையில் தங்கியிருந்த போது ஓர் உணவகத்தில் சிறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். பொன்நாடார் கொலைக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

ஏஎம்கே அவரிடம் கேட்டார் : “என்ன ஐயா எப்படியிருக்கிறீர்கள்?”

“நன்றாக இருக்கிறேன்.. எல்லாம் உங்கள் புண்ணியத்தில்தான்.”

“அது எப்படி?”

“உங்களால்தான் பணி விலக்கம்  ஆனேன். இப்பொழுது தொழில் நன்றாக நடக்கிறது. பணிவிலக்கத்தில் இருப்பதால் முக்கால் சம்பளமும் கிடைக்குது — வசதியாக இருக்கிறேன். நன்றிங்க.”

முடிவில், சிறைக் கண்காணிப்பாளர் தவிர, மற்றவர்கள் ஒவ்வொருவராய்த் திரும்ப எடுக்கப்பட்டு வேலைக்குத் திரும்பினார்கள். கண்காணிப்பாளர் மட்டும் பணி நீக்கம்  செய்யப்பட்டார்.

தமிழகச் சிறை வரலாற்றில் ஒரு கைதியின் மரணத்துக்காக வேலையிழந்த ஒரே சிறைக் கண்காணிப்பாளர் அவர்தான். ஆனால் அவரை வேலைநீக்கம் செய்வதற்கு அரசு காட்டியிருந்த காரணம்தான் பெரிய கொடுமை!

(தொடரும்)

தோழர் தியாகு எழுதுகிறார்

தரவு : தாழி மடல் 18